வெள்ளி, 29 ஜூலை, 2011

விதையைத் தின்னும் விவசாயிகள்!

இன்றைய ‘ஹிந்து’ குழுமத்தின் வணிக நாளேடான
‘பிசினஸ் லைன்’ வெளியிட்டுள்ள ஒரு செய்தியே
என்னை இந்த பதிவை எழுதத் தூண்டியது.

Ford India குஜராத் மாநிலத்தில் 4000 கோடி
ரூபாய் அளவில் முதலீடு செய்ய இருக்கிறதாம்.
அங்கே Sanand என்ற இடத்தில் (‘டாடா’ வின்
நானோ தொழிற்சாலை உள்ள இடம்தான்)
460 ஏக்கர்இடத்தில் ஒரு புதிய தொழிற்சாலை
கட்ட இருப்பதாகவும்,அதில் வருடத்திற்கு
2.4 இலட்சம் கார்களும், 2.7 இலட்சம்
என்ஜின்களும் தயாரிக்கப்படுமாம்.இதனால்
சுமார் 5000 பேருக்கு வேலை வாய்ப்பு
கிட்டுமாம்.

தொழிற்சாலை இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும்
என்றும், 2014 ஆம் ஆண்டு உற்பத்தி தொடங்கும்
என்றும் அந்த செய்தி கூறுகிறது.

இதில் என்ன இருக்கிறது என நினைக்கலாம். ஆனால்
உண்மையில் தமிழகம் தொழில் முதலீட்டார்களின்
பட்டியலில் இருந்து நீக்கப்படுகிறதோ என்ற
ஐயம்தான் எழுகிறது.

Ford India வின் சென்னை தொழிற்சாலையில்
விரிவாக்கம் செய்தாலும், புதிய தொழிற் கூடத்தை
கட்ட ஏன் குஜராத் செல்கிறார்கள் என்பதே கேள்வி.

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஹுண்டாய் நிறுவனம்
கூட அவர்களுக்கு சமீபத்தில் ஏற்பட்ட ‘அனுபவம்’
காரணமாக தங்களது புதிய முதலீடுகளை
குஜராத் மாநிலத்தில் செய்யலாமா என
யோசித்துக்கொண்டிருக்கிறார்களாம்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, பி.எஸ்.ஏ பியூஜியாட்
சிட்ரியான் நிறுவனம், சென்னையை அடுத்த
ஸ்ரீபெரும்புதூரில், 4,000 கோடி ரூபாய் முதலீட்டில்
கார் தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும்,
இதன் வாயிலாக, 5,000 பேருக்கு நேரடியாகவும்,
15 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலை
வாய்ப்பு உருவாகும் என்றும் முதலில் வந்த
செய்தியை கூட அந்த நிறுவனம் பின்பு மறுத்து
இன்னும் இடம் தேர்ந்தெடுக்கப்படவில்லை
என்று கூறியுள்ளது.

பின் குஜராத் சென்று அந்த மாநில முதல்வரையும்
அலுவலர்களையும் தொழிற்சாலை அமைப்பது
பற்றி பேச்சு நடத்தியுள்ளது என செய்திகள்
சொல்கின்றன.

உண்மையில் சுதந்திரம் அடைந்தபின் குஜராத்,
மகாராஷ்டிரம், கர்நாடகா போன்ற மாநிலங்களில்
முதலீடு செய்யப்பட்டது போன்று தமிழ் நாட்டில்
முதலீடும் ஏதும் பெரிதாக செய்யப்படவில்லை.
அதனால் பொதுத்துறை மற்றும் தனியார் துறையின்
கீழ் அந்த மாநிலங்களில் உள்ளது போல் பெரிய
தொழிற்சாலைகள் நமக்கு இல்லாமல் இருந்தன.

அதனால் தமிழ்நாட்டு இளைஞர்கள் வேலை தேடி
வட மாநிலங்களுக்கு செல்லவேண்டி இருந்தது.
நல்ல வேளையாக கடந்த 20 ஆண்டுகளாக
வெளிநாட்டு மற்றும் இந்திய தொழில்
முதலீட்டார்களின் கவனம் நம் பக்கம்
திரும்பியதால் அநேக தொழிற்சாலைகள் இங்கே
நிறுவப்பட்டு, நமது இளைஞர்கள் வேலைக்காக
வெளி மாநிலம் செல்லாமல் இங்கேயே பணி
செய்யும் நிலை ஏற்பட்டது. மாநில அரசுக்கும்
வரிகள் மூலம் வருவாய் கிட்டியது.

ஆனால் சமீபகாலமாக இங்கு ஏற்பட்டிருக்கின்ற
‘சூழ்நிலை’ முதலீட்டார்களை அச்சத்தில்
ஆழ்த்தியிருக்கிறது என்பது மறுக்கமுடியாத
மறைக்கமுடியாத உண்மை.

ஒருவேளை நாமும், கேரளா மற்றும்
மேற்கு வங்காளம் போல் புறக்கணிக்கப்
படுவோமோ என்ற ஐயமும் ஏற்பட்டிருக்கிறது
என்பது நிஜம்.

2002-2003 ல் BMW குழுமம் கேரளாவில், கொச்சியில்
தான் முதலில் தனது கார் தொழிற்சாலையை
தொடங்க நினைத்தது. அதற்கான பேச்சு
வார்த்தைகள் முடிந்து, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்
கையொப்பமிட ஜெர்மனியிலிருந்து அந்த
குழுமத்தின் உயர் அதிகாரிகள் வந்தபோது
அவர்களால் கொச்சி விமான நிலையத்தை
விட்டு வெளிவரமுடியவில்லை.

காரணம் வழக்கம்போல் கேரளாவில் நடக்கும்
பணிநிறுத்தம் தான்.( இது பற்றி பின் விவரமாக
எழுதுவேன்) ஒரு நாள் முழுவதும் விமான
நிலையத்தை விட்டு வெளியே வரமுடியாமல்
இருந்த அவர்கள், அங்கே உற்பத்தி தொடங்க
இருந்த தங்களது முடிவை மாற்றிக்கொண்டு
சென்னைக்கு வந்து தொழிற்சாலையை
ஆரம்பித்தார்கள்.

கேரளாவை தலைமை இடமாக கொண்ட
V Guard நிறுவனம் கூட தனது தொழிற்சாலை
விரிவாக்கத்தை கோவை மாவட்டத்திற்கு
மாற்றிக்கொண்டதும் இந்த பணி முடக்க
பிரச்சினைகள் தான்.

தமிழ்நாட்டில் தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்கள்
இடையே இருந்த இணக்கமான சூழ்நிலைதான்
மேற்கூறிய நிகழ்வுகள் நடக்க காரணம். ஆனால்
அவை கடந்த கால வரலாறு ஆகிவிடுமோ என்ற
பயம் தான் எனக்கு.

நான் தொழிலாளர்கள், தங்கள் உரிமைக்கு குரல்
கொடுக்கக்கூடாது என சொல்லவில்லை. ஆனால்
‘சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்.’

தொழிற்சாலைகள் இருந்தால் தானே வேலை
கிடைக்கும். நமது உரிமைகளுக்காக
போராடமுடியும். பொன் முட்டையிடும் வாத்தை,
ஒரே நாளில் எல்லா பொன் முட்டைகளையும்
பெறவேண்டும் என ஆசைப்பட்டு அதன் வயிற்றை
கிழித்து, அதையும் கொன்று, தனக்கும் ஒன்றும்
கிடைக்காமல் போக வழி செய்த மனிதனின்
கதை போல் நமக்கு ஆகக்கூடாதே என்ற
ஆதங்கம் தான் எனக்கு.

ஒருவேளை தமிழ்நாட்டில் தற்போது
ஏற்பட்டிருக்கின்ற 'சூழ்நிலை' காரணமாக
தொழிற்சாலைகள் இங்கு வராமல் போனால்
இங்குள்ள இளைஞர்கள் முன்போல் வேலை
தேடி வெளி மாநிலம் செல்லவேண்டியதுதான்.
போக முடியாதவர்கள் வேலை இல்லாமல்
திண்டாட வேண்டியதுதான்.

சிலம்புச்செல்வர் திரு ம.பொ.சி அவர்கள்
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 1965 ஆம்
ஆண்டு மாணவர்களிடையே பேசியபோது
‘நான் விதையைத்தின்னும் விவசாயி அல்ல.’
என்று சொன்னது இந்த நேரத்தில் எனக்கு
நினைவுக்கு வருகிறது.

விவசாயி பசிக்கு தானியத்தைத்தான் சாப்பிடவேண்டும்.
விதையை அல்ல.அதற்காக விதையை
விதைத்து தானியத்தை பெருக்கி தேவையைப்
பூர்த்தி செய்துகொள்ளவேண்டும்.

பசிக்காக விதையையே சாப்பிட்டுவிட்டால்?
எப்போதும் நிரந்தர பசியால் வாட வேண்டியதுதான்.

யோசிக்க வேண்டியவர்கள் யோசித்தால் சரி.

8 கருத்துகள்:

  1. ஆழமாகச் சிந்தித்து,அருமையாக நுணுகி ஆராய்ந்து எழுதப்பட்ட பதிவு.முழுவதும் சரி!

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும்,கருத்தை ஆமோதித்ததற்கும் நன்றி
    திரு சென்னை பித்தன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  3. well researched and analytically viewed. The plight can be traced to the vicious attitude of the politicians who while pretending to be be champions of the masses are ever busy in lining their pockets and it is really unfortunate that people are not able to see thru the nefarious designs of politicians The unpleasant experiences of some of the multinationals should serve as a warning to the Govt of the day. Vasudevan

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே!

    பதிலளிநீக்கு
  5. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு இரத்தினவேல் அவர்களே!

    பதிலளிநீக்கு
  6. அன்பின் நடன சபாபதி - நல்லதொரு பதிவு - நல்வாழ்த்த்கள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு சீனா அவர்களே!

      நீக்கு