வியாழன், 20 அக்டோபர், 2011

நினைவோட்டம் 51

நினைவோட்டம் 50 எண்ணிட்ட பதிவில்,எனது
அண்ணன் திரு சபாநாயகம் அவர்கள் பற்றி எழுதி
இருந்ததை பற்றி சிலர் நினைக்கலாம்,அவர்
எனது அண்ணனாக இருந்ததால் அப்படி எழுதி
இருக்கிறேனென்று.

இல்லாவிட்டாலும் அவரைப்பற்றி அப்படித்தான்
எழுதியிருப்பேன் மற்ற ஆசிரியர்கள் பற்றி எனது
முந்தைய பதிவுகளில் எழுதி இருக்கும்போது,
அவர் எனது அண்ணன் என்ற காரணத்தால்
எழுதாமல் இருப்பது சரியல்ல என்பதால்,
அவரைப்பற்றியும் எழுதியிருக்கிறேன்.சற்று
கூடுதலான விவரங்கள் கொடுத்ததன் காரணம்,
நான் அவரை அருகில் இருந்து கவனித்ததால்.

அவரது கணித பாடம் நடத்துவது பற்றி
குறிப்பிட்டிருந்தேன்.ஆசிரியர்களில் சிலர்
மாணவர்களுக்கு பாடத்தை சொல்லிக்கொடுப்பதில்
(Teaching) சிறந்து விளங்குவார்கள்.சிலர்
மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்வதில்
(Coaching)சிறப்பாக செயல்படுவார்கள். ஆனால்
எனது அண்ணன் இரண்டிலுமே சிறந்து விளங்கினார்.

கணிதம் என்றாலே எல்லோருக்கும் பயம் தான்.
(சிலரைத்தவிர) நான் சொல்லுவது அந்த காலத்தில்.
இந்த காலத்து மாணவர்களைப்பற்றி அல்ல.

என்னுடைய கருத்துப்படி, கணிதபாடத்தை
பாம்பு கடிக்கு ஒப்பிடலாம்.ஏனெனில்
பாம்புக்கடித்து இறப்பவர்கள் அநேகம் பேர்
பயத்தால்தான்.அதன் விஷத்தால் அல்ல.
அதுபோல் கணித பாடத்தில் அதிகம் பேர்
தோல்வியுற்ற காரணம் அப்பாடத்தின் மேல்
உள்ள பயத்தால்தான்.

எனவே கணித ஆசிரியரின் முதல் பணி,
மாணவர்களுக்கு கணித பாடத்தில் உள்ள
பயத்தைப்போக்கி எல்லோரும் வெற்றிபெறமுடியும்
என்ற நம்பிக்கையை உண்டாக்குவதுதான்.
அதைத்தான் எனது அண்ணன் செய்தார்.
பயம் நீங்கியதால் அவரது வகுப்பில் கணிதத்தில்
யாரும் தோல்வி அடையவில்லை.

ஆள் பாதி ஆடை பாதி என்பது பழமொழி.
அதற்கேற்ப எனது அண்ணன் வழக்கமாக ஆசிரியர்கள்
வருவதுபோல் அல்லாமல் அப்போதே பள்ளிக்கு
‘டை’,‘கோட்’டுடன் வருவார்.அவரது தோற்றமே
மாணவர்களுக்கு கணித பாடத்தின் மேல் ஒரு
ஈர்ப்பை தந்தது என்பது உண்மை.

பாடம் நடத்தும்போது மிகவும் கண்டிப்பாக
இருந்தாலும், கணிதத்தில் Weak ஆக உள்ள
மாணவனின் பேரில் அதிக கவனம் செலுத்தி,
அந்த மாணவன் புரிந்துகொள்ளும்
வரை விடமாட்டார்.

பத்து வருடங்களுக்கான கணிதத்தேர்வு
வினாத்தாள்களைக் கொண்டுவந்து, அவற்றில்
உள்ள வினாக்களுக்கான விடையை(கணக்கை)
போடச்சொல்லி பழக்குவார்.

பாடப்புத்தகத்தில் உள்ள கணிதப்பயிற்சி
வினாக்களுக்கு மட்டுமல்லாமல் பத்து வருட
வினாத்தாட்களில் உள்ள கணித வினாக்களுக்கும்
கணக்கு போட்டு பார்த்த பயிற்சி இருப்பதால்,
தேர்வில் எவ்வகையில் கேள்வி வந்தாலும்,
மாணவர்கள் தடுமாறாமல் விடையளிக்க
முடிந்தது.

பிறகு தேர்வு நெருங்கும்பொது எப்படி தேர்வை
எழுதுவது என்பதற்கே,வகுப்பு நேரத்தில்
தனிப் பயிற்சி கொடுப்பார்



நினைவுகள் தொடரும்


வே.நடனசபாபதி

4 கருத்துகள்: