ஞாயிறு, 17 நவம்பர், 2013

மீண்டும் சந்தித்தோம்! 4



நாங்கள் பயணித்த மூன்று பேருந்துகளும் சேலம் பேருந்து நிலையம் 
அருகில் இருந்து புறப்பட்டு ஃபேர் லாண்ட்ஸ் வழியாக அஸ்தம்பட்டி 
சந்திப்பை அடைந்து  30 கிலோ மீட்டர் தொலைவில், கிழக்குத் தொடர்ச்சி மலையில்அமைந்திருக்கும்  சேர்வராயன் மலையில் உள்ள ஏற்காடு 
மலையை நோக்கி புறப்பட்ட போது, எனது நினைவலைகளும் 
20 ஆண்டுகள் பின்னோக்கி பயணித்தது.

1993 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் முதல் 1998 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 
வரை இதே சேலத்தில் ஐந்து ஆண்டுகள் சிண்டிகேட் வங்கியில் முதுநிலை 
கிளை மேலாளராக பணியாற்றியிருக்கிறேன். அப்போது பல தடவைகள் 
இந்த ஏற்காடு மலைக்கு அலுவலக விஷயமாகவும் தனிப்பட்ட 
முறையிலும் சென்றிருக்கிறேன்.

ஒரு காப்பித் தோட்ட நிறுவனம் தங்களது தோட்டத்தை விரிவுபடுத்தவும் மேம்படுத்தவும் நிதி உதவி வேண்டி எங்கள் வங்கியின் உதவியை 
நாடியிருந்ததால் அந்த காப்பி எஸ்டேட்டை ஆய்வு செய்ய  அந்த கிளையில் 
பணியில் சேர்ந்த மறு வாரமே முதன் முதல் ஏற்காடு சென்றது அப்போது 
நினைவுக்கு வந்தது.

இந்த ஏற்காட்டின் அருமை பெருமை பற்றி தெரிந்து கொண்டதுதும் 
அப்போதுதான். ஏரியும் காடும் இருப்பதால் இது ஏற்காடு என 
அழைக்கப்படுவதாக சொன்னாலும் , ஏழு காடுகள் இருந்ததால் 
ஏழுகாடு அழைக்கப்பட்ட இந்த இடம் பின்னால் மருவி ஏற்காடு 
என அழைக்கப் பட்டதாக சொல்வோரும் உண்டு.   

இந்த ஏற்காடு கடல் மட்டத்திலிருந்து சுமார் 5000 அடி உயரத்தில் 
உள்ளது என்றும் இந்தியாவை பிரிட்டிஷார் ஆண்டபோது அப்போதைய 
பரந்துபட்ட சென்னை மாகாணத்தின் ஆளுநராக இருந்த   
சர் தாமஸ் மன்றோ அவர்கள் தான் இந்த மலைவாசஇருப்பிடம்   
இருப்பதை கண்டுபிடித்தார் என்றும் சொல்லப்படுகிறது.

அந்த பிரிட்டிஷ்கார ஆளுநர் சென்னை வெயிலின் தாக்கத்தை   
தாங்கமுடியாததால், கோடைக்காலத்தில், தான் தங்க இந்த குளுமையான 
இடத்தைத் தேடி கண்டுபிடித்திருந்தாலும், நமக்கு ஒரு நல்ல கோடைவாச இருப்பிடத்தை காண்பித்தற்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும்.

ஏற்காட்டின் தந்தை என அழைக்கப்பட்ட David CockBurn என்ற 
சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தான், காப்பி, பேரிக்காய், 
ஆப்பிள் போன்றவைகளை இங்கு பயிரிட அறிமுகப்படுத்தியவர் என்றும், 
அவரால்தான் ஏற்காடு விரிவாக்கம் அடைந்தது என்றும் பின்னர் 
தெரிந்துகொண்டேன். 

ஏற்காட்டின் வெப்ப அளவு 13 டிகிரி செண்டிகிரேடிலிருந்து  30 டிகிரி செண்டிகிரேடுக்குள் இருப்பதால், இதமாக உள்ள இந்த தட்பவெட்ப 
நிலைக்காக ஆண்டு முழுதும் இங்கு சுற்றுலா பயணிகள் வந்து 
கொண்டிருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

ஏற்காட்டில் உள்ளே நுழைந்ததும் நம்மை ஈர்த்து வரவேற்கும் அழகான 
ஏரியும் (இதில் பல தடவை நான் படகில் பயணித்து இரசித்திருக்கிறேன்), 
ஏரிக்கு அருகில் உள்ள அறிஞர் அண்ணா பூங்காவும், சேர்வராயப் பெருமாள் கோவிலும், லேடீஸ் சீட்டும், அருகில் உள்ள ரோஜாத் தோட்டமும், 
பகோடா முனையும், கிள்ளியூர் நீர்வீழ்ச்சியும் காண்போர் மனதை கொள்ளை கொள்ளும் என்றாலும் இவைகளையெல்லாம் ஒரே நாளில் பார்க்க இயலாது.

இவைகளையெல்லாம் இப்போது திரும்பவும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு 
பார்த்து இரசிக்கப்போகிறேன் என்ற மகிழ்ச்சி இருந்தாலும், 
எல்லாவற்றையும் இன்றே பார்க்க முடியுமா என்ற ஐயமும், அப்போது 
பார்த்தற்கும் இப்போது பார்ப்பதற்கும் என்ன வேறுபாடு இருக்குமோ 
என்ற எண்ணமும் என்னுள் எழுந்தது.

எங்கள் பேருந்து அஸ்தம்பட்டி சந்திப்பிலிருந்து வலதுபுறம் திரும்பி, 
சேலம் நீதிமன்றம் சேலம் ஆட்சித்தலைவரின் இருப்பிடங்களைத் தாண்டி 
சென்றபோது பழைய நீதி மன்ற கட்டிடம் இடிக்கப்பட்டு புதிய நீதி மன்ற 
வளாகம் கட்டப்பட்டிருப்பதை கவனித்தேன்.

வழி நெடுக புதிய புதிய கட்டிடங்களும் கல்யாண மண்டபங்களும் எழும்பியிருப்பதையும், அதிக நடமாட்டமே இல்லாத கோரிமேடு 
இப்போது அதிக கடைகளோடு மிகவும் பிஸியாக இருப்பதையும் 
கண்டேன்.

அடுத்து நான் பார்க்க விரும்பியது சேலம் என்றால் மாங்கனிக்குப் 
பிறகு எல்லோராலும் நினைக்கப்படும் மாடர்ன் தியேட்டேர்ஸ் இருந்த 
இடத்தை! எல்லோரும் திரைப்படம் எடுக்க சென்னையில் ஸ்டுடியோஸ் 
கட்டியபோது, துணிந்து தன் சொந்த மாவட்டத்திலேயே, ஏற்காடு 
மலையடிவாரம் அருகே உள்ள கொண்டப்பநாயக்கன்பட்டியில் 9 ஏக்கர் 
நிலப்பரப்பில் மாடர்ன் தியேட்டேர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் திரைப்பட ஸ்டுடியோவைக் கட்டி அந்த காலத்திலேயே  சென்னையில் இருக்கும் 
நடிகர்களை எல்லாம் சேலம் வரவழைத்து படமெடுத்து வியக்க வைத்தவர் கண்டிப்பானவர் என பெயர் பெற்ற T.R.சுந்தரம் என்கிற திருச்செங்கோடு 
ராமலிங்கம் சுந்தரம் அவர்கள். அப்போதே தனது பட்டப்படிப்பை 
U.K வில் உள்ள University of Leeds இல் படித்தவர்.

117 திரைப்படங்களைத் தயாரித்த அந்த நிறுவனம் 1935 இல் 
ஆரம்பிக்கப்பட்டு 1982 இல் மூடப்பட்டாலும், அந்த நிறுவனத்தின் பெயரைத் 
தாங்கிய நுழை வாயில் கம்பீரமாக நிற்பதை நான் எங்கள் வங்கியின் கொண்டப்பநாயக்கன்பட்டி கிளைக்கு செல்லும்போது பார்த்திருக்கிறேன்.
அப்போதே அந்த ஸ்டுடியோவில் இருந்த கட்டிடங்கள் சில இடிக்கப்பட்டு 
வீடுகள் எழும்பிக்கொண்டிருந்தன.

இப்போது அந்த நுழை வாயிலைத்தேடியபோது அதைக் காணவில்லை.
அதுவும்  இடிக்கப்பட்டுவிட்டது என்பதை அறிந்து வருத்தப்பட்டேன். 
அதைப்பற்றி விசாரித்ததில் அந்த இடத்தை வாங்கிய ஒரு வீடு கட்டும் 
நிறுவனம் அந்த நிறுவனத்தின் பெயர்ப் பலகையை மட்டும் சிறிது தூரத்தில் 
தாங்கள் கட்டியுள்ள  Sundar Garden என்ற பெயரிட்ட வாயிலில் 
பதிக்கப்பட்டிருப்பதாக சொன்னார்கள். அதைக் கேட்டு வருத்தப்பட்டாலும், 
அந்த மாபெரும் நிறுவனத்தின் பெயர்ப்பலகையாவது மிஞ்சியிருக்கிறதே 
என்று சந்தோஷப்பட்டேன்.

நிச்சயம் அந்த பெயர்ப்பலகை Modern Theatres Ltd., என்ற புகழ் பெற்ற 
நிறுவனம் அங்கு இருந்தது என்பதை வரும் தலைமுறைகளுக்கு 
சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருக்கும் என்பகில் ஐயம் இல்லை.

சேலத்திலிருந்து 10 கிலோமீட்டர் அதாவது கொண்டப்பநாயக்கன்பட்டி 
வரை தான் சமவெளி. அதற்குப் பிறகு மலை ஏறும் பகுதி வந்துவிடும்.  
20 கொண்டைஊசி வளைவுகள் கொண்ட மலைப்பாதையில் 
20 கிலோமீட்டர் பயணிக்கவேண்டும். அதில் பயணிக்கும்போது முதலில் 
சிறிது தூரம் ஒன்றுமே இருக்காது. உண்மையில் அங்கு இருந்த 
மரங்களை நம்மவர்கள் வீணே அங்கு மரம் ஏன் இருக்கவேண்டும் 
என வெட்டிவிட்டார்களாம்!

இப்போது எப்படி இருக்கிறது என பார்த்தபோது அப்படியே தான் இருந்தது.
இன்னும் சொல்லப்போனால் முன்பு அநேகம் தடவை சென்றபோது அங்கும் 
இங்கும் சில சந்தன மரங்களை போகும் வழியில் பார்த்திருக்கிறேன். 
இப்போது அவைகளை எல்லாம் காணவில்லை. ஒருவேளை அவைகள் 
வெட்டப்பட்டு அஸ்தம்பட்டியில் உள்ள அரசு சந்தன மர ஏலம் விடும் 
கிட்டங்கிக்கு போய்விட்டதோ அல்லது தனியார்கள் கைக்குபோய் விட்டதோ தெரியவில்லை.

எனக்கு அடுத்த இருக்கையில் நண்பர் திரு D.கோவிந்தராஜன் அவர்கள் அமர்ந்திருந்தார். வெளியே பார்ப்பதை விட்டுவிட்டு, அவரோடு பேச 
ஆரம்பித்தேன். அவர் துணை வேளாண்மை இயக்குனராகப் பணியாற்றி 
ஓய்வு பெற்று தற்சமயம் வேலூரில் வசிக்கிறார். அவருடைய அலுவலக அனுபவங்களைக் கேட்டுக்கொண்டே வந்ததால் மலைவழிப்பாதையை   
புகைப்படம் எடுக்க நினைத்ததை நிறைவேற்றமுடியவில்லை.

அதனால் கூகிளார் உபயத்தால் கீழ் கண்ட படங்களை தந்திருக்கிறேன். 
ஆனால் பின் வரும் பதிவுகளில் நான் எடுத்த புகைப்படங்களையும் 
திருமதி சகுந்தலா அய்யம்பெருமாள் மற்றும்  திரு அய்யம்பெருமாள் 
ஆகியோர் எடுத்த புகைப்படங்களையும் பதிவேற்றுவேன்.  












காலை 10.30 மணி அளவில் ஏற்காடு அடைந்தபோது முன்பே ஏற்பாடு 
செய்திருந்தபடி தேநீர் அருந்துவதற்காக ஏற்காடு ஏரிக்கு அருகே இருந்த 
ஒரு உணவகம் அருகே  எங்களது பேருந்து நின்றது. மற்ற பேருந்துகளும் 
அங்கே நிறுத்தப்பட்டன.  

தொடரும்

22 கருத்துகள்:

  1. இனிய பயணம் ஐயா... விரைவில் மற்ற படங்களையும் ரசிக்க காத்திருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      நீக்கு
  2. மார்டன் தியேட்டர்ஸ் பற்றிய பல செய்திகளை அறிந்து கொண்டேன் ஐயா.ஏற்காடு பற்றிய தகவல்களும் இதுவரை அறியாதவை. தொடருங்கள் ஐயா. தொடரக் காத்திருக்கின்றேன். நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களே!

      நீக்கு
  3. பயணங்கள் தொடர வாழ்த்துகிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி புலவர் ஐயா அவர்களே!

      நீக்கு
  4. நான் சேலத்தில் எம்.எஸ்.சி படித்தவன். ஹஸ்தம்பட்டியில் அரசினர் கலைக் கல்லூரியில். மீண்டும் பார்க்கவேண்டும் அதை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி திரு செல்லப்பா யக்யசாமி அவர்களே! தற்போது சேலம் அரசினர் கலைக்கல்லூரி, குமாரசாமிபட்டியில் செர்ரி சாலையும், மரவனேரி சாலையும் சந்திக்கும் இடத்தில் வடபுறத்தில் உள்ளது.ஒருவேளை நீங்கள் படிக்கும்போது அஸ்தம்பட்டியில் இருந்திருக்கலாம். இருப்பினும் திரும்பவும் நாம் படித்த கல்லூரிக்கு சென்று பார்ப்பதே ஒரு மகிழ்ச்சி தரும் நிகழ்வுதானே!

      நீக்கு
  5. ஐந்து வருடங்கள். இவ்வளவு அழகான இடத்தில் வேலை!. . வேறு இடத்துக்கு மாற்றல் வந்த பிறகு எப்படி சமாளித்தீர்கள்? பயணத்தைப் பற்றி இன்னும் அறியக் காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! நீங்கள் சொல்வதுபோல் அழகான இடத்தை விட்டு வர எனக்கும் என் குடும்பத்தார்க்கும் மனமில்லைதான். ஆனால் நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிப் பணியில் அலுவலர்கள் 3 அல்லது 5 ஆண்டுகளுக்கு மேல் ஓரிடத்தில் இருக்கமுடியாதே. என் செய்ய?

      நீக்கு
  6. பயணங்கள் எப்போதும் இனிமையானவைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு முனைவர் பழனி கந்தசாமி அவர்களே! பயணங்கள் இனிமையானவைகள் தான். அதை விட அந்த அனுபவத்தை பகிர்ந்துகொள்வது இன்னும் இனிமையாக இருக்கிறது என்பது தங்களைப் போன்றோரின் பின்னூட்டங்களைப் படிக்கும்போது அறிகிறேன்

      நீக்கு
  7. நாகமலை எஸ்டேட் செல்லும் வழியில் ஞானானந்தகிரி ஆசிரமம் அமைந்திருக்கிறது..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே! ஞானானந்தகிரி சுவாமிகளின் ஆசிரமமான ‘பிரணவ நிலையத்திற்கு செல்லவில்லை. அடுத்த தடவை செல்லும்போது அவசியம் செல்வேன். தகவலுக்கு நன்றி!

      நீக்கு
  8. ஏற்காடு பற்றியும் TRS அவர்களுடைய மாடர்ன் தியேட்டர்ஸ் பற்றியும் பல அரிய தகவல்களை சேகரித்து அளித்ததற்கு நன்றி. போகும் பாதையில் உள்ளவற்றையும் குறிப்பிடுவது நாங்களும் உங்களுடன் இணைந்து பயணிப்பதுபோன்ற பிரமையை ஏற்படுத்துகிறது. நீங்கள் ஒரு கைதேர்ந்த பயணக் கட்டுரையாளர். இது போலவே நீங்கள் அலுவல் விஷயமாக சென்று வந்த ஊர்களைப் பற்றியும் எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே! தங்களின் ஆலோசனையை செயல்படுத்த முனைவேன்.

      நீக்கு
  9. உங்கள் பதிவைப் படித்ததும் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்காடு சென்றதும் சுற்றிப் பார்த்ததும் ஞாபகம் வந்தது. இன்றைய ஏற்காடு எப்படி இருக்கிறது என்பதை உங்கள் பதிவின் மூலம்தான் தெரிந்து கொள்ள வேண்டும். மாடர்ன் தியேட்டர்ஸ் என்றவுடன், எனக்கு அந்தக் கால படங்களில் ஓடிய குதிரைகளின் குளம்பொலிகள் சத்தம் காதுகளில் ஒலிக்கின்றன. அந்த மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவு வாயில் அப்போது இருந்த இடத்தில் இப்போது இல்லை என்னும்போது மிகவும் நெருடலாகத்தான் உள்ளது. காலச்சக்கரம் எப்படியெல்லாம் ஓடுகிறது பாருங்கள். இந்த பதிவின் தொடர்ச்சியை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! ‘மாடர்ன் தியேட்டர்ஸ்’ பற்றி இன்னும் எழுத நினைத்தேன். பதிவின் நீளம் அதிகமாகிவிடும் என்பதால் எழுதவில்லை. மேலும் இந்த தொடர் அதுபற்றி அல்ல என்பதாலும் எழுதவில்லை. தொடர்வதற்கு நன்றி!

      நீக்கு
  10. ஏற்காடு பயணத்தொடர் முடிந்ததும், மறக்காமல் மாடர்ன் தியேட்டர்ஸ் பற்றிய உங்கள் நினைவலைகளை தனி பதிவாக எழுதவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆலோசனைக்கு நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! நிச்சயம் ‘மாடர்ன் தியேட்டர்ஸ்’ பற்றி பதிவிடுவேன்.

      நீக்கு
  11. பொருத்தமான கூகிளார் படங்கள்.உங்கள் படங்கள்ளுக்காகக் காத்திருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

      நீக்கு