ஞாயிறு, 24 நவம்பர், 2013

மீண்டும் சந்தித்தோம்! 5



காலை 10.30 மணி அளவில் ஏற்காடு அடைந்ததும் ஏற்காடு ஏரிக்கு அருகே 
இருந்த ஒரு உணவகம் அருகே  எங்களது பேருந்துகள் நின்றன. சேலத்தில் கிளம்பும்போதே ஏற்காடு அடைந்ததும் அனைவரும் தேநீர் அருந்திவிட்டே 
எல்லா இடங்களையும் பார்க்க இருக்கிறோம் என சேலம் நண்பர்கள் 
முன்பே சொல்லியிருந்தார்கள்.

எனவே தேநீர் அருந்த நாங்கள் இறங்கி அருகே இருந்த உணவு விடுதிக்கு 
சென்றோம். அதை விடுதி என்று சொல்வதை விட விடுதியாக மாற்றப்பட்ட 
வீடு என சொல்லலாம். Ruchi என்ற பெயரில், இது போன்று சுற்றுலா 
வருபவர்களுக்கு அவர்களது தேவையான உணவை தயாரித்து தரும் 
பணியில் (Catering) நடத்தப்படும் உணவு விடுதி அது. அன்று மதிய மற்றும்  
இரவு உணவு அங்குதான் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக சொன்னார்கள்.  

நாங்கள் எல்லோரும் ஆசுவாசப்படுத்திக்கொண்ட பிறகு, அனைவருக்கும்   
சுடச்சுட தரப்பட்ட  தேநீரும் பிஸ்கட்களும் கொடுத்தனர் அங்குள்ள 
ஊழியர்கள். காலையில் 7.30 மணிக்கே சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு 
9.30 மணி வரை பேருந்துக்காக காத்திருந்து ஒரு மணி நேரம் பயணித்து 
வந்த எங்களுக்கு அந்த சூடான தேநீர் அமிர்தமாயிருந்தது என சொல்லவும் 
வேண்டுமா?

தேநீர் சாப்பிட்டுக்கொண்டே கிளம்பு முன் பார்த்து பேசாத நண்பர்களிடம் பேசிக்கொண்டு இருந்தோம். அனைவரும் தேநீர் அருந்தியதும் நண்பர்கள் பழனியப்பனும் வெங்கடராமணனும், சேர்வராய பெருமாள் கோவில், 
ராஜராஜேஸ்வரி கோவில், லேடீஸ் சீட், அரசினர் ரோஜாத் தோட்டம், 
பகோடா முனை அண்ணா பூங்கா. அதன் அருகில் உள்ள ஏற்காடு ஏரி முதலியவைகளை பார்க்க ஏற்பாடு செய்திருப்பதாகவும்.நேரத்தை 
வீணாக்காமல் இருந்தால் எல்லாவற்றையும் பார்க்க இயலும் என்றும் 
சொன்னார்கள்.

தேநீர் அருந்திவிட்டு மற்ற நண்பர்களுக்காக காத்திருந்த சில நண்பர்களை,
நண்பர் அய்யம்பெருமாள் எடுத்த புகைப்படம் கீழே



இந்த சந்திப்பை நன்முறையில் ஏற்பாடு செய்திருந்த நண்பர்கள் 
பாலசுப்ரமணியன், வெங்கடரமணன், பழனியப்பன் ஆகியோர் அவர் தம் துணைவியாருடன் இடமிருந்து வலமாக நிற்பதை, படமெடுத்தவரும் 
நண்பர் அய்யம்பெருமாள் தான்.






முதலில் சேர்வராய பெருமாள் கோவிலுக்கு செல்வதாக ஏற்பாடு 
செய்திருந்ததால் அங்கு செல்ல அனைவரும் பேருந்தில் எறினோம்.
அங்கிருந்து சுமார்  7 கிலோமீட்டர்  தொலைவில் தான் இருந்தது 
அந்த கோவில்.போகும் வழியில் இரண்டு கிலோ  மீட்டர் தாண்டியதும் 
இடது பக்கத்தில் இந்திய தாவர ஆய்வு நிறுவனத்தின் (Botanical Survey of India)  தாவரப்பூங்கா (Botanical Garden) இருந்தும் அங்கு நாங்கள் 
இறங்கவில்லை. மேலும் அங்கு இறங்கினால் எல்லாவற்றையும் பார்த்து 
திரும்ப நேரமாகும் என்பதால் தான் அதை எங்கள் பயண நிகழ்ச்சியில் 
சேர்க்கவில்லை என நினைக்கிறேன். ஆனால் நான் அங்கு இருமுறை சென்றிருக்கிறேன்.  

அந்த தாவர பூங்காவில் அரியவகை மரங்களும் ஆர்கிட் மலர்களும் 
இருந்தாலும், நாம் கண்டிராத ஒரு அதிசய தாவரம் இங்கு உண்டு.அதுதான் 
பூச்சியை உண்ணும் தாவரம் (Insectivorous Plant). இதை Pitcher Plant என்பார்கள்

பொதுவாக இவ்வகைத் தாவரங்கள் நம் நாட்டில் அதிகமாக மழை பெய்கின்ற 
வட கிழக்கு மாநிலங்களில் தான் இருக்கும். இந்த தாவரங்கள் நகரும் மற்றும் 
பறக்கும் பூச்சிகளை பிடித்து உண்பதற்காக கோப்பை வடிவில் இலைகளை கொண்டிருக்கும். அதனுடைய மேல் பக்கத்தில் மூடி போன்று ஒன்றும் இருக்கும்.அதனுடைய வண்ணம் மற்றும் பூந்தேன் (Nectar) ஆகியவைகளால் 
கவரப்பட்ட பூச்சிகள் அந்த திறந்த கோப்பைபோன்ற இலையில் அமர்ந்ததும், 
அதில் சுரந்திருக்கும் வழுவழுப்பான திரவத்தின் காரணமாக அவைகள் உள்ளே 
வழுக்கி விழுந்துவிடும். உடனே அந்த மூடி தானே மூடிக்கொள்ள, அந்த 
கோப்பையில் சுரக்கும் ஒரு திரவத்தில் அந்த பூச்சிகள் கரைந்துபோய் விடும்!

அந்த பூச்சி உண்ணும் தாவரத்தைப் பார்க்காதவர்களுக்காக கூகிளார் 
உபயத்தால் கீழே தந்திருக்கிறேன். 




எனவே ஏற்காடு செல்வோர் அனைவரும் அவசியம் பார்க்கவேண்டிய பூங்கா இது.


நான் பழைய நினைவுகளில் மூழ்கி இருக்க, எங்கள் பேருந்து சேர்வராய பெருமாள் கோவிலை அடைந்தபோது மணி 11.20. முன்பைவிட இப்போது 
கோவிலுக்கு போகும் சாலைகளை விரிவாக்கி தார் போட்டு 
செப்பனிட்டிருப்பதால் பேருந்து விரைவாக செல்ல ஏதுவாக இருக்கிறது 
என எண்ணுகிறேன்.

இந்த சேர்வராய பெருமாள் கோவில் இருக்கும் இடம் தான் ஏற்காடு மலை சிகரத்திலேயே அதிக உயரமான இடம் என்கிறார்கள். அதாவது கடல் 
மட்டத்திலிருந்து 5326 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது இந்த கோவில். 

இது ஒரு குகைக்கோவில். சேர்வராய மலைக்கும்,காவேரி ஆற்றுக்குமான 
தெய்வங்கள் உள்ளே இருக்கும் சேர்வராய பெருமாளும் காவேரி அம்மனும் 
தான் என்கிறார்கள் உள்ளூர்வாசிகள். ஏற்காட்டை சுற்றியுள்ள 60 க்கும் 
மேற்பட்ட கிராமங்களுக்கு இந்த சேர்வராயன் தான் காக்கும் கடவுள் என்ற 
நம்பிக்கையும் உண்டு.

இங்கு சேர்வராய பெருமாளுக்கு ஆண்டுதோறும் மே திங்களில், 
கோலாகலமான விழா நடக்கும்போது ஆயிரக்கணக்கான மக்கள் 
கூடுவார்கள் என சொன்னார்கள்.

இந்த கோவில் பார்ப்பதற்கு ஒன்றும் பிரமாண்டமாக தெரியாது. 
சாதாரண கட்டிடம் போல் தான் இருக்கும்.

நான் சென்ற முறை வந்தபோது, முன்பக்கம் இப்போது உள்ளதுபோன்ற 
கட்டிடம் கூட இல்லை.பெருமாளை சேவிக்க சில படிகள் ஏறி சென்று  
இருண்ட சிறிய குகை வழியாக உள்ளே செல்லவேண்டும். இது ஒரு 
குகைக்கோவில் என்பதால்  குனிந்துக்கொண்டே இருட்டில் உள்ளே 
சிறிது தூரம் சென்றால் அங்கு ஒரு மேடையில் வைக்கப்பட்டுள்ள 
காவேரி அம்மனையும், பெருமாளையும்  சேவிக்கலாம்.

சில இடங்களில் பாறை அங்கும் இங்கும் ஒழுங்காக இல்லாமல் 
தொங்கிக்கொண்டு இருப்பதால் உள்ளே போகும்போது மேலே கையை 
வைத்து பாறையை தொட்டுக்கொண்டு செல்வது நல்லது. உடல் ஒல்லியாய் 
இருந்தால் இருவர் செல்லலாம். இல்லாவிடில் ஒருவர் பின் ஒருவர் 
செல்வதே சிறந்தது. 

நிமிர்ந்து நடந்துவிட்டு திடீரென குனிந்து சில மணித்துளிகள் நடக்க எனக்கு 
கடினமாய் இருந்தது.எல்லோரும் என்னைப்போலவே கஷ்டப்பட்டுத்தான் 
உள்ளே சென்றனர். ஒருவேளை நமது அரசியல்வாதிகளுக்கு இந்த மாதிரி 
இடங்களில் நடப்பது கடினமாய் இருக்காது என நினைக்கிறேன்!
 

சேர்வராயப்பெருமாள் கோவிலின் முகப்பை நான் எடுத்த புகைப்படம் கீழே




தொடரும்



 






29 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!

      நீக்கு
  2. சேர்வராய மலை குகைக்குள் ஊர்ந்து சென்றால் மேட்டூர் அணைக்குச்செல்லலாம் என்றும் , இந்தகுகைப்பாதை தற்போது உபயோகத்தில் இல்லை என்றும் சொன்னார்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே! நீங்கள் கூறிய தகவல் பற்றி அடுத்த பதிவில் எழுத இருந்தேன். நிச்சயம் அதுபற்றி எழுதுவேன். சென்ற பதிவிற்கான பின்னோட்டத்தில் நீங்கள் குறிப்பிட்டிருந்த கோயிலுக்கும் போனோம். அதுபற்றியும் அடுத்த பதிவில் எதிர்பார்க்கலாம்.

      நீக்கு
  3. // ஒருவேளை நமது அரசியல்வாதிகளுக்கு இந்த மாதிரி இடங்களில் நடப்பது கடினமாய் இருக்காது என நினைக்கிறேன்! //

    அரசியல்வாதிகளில் ஒருவருக்காவது கடினமாக இருந்தாகவேண்டுமே. ஏற்காடு சென்றதில்லை. தாங்கள் எழுதுவதைப் பார்க்கும்பொழுது ஒருமுறை சென்றுவரலாம் என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! நான் பொதுவாகத்தான் நம்மூர் அரசியல்வாதிகள் பற்றி குறிப்பிட்டிருந்தேன். ஏற்காடு நீங்கள் அவசியம் பார்க்க வேண்டிய இடம். குறைந்தது மூன்று நாட்கள் தங்கி ஆற அமர எல்லாவற்றையும் பார்த்து இரசித்து வேண்டும். அடுத்த தடவை இந்த ஊர் உங்கள் பயணநிரலில் இருக்கட்டும்.

      நீக்கு
    2. ஒருவருக்காவது என்பது, தலைமையில் இருப்பவர்களைப்பற்றி கூறினேன். அவர்கள் யாருக்கும் வணங்குவதுமில்லை, செவிசாய்ப்பதுமில்லை.

      நீக்கு
    3. நீங்கள் குறிப்பிட்டிருப்பது சரிதான் திரு N.பக்கிரிசாமி அவர்களே! ஆனால் அவர்கள் ஒன்றை மறந்துவிடுகிறார்கள். ‘ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும்’ என்பதை!

      நீக்கு
  4. இனிய பயணம் ஐயா... அடுத்த முறை செல்லும் போது அவசியம் பூங்காவை பார்க்க வேண்டும்... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      நீக்கு
  5. சுவை குன்றாமல் கொண்டு செல்கிறீர்கள். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே!

      நீக்கு
  6. வணக்கம்
    ஐயா

    அருமையான தொகுப்பு வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திரு ரூபன் அவர்களே! வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி!

      நீக்கு
  7. ஏற்காடு செல்லும் ஒருவர், செலவதற்கு முன் உங்கள் பதிவைப் படித்தால் உபயோகமாக இருக்கும். எனவே தங்கள் பதிவில் லேபிள்கள் பிரிவில் பொது என்பதோடு ஏற்காடு, சுற்றுலா என்பவற்றையும் சேர்த்தால் நன்றாக இருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், ஆலோசனைக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! இந்த பதிவு, வகுப்புத் தோழர்களின் சந்திப்பு என்பதால் பொது என்றே வகைப்படுத்தினேன். தங்களின் ஆலோசனைப்படி சுற்றுலா என்ற தலைப்பில் வகைப்படுத்திவிட்டேன்.

      நீக்கு
  8. அண்மையில் சென்னை சென்றிருந்தபோது “மைத்துளிகள் “ பதிவ்ர் மாதங்கி மாலியின் தந்தை உங்கள் பதிவு பற்றிக் குறிப்பிட்டது என்னை இங்கு வரவழைத்தது. தொடர்பதிவாய் இருப்பதால் சரியாகப் புரியுமோ என்று எண்ணி இருந்தேன் . நீங்கள் ஏற்காடு பற்றி எழுதி இருக்கிறீர்கள். எத்தனையோ இடங்களுக்குச் சென்ற நான் ஏற்காடு கண்டதில்லை. ஏழையின் மலை வாசஸ்தலம் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அந்த இடத்துக்குப் போகும் ஆர்வத்தைக் கிளறி விட்டது உங்கள் பதிவு. நான் ரசித்த வரிகள்/ஒருவேளை நமது அரசியல்வாதிகளுக்கு இந்த மாதிரி
    இடங்களில் நடப்பது கடினமாய் இருக்காது என நினைக்கிறேன்!/ ஒரு சிறு மாற்றம் சொல்லலாமா.?’ அம்மாவின் அரசில் இருப்பவர்களுக்கு “ என்று இருந்தால் இன்னும் சரியாக இருந்திருக்குமோ? . தொடர்வேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் வருகைக்கும், கருத்துக்கும் எனது பதிவை இரசித்ததற்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியன் அவர்களே! தங்களுக்கு எனது பதிவை அறிமுகப்படுத்திய பதிவர் மாதங்கி மாலியின் தந்தை அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் தெரிவித்த மாற்றத்தில் எனக்கு இருவேறு கருத்துக்கள் இல்லை. தங்களுக்கு நேரம் இருப்பின் எனது மற்ற பதிவுகளையும் படித்து கருத்தை சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

      நீக்கு
  9. பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

      நீக்கு
  10. Insectivorous/Carnivorous Plants-- I had read about these plants as a kid in a comics books called "Tinkle"... Always been intrigued by them... But this is the first time i am seeing the picture of it! :)

    பதிலளிநீக்கு
  11. Insectivorous/Carnivorous plants... I had read about these as a kid in a comics book called "tinkle".. But this is the first time that I am seeing a picture of it... :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி மாதங்கி மாலி அவர்களே!

      நீக்கு
  12. அன்று நீங்கள் எனக்கு செய்த உதவிக்கு என் நன்றியைக் காண >>>http://jokkaali.blogspot.com/2013/11/blog-post_3165.html
    த.ம 3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரு பகவான்ஜி அவர்களே! தங்கள் பதிவைப் பார்த்து எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துவிட்டேன். என்னை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி!

      நீக்கு
  13. Sir, superb coverage sir. I am following you right from Chennai.. The way you have described your travel from Salem to Yercaud and now your visit to Servaraya Perumal temple is urging me to make a programme to Yercaud, the place which I have not yet visited. Your way of writing reminds me `Idhayam Pesukirathu' Manian's old visit reports to foreign countries. Keep it up sir.

    பதிலளிநீக்கு
  14. வருகைக்கும், தொடர்வதற்கும் பாராட்டுக்கும் நன்றி திரு பொன்ராஜ் குமார் அவர்களே!

    பதிலளிநீக்கு
  15. என்னுடைய வலைப் பூ “ பூவையின் எண்ணங்கள் “ பதிவில் உங்கள் பின்னூட்டம் கண்டேன். அது என் secondary வலைப்பூ. என்னுடைய gmb writes என்னும் தளமே என் கருத்துக்கள் பகிர உபயோகிக்கும் வலைப்பூ/ Please visit gmbat1649.blogspot.in

    பதிலளிநீக்கு