வியாழன், 18 செப்டம்பர், 2014

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 12




ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பார்கள். அதோடு ஏமாற்றுவோர்களும் திருடுபவர்களும் சும்மா இருக்கமாட்டார்கள் 

என்றும் சொல்லலாம். ஒரு மாவட்ட ஆட்சியாளரையே ஏமாற்றிவிட்டதால் 

நமது கதாநாயகனுக்கு துணிவு வந்து மேலும் மாவட்டத்தில் உள்ள மற்ற 

முதன்மை அதிகாரிகளிடம் தனது வேலையைக் காட்டத் துணிந்துவிட்டார்.

 

இந்த தடவை அந்த பல குரல் மன்னன் குறிவைத்தது எந்த மாவட்டத்தில் ஆட்சியாளரிடம் பணம் பெற்றாரோ அந்த மாவட்டத்தில் இருந்த மாவட்ட 

வன அலுவலரை. ஒரு நாள் காலையில் அவரை தொலைபேசியில் 

அழைத்து சென்னையிலிருந்து முதன்மை வன அலுவலர் குரலில் பேசி 

பழைய கதையையே சொல்லியிருக்கிறார்.

 

அதாவது அவரது மைத்துனர் பெங்களூரு செல்லும்போது எல்லாவற்றையும் தொலைத்துவிட்டு அந்த ஊரின் பேருந்து நிறுத்தத்தில் நிற்பதாகவும், 

அவரிடம் ரூபாய் 5000 த்தை கொடுத்து உதவுமாறும் காலையில் 

அலுவலகம் வந்ததும் அந்த பணத்தை அனுப்பி வைப்பதாகவும் வழக்கம் 

போல் சொல்லியிருக்கிறார். 

 

ஆனால் அவர் செய்த இரண்டு தவறுகள் அவரை மாட்டவைத்துவிட்டன. 

ஒன்று எந்த மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியாளரை ஏமாற்றினாரோ அதே மாவட்டத்தில் அதை செய்யத் துணிந்தது. மேலும் கிளிப் பிள்ளைப்போல் 

அதே உரையாடலை/யுத்தியைக்  கையாண்டது.

 

எப்போது அவர் மாவட்ட ஆட்சியாளரிடமே குரல் மாற்றிப் பேசி பணத்தை 

பெற்றாரோ அப்போதே மாவட்ட காவல்துறை விழித்துக் கொண்டது.(அதை 

முன்பே செய்திருந்தால் அந்த ஏமாற்றுப் பேர்வழிக்கு மாவட்ட ஆட்சியாளரை ஏமாற்றும் அளவுக்கு துணிச்சல் வந்திருக்காது.)

 

காவல் துறை புலனாய்வு செய்ததில் மாவட்ட ஆட்சியாளருக்கு வந்த 

தொலைபேசி அழைப்பு பொது தொலைபேசியிலிருந்து வந்திருக்கிறது 

என்பதை கண்டுகொண்டார்கள். உடனே அந்த பேர்வழியை கையும் 

களவுமாய் பிடிக்க வலை விரித்தார்கள். அந்த ஊரில் இருந்த அனைத்து 

தனியார் தொலைபேசிக் கூடம் வைத்திருப்போர் அனைவரிடமும்  

காலை வேளையில் யாராவது சந்தேகத்திற்கிடமான ஆட்கள் 

தொலைபேசியில் பேச வந்தால் உடனே காவல் துறையினருக்கு 

அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டார்கள். 

 

அதோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அலுவலர்களிடமும் இதுபோல் 

பணம் கேட்டு தொலைபேசியில் பேசினால் உடனே இணைப்பைத் 

துண்டிக்காமல் உரையாடலை தொடருமாறு கேட்டுக்

கொண்டிருக்கிறார்கள்.

 

அப்படி உரையாடலை தொடர்ந்தால், எந்த STD தொலைபேசிக் 

கூடத்திலிருந்து அந்த ஏமாற்றுக்காரர் பேசிக்கொண்டிருக்கிறாரோ 

அங்கிருந்து சமிக்கை (Signal) கிடைத்ததும் அங்கேயே வைத்து அந்த 

ஆளை பிடித்துவிடலாம் என்பதே அவர்களது கணக்கு. 

 

குறிப்பிட்ட நாளன்று அந்த பலே ஆசாமி ஒரு STD தொலைபேசிக் 

கூடம் சென்று அங்குள்ளவர்களிடம் உள்ளூர் தொலைபேசியில் 

பேசவேண்டும் எனக் கூறி பேசும் அறைக்கு சென்று அந்த தொலைபேசி 

கருவியை தனது கைக்குட்டையால் மூடி பேச ஆரம்பித்ததைப் பார்த்த 

அந்த கடை உரிமையாளர் உடனே அது பற்றி காவல் துறைக்கு 

சொல்லிவிட்டார்.

 

உடனே விரைந்து சென்ற காவல் துறையினர் அந்த நபர் தான் மாவட்ட 

அலுவலரிடம் பேசியவர் என்பதை அறிந்து கோழியை அமுக்குவதுபோல் 

அமுக்கி, கைது செய்து நீதிபதியின்  ஆணையை பெற்று சேலத்தில் உள்ள 

சிறையில் அடைத்துவிட்டனர். 

 

அவரை விசாரித்ததில் அவர் ஓசூரை சேர்ந்தவர் என்றும், புகுமுக வகுப்பு 

வரை படித்தவர் என்றும் அவருக்கு தென்னக மொழிகளோடு ஆங்கிலமும் 

இந்தியும் தெரியும் என்றும் இதுபோல் பலரை தொலைபேசியில் பேசி ஏமாற்றியிருக்கிறார் என்றும் தெரியவந்தது.

 

ஒவ்வொரு தடவையும் தொலைபேசியில் மேலதிகாரி போல் பேசிவிட்டு 

பின் தானே அந்த பேருந்து நிறுத்தத்தில் நின்று அந்த அலுவலரின் 

மைத்துனர் போல் நடித்து பணத்தைப் பெறுவது அவரது வாடிக்கையாம்.

 

இது நடந்து சில நாட்கள் கழித்து நீதி மன்றத்தில் தொடர்ந்துள்ள 

வழக்குக்காக அந்த நபரை சிறைச்சாலையிலிருந்து நீதிமன்றம் அழைத்து 

செல்ல எங்கு ஏமாற்று வேலை செய்ய நினைத்தாரோ அந்த

மாவட்டத்திலிருந்து இரு காவலர்கள் சேலம் வந்தார்கள்.

 

அவர்கள் சேலம் மத்திய சிறையிலிருந்து அந்த ஏமாற்றுப்பேர்வழியை 

நீதிமன்றம் உள்ள ஊருக்கு செல்ல பேருந்து நிலையம் அழைத்து 

செல்லும்போது, சேலத்தில்  நான்கு ரோடு எனப்படும் நான்கு சாலைகள் 

சந்திக்கும் இடம் வந்ததும், அந்த நபர் தன்னை அழைத்துப் போக வந்த 

காவலரிடம் வைத்த வேண்டுகோள் என்ன தெரியுமா?

 

தொடரும்


18 கருத்துகள்:

  1. ஆஹா க்ரைம் கதைபோல ஆக்கிவிட்டீர்கள் நண்பரே,,,, ஏமாற்றுங்கள், ஏமாற்றுங்கள் SORRY தொடருங்கள், தொடருங்கள்.ஸூப்பர்.
    மதுரையில் சந்திப்போம் நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே! இதுவும் ஒரு வகை குற்றம் சார்ந்த நிகழ்வுதானே. அதனால் பதிவும் ஒரு Crime கதை போல் ஆகிவிட்டது. மதுரைக்கு முடிந்தால் வருவேன். அப்போது சந்திப்போம்.

      நீக்கு
  2. சரியான இடத்தில் தொடரும்!
    காத்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன்அவர்களே! அது என்னவோ தெரியவில்லை. ‘சரியான இடத்தில்’ தொடரும் எனப் போடும்படி ஆகிவிடுகிறது! காத்திருப்பதற்கு நன்றி!

      நீக்கு
  3. பதில்கள்
    1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி முனைவர் பழனி கந்தசாமி அவர்களே!

      நீக்கு
  4. சுவாரஸ்யத்திற்கு குறைவில்லை! தொடருங்கள்! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு ‘தளிர்’ சுரேஷ் அவர்களே!

      நீக்கு
  5. ஸ்வாரஸ்யமான இடத்தில் தொடரும்! :)

    தெரிந்து கொள்ள தொடர்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!

      நீக்கு
  6. அருமை. ஆர்வத்தை தூண்டிய தொடரும்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு சிவகுமாரன் அவர்களே!

      நீக்கு
  7. மாவட்ட அலுவலருக்கு, ஒரு போன் செய்ய வேண்டுமென்று கேட்டிருப்பாரோ?

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் தங்களது ஊகத்திற்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! நீங்கள் ஊகித்ததில் பாதி சரி.

      நீக்கு
  8. அடுத்த சஸ்பென்ஸ்! ஆவலோடு காத்து இருக்கிறேன்.
    த.ம.2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் காத்திருப்பதற்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!

      நீக்கு
  9. உண்மை தான் துப்பறியும் கதை போலத்தான் உள்ளது. தொடருங்கள்.
    சில வசதியீனங்களால் பிந்திவிட்டது. பாராட்டுகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!

      நீக்கு