வியாழன், 20 ஜூன், 2019

தொடரும் சந்திப்பு 9


சரவணம்பட்டியிலிருந்து பட்டீஸ்வரர் கோவில் இருந்த போரூர் 18 கி.மீ தொலைவுதான் என்றாலும் மாலை வேளையில் இருந்த போக்குவரத்து நெரிசல் காரணமாக  மாற்றுப்பாதையில்  அழைத்து சென்றார் நண்பர் திரு இந்திரஜித்.




கோவிலுக்கு எதிரே உள்ள மகிழுந்துகள் நிறுத்துமிடம் செல்லும் வழி மூடப்பட்டிருந்ததால் அடுத்த தெரு சென்று மகிழுந்துவை நிறுத்திவிட்டு கோவிலுக்குள் நுழைந்தோம்.

கரிகால சோழனால் இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாம் இந்த கோவில்.  சமயக் குரவர்கள் நால்வரில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர்  மற்றும் சுந்தரர் ஆகியோரால் பாடப்பட்ட தலம் இது.  மேலும் அருணகிரிநாதர், கச்சியப்ப முனிவர் போன்றவர்களாலும் பாடப்பெற்ற கோவிலாகும்.

ராஜ ராஜ சோழன் ஆட்சியில் இந்த கோயிலில் உள்ள அர்த்த மண்டபம் மற்றும் மகா மண்டபம் ஆகியவை கட்டப்பட்டனவாம்.  பின்னர் ஆண்ட  ஹொய்சளர்கள் விஜயநகரப் பேரரசர் மற்றும் நாயக்க மன்னர்கள் இந்த கோயிலுக்கு நன்கொடை அளித்து உதவியிருக்கிறார்கள்.

இங்கு அருள்மிகு பட்டீசுவரர் பச்சை நாயகி அம்மன் துணையுடன் அருள்பாலிக்கிறார். இங்கிருக்கும் லிங்கம் சுயம்பு லிங்கம் என்று நம்பப்படுகிறது.

சிதம்பரத்திற்கு அடுத்தபடியாக திருவாதிரை திருவிழா இங்கு மிகச்சிறப்பாக கொண்டாடப்படுவதால் இத்தலம் ‘மேலைச்சிதம்பரம்’ என அழைக்கப்படுகிறது.

கோயிலின் முன்பு உள்ள ‘பிறவாப்புளி’ என்ற புளியமரத்தின் விதைகளை எங்கு போட்டாலும் முளைக்காதாம். இத்தலத்தை தரிசிப்போருக்கு இனி பிறப்பில்லை என்பதே இதன் பொருள்.

பிறவாப்புளி மற்றும் இறவாப்பனை (பனைமரம்) ஆகிய இரண்டும் இந்த கோயிலின்  தல  விருட்சங்கள். 

இத்திருக்கோயிலின் தூண் ஒவ்வொன்றும் தமிழர்களின் சிற்பக்கலைக்கு சான்றாக உள்ளன.  இங்குள்ள மேற்கூரையில் கல்லால் ஆன சங்கிலி காணவேண்டிய ஒன்று. இவைகளை  புகைப்படம் எடுக்க அனுமதியில்லை, அதனால்  கூகிளார்  தந்துள்ள படங்களை கீழே தந்துள்ளேன். 





படங்களைத் தந்து உதவிய கூகிளாருக்கு நன்றி!

கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு நானும் நண்பர் திரு இந்திரஜித் தும் சிறிது நேரம் அங்கு அமர்ந்து பேசிக்கொண்டு இருந்துவிட்டு கோவையை நோக்கி புறப்பட்டோம்.

வழியில் உணவகத்தில் இரவு உணவை முடித்துவிட்டு நண்பர் திரு இந்திரஜித் அவர்களின் வீட்டிற்கு வந்து சேர்ந்தோம். காலையில் பொள்ளாச்சிக்கு பயணிக்க வேண்டியிருந்ததால் உறங்கச் சென்றேன்.


தொடரும்



9 கருத்துகள்:

  1. மேலைச்சிதம்பரம் பற்றிய சிறப்புகளை அறிந்தேன் ஐயா... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      நீக்கு
  2. படங்களோடு தந்த விபரங்களுக்கு நன்றி நண்பரே...

    தொடர்கிறேன் பொள்ளாச்சி விடயங்கள் அறிய...

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தேவக்கோட்டை திரு கில்லர்ஜி அவர்களே!

    பதிலளிநீக்கு
  4. பட்டீஸ்வரம் என்றாலே எனக்கு எழுத்தாலர் பாலகுமாரனின் நினைவு தான் வரும்.

    பட்டீஸ்வரம் கோயிலிருக்கு வெளியே ஒரு கை காட்டி மரம் இருக்கும். அதில் பழையாறை என்று குறிப்பிட்டு வழி காட்டியிருக்கும். சோழர்களின் ஆரம்பத் தலைநகரம் . பழையாறை அரண்மனையில் தான் குந்தவை வாழ்ந்ததாக பேராசிரியர் கல்கி அவர்கள் குறிப்பிடுவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே! நீங்கள் குறிப்பிடும் பட்டீஸ்வரம் கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது. அருள்மிகு பட்டீஸ்வரர் இருக்கும் கோவிலோ கோவையில் உள்ள பேரூரில் உள்ளது. இருப்பினும் இந்த பதிவு தங்களுக்கு பேராசிரியர் கல்கியின் பொன்னியின் செல்வனையும், குந்தவைப் பிராட்டியையும் ,பழையாறையையும், பாலகுமாரனையும் நினைத்துப் பார்க்க உதவியமை அறிந்து மிக்க மகிழ்ச்சி.

      நீக்கு
    2. ஓகோ. புரிந்தது.

      நன்றி.

      நீக்கு
  5. 1980களில் கோவையில் பணியாற்றியபோது பேரூர் கோயிலுக்குச் சென்றுள்ளேன். கோவைப்பகுதியில் உள்ள கோயில்களில் அருமையான கோயில். இது ஒரு வைப்புத்தலமாகும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே! தங்கள் கருத்தோடு உடன்படுகின்றேன்.

      நீக்கு