புதன், 9 ஜனவரி, 2013

வாடிக்கையாளர்களும் நானும் 23



வாடிக்கையாளர்களில் சிலர் ஆரம்பத்தில் 
இருப்பதுபோல் கடைசிவரை இருப்பதில்லை. 
சிலர் நன்றாக பழகுவார்கள். அவர்களது வேலை 
முடிந்ததும் அவர்களது போக்கே மாறிவிடும்.
மனித இயல்பே அதுதானே! எனவே அதை தவறு 
என்று நான் சொல்லமாட்டேன். 

ஆனால் பணியில் சேர்ந்தபோது அனுபவமின்மை 
காரணமாக எல்லோரும் அப்படி இருக்கமாட்டார்கள் 
என நினைத்திருந்தேன்.ஆனால் எனது எண்ணம் 
தவறு என்பதை கேரளாவில் நான் முதன் முதல் 
பணியாற்றிய கிளையில் நடந்த ஒரு நிகழ்வு 
நிரூபித்தது.

அந்த ஊரில் ட்டுப்பலகை (Plywood) தயாரிக்கும்
நிறுவனம் ஒன்று எங்கள் கிளையில் பல 
ஆண்டுகளாக கணக்கு வைத்திருந்தது. அந்த 
நிறுவனம் எங்கள் வங்கியில் தங்களது 
நடைமுறை மூலதன (Working Capital) செலவுக்காக 
மிகைப்பற்று வசதியும் (Overdraft Facility) 
பெற்றிருந்தது

நான் அந்த கிளையில் முதன்மை மேலாளராக 
பதவியேற்றபின், ஒரு நாள் அந்த நிறுவனத்தின் 
தலைமை பொறுப்பில் இருந்த சிரித்த முகத்தோடு 
கூடிய இளைஞர் ஒருவர் என்னைப் பார்க்க வந்தார். 
பேச்சுவாக்கில் நான் சென்னையிலிருந்து 
வந்திருக்கிறேன் என்று தெரிந்ததும், தானும் 
சென்னையில் உள்ள ஒரு புகழ் பெற்ற 
கல்லூரியில் படித்ததாக சொன்னார்.

இந்த நிறுவனம் அவர்களது குடும்ப 
நிறுவனமாகையால் படித்து முடித்ததும் வெளியில் 
வேலைக்கு செல்லாமல் இங்கு வந்து பொறுப்பை 
ஏற்றுக்கொண்டதாகவும் சொன்னார். மேலும் தான் 
படித்த சென்னையில் இருந்து நான் வந்திருப்பதால் 
தனக்கு அது சந்தோஷம் என்றும் சொன்னார். 

பிறகு அவர்களது வணிக நிலை பற்றி 
விசாரித்தபோது, அது சம்பந்தமாகத்தான் பேச 
வந்திருப்பதாக சொன்னார். தங்கள் நிறுவனத்திற்கு 
கொள்முதல் ஆணைகள் (Purchase Orders) நிறைய 
இருப்பதால் தங்களுக்கு இருக்கின்ற மிகைப்பற்று 
வசதியின் வரம்பை அதிகரித்து தருமாறு 
கேட்டுக்கொண்டார். நானும் அவரது 
தொழிற்சாலையை பார்வையிட்டபிறகு ஆவன 
செய்வதாக உறுதி அளித்தேன். 

பின்பு அவரது இடத்திற்கும் சென்று ஆய்வு 
செய்துவிட்டு, அவரது கோரிக்கையில் நியாயம் 
இருந்ததால், அவரிடமிருந்து விண்ணப்பம் பெற்று 
எனது பரிந்துரையோடு திருவனந்தபுரத்தில் இருந்த 
எங்களது வட்டார அலுவலகத்திற்கு அனுப்பி 
அந்த நிறுவனம் கேட்டிருந்த அதிகரிக்கப்பட்ட 
மிகைப்பற்று வசதியை பெற்றுத் தந்தேன்.

அதற்குப்பிறகு அவர் எப்போது கிளைக்கு வந்தாலும், 
எனக்கு எவ்வளவு வேலை இருந்தாலும் என்னோடு 
குறைந்தது 10 மணித்துளிகளாவது பேசாமல் 
சென்றதில்லை.

அப்படி இருக்கும்போது ஒரு நாள் வந்து தாங்கள் 
கொடுத்த காசோலை அன்று Clearing ல் வரும் 
என்றும், அந்த காசோலையை அவர்களது கணக்கில் 
பற்று (Debit) வைத்தால் அவர்களது கணக்கில் 
உள்ள தொகை அனுமதிக்கப்பட்ட வரம்பை விட 
ரூபாய் 15,000 அதிகமாகிவிடும் என்றும், எனவே 
அந்த காசோலையை திருப்பாமல் Pass செய்யுமாறும் 
அந்தக் தொகையை மறு நாள் கட்டிவிடுவதாகவும் 
சொன்னார். 

வழக்கமாக வங்கிகளில் சில நேரங்களில் Clearing 
மூலம் வரும் காசோலைகளை Pass செய்யும்போது 
வாடிக்கையாளர்களின் நடப்பு கணக்கிலோ 
(Current Account) அல்லது மிகைப்பற்று கணக்கிலோ 
(Overdraft Account) போதிய அளவு பணம் 
இல்லாவிடில் Temporary Overdraft எனப்படும் 
தற்காலிக மிகைப்பற்று தருவது நடைமுறை.

ஆனால் இதை பழைய வாடிக்கையாளர்களுக்கு 
மட்டுமே அனுமதிப்பது வழக்கம். வங்கி மேலாளர்கள் 
இந்த வசதியை தங்கள் விருப்புரிமை (Discretion) யை 
உபயோகித்து அனுமதிப்பார்கள். அப்படி 
அனுமதிக்கப்பட்ட பணத்தை ஒரு வாரத்திற்குள் 
திருப்பிக் கட்டிவிடவேண்டும். மாதக் கடைசியில் 
அந்த மாதம் அனுமதிக்கப்பட்ட Temporary Overdraft  
பற்றி மேலதிகாரிகளுக்கு அறிக்கை 
அனுப்பவேண்டும் என்பது வங்கியின் நடைமுறை.
 
ஆனால் அந்த வாடிக்கையாளர் வந்து அந்த தற்காலிக 
வசதியை அனுமதிக்க கேட்டுக்கொண்டபோது 
என் அளவில் செய்யமுடியாத நிலை அப்போது. 
அதற்கு காரணம் அப்போது உச்ச நீதிமன்றம் தந்த 
ஒரு தீர்ப்புதான்

அது என்னவென்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்..

பி.கு. வங்கியில் பயன்படுத்தும் சொற்களை 
உபயோகப்படுத்தவேண்டி இருந்ததால் 
ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதவேண்டியை 
நிலை.பொறுத்தருள்க.



தொடரும்

வியாழன், 3 ஜனவரி, 2013

வாடிக்கையாளர்களும் நானும் 22



எனது அறைக்கதவை திறந்து உள்ளே வரலாமா?’எனக் 
கேட்டபடி  நின்றுகொண்டிருந்த வாடிக்கையாளரைப் 
பார்த்து வாருங்கள் திரு கிருஷ்ண வாரியர் அவர்களே?’ 
என்றதும் அப்படியே அசந்து நின்றவர், பின் உள்ளே 
வந்தார். 

உள்ளே வந்து அமர்ந்ததும் ஆச்சரியத்தோடு எப்படி 
என் பெயரை நினைவில் வைத்திருக்கிறீர்கள்?’ என்றார். 

ஏன் அப்படிக் கேட்கிறீர்கள்?’ என்றதற்கு, நான் இரண்டு 
ஆண்டுகளுக்கு முன்னர் தான் இந்தியா வந்து வெளி நாடு 
சென்றுவிட்டு இன்றுதான் வருகிறேன். அப்போது 
வந்தபோது,என்னை உங்கள் மேலாளர் 
உங்களிடம் அறிமுகப்படுத்தியபோது, உங்களோடு 
நான் பேசியது சில மணித்துளிகள் மட்டுமே. 

அதுவும் நீங்கள் வேறு மாநிலத்தவர் என்பதால், 
எனது பெயர் உங்களுக்கு பரிச்சயமாக இருக்க 
வாய்ப்பில்லை. அப்படி இருந்தும், சில மணித்துளிகள் 
மட்டுமே உரையாடிய என்னுடைய பெயரை இரண்டு 
ஆண்டுகளுக்குப் பிறகும் நினைவில் 
வைத்திருக்கிறீர்களே அது எப்படி என்பதுதான் 
எனக்குப் புரியவில்லை. அதுதான் எனக்கு வியப்பாய் 
இருக்கிறது. என்றார் அவர்
.
நான் சொன்னேன் சார். நீங்கள் சொல்வது உண்மைதான்.
நான் தினம் பல்வேறு வாடிக்கையாளர்களை சந்திக்கிறேன். 
ஆனாலும் நான் இங்குள்ள வாடிக்கையாளர்களை 
தினம் தினம் பார்ப்பதால், அவர்கள் பெயரை 
மறக்க வாய்ப்பில்லை. 
  
ஆனால் உங்களைப்போன்ற வெளிநாட்டில் வாழும் 
இந்தியர்கள் சில நாட்களே வந்து போகும்போது 
என்னை சந்தித்து செல்கிறார்கள். அவர்கள் பெயரை 
கட்டாயம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய 
அவசியம் எனக்கு உண்டு என்பதை நான் அறிவேன். 

ஏனெனில் அவர்கள் இந்தியாவுக்கு திரும்ப வர 
ஓரிரு ஆண்டுகள் ஆகலாம். அதுவரை அவர்களுக்கும் 
வங்கிக்கும் உள்ள தொடர்பு அஞ்சல் வழி மட்டுமே. 
அவர்கள் வங்கியை நம்பி அனுப்புகின்ற பணம் அவர்கள் 
கணக்கில் வரவு வைக்கப்படுகிறது என்பதை 
அவர்களுக்கு அஞ்சல் மூலம் அவர்களது காசோலை 
கிடைத்த அன்றே தெரிவிக்க ஏற்பாடு செய்தால்தான் 
அவர்கள் நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைவார்கள் 
என்பதும், தொடர்ந்து எங்கள் வங்கிக்கு ஆதரவு 
தருவார்கள் என்பதும் எனக்குத் தெரியும்.

ஆதலால் ஒவ்வொரு வாடிக்கையாளர் பெயரையும் 
நினைவில் வைத்துக்கொள்ள ஒரு முறையைக் 
கடைப்பிடிக்கிறேன். அப்போதுதான் அவர்களுக்கு 
நல்ல சேவையைக் கொடுக்கமுடியும் என நம்புகிறேன். 
அதனால்தான் உங்களைப் பார்த்ததும் உங்கள் 
பெயரை சொல்லி வரவேற்றேன். என்றேன்.

அதெல்லாம் சரி. அந்த முறை என்னவென்று 
சொல்லமுடியுமா?’ என்றார் அவர். 

அதற்கு நான் ஒரு பெயரையோ அல்லது ஒரு 
இடத்தையோ அல்லது ஓரு நிகழ்வையோ 
நினைவில் இருத்த அதோடு தொடர்புடைய 
வேறொன்றை இணைத்து நினைத்துக் கொண்டால் 

நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை என்றால் 
அதை சொல்கிறேன்.உங்கள் நிறமே உங்கள் பெயரை
நினைவில் வைத்துக்கொள்ள உதவியது என்பதுதான் 
உண்மை. நீங்கள் கறுப்பாக இருந்ததால் கிருஷ்ணன்
என்ற உங்கள் பெயரை அந்த நிறத்தோடு 
சம்பந்தப்படுத்தி நினைவில் இருத்திக்கொண்டேன். 

மேலும் உங்களது துணைப்பெயர் (Surname) வாரியர் என்றதும், 
உங்களது தோற்றத்தையும், உடல் அமைப்பையும் 
பார்க்கும்போது ஒரு Warrior போன்று இருந்ததால் 
அதை வாரியரோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்டேன். 
அதனால்தான் உங்களைப் பார்த்ததும் முழுப்பெயரையும் 
சொல்லி அழைத்தேன். என்றேன்.

உடனே அவர் கடகட’ வென சிரித்துக்கொண்டு 
இப்படியும் நினைவில் வைத்துக் கொள்ளமுடியும் என 
நான் நினைக்கவில்லை. என்றார்.

நல்லவேளை அவர் தப்பாக நினைக்கவில்லையே   
என எண்ணிக்கொண்டு, நலந்தானே? எப்போது இந்தியா 
வந்தீர்கள்? என்னால் ஏதேனும் ஆகவேண்டியுள்ளதா?’ 
என்றேன்.

அவர் நேற்றுதான் வந்தேன். உண்மையில் உங்கள் 
வங்கியில் எல்லா NRE வைப்புக்களையும் எனது 
நண்பரது வேண்டுகோளுக்கு இணங்க அவரது வங்கிக்கு
மாற்ற எண்ணி இங்கு வந்தேன்.

வெளியே Counter ல் இது பற்றி பேசியபோது தங்களைப் 
பார்க்க சொன்னார்கள். ஆனால் தங்களைப் பார்த்து 
பேசியவுடன் எனது எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். 

நீங்கள் வாடிக்கையாளர்களை நினைவில் 
வைத்துக்கொள்ள கடைபிடிக்கின்ற அணுகுமுறையைப் 
பார்த்ததும், நம்மை நினைத்துக்கொண்டு நமக்காக 
சேவை செய்கின்ற வங்கியை விட்டு நாம் ஏன் 
போகவேண்டும் என்பதால் இப்போது இருக்கின்ற 
வைப்புக்களோடு இப்போது நான் கொண்டு
வந்திருக்கின்ற காசோலையும் இங்கேயே கொடுத்து 
வைப்பாக வைக்க விரும்புகிறேன். என்றார். 

எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை சொல்லவும் வேண்டுமா?

பி.கு. நான் பணி புரிந்த கிளையில் என்னோடு பணியாற்றிய ஒரே துணைப்பெயர் கொண்ட நண்பர்களின் பெயர்களை எப்படி நினைவில் இருத்திக்கொண்டேன் என்பதை பற்றி  பின் எழுதுவேன்.

தொடரும்