அவரைப் பார்த்ததும் ஆச்சரியத்தோடு வரவேற்று, ’என்ன திடீரென
இந்த பக்கம்? LFC (Leave Fare Concession) யில் வந்திருக்கிறீர்களா? எனக் கேட்டேன். அதற்கு அவர் ‘இல்லை.இல்லை. நான் வந்தது வேறொன்றுக்காக.நான் சொல்வதைக் கேட்டு நீங்கள்
என்னை தவறாக எண்ணக்கூடாது. உண்மையான நிலை தெரியாமல் இங்கு வந்துவிட்டேன்.’ என்று தயக்கத்தோடு சொன்னார்.
அவர் சொல்லச் சொல்ல எனக்கு ஆச்சரியம்
ஏற்பட்டது. என்ன நடந்தது என்றால், நான் அந்த வாடிக்கையாளர் தந்த One Time Settlement திட்டத்தை ஏற்றுக்கொள்ள மறுத்ததும், எப்படி என்னை ஒப்புக்கொள்ள வைப்பது என அவர் யோசித்திருக்கிறார்.
அவரது கெட்ட நேரம் அப்போது அவரை ஆதரித்த
துணைப் போதுமேலாளர் திருவனந்தபுரத்திலிருந்து மாற்றலில் சென்றுவிட்டார். அப்போது தற்காலிகமாக
தலைமைப் பொறுப்பேற்றிருந்த உதவிப் பொது
மேலாளர் ஏற்கனவே தற்காலிக மிகைப்பற்று (Overdraft) பற்றி
பேசியபோதே ‘கிளையில்
பேசிக்கொள்ளுங்கள்’ என்று சொல்லிவிட்டதால், நிச்சயம் இதற்கு உதவமாட்டார் என்று அவருக்குத் தெரியும்.
என்ன செய்வது என்ற அவர் குழப்பத்தில் இருந்தபோது, அவரது மருத்துவமனையில் பணியாற்றிய எங்கள்
வங்கியின் முன்னாள் முதன்மை மேலாளர், அவருக்கு ஒரு யோசனை சொல்லியிருக்கிறார்.
அதாவது எனக்கு வேண்டிய நண்பர் மூலம் எனக்கு
அழுத்தம் கொடுத்தால் நான் ஒத்துக்கொள்வேன் என்று. மேலும் அவர் சொல்லியிருக்கிறார்
தான் சென்னையில் சில ஆண்டுகள் பணியாற்றியபோது தனக்கு பழக்கமான நண்பர் ஒருவர்
எனக்கும் நண்பர் என்றும் அவரை வரச்சொல்லி என்னிடம் பேசச் சொல்லலாம் என்றும்
சொல்லியிருக்கிறார்.
அதற்கு அந்த வாடிக்கையாளர் ‘அப்படியென்றால் நீங்கள் இந்த பொறுப்பை
ஏற்றுக் கொள்ளுங்கள்.’என்றதும், அந்த
முன்னாள் முதன்மை மேலாளர் உடனே எனது நண்பர்
எங்கிருக்கிறார் என்று விசாரித்திருக்கிறார். அவர் பெங்களூருவில்
இருக்கிறார் எனத்தெரிந்ததும், அவரைத் தொலைபேசியில்
கூப்பிட்டு, ‘உங்களால் ஒரு வேலை
ஆகவேண்டியிருக்கிறது. எனவே இன்றிரவே பயணித்து இங்கு வரவும். மிகவும் அவசரம்.’ எனக் கூறியிருக்கிறார்.
அப்போது கூட அது என்ன வேலை என்று சொல்லவில்லை. கூப்பிட்டவர்
பழைய நண்பர் என்பதாலும், அவசரம் என்று சொன்னதாலும், எனது நண்பரும் என்ன ஏது என்று கேட்காமல் அன்றிரவே பேருந்தில் பயணித்து நான்
இருந்த ஊருக்கு வந்திருக்கிறார். வந்ததும்
தான் விவரத்தை சொல்லியிருக்கிறார்கள். அவர் என்னிடம் பேசி,
அந்த வாடிக்கையாளரின் கோரிக்கையை ஏற்று அதை திருவனந்தபுரம் அலுவலகத்திற்கு
சிபாரிசு செய்ய உதவ வேண்டுமென்று.
அப்போதே என் நண்பர் சொல்லிவிட்டாராம் அது தன்னால்
முடியாது என்று. வந்ததுதான் வந்தோம் பார்த்துவிட்டுப் போகலாமே என்று என்னைப்
பார்க்க வந்திருக்கிறார்.
அப்போது நான் கேட்டேன். ’என்ன இது? வாருங்கள் என்று
சொன்னால் உடனே கிளம்பிவிடுவீர்களா? என்ன விஷயமாக வரச்சொல்கிறீர்கள்
என கேட்க வேண்டுமென்று உங்களுக்குத் தோன்றவில்லையா?
தெரிந்திருந்தால் நீங்கள் இப்படி அவஸ்தைப்பட்டு இரவு முழுதும் பயணித்து வந்திருக்க
வேண்டியதில்லையே?’ என்றேன்.
அப்போது அவர் சொன்னார். ‘சபாபதி. உங்களைப்பற்றி எனக்குத் தெரியும். இந்த
விஷயத்தை என்னிடம் முன்னரே தொலைபேசியில் சொல்லியிருந்தால் நான் நிச்சயம்
சொல்லியிருப்பேன். சபாபதி முடியும் என்றால் நிச்சயம் செய்வார். இல்லாவிட்டால்
செய்யமாட்டார். எனவே நான் அங்கு வந்து எதுவும் ஆகப்போவதில்லை என்று. ஆனால் அவர் என்னிடம் எதுவும் சொல்லாமல் அவசரம் என்று சொன்னதால், உதவி தானே கேட்கிறார். போய்த்தான் வருவோமே என்று வந்தேன்.
இப்போது கூட இங்கு வருவதற்கு முன், ‘சபாபதி எனக்கு Senior ஆனாலும் நல்ல நண்பர்.நண்பராயிருந்தாலும் எங்களுக்கிடையே
ஒரு மெல்லிய திரை உண்டு. அதைத் தாண்டி நான் செல்ல விரும்பவில்லை. அவரும்
விரும்பமாட்டார். அவர் எடுத்த முடிவு சரியாக இருக்கும் எனவே இது பற்றி நான் அவரிடம்
பேசமாட்டேன். ஆகையால் என்னால் இந்த விஷயத்தில் உதவ முடியாது என்று
சொல்லிவிட்டுத்தான் வந்தேன். எனவே என்னைத் தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள்’ என்றார்.
அதற்கு நான், என்னை சிக்கலில் அவர் மாட்டிவிட்ட நிகழ்வு பற்றி சொல்லிவிட்டு சொன்னேன். ‘சிலர் தேர்வில் சரியாக எழுதாமல் அந்த விடைத்தாள்களை துரத்தி சென்று அதை
திருத்தும் ஆசிரியர் யார் என கண்டுபிடித்து அவரின் நண்பரின் மூலம் வெற்றிபெற
தேவையான மதிப்பெண்கள் முயற்சிப்பார்களே அதுபோலத்தான் இவரும்.
இங்கே சரியாக வணிகம் செய்யாமல்,வங்கியில் வாங்கிய கடனை குறைத்துக் கட்ட/தள்ளுபடி
செய்ய, எனது நண்பரான உங்கள் மூலம் முயற்சிப்பதிலிருந்தே இந்த
வாடிக்கையாளர் எப்படிப்பட்டவர் என்று உங்களுக்கு இந்நேரம் தெரிந்திருக்கும். இவர் ஒரு
நேர்மையானவர் அல்லர்.
நல்ல வேளை இவருக்கு உதவுதாக நீங்கள் வாக்குறுதி கொடுக்கவில்லை.
அப்படியே நீங்கள் வாக்குறுதி கொடுத்துவிட்டு, என்னிடம் சிபாரிசு செய்து இருந்தாலும் நான் என் நிலையை மாற்றிக் கொண்டிருக்கமாட்டேன்.
உங்களுக்கும் எனக்கும் வீணே மன வருத்தம் தான் ஏற்பட்டு இருக்கும். அப்படியில்லாமல்
நீங்களே எனது கணிப்பு சரியாக இருக்கும் என சொல்லிவிட்டதால், உங்களை
நான் ஏன் தப்பாக நினைக்கிறேன். நீங்கள் போய் வாருங்கள்.’ என வழி
அனுப்பி வைத்தேன்.
நான் மாற்றலாகி வந்தவுடன் அவர் சொன்னாராம், நானும் எவ்வளவோ மேலாளர்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இவர் போல் பார்த்ததில்லை என்று.
நிச்சயம் அது ‘பாராட்டு’ இல்லை என்று எனக்குத் தெரியும். ஆனாலும்
எனக்கு அது ஒரு வகையில் பாராட்டே!
இனி வேறொரு வாடிக்கையாளர் பற்றி அடுத்த பதிவில்.