திங்கள், 20 மார்ச், 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 17

தஞ்சை அரண்மனையில் தர்பார் மண்டபத்தைப் பார்த்துவிட்டு, ‘கூடகோபுரம்’ என அழைக்கப்படும் ஆயுதங்களை சேமித்து வைத்திருந்த கோபுரத்தை (Arsenal Tower) பார்க்க விரைந்தோம்.




அப்போது தர்பார் மண்டபம் இருந்த வளாகத்திலிருந்து தெரிந்த அந்த கோபுரத்தை எடுத்த படங்கள் கீழே.


படத்தில் இருப்பவர் தஞ்சை நண்பர்கள் குழுவைச் சேர்ந்த நண்பர் பெத்தபெருமாள்


நண்பர் உஸ்மான் படம் பிடித்துக்கொண்டு இருக்கும்போது எடுத்த படம்


என் துணைவியார் நான் படம் எடுக்கும்வரை காத்திருந்தபோது எடுத்த படம்.

நெடிதுயர்ந்த அந்த கூட கோபுரத்தின் அருகில் சென்று பார்த்தபோதுதான் அதனுடைய அழகும், பிரமாண்டமும் தெரிந்தது. அதனுடைய கட்டிட அமைப்பைப் பார்த்ததும் கண்களின் விழித்திரைகள் வியப்பால் விரிந்தன!

எட்டு மாடிகளைக் கொண்ட 192 அடி உயரம் கொண்ட இந்த கூடகோபுரம் நாயக்க மன்னர்கள் காலத்தில் இந்த கட்டிடம் இரண்டு மாடி வரை கி.பி 1645 இல் கட்டப்பட்டதாம். பின்னர் மராத்தியர்கள் ஆண்டபோது இதை செப்பனிடப்பட்டு மீதி உள்ள 6 மாடிகளையும் கி.பி 1855 இல் கட்டி முடித்தார்களாம்.

இந்த கட்டிடத்தில் ஆயுதங்கள், படைக்கலங்கள், வெடி மருந்துகள் போன்றவைகள் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாம். மொத்தத்தில் இது படைக்கல கொட்டிலாக இருந்திருக்கிறது. மேலும் இந்த கோபுரத்தில் எட்டாவது மாடி எதிரிகள் யாரேனும் வருகிறார்களா என கண்காணிக்கும் காவல் கோபுரமாகவும் இரண்டாவது மாடி அரசர்கள் போர்ப்பயிற்சி பெறும் இடமாக இருந்திருக்கின்றன.


கூடகோபுரத்தில் முதல் தளம் செல்ல மட்டும் அனுமதி உண்டு என்பதால் அதைப் பார்க்க குறுகலான படிகள் மூலம் மேலே ஏறினோம்.


அந்த படிகளை நான் எடுத்த படம் சரியாக வராததால் இணையத்திலிருந்து எடுத்து வெளியிட்டிருக்கிறேன்,

முதல் தளத்தில் 1955 ஆண்டு தரங்கம்பாடி கடற்கரையில் ஒதுங்கிய Baleen Whale எனப்படும் மிகப் பெரிய திமிங்கலத்தின் 92 அடி நீளமுள்ள எலும்புக்கூட்டை வைத்திருப்பதைக் கண்டோம். நான் 10 ஆம் வகுப்பு படிக்கும்போது இங்கு வந்தபோது இந்த எலும்புக்கூடு கீழே இருந்ததாக நினைவு.


எலும்புக்கூடு மிக நீண்டதாக இருந்ததால் என்னால் எனது கைப்பேசியில் அருகில் நின்று படம் எடுக்க இயலவில்லையாதலால் கூகிளார் துணையுடன் இணைய தளத்திலிருந்து எடுத்து போட்டிருக்கிறேன்.

You Tube இல் இருக்கும் கீழே உள்ள காணொளியை பார்த்தால் இந்த திமிங்கலம் எவ்வளவு பெரிதாக இருந்திருக்கும் என கற்பனை செய்துகொள்ளலாம்.




அங்கிருந்து வடமேற்கு திசையில் தெரிந்த மாடமாளிகை எனப்படும் மண்டபத்தில் தற்போது ஏறிப்பார்க்க அனுமதி இல்லையாகையால் கூடகோபுரத்தின் முதல் தளத்திலிருந்தே அதைப் பார்த்தோம்.

நாள் தோறும் மதியம் இங்கிருந்து ஸ்ரீரங்கத்தில் உள்ள அரங்கநாதனை வழிபட அச்சுதப்ப நாயக்கரால் இந்த மணிமண்டபம் கட்டப்பட்டதாம். இதில் மொத்தம் 11 மாடிகள் இருந்ததாகவும், இந்த கட்டிடத்தை இடி தாக்கியதால் 4 மாடிகள் சேதமடைந்தது போக மீதி உள்ள 7 மாடிகள் செப்பனிடப்பட்டு பேணிகாக்கப்பட்டிருக்கின்றன. .

சதுர வடிவில் கட்டப்பட்டிருக்கும் இந்த கட்டிடம் மாடமாளிகை என அழைக்கப்படுகிறது. இந்த மாளிகையின் ஒவ்வொரு மாடியிலும் உள்ள நான்குபுறச் சுவர்களிலும் மேல் வளைந்த சாளரங்கள் உள்ளன. அதனால் இதனைத் தொள்ளக்காது மண்டபம் எனப் பொதுமக்களால் அழைக்கப்படுகிறது.

இந்த மண்டபத்தில் பிற்காலத்தில் இயந்திரத்தால் இயங்கும் மணி (Mechanical bell) ஒன்று வைக்கப்பட்டு அது மணிக்கொரு தடவை மணியடித்து நேரத்தை தெரிவிக்குமாம். அதனாலேயே தஞ்சைவாழ் மக்கள் இதை மணிக்கூண்டு எனவும் அழைத்திருக்கிறார்கள்.

இந்த மண்டபம் கண்காணிப்பு மண்டபமாகப் பயன்பட்டிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.


மாடமாளிகையை கூடகோபுர முதல் தளத்தில் இருந்து நான் எடுத்த படம்


நண்பர் நாச்சியப்பனையும் நண்பர் கோவிந்தசாமியையும் நிற்க வைத்து மாடமாளிகை பின் புறத்தில் தெரியும்படி எடுத்த படம்.


கீழே இறங்கி வந்தபின் கூடகோபுரத்தை எடுத்த படங்கள் கீழே




எல்லோரும் வந்த பின்னர் கலைக்கூடத்தைப் பார்க்க அழைத்து சென்றார் நண்பர் முருகானந்தம்.


தொடரும்

28 கருத்துகள்:

  1. நண்பர்களுடன் ஒத்த கருத்துள்ளவர்களுடன் செல்லும் சுற்றுலாக்கள் திருப்தி அளிக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு G.M. பாலசுப்ரமணியம் அவர்களே! நீங்கள் சொல்வது சரிதான்.

      நீக்கு
  2. விரிவான விடயங்கள் அருமை தொடர்கிறேன்.
    த.ம.+ 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே!

      நீக்கு
  3. பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும், நன்றி திரு ஆரூர் பாஸ்கர் அவர்களே!

      நீக்கு
  4. பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும், நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      நீக்கு
  5. படங்களும் பதிவும் வழக்கம்போல் அருமை.

    அந்தக்காணொளி ஏனோ திறக்காமல் அடம் செய்கிறது எனக்கு.

    >>>>>

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும், நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! காணொளி எனக்குத் தெரிகிறதே. திரும்பவும் முற்சிசெய்து பாருங்களேன்

      நீக்கு
  6. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /நாள் தோறும் மதியம் இங்கிருந்து ஸ்ரீரங்கத்தில் உள்ள அரங்கநாதனை வழிபட அச்சுதப்ப நாயக்கரால் இந்த மணிமண்டபம் கட்டப்பட்டதாம்.//

      இவரையும் சேர்ந்து மூன்று நாயக்கர்கள் காலத்தில் மந்திரியாக இருந்தவர்தான் ‘கோவிந்த தீக்ஷதர்’ என்ற மிகப் பிரபலமானவர். கோவிந்த தீக்ஷதர் தான் நாகூர் பள்ளி வாசல் கட்டவே இடம் கொடுத்தவர். கோவிந்த தீக்ஷதர் தான் டச்சுக்காரர்கள் இங்கு வந்து வியாபாரம் செய்ய இடம் கொடுத்தவர். இன்று சமத்துவ புரம் கட்டுகிறார்கள். சமத்துவம் எனப் பேசுகிறார்கள். சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பே சமத்துவமாக அனைவரும் வாழ வழிசெய்தவர் இந்த கோவிந்த தீக்ஷதர் என்பவர் என்பதை ஏனோ அனைவரும் மறந்தே விட்டனர். பள்ளிப்பாடங்களில் ஹிஸ்டரியில் கூட இவரின் பெயர் இன்று இல்லை என்பது வேதனைக்குரிய விஷயமாகும். இவர் காலத்தில் இவர் செய்துள்ள சமுதாய நற்பணிகள் இன்னும் ஏராளமாக உள்ளன. ஆனால் வெளியுலகுக்குத் தெரியாமல் அவை அனைத்துமே மறைக்கப்பட்டுள்ளன.

      நீக்கு
    2. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! தங்களுடைய பின்னூட்டம் கைத்தவறுதலாக நீக்கபாட்டுவிட்டது. திரும்பவும் அதை மேலே வெளியிட்டுள்ளேன் . மன்னிக்கவும்.

      தங்களது பின்னூட்டதிற்கான பதில் கீழே.

      நாயக்கர்கள் காலத்தில் முதன்மை அமைச்சராக இருந்த கோவிந்த தீட்சிதர் பற்றி பலருக்கும் தெரியவில்லை என்பது வருத்தமே. அவரைப்பற்றி எழுதினால் பதிவு நீண்டுவிடும் என்பதால் எழுதவில்லை. இருப்பினும் இந்த பின்னூட்டம் வழியே அவரைப் பற்றி கொஞ்சம் சொல்லலாம் என நினைக்கிறேன்.

      கோவிந்த தீட்சிதர் தஞ்சையை ஆண்ட நாயக்க அரசர்களான சேவப்ப நாயக்கர், அச்சுதப்ப நாயக்கர், இரகுநாத நாயக்கர் ஆகிய மூவருக்கும் ஆசானாகவும் ஆலோசகராகவும் (மூன்று தலைமுறை மன்னர்களுக்கு) சுமார் எழுபத்தைந்து ஆண்டு காலம் பதவி வகித்தவர். இவரது காலம் கி.பி 1515 முதல் கி.பி 1635 வரை.

      தற்போது பிரபலமாக உள்ள மகாமகக் குளத்தை உருவாக்குவதில் முக்கியப் பணி ஆற்றியவர் கோவிந்த தீட்சிதர். பெரிய குளத்தையும், அதனைச் சுற்றி படிக்கட்டுகளையும் அமைத்து குளத்தைச் சுற்றி பதினாறு சிவலிங்கங்களையும், அவற்றிற்கான மண்டபங்களையும் இவர் கட்டினார் என சொல்லப்படுகிறது.

      கோவிந்த தீட்சிதரின் இந்த சாதனையைப் பாராட்டி, மன்னர் தீட்சிதரின் எடைக்கு எடை தங்கம் வழங்கினாராம். கும்பகோணத்தில் உள்ள ராமசாமி கோயிலைக் கட்டியது இவரே. இக்கோயிலின் உட்சுவர் முழுவதும் ராமாயண நிகழ்ச்சி களை விவரிக்கும் ஓவியங்களை வரைய வைத்ததும் இவர்தான் என அறியப்படுகிறது.

      இவரைச் சிறப்பிக்கும் வகையில் இரகுநாத நாயக்கர் ‘கோவிந்தய்யா’ என்று தமிழில் பெயர் பொறிக்கப்பட்டக் காசுகளை வெளியிட்டிருக்கிறாராம்.

      அவர் அரசருக்கு மட்டும் அமைச்சராக மட்டுமல்லாமல் மக்களின் அமைச்சராகவும் இருந்ததால்தான் கும்பகோணத்தில் ஐயன் கடைத்தெரு, ஐயன்பேட்டை, ஐயன் வாய்க்கால், ஐயன் குளம், பசுபதி கோவிலை அடுத்த ஐயன்பேட்டை, திருவாரூருக்கு மேற்கே உள்ள மணக்கால் ஐயன் பேட்டை ஆகியவைகள் எல்லாம் இன்றும் அவர் பெயரைச் சொல்லிக் கொண்டு இருக்கின்றன. ஐயன் என்பது கோவிந்த தீட்சிதரைக் குறிக்கிறது.

      தமிழ், வடமொழி,தெலுங்கு முதலிய பல மொழிகளிலும் புலமை பெற்றவரான் இவர் பல நூல்களை இயற்றியிருந்தாலும் தற்போது கிடைப்பன “கௌமாரிலதர்சனம்“, “ஸங்கீத ஸுதா“ என்பவைகளேயாகும் வடமொழியில் இருந்த பஞ்சநதீசுவர புராணத்தைத் தமிழில் கி.பி.1605இல் மொழிபெயர்த்ததை இவரது தமிழார்வத்துக்கு சான்றாக கூறலாம்.

      இந்த விவரங்களைத் தர காரணமாக இருந்த தங்களுக்கு நன்றிகள் பல!

      நீக்கு
    3. வணக்கம்.

      பயணம் பற்றிய படங்களும் அதைக் காட்டிலும் அறிவூட்டும் இது போன்ற பின்னூட்டங்களும் பயன்படுவன.
      குறித்துக் கொண்டேன்.

      நன்றி.

      நீக்கு
    4. வருகைக்கும், கருத்துக்கும், நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே!

      நீக்கு
  7. கூட கோபுரம் பற்றிய படங்களும் செய்திகளும் வியப்பளிக்கின்றன.

    பகிர்வுக்கு நன்றிகள். மேலும் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!

      நீக்கு
  8. அழகான படங்கள். தஞ்சை பலமுறை சென்றிருந்தாலும் இங்கே எல்லாம் சென்றதில்லை. அடுத்த பயணத்திலாவது இங்கே செல்ல வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே! தாங்கள் அடுத்தமுறை ஸ்ரீரங்கம் வரும்போது ஒரு நாள் இதற்காக ஒதுக்கி அரண்மனையை அழகாய் படம்பிடித்து வெளியிடவேண்டும்

      நீக்கு
  9. படங்களுடன்
    அருமையான பதிவு

    மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017
    https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html

    பதிலளிநீக்கு
  10. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு யாழ்பாவாணன் ஜீவலிங்கம் காசிராசலிங்கம் அவர்களே!

    பதிலளிநீக்கு

  11. முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு மோகன்ஜி அவர்களே! தொடர்ந்து பயணிக்க வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  12. பதிவிலும், பின்னூட்டங்களிலும் நிறையவே தகவல்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு தி,தமிழ் இளங்கோ அவர்களே! பின்னூட்டத்தில் மேலதிக தகவல்களைத் தர காரணமாயிருந்த திரு வை.கோபாலகிருஷ்ணன் அவராகளுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்.

      நீக்கு
  13. பின்னூட்டத்தில் கோவிந்த தீட்சிதர் பற்றிய பல தகவல்களை அறிந்து கொண்டேன். பொன்விழா சந்திப்பு தொடரில் பல அறியாத தகவல்கள் பதிவுக்குச் சிறப்பு சேர்க்கின்றன. நன்றி சார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோதரி திருமதி ஞா.கலையரசி அவர்களே!

      நீக்கு