செவ்வாய், 21 டிசம்பர், 2010

நினைவோட்டம் 32

மற்ற ஆசிரியர்களை பற்றி சொல்லவேண்டுமென்றால்

சொல்லிக்கொண்டே போகலாம். ஆனாலும்

சிலரை பற்றி மட்டும் எழுதலாம் என

நினைக்கிறேன்.



எங்களுக்கு பத்து மற்றும் பதினோராம் (S.S.L.C)

வகுப்புகளில் அறிவியல் சொல்லிக்கொடுத்த

ஆசிரியர் S.R.N என அன்புடன் அழைக்கப்பட்ட

திரு S.R. நடராஜன் அவர்கள்.எப்போதும்

சிரித்த முகத்தோடு, மென்மையாக பேசி

பாடம் நடத்துவார்.நாங்கள் பயப்படாத

ஆசிரியர்களில் அவரும் ஒருவர்.



எங்களுக்கு பத்து மற்றும் பதினோராம் (S.S.L.C)

வகுப்புகளில் சமூகவியல் பாடம் நடத்திய

திரு P.திருஞானசம்பந்தம் அவர்கள்

மிகவும் கண்டிப்பானவர். அவர் முகத்தில்

சிரிப்பையே நாங்கள் பார்த்தது இல்லை.

எப்போதும் கடுகடு என்றே இருப்பார்.



எங்கள் வகுப்பு தோழன் திரு ராஜசேகரன் ராஸ்

அவரிடம் டியூஷன் படித்து வந்தான்.

அவன் எங்களிடம் 'P.T.S சார் பள்ளியில் தான்

அப்படி இருக்கிறாரே தவிர மற்றபடி

தனியாக பேசும்போது இதமாக பேசுவார்'

என்று கூறியிருந்தாலும் எங்களுக்கு

நம்பிக்கை இருந்தது இல்லை.



ஒருதடவை எனது காலாண்டு தேர்வு

விடைத்தாளை எடுத்து வைத்துக்கொண்டு

எல்லோர் முன்பும் "என்ன எழுதியிருக்கிறாய்?

ஒன்றுமே புரியவில்லை. பெரிய கலெக்டர்

என்று நினைப்பா?" என என்னை திட்டியபோது

மனதிற்குள் இவருக்காகவாவது கலெக்டர்

ஆகவேண்டும் என நினைத்ததுண்டு.


நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால்???


மிகவும் சிரத்தையோடு பாடங்களை

சொல்லிக்கொடுத்த ஆசிரியர்களில்

இவரும் ஒருவர்.



எங்களுக்கு தமிழ் ஆசிரியர்

திரு குப்புசாமி அய்யா என்றாலும்

மற்றொரு தமிழ்ஆசிரியரான

புலவர் ஞானப்பிரகாசம் பிள்ளை

அவர்களைப்பற்றியும் இங்கே சொல்ல

விரும்புகிறேன்.



எப்போதும் வெள்ளை சட்டையும்

வேட்டியும்அணித்து வருவார்.

மிகவும் எளிமையானவர். எங்கள்

ஆசிரியர் வராதபோது எங்களுக்கு பாடம்

எடுத்திருக்கிறார். பார்த்தால் அமைதியாய்

இருப்பாரே தவிர யாரும் அவரிடம்

வாலாட்ட முடியாது. தமிழை

ஆர்ப்பாட்டமில்லாத நடையில்

எளிய முறையில் நடத்தியவர் அவர்.


அவர் மாதிரி தமிழ் ஆசிரியர்களை

தற்போது பார்க்கமுடியவில்லை

என்பது வருந்தக்கூடிய விஷயந்தான்.




நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி

2 கருத்துகள்:

  1. ஒவ்வொருவருக்கும் மறக்க முடியாத சில ஆசிரியர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.அதிலும் பொதுவாகவே தமிழாசிரியர்களை மறக்க முடிவதில்லை.
    நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
    திரு சென்னை பித்தன் அவர்களே! ஆசிரியர்கள் மாணவர்களை மறந்தாலும், மாணவர்கள் ஆசிரியர்களைமறப்பதில்லை.
    எனவேதான் அவர்களை பற்றி எழுதிக்கொண்டு இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு