செவ்வாய், 5 ஏப்ரல், 2011

நம்பலாமா நாடி சோதிடத்தை? 2

வைத்தீஸ்வரன் கோவிலுக்கு போனவர்களுக்கு தெரியும்
மயிலாடுதுறையிலிருந்து சிதம்பரம் செல்லும் சாலை
ஊர்அருகில் வந்ததும் வளைந்து செல்லும் என்று.
நாங்கள் அந்த வளைவில் இறங்கி நாடி சோதிடர்
பற்றி விசாரிக்க எண்ணியபோது,எங்களுக்கு வேலை
வைக்காமல் ஒருவர் வந்து “என்ன சார், நாடி
சோதிடம் பார்க்கவேணுமா?” (எங்கள்
முகத்தைப்பார்த்தே தெரிந்து கொண்டார் போலும்!)
என்று கேட்டு கையைப்பிடித்து இழுக்காத குறையாக
மேல வீதியில் உள்ள ஒரு ‘பிரபல’ சோதிடர் வீட்டிற்கு
அழைத்து சென்றார்.

அந்த சோதிடருடைய இல்லத்தின் முன்,வருவோரும்
போவோருமாக கூட்டம் அதிகம் இருந்தது.
(அப்போதெல்லாம் அவர் ஒருவர் தான் நாடி சோதிடம்
பார்த்து சொல்லிக்கொண்டிருந்தார்.இப்போதோ அவரிடம்
‘வேலை’ பார்த்தோரும், இன்னும் பலரும் வைத்தீஸ்வரன்
கோவிலை சுற்றியும் மற்ற ஊர்களிலும் ஐயங்கார் பேக்கரி
மற்றும் மதுரை முனியாண்டி விலாஸ் போல கிளைகளை
திறந்துமக்களுக்கு‘சேவை’செய்து கொண்டு இருக்கிறார்கள்! )

நாங்கள் அங்கே சென்றபோது உள்ளே இருந்து வந்த ஒரு
வாடிக்கையாளர் எங்களைப்பார்த்து ஏதோ சொல்ல வந்தார்.

அதற்குள் எங்களை அழைத்து(இழுத்து) சென்றவர்,
அவரிடம் பேசவிடாமல் செய்து உள்ளே அமரச்
செய்துவிட்டார்.

சற்று நேரத்தில் நாங்கள் இருந்த இடத்திற்கு,நெற்றியில்
விபூதி பட்டை சந்தன பொட்டுடன் ஒருவர் வந்தார்.
”எங்கிருந்து வருகிறீர்கள்” என்று எங்களிடம் கேட்டார்.
கடலூரிலிருந்து என்று சொல்லாமல் சென்னையிலிருந்து
என்று சொன்னேன்.

உடனே ‘யாருக்கு நாடி சோதிடம்பார்க்கவேண்டும்?’
என்றார். நான் திரு ஷெனாய்அவர்களைக்காட்டியதும்,
அவரிடம் ஒரு தாளில் கைரேகை வைக்க சொல்லி
அவருடைய பெயரையும், பிறந்த ஊரையும் மற்றும்
பிறந்த தேதியையும் கேட்டார்.

‘அது எதற்கு?’ என்று நான் கேட்டவுடன்,“சார்
எங்களிடம் உலகத்தில் பிறந்த அனைவருடைய
விவரங்களும் உள்ள பல்லாயிரக்கணக்கான
ஓலைகள்உள்ளன.இவர் பிறந்த தேதியில் அநேகம்
பேர்பிறந்திருக்கலாம் அதனால் அவருடைய விவரம்
உள்ள நாடியை(ஓலையை) கண்டறிந்து எடுக்க
இந்த விவரம் வேண்டும்’ என்றார்.

அவர் கேட்ட விவரத்தை கொடுத்து, திரு ஷெனாய்
அவர்கள் கைரேகையைப்பதித்ததும், ‘உங்களது
நாடியைப்பார்க்க மொத்தம் ரூபாய் 100 ஆகும்.
இப்போது முன் பணமாக ரூபாய் 60 கொடுங்கள்.
பாக்கியை பிறகு தரலாம். நாடி பார்த்து ஏதேனும்
சாந்தி அல்லது பரிகாரம் செய்யவேண்டும் என்று
வந்தால் அதன் விவரம் அறிய அதற்கு தனியாக
பணம் தர வேண்டியிருக்கும்’ என்றார்.

சரி என சொல்லி அவர் கேட்ட பணத்தை கொடுத்ததும்
திரு ஷெனாய் அவர்களை ‘நீங்கள் மட்டும் உள்ளே
வாருங்கள்’ என்றார். உடனே நான் அவருக்கு தமிழ்
சரியாக பேச வராது. அதனால் நானும் கூட வருகிறேன்’
என்றேன். சற்றே தயக்கத்தோடு என்னையும் உள்ளே
செல்ல அனுமதித்து அந்த வீட்டிற்கு பின்னே
அழைத்து சென்றார்.

அப்படி செல்லும்போது, எனது தூரத்து உறவினர்
(அப்போது தஞ்சை மாவட்டத்தில் காவல் துறை
கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆய்வாளாராக
இருந்தவர்)ஒருவர் எங்களைக்கடந்து
செல்வதைப்பார்த்தேன்.ஆனால் அவர்
என்னைப்பார்க்கவில்லை.

அவரைப்பார்த்ததும் எனக்கு சற்றே நம்பிக்கை வந்தது.
காரணம் ஒரு மாவட்ட காவல் துறை அலுவலரே அங்கு
வருகிறார் என்பதால்.

அந்த வீட்டிற்கு பின் உள்ள தோட்டத்தில், திறந்த வெளி
குடிசை போன்ற அமைப்பில் தரையில் சிமெண்ட்
போடப்பட்டு, சின்ன சின்ன வட்டமான இடத்தில்
நான்கைந்து அமரும் இடங்கள் இருந்தன. உட்காருவதற்கு
நாற்காலிகளும் இருந்தன. அவற்றில் ஒன்றைத்தவிர
மற்ற இடங்களில் எங்களைப்போன்று வந்தோர்
அமர்ந்திருக்க,அவர்களிடம் பனை ஓலை சுவடிகளுடன்
அந்த சோதிட நிலையத்தின் ஊழியர்களும்(சோதிடர்கள்)
அமர்ந்து, அதை படித்து காட்டிக்கொண்டிருந்தனர். எல்லா
இடங்களிலும் வாடிக்கையாளர் ஒருவர் மட்டுமே இருக்க,
விதிவிலக்காக நாங்கள் இருவர் சென்று,காலியாக இருந்த
குடிலில் அமர்ந்தோம்.

அப்போது நான் கேட்டேன்.‘சோதிட நிலையத்தின்
உரிமையாளரான தலைமை சோதிடர் வந்து நாடி
படிக்க மாட்டாரா என்று?’எங்களை அழைத்து சென்ற
அந்த‘குட்டி’ சோதிடர் நான் ஏதோ கேட்கக்கூடாத
கேள்வியைக்கேட்டதுபோல் என்னைப்பார்த்து,‘அய்யா
அவர்கள், எல்லோருக்கும் வரமாட்டார். முக்கிய
பிரமுகர்களாயிருந்தால்(V.I.Ps) மட்டும் அவரது
அறையில் நாடி பார்ப்பார். மற்றவர்களுக்கெல்லாம்
எங்களைப்போன்ற அனுபவம் உள்ளவர்கள் தான்
நாடி பார்ப்போம்’ என்றார்.

நாங்கள் முக்கிய பிரமுகர்கள் இல்லை என்பதை
அவர் சொல்லாமல் சொல்லிவிட்டார்!

பிறகு அவர் ‘சார் நீங்கள் தந்த விவரங்களை வைத்து
உள்ளே சென்று Index நாடி எடுத்து வருகிறேன்.
பொறுத்திருங்கள்’ என்றார்.

அது எதற்கு என்றதும், ‘என்னிடம் நீங்கள்
எங்கே வேலை பார்க்கிறீர்கள்?’ என்றார். ‘வங்கியில்’
என்றதும், ‘உங்கள் வங்கியில் சேமிப்பு அல்லது
நடப்பு கணக்கு எண்ணை சொன்னதும், Index Register ல்
பார்த்து கணக்கை எடுப்பது இல்லையா? அதுபோல்தான்
இதுவும்’ என சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.

நாங்கள் அவரது வருகைக்காக காத்திருந்தோம்.


தொடரும்

6 கருத்துகள்:

  1. வருகைக்கும் காத்திருப்புக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  2. இதே போல் ஒரு அனுபவம் எனக்கு நேர்ந்தது சென்னையில் சில நாட்களுக்கு முன்பு .. அதை பற்றிய விவரங்கள் பிறகு பகிர்ந்து கொள்கிறேன். முடிவினை அறிய ஆவலாக உள்ளேன். வாசுதேவன்

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசுதேவன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கு நன்றி திரு முத்துக்குமாரன் அவர்களே! காக்க வைத்ததற்கு பொருத்தருள்க.

    பதிலளிநீக்கு