புதன், 5 அக்டோபர், 2011

பிரிந்தவர் கூடினால் ....???????? 7

நண்பர்களின் சந்திப்பு முடிவான பின் ஒரு நாள்
நண்பர் கோவிந்தசாமி என்னை அழைத்து,
படித்தபோது நான் வாங்கிய மதிப்பெண்களின்
சான்றிதழ்கள் உள்ளனவா என்று கேட்டார்.

‘இருக்கிறது’ என்றவுடன் ‘அவைகளைப்பார்த்து
நமக்கு பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர்கள்
பெயரை நினைவு படுத்த இயலுமா?’என்றார்.
‘முடியும்’என்றேன்.

எனது மதிப்பெண்களின் சான்றிதழ்களின் நகல்களை
எனது கணினியில் சேமித்து வைத்து இருந்ததால்
அவைகளைப்பார்த்து எங்கள் ஆசிரியர்களின்
பெயர்களை நினைவுகூர்ந்து (மறக்கமுடியுமா என்ன?)
அனைத்து ஆசிரியர்களின் பெயரையும் எழுதி
வைத்து விட்டேன்.

அண்ணாமலை நகர் சென்ற அன்று இரவு,
நண்பர் நாச்சியப்பன் கூப்பிட்டு‘மலரும் நினைவுகள்’
என்ற தலைப்பில் நான் எங்களது ஆசிரியர்கள்
பற்றி பேசவேண்டும் என்றும் படிக்கும்போது நடந்த
சுவையான நிகழ்வுகளைப்பற்றியும் பேசவேண்டும்
எனக் கேட்டுக்கொண்டார்.

உடனே பழையவைகளை‘நினைத்துப்பார்த்து’
ஒரு சிறிய குறிப்பை தயார் செய்துகொண்டேன்.
அதனால் நண்பர் நாச்சியப்பன் என்னை
அழைத்ததும் பேச மேடைக்கு சென்றேன்.

நான் பேசும்போது எடுத்த புகைப்படம் கீழே.





நான் பேசும்போது, வேளாண் அறிவியல்
படிப்பிற்கான நேர்முகத்தேர்வுக்கு 1962 ஜூன்
மாதம் அண்ணாமலை நகர் வந்ததையும்,
அப்போது எல்லோரையும் திருக்குறளில்‘உழவு
அதிகாரத்தை படித்து வருமாறு அறிக்கை
பலகையில் அறிக்கை வெளியிட்டு இருந்ததையும்,
உடனே எதிரே இருந்த நூலகம் சென்றபோது,
அங்கே நூற்றுக்கணக்கில் திருக்குறள் நூல்கள்
‘உழவு’அதிகாரம் தெரியும்படி பிரித்து
வைக்கபட்டிருந்ததையும் சொன்னபோது,அரங்கத்தில்
இருந்த அனைவரும் 1962 ஆம் ஆண்டுக்கே
சென்றுவிட்டதை உணர்ந்தேன்.

பிறகு நேர்முகத்தேர்வில் வழக்கமான பாட
சம்பந்தமான கேள்விக்குப்பிறகு அந்த
தேர்வுக்குழுவுக்கு தலைவராக இருந்த மறைந்த
திரு பி.டி. இராஜன் அவர்கள் ஒரு குறளை
சொல்லச்சொல்லி அதன் பொருள் கேட்டதையும்
சொன்னேன்.நான்‘உழுதுண்டு’என்று ஆரம்பித்ததும்
திரு இராஜன் அவர்கள் ‘எல்லோரும் இதையே
சொல்கிறீர்களே.வேறு ஒரு குறள் சொல்.’என்றதும்

‘செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்.‘


என்ற குறளை சொன்னபோது அவர் சிரித்துக்கொண்டே
அதன் பொருள் கேட்டார். நான் சொன்னதும்,
என் வயதைக்கேட்டுவிட்டு ஊடல் என்றால்
என்னவென்று தெரியுமா?’ என்று கேட்டார்
‘தெரியாது ‘என்றேன் என்றபோ,து அரங்கமே
சிரிப்பால் அதிர்ந்தது.

பின் ஆசிரியர்கள் பற்றி சொல்லும்போது,
மறக்காமல் 35 ஆசிரியர்கள் செய்த நற்பணியை
நினைவுகூர்ந்தேன்.அவர்களுக்கு நாங்கள்
வைத்த செல்ல(?)(புனை)பெயர்களை சொன்னபோது,
மேடையில் வீற்றிருந்த பேராசிரியர்களும்
எல்லோரோடும் சேர்ந்து சிரித்தார்கள்.

பேராசிரியர் திரு கலியபெருமாள் அவர்கள்
எவ்வாறு முதலாம் ஆண்டில் நல்லாசிரியராக
மட்டுமல்லாமல் நல்ல வழிகாட்டியாக இருந்தார்
என்பதையும்,பேராசிரியர் டாக்டர் மகாதேவன்,
1965 லேயே டாக்டர் ஹர்கோபிந்த் குரானா
நோபல் பரிசு வாங்க இருக்கிறார் என்று
சொன்னது 1968 ல் நடந்தது பற்றியும்,அவரிடம்
நாங்கள் கற்றுக்கொண்ட நேர மேலாண்மை
(Time Management) பற்றியும், பேராசிரியர்
திரு பாண்டுரங்கன் அவர்கள் தந்த,
கருத்து பரிமாற்று திறமை(Communication Skill)
பயிற்சி பற்றியும்,அவர் வேலையில் சேரும்போது
எப்படி Joining Report தரவேண்டும் என்று
சொல்லிக்கொடுத்தது பின்னால் எப்படி உதவியது
என்பது பற்றியும், அவர் எங்களை சென்னைக்கு
அழைத்து சென்று Screen Printing செய்வதை
கற்றுக்கொடுத்ததும்,இன்னும் மற்ற பேராசிரியர்கள்
சொல்லிக் கொடுத்ததை மறக்காமல்
நினைவுகூர்ந்தபோது அனைவருமே
சந்தோஷப்பட்டனர்.

மேலும் எங்கள் Batch பற்றி சொல்லும்போது,
அதுதான் முதன் முதல் Integrated Batch என்பதையும்,
எங்கள் வகுப்பில் தான் முதன்முதல் 75 பேர்
சேர்க்கப்பட்டனர் என்பதையும்,இந்தியாவிலேயே,
அப்போது இளநிலை படிப்பில் நுண் உயிரியல்
(Microbiology) பாடம் படித்தவர்கள் நாங்கள்தான்
என்பதையும், படிக்கும்போதே இறுதியாண்டில்
தினம் கிராமங்களுக்கு சென்று விவசாய
பெருமக்களோடு பழகி யதார்த்த நிலையை
கற்றுக்கொண்டது நாங்கள்தான் என்பதையும்
விரிவாக சொன்னேன்.

1965 ல் எங்களது புலத்தின் முதல்வர்
டாக்டர் ஜி அரங்கசாமி அவர்களுக்கு நடந்த
பிரிவுபசார விழாவில் நான் பேசியபொது சொன்ன
‘ஆசிரியர்கள் மாணவர்களை மறந்தாலும்,
மாணவர்கள் ஆசிரியர்களை மறப்பதில்லை.’

என்ற அதே வார்த்தைகளை திரும்பவும் சொல்லி
பேச்சை நிறைவு செய்தபோது அனைவரும்
கை தட்டி எனது கருத்தை ஆமோதித்தனர்.

பின் பேராசிரியர்கள் ஒவ்வொருவருவரும்
தங்களது எண்ணங்களை வெளிப்படுத்தி எங்களை
வாழ்த்தினர்.டாக்டர்.சந்திரசேகரன் பேசும்போது
இனி நாங்கள் ஆசிரியர்களோ அல்லது நீங்கள்
மாணவர்களோ அல்ல. நாம் எல்லோரும் மூத்த
குடிமக்களாக ஆகிவிட்டதால், நாம் அனைவரும்
இனி நண்பர்களே என்றபோது எங்களுக்கு ஏற்பட்ட
உணர்வை வெளிப்படுத்த வார்த்தை இல்லை
என்பதே உண்மை.

விழா நடந்துகொண்டு இருக்கும்போதே,
பெங்களூருவிலிருந்து பேராசிரியர் டாக்டர்.சிவசங்கர்
அவர்களும் வந்து கலந்துகொண்டார்.

இறுதியாக நண்பர் கோவிந்தசாமி நன்றி உரை
நவின்றார். அவருடைய உரையில் மறக்காமல்
எங்களது சந்திப்பு நடைபெற அரங்கம் மற்றும்
பேருந்து தந்து எல்லா உதவிகளை செய்த
வேளாண் புலத்தின் தலைவர் டாக்டர்.ஜெ.வசந்தகுமார்
அவர்களுக்கும், விழா நடக்க உறுதுணையாக இருந்த
பேராசிரியர்கள் டாக்டர் எம்.இரவிசந்திரன் மற்றும்
டாக்டர் வி.வையாபுரி ஆகியோருக்கும் நன்றி கூறினார்
.
(இந்த சந்திப்பை நன்முறையில் நடத்திய நண்பர்கள்
பேராசிரியர்கள் நாச்சியப்பன் மற்றும் கோவிந்தசாமி
ஆகியோரின் புகைப்படம் கீழே.
படத்தில் வலப்புறம் இருப்பவர் டாக்டர் நாச்சியப்பன்
நடுவில் இருப்பவர் டாக்டர்.கோவிந்தசாமி)





விழா முடிந்து பேருந்தில் விடுதிக்கு வந்து
பேராசிரியர்களுடன் இரவு விருந்து முடித்து நீண்ட
நேரம் பேசிக்கொண்டு இருந்து, அவர்களிடம்
இருந்து பிரியா விடை பெற்றோம்.

மறுநாள் காலை நடராஜர் கோயிலுக்கும்,
சுரபுன்னை காடுகள் உள்ள பிச்சாவரத்துக்கும்
சீக்கிரமே கிளம்பவேண்டி இருந்ததால், ஓய்வெடுக்க
சென்றுவிட்டோம்.

தொடரும்

6 கருத்துகள்:

  1. சந்திப்பில் ஒரு கலக்குக் கலக்கிட்டீங்க!
    அருமையான பகிர்வு.

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  3. அருமையான பதிவு.
    இனிய அனுபவங்கள்.
    நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வைரை சதீஷ் அவர்களே!

    பதிலளிநீக்கு
  5. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
    திரு இரத்தினவேல் அவர்களே!

    பதிலளிநீக்கு