புதன், 25 செப்டம்பர், 2013

நினைவோட்டம் 71



திருச்சி புனித வளவனார் கல்லூரி மிகவும் கண்டிப்புக்கு பெயர் போனது 
என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அங்கு படித்த 
மாணவர்கள் மற்ற கல்லூரி மாணவர்கள் போல தங்களால் இருக்க 
முடியவில்லையே என கல்லூரியில் படிக்கும்போது நினைத்திருந்தாலும், 
பின்னால் படித்து முடித்து வெளியே வந்தவுடன், தங்கள் கல்லூரியின் 
கண்டிப்பால் பெற்ற ஒழுக்கம், கட்டுப்பாடு ஆகியவை எந்த அளவிற்கு 
தங்களை முன்னேற்ற உதவின என்பதை உணர்ந்திருப்பார்கள்.

அரியலூரில் என் மாமா வீட்டில் தங்கி படித்தபோதும்,பெண்ணாடத்தில் 
பெரியம்மா வீட்டில் தங்கி படித்தபோதும்,விருத்தாசலத்தில் என் அண்ணன் 
திரு வே.சபாநாயகம் அவர்களோடு தங்கி படித்தபோதும் கட்டுப்பாடுகளுடன் வளர்ந்ததால், புனித வளவனார் கல்லூரியில் இருந்த கட்டுப்பாடு எனக்கு 
கஷ்டமாகத் தோன்றவில்லை.

எங்கள் கல்லூரி மாணவர்களை மற்ற கல்லூரி மாணவர்கள்  
Slaves of St.Josephs என சொல்லி கலாட்டா செய்வதுண்டு. அதைக் கேட்டு 
அப்போது நானும் வருத்தப்பட்டதுண்டு. ஆனால் பள்ளியில் பெற்றோரின் கண்காணிப்பில் படித்துவிட்டு கல்லூரி வாழ்க்கையில் கட்டுப்பாடு இல்லாததால்,மாணவர்களில் சிலர் தடம் மாறிப்போனதைப் பார்த்தபோது, 
அந்த பதின்ம வயதில் (Teen age) கொஞ்சமாவது கட்டுப்பாடு அவசியம் 
தேவை என்பதை பின்பு உணர்ந்தேன்.  

என்னுடைய இந்த கருத்தை சிலர் ஒத்துக்கொள்ள மறுக்கலாம். 
ஆனால் ஒவ்வொருவரும் அவர்கள் பெற்றோர்களாகும்போது தங்கள் 
பிள்ளைகள் கட்டுப்பாடுடன் வளரவேண்டும் என்றுதான் நினைப்பார்கள் 
என்பது உண்மை.

எங்கள் கல்லூரியில் சரியான நேரத்திற்கு வகுப்பில் இருக்கவேண்டும் 
என்பது எழுதப்படாத விதி. அப்படி யாராவது கல்லூரி தொடக்க மணி 
அடித்த பின் வந்தால் வகுப்பு ஆசிரியர் அவர்களை உள்ளே நுழைய அனுமதிக்கமாட்டார். அவர்கள் கல்லூரி முதல்வரிடம் போய், தாமதமாக 
வந்ததன் காரணத்தை சொல்லி அனுமதி சீட்டு பெற்று வந்தால் தான் 
வகுப்பில் நுழைய அனுமதி கிடைக்கும்.

கல்லூரி முதல்வரான மதிப்பிற்குரிய அருட் தந்தை எரார்ட் அவர்களும் 
சும்மா அனுமதி சீட்டு கொடுக்கமாட்டார். சரியான நேரத்திற்கு வராததற்கான காரணத்தைக் கேட்டறிந்து பின்னர் அந்த மாணவர் அபராதக் கட்டணமான எட்டணாவை (50 காசுகள்) கட்டினால் தான் அனுமதி சீட்டு தருவார். 

அப்போது கையில் பணம் இல்லையென்றால் முதல்வரிடம் அனுமதி 
பெற்று வகுப்பிற்கு செல்லலாம். ஆனால் மறு நாள் அபராதத் தொகையை அலுவலகத்தில் கட்டி, பணம்  கட்டியதற்கான இரசீதை காலையில் 
முதல் வகுப்பு எடுக்கும் ஆசிரியரிடம் கொடுத்துவிடவேண்டும். நாம் கொடுக்கவில்லையென்றாலும், முதல் வகுப்பிற்கு வரும் ஆசிரியருக்கு 
யார் யார் அபராதத்தொகை கட்டவேண்டும் என்ற விவரம் கல்லூரி அலுவலகத்திலிருந்து வந்துவிடும்.  

(கல்லூரியில் படிக்கும் மாணவர்களில் பெரும்பாலோர் ஏதாவதொரு
காரணத்திற்காக நிச்சயம் அபராதம் கட்டியிருப்பார்கள்.)  

முதல் வகுப்பை நடத்தும் ஆசிரியர் வருகைப் பதிவேட்டை படித்து 
வந்திருப்போரின் வருகையை குறித்துக்கொள்ளுமுன்பு அலுவலகம் 
குறிப்பிட்டுள்ள மாணவர்களிடமிருந்து பணம் கட்டிய இரசீதை 
பெற்றுக்கொண்டபின் தான் பணியையே தொடங்குவார்கள்.

முதல்வர் மதிப்பிற்குரிய அருட் தந்தை எரார்ட்  (Rev Fr Ehrhart SJ) 
அவர்களை சந்திப்பதையும், அபராதம் கட்டுவதையும்  தவிர்க்க, 
எல்லோரும் குறித்த நேரத்தில் வகுப்புக்கு வந்துவிடுவார்கள். இப்படி 
குறித்த நேரத்தில் இருப்பிடத்தில் இருக்கும் பழக்கத்தை கல்லூரியில் 
(கட்டாயத்தின் பேரில்) கற்றுக்கொண்டதால், பிற்காலத்தில் 
அரசுப் பணியிலும் வங்கிப் பணியிலும்  இருக்கும்போது ஒரு நாள் கூட அலுவலகத்திற்கு நேரம் கடந்து சென்றதில்லை.

இன்னும் சொல்லப்போனால், பணியில் சேர்ந்த நாள் முதல் ஓய்வு பெறும் 
வரை வங்கிக்கு மற்ற ஊழியர்கள் வருமுன் முதலில் சென்றது நான் தான் 
என்பதை இப்போதும் பெருமையாய் சொல்லுவேன். எந்த இடத்திலும் 
On time இல் இருப்பதைவிட in time இல் இருப்பதையே விரும்பியவன் நான். 
பணி ஓய்வுக்குப்பின்னும் இந்த வழக்கத்தை கடைபிடித்து வருகிறேன். 
நேரத்திற்கு செல்லும் இந்த பழக்கத்தை கற்றுக்கொடுத்த புனித வளவனார் 
கல்லூரிக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

(வங்கியில் வட்டார மேலாளராக இருக்கும்போது வங்கி விழா ஒன்றில் 
நேரத்தை கடைப்பிடித்ததால் ஏற்பட்ட நிகழ்வு பற்றி  பின்னர் எழுதுவேன்.)

எங்களுக்கு ஒவ்வொரு திங்கட்கிழமை மதியமும், ஆங்கிலக் கட்டுரை 
(Composition) எழுதும் வகுப்பு நடக்கும். இந்த வகுப்பு எல்லா புகுமுக வகுப்பு மாணவர்களுக்கும் பொது என்பதால், அந்த வகுப்பு கல்லூரியில் உள்ள கலையரங்கத்தில் (Lawley Hall) தான் நடக்கும். அந்த வகுப்புக்கு  வரும் 
ஒவ்வொரு மாணவனும் கட்டாயம் கையடக்க Concise Oxford English 
Dictionary யை கொண்டுவரவேண்டும். அது இல்லாத மாணவர்கள் உள்ளே அனுமதிக்கப்படமாட்டார்கள்.

ஆங்கில அகராதியை (Dictionary) பார்த்து, பொருள் தெரியாத/புரியாத 
சொற்களுக்கு பொருள் தெரிந்து கட்டுரை எழுதவேண்டும் என்பதற்காகத்தான் 
அந்த கட்டுப்பாடு. இதைக் கட்டுப்பாடு என்பதை விட ஒரு நல்ல பழக்கம் 
என்றே சொல்லலாம்.

இன்றைக்கும் ஆங்கில நாளேடுகளைப் படிக்கும்போது, சில சொற்களைப் 
பற்றிய ஐயம் வரும்போது ஆங்கில அகராதியைப் பார்க்காமல் நான் 
மேற்கொண்டு தொடர்வதில்லை புனித வளவனார் கல்லூரியில் 
கற்றுக்கொண்ட நல்ல பழக்கத்தால்.

கட்டுரை வகுப்பு மட்டுமல்ல காலாண்டு, அரையாண்டு மற்றும் 
பல்கலைக் கழகத் தேர்வுகளை Lawley Hall இல்  எழுதவேண்டும். 
அதுவுமல்லாமல் கல்லூரி விழாக் கூட்டமும் அங்குதான் நடக்கும்.

அவ்வாறு தேர்வோ அல்லது கூட்டமோ நடக்கும்போது கல்லூரி 
முதல்வர் அவர்கள் திடீரென  முதல் தளத்தில் உள்ள ஏதாவது ஒரு 
அறையில் நுழைந்து அங்குள்ள சன்னல் வழியாக கீழே நடப்பதைப் 
பார்ப்பதுண்டு. யாராவது குறும்பு செய்தாலோ அல்லது தேர்வில் 
பார்த்து எழுதினாலோ அவரது கண்ணிலிருந்தும், அதற்கான 
தண்டனையிலிருந்தும் தப்ப முடியாது.

காலாண்டு அரையாண்டு மற்ற எந்த தேர்வானலும் தேர்வு எழுதும் 
மாணவர்கள் சீக்கிரம் தேர்வை எழுதி முடித்தாலும், உடனே வெளியே 
வரமுடியாது. அப்படியே வெளியே வந்தாலும் வாசல் அருகே, முதல்வர் 
மதிப்பிற்குரிய அருட் தந்தை எரார்ட் அவர்கள் நின்றுகொண்டிருப்பார். அவர் 
வெளியே வரும் மாணவனின் தோளில் அன்புடன் கையைப் போட்டு 
உள்ளே அழைத்து வந்து இருக்கையில் அமர வைத்துவிட்டு, எழுதியதை 
திரும்ப படித்துப் பார்க்க சொல்லிவிட்டு செல்வார்.

அதனால் சீக்கிரம் தேர்வை எழுதினாலும், தேர்வுக்கான நேரம் முடியும் 
வரை இருக்கையிலேயே அமர்ந்திருக்கவேண்டும். அந்த நேரத்தில் சும்மா உட்கார்ந்திருக்காமல் எழுதியதை திரும்பப் படித்துப் பார்க்கத் தோன்றும். 
அப்படி படிக்கும்போது அவசரத்தில் ஏதேனும் தவறாக எழுதியிருந்தது 
தெரிந்தால் அதை திருத்திக் கொள்ளலாம் என்பதற்காகவே அந்த ஏற்பாடு.  

இந்த கட்டுப்பாடு எங்களுக்கு மட்டுமல்ல, செப்டம்பர் மாதம் நடக்கும் 
பல்கலைக்கழக தேர்வு எழுதவரும் மற்ற கல்லூரி மாணவர்களுக்கும் தான். 
அதாவது புனித வளவனார் கல்லூரி வளாகத்தில் தேர்வு எழுதுவோர், 
தேர்வு நேரம் முடியும் வரை வெளியே வர இயலாது.

ஆரம்பத்தில் என்ன இது. நாம் தான் தேர்வை எழுதி முடித்துவிட்டோமே 
பின் ஏன் நம்மை சிறை பிடித்து வைக்கிறார்கள். என நினைத்தாலும், 
பின்பு நடந்த தேர்வுகளில் எழுதியதை திரும்பப் படிக்கும் பழக்கம், 
அவசரத்தில் செய்த தவறுகளைத் திருத்திக்கொள்ள உதவியதால் அது 
ஒரு நல்ல பழக்கம் என்பதை போகப்போகத் தெரிந்துகொண்டேன்.

எங்கள் கல்லூரியில் நான் கற்றுக்கொண்ட இந்த நல்ல பழக்கம், 
பின்னால் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் வேளாண் அறிவியல் 
பட்டப் படிப்பு படித்தபோதும், வங்கியில் சேர்ந்த பிறகு C.A.I.I.B தேர்வு 
எழுதியபோதும் உதவியது என்பதை சொல்லவும் வேண்டுமா?



நினைவுகள் தொடரும்  

வே.நடனசபாபதி

19 கருத்துகள்:

  1. அனுபவம் - நல்ல பாடம்...

    வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      நீக்கு
  2. மற்ற கல்லூரி மாணவர்கள் போல தங்களால் இருக்க
    முடியவில்லையே என கல்லூரியில் படிக்கும்போது நினைத்திருந்தாலும்,
    பின்னால் படித்து முடித்து வெளியே வந்தவுடன், தங்கள் கல்லூரியின்
    கண்டிப்பால் பெற்ற ஒழுக்கம், கட்டுப்பாடு ஆகியவை எந்த அளவிற்கு
    தங்களை முன்னேற்ற உதவின என்பதை உணர்ந்திருப்பார்கள்.//

    சத்தியமான வார்த்தை. கிறிஸ்த்துவ கல்வி நிலையங்களில் அது பள்ளியாக இருந்தாலும் கல்லூரியாக இருந்தாலும் ஒழுக்கத்திற்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுவந்த காலம் அது. இப்போதும் அப்படித்தான் என்றாலும் சில கல்வி நிலையங்களில் சுதந்திரம் என்கிற பெயரில் மாணவர்களை நல்வழிப்படுத்த மறந்துவிடுகின்றனர். ரொம்ப சரளமான நடையில நீங்க சொல்ற விதம் உங்களோடு சேர்ந்து நாங்களும் அந்த கல்லூரி காலத்திற்கே சென்றுவிடுவதுபோன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. இதை அப்படியே தொடர்ந்து உங்களுடைய அலுவல்களைப் பற்றிய நினைவுகளையும் பகிருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், எனது கருத்தை ஆமோதித்தற்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே! அளவற்ற சுதந்திரம் அழிவுக்கு இழுத்து செல்லும் என்பதுதான் உண்மை.

      எனது அலுவலக நிகழ்வுகளை அவ்வப்போது எழுதிவருகிறேன். நிகழ்வுகள் என்ற பிரிவின் கீழ் ‘Boss கள் பலவிதம்!’ என்ற தலைப்பில் 40 பதிவுகளும் (காண்க: http://puthur-vns.blogspot.com/2012/03/boss-1.html)
      ‘வாடிக்கையாளர்களும் நானும்’ என்ற தலைப்பில் 52 பதிவுகளும் (காண்க: http://puthur-vns.blogspot.com/2012/09/1.html) எழுதியுள்ளேன். நேரம் இருக்கும்போது படித்துப்பார்க்க வேண்டுகிறேன்.

      நீக்கு
    2. நிச்சயமாக. படித்துவிட்டு எழுதுகிறேன். தகவலுக்கு நன்றி.

      நீக்கு
    3. நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே!

      நீக்கு
  3. இப்படி
    குறித்த நேரத்தில் இருப்பிடத்தில் இருக்கும் பழக்கத்தை கல்லூரியில்
    (கட்டாயத்தின் பேரில்) கற்றுக்கொண்டதால், பிற்காலத்தில்
    அரசுப் பணியிலும் வங்கிப் பணியிலும் இருக்கும்போது ஒரு நாள் கூட அலுவலகத்திற்கு நேரம் கடந்து சென்றதில்லை//

    . உண்மைதான் ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி புலவர் ஐயா அவர்களே!

      நீக்கு
  4. தங்களின் பதிவைப்படித்தேன். இரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  5. அய்யா, நான் சிறு வயதில் அந்த கல்லூரி மைதானத்தில் விளையாடப் போகும்போது, இங்கிலாந்தைச் சேர்ந்த பாதிரிமார்களும் இருந்தனர். அருட் தந்தை எரார்ட் (Rev Fr Ehrhart SJ) அவர்களுள் ஒருவரா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! அருட் தந்தை எரார்ட் அவர்கள் 1942 லிருந்து 1962 வரை புனித வளவனார் கல்லூரியின் முதல்வராக இருந்திருக்கிறார். நான் படித்தபோது ஆண்டு விழாவைத்தவிர மற்ற நாட்களில் அவரை நான் மைதானத்தில் பார்த்தது இல்லை. ஏனெனில் அவர் மாலையில் கிளைவ் விடுதிக்கு சென்றுவிடுவார். அதோடு அவர் இங்கிலாந்தைச் சேர்ந்தவரும் அல்லர்.

      நீக்கு
  6. I feel your college was more like a school. That was a crucial year for future. So automatically, you people might have been very sincere in your studies. I guess today, few private colleges treat students like children. This kills individuality and creativity. After certain age, people should be made accountable for their actions.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! நீங்கள் சொல்வது சரிதான். எங்கள் கல்லூரியில் ஒரு பள்ளி மாணவனை நடத்துவதுபோல் தான் புகுமுக வகுப்பு மாணவர்களை நடத்தினார்கள். ஆனால் அப்போதைய சூழ்நிலையில் (60 களில்) பள்ளியில் தமிழ் வழிக் கல்வி படித்துவிட்டு, கல்லூரிக்கு வந்து ஆங்கிலத்தில் கல்வி கற்கவேண்டிய அந்த ஒரு ஆண்டில் மாணவனின் கவனம் சிதறாது இருக்கவேண்டும் என்பதால் அந்த கட்டுப்பாடு அவசியமாயிற்று. என்னைப் பொறுத்தவரையில், அந்த கட்டுப்பாடு எந்த விதத்திலும் எனது தனித்தன்மையையோ அல்லது எனது படைப்பாற்றல் திறனையோ குறைக்கவில்லை என்றே சொல்வேன்.

      நீக்கு
  7. கல்லூரிக்காலத்தில் கண்டிப்பு அவசியம்தான்;இனிய அனுபவப் பகிர்வு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

      நீக்கு
  8. The kind of discipline enforced those days was intended only for the benefit of students and that was understood both by the students and parents. Unfortunately these days students as well parents resent this . Numerous incidents have been reported about teachers having been even arrested by the police for having attempted to enforce discipline.While brutal enforcement is not desirable, benign enforcement should not be mistaken. Similarly the way English was learnt those days made interesting learning. It is very rare to find students carrying Oxford English dictionary these days.I doubt if present day students are aware of existence of such a dictionary! All these are gradually leading to deterioration in standards. It is saddening to note that the number of students from T.N qualifying in civil services is very negligible these days. Again most of the MNCs have declared more than once that the standards of students in TN is not upto the mark and that employable graduates are hardly 20% of the total graduates being churned out by the numerous engineering colleges in TN. Gone are the kind of days you were privileged and fortunate to be part of. Vasudevan

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே! அந்த கால ஆசிரியர்கள் போல் இந்தக்கால ஆசிரியர்கள் இருக்க முடியாததற்கு காரணம் பெற்றோர்களே! இப்போது ஒரு ஆசிரியர் மாணவனை நல்வழிப்படுத்த முயற்சி எடுத்தால் அதை எதிர்ப்பது முதலில் பெற்றோர்கள் தாம். ஆசிரியர்களும் உண்மையில் அந்த காலத்தில் இருந்தது போல் இன்று இல்லை என்பது வருந்தக்கூடியதே. அதனால் நம்து கல்வித் தரம் கீழே எங்கயோ போய்விட்டது என்பதும் உண்மைதான். நீங்கள் சொன்னது போல் பன்னாட்டு நிறுவனங்கள், படிப்பு இருந்தாலும் நமது பட்டதாரிகளுக்கு வேலையில் பயன்படுத்தத்தக்க அறிவு இல்லாததால் அவர்களை வேலைக்கு எடுத்துக்கொள்ள தயங்குகின்றன என்பது வேதனையான விஷயம். நாங்கள் படித்த காலம் ஏன் நீங்கள் படித்த காலமும் பொற்காலம்தான்!

      நீக்கு
  9. கல்லூரி கால கண்டிப்புகளும் ,
    கட்டுப்பாடுகளும் அஸ்திவாரமாக அமைந்தது சிறப்பு..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!

      நீக்கு