திங்கள், 2 செப்டம்பர், 2013

இந்த தகவல் பொய்யாக இருக்கக்கூடாதா?



பொதுவாக பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளில் ஒருவர் வெற்றிபெற
வேண்டுமானால் ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தது 35 விழுக்காடு மதிப்பெண்களாவது பெறவேண்டும்.(முன்பு இது 40 ஆக இருந்தது) ஆனால் 
மருத்துவம், பொறியியல் போன்ற பட்டப் படிப்புகளில், 50 விழுக்காடு 
மதிப்பெண்கள் பெற்றவர்களே தேர்வில் வெற்றி பெற்றவர்களாக 
அறிவிக்கப்படுவார்கள்.

தணிக்கையாளருக்கான (Auditor) பட்டயப் படிப்பான C.A வுக்கும், 
பணிபுரியும் வங்கியாளருக்கான சான்றிதழ் பதிப்பான CAIIB க்கான 
தேர்வுகளில் வெற்றி பெற அவசியம் 50 விழுக்காடு மதிப்பெண்கள் 
பெறவேண்டும். எனக்குத்தெரிந்து வங்கியில் என்னோடு பணிபுரிந்த 
நண்பர்கள் பலர், 49 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்று CAIIB தேர்வில் தோல்வியடைந்திருக்கிறார்கள்.

இதை எதற்காக சொல்கிறேன் என்றால், மாணவர்களும் வங்கியாளர்களும், தணிக்கையாளர்களாக விரும்புவோரும் தேர்வில் வெற்றி பெற குறைந்தபட்ச மதிப்பெண்கள் எவ்வளவு பெறவேண்டும் என்கிற விதி இருக்கும்போது, 
பொதுத்துறை நிறுவனங்களின் உயர் பதவிக்கு போட்டியிடுவோர் 
நேர்முகத்தேர்வில் பங்கேற்கும்போது, குறைந்த பட்சமாக எவ்வளவு 
மதிப்பெண்கள் பெறவேண்டும் என விதி இருக்கவேண்டுமா இல்லையா?

இல்லையோ என நினைக்கத் தோன்றுகிறது Times of India தினத்தாளில் 
வந்த ஒரு அதிர்ச்சியான தகவலைப் படித்ததும்.அதனால் ஏற்பட்ட கோபம் 
மற்றும் வருத்தத்தின் விளைவே இந்த பதிவு.

நீங்கள் கேட்கலாம். உயர் பதவிக்கு செல்வோரை எதற்காக அவர்கள் நேர்முகத்தேர்வில் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் 
தேர்ந்தெடுக்கவேண்டும். அவர்களது செயல் திறன் கணிப்பில் 
(Performance Appraisal) பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில்  
தேர்ந்தெடுக்கலாமே என்று.

அப்படியெனில் அவர்களை எதற்கு நேர்முகத்தேர்வுக்கு அழைக்கவேண்டும். 
அதில் மதிப்பெண்கள் தரவேண்டும். அரசுப் பணியில் செய்வதுபோல் 
அவர்களது பணிக்கால செயல்திறனைப் பார்த்தே தேர்ந்தெடுத்துவிடலாமே 
என்பதுதான் எனது கேள்வி.  

பொதுத்துறை வங்கிகளில் உயர் பதவிக்கு தேர்ந்தெடுக்கும் முறை பற்றி தெரிந்துகொண்டால் நான் சொல்ல வந்தது புரியும். நாட்டுடைமையாக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகளில், வங்கியை நிர்வகிக்க, தலைவர் மற்றும் 
மேலாண்மை  இயக்குனர் (Chairman and Managing Director) ஒருவரும், 
அவருக்கு அடுத்து ஒன்று அல்லது இரு செயல் இயக்குனர்(கள்) 
(Executive Director) இருப்பார்கள்.

வங்கியின் தலைவருக்கான பதவிக்கு பொதுத்துறை வங்கிகளில் உள்ள 
செயல் இயக்குனர்களை நேர்முகத்தேர்வுக்கு அழைத்து தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பது வழக்கம். செயல் இயக்குனர் பதவிக்கு பொதுத்துறை 
வங்கிகளில் பணியாற்றும் பொது மேலாளர்களை (General Managers) 
நேர்முகத்தேர்வுக்கு அழைத்து தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பது 
வழக்கம்.

வழக்கமாக வங்கிகளின் தலைவர் மற்றும் செயல் இயக்குனர்களை 
தேர்ந்தெடுக்கும் நியமன குழுமத்திற்கு (Appointment Board)  ரிசர்வ் வங்கியின் தலைவர்தான் தலைமை வகிப்பார். அப்படி அவரால் அந்த குழுமத்தின் 
கூட்டத்தில் கலந்துகொள்ள இயலாதபோது, நிதிநிலை பணித்துறை 
செயலரின் (Financial Services Secretary) தலைமையில் ஒரு சார்பு குழு 
(Sub Committee) கூடி தகுதியானவர்களை அந்த பதவிகளுக்காக 
தேர்ந்தெடுக்கும்.

சமீபத்தில் விஜயா வங்கி, இந்தியன் ஓவெர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி 
மற்றும் தேனா வங்கிகளுக்கான செயல் இயக்குனர்களை தேர்ந்தெடுக்க, 
நிதிநிலை பணித்துறை செயலர் திரு ராஜீவ் தக்ரு அவர்கள் தலைமையில் 
சார்பு குழுவினர் கூடி நேர்முகத்தேர்வு நடத்தி, நான்கு பேரை 
செயல் இயக்குனர்கள் பதவிக்கு தேர்ந்தெடுத்தார்களாம். தேர்ந்தெடுக்கப்பட்ட  அவர்களை செயல் இயக்குனர்களாக நியமிக்க  நிதி அமைச்சகமும் 
பரிந்துரை செய்துள்ளதாம்.

இது என்ன வழக்கமான நடைமுறைதானே. இதற்கு அதிர்ச்சியடைய 
வேண்டிய அவசியம் என்ன என சிலர் எண்ணலாம். சமீபத்தில் நடந்த 
அந்த நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று செயல் இயக்குனர்களாக 
சிபாரிசு செய்யப்பட்ட அந்த நான்கு பொதுத்துறை வங்கிகளின் 
பொது மேலாளர்கள் நேர்முகத் தேர்வில் பெற்ற  மதிப்பெண்கள் 
எவ்வளவு தெரியுமா? 

அதிகம் இல்லை நண்பர்களே. முப்பதுக்கு வெறும் ஒரு 
மதிப்பெண்தான் (1/30)! அதாவது 3.33 விழுக்காடு மதிப்பெண்கள்!

இந்த தகவல் பொய்யாக இருக்கக்கூடாதா என்ற நப்பாசை. ஆனால் 
Times of India போன்ற ஒரு நாளேடு முதல் பக்கத்தில் இந்த செய்தியை வெளியிடும்போது பொய்யாக இருக்கமுடியாது என்பதுதான் உண்மை. 

இதைக் கேட்க அதிர்ச்சியாக இருக்கிறதா இல்லையா? இவர்களைத் 
தேர்ந்தெடுத்த அந்த குழுவில் குறைந்தது மூன்று பேர் இருந்திருக்கக்கூடும். 
அவர்கள் ஒவ்வொருவரும் நேர்முகத்தேர்வில் பங்குபெறுவோருக்கு 10 
மதிப்பெண்கள் வரை தரலாம் என இருந்திருந்தால், வெற்றிபெற்ற 
நால்வருக்கும், அந்த மூவரில் ஒருவர் மட்டுமே ஒரு மதிப்பெண் 
தந்திருக்கிறார் எனத் தெரிகிறது. மற்ற இருவரும் 0 மதிப்பெண்ணைத் தந்திருக்கக்கூடும்.

இப்படி குறைந்த  மதிப்பெண்கள் பெற்றவர்களை வங்கியின் உயர் மட்ட 
பதவிக்கு தேர்ந்தெடுக்கவேண்டிய அவசியம் என்ன என்று.தெரியவில்லை. நேர்முகத்தேர்வுக்கு வந்திருந்தவர்கள் தேவையான திறனைப் 
பெற்றிருக்கவில்லை எனத் தெரிந்தால் அவர்களை ஒதுக்கிவிட்டு, 
புதியவர்களை அழைத்து நேர்முகத்தேர்வு நடத்தி அதில் தகுதியானவர்களை தேர்ந்தெடுத்திருக்கலாமே?

இப்படி தகுதி பெற்றவர்களை செயல் இயக்குனர்களாக நியமித்தால், 
அந்த பொதுத்துறை வங்கிகளின் நிலைதான் என்ன? இவர்கள் வாங்கிய 
மதிப்பெண்கள் தெரிந்துவிட்டதால், இவர்கள் எந்த முகத்தோடு அந்த 
வங்கிகளில் தங்களுக்கு கீழே உள்ளவர்களிடம் வேலை வாங்கமுடியும்? 
அந்த வங்கிகளில் உள்ளவர்கள்தான் எப்படி இவர்களை மதிப்பார்கள்? 
இது போன்ற அதிசய நிகழ்வுகள் நம் நாட்டில் அதுவும் அரசுத் துறை 
நிறுவனங்களில் மட்டுமே நடக்கின்றன என்பதுதான் வேதனை.  

இந்த நிகழ்வை வேதனை என்றா சொன்னேன். இல்லை.இல்லை. 
வெட்கக்கேடு என்றுசொல்வதுதான் சரி என்றே தோன்றுகிறது.  

நாம் எங்கு போய்க்கொண்டிருக்கிறோம்? கவலையாக இருக்கிறது.


24 கருத்துகள்:

  1. இப்படி குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்களை வங்கியின் உயர் மட்ட
    பதவிக்கு தேர்ந்தெடுக்கவேண்டிய அவசியம் என்ன என்று.தெரியவில்லை. நேர்முகத்தேர்வுக்கு வந்திருந்தவர்கள் தேவையான திறனைப்
    பெற்றிருக்கவில்லை எனத் தெரிந்தால் அவர்களை ஒதுக்கிவிட்டு,
    புதியவர்களை அழைத்து நேர்முகத்தேர்வு நடத்தி அதில் தகுதியானவர்களை தேர்ந்தெடுத்திருக்கலாமே?

    நியாயமான சிந்தனை..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!

      நீக்கு
  2. நேர்முகத் தேர்வில் 3.33 மதிப்பெண்கள் பெற்றவர்கள் பதவி உயர்வு பெறுகிறார்கள் என்றால்,அந்த நேர்முகத் தேர்வே வெறும் கேலிக் கூத்தாக ஆகி விடுகிறது.அவர்களைக் கட்டாயம் தேர்ந்தெடுப்பது என்று முன்பே முடிவு செய்திருந்தால் அந்த நேர்முகத் தேர்வு ஏன் என்ற கேள்வி எழுகிறது! நீங்கள் சொலவது சரியே. india! quo vadis?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், எனது கருத்தோடு உடன்படுவதற்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! ‘.

      நீக்கு
  3. அவர்களை ஒதுக்கிவிட்டு,
    புதியவர்களை அழைத்து நேர்முகத்தேர்வு நடத்தி அதில் தகுதியானவர்களை தேர்ந்தெடுத்திருக்கலாமே?//

    அதுதானே? இப்படிப்பட்டவர்கள் பதவியில் அமர்த்தப்பட்டால் அவர்களுக்கு கீழ் பணிபுரிபவர்களிடமிருந்து எந்த அளவுக்கு மதிப்பு கிடைக்கும்? எப்படி மனமுவந்து ஒத்துழைப்பார்கள்?



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், எனது கருத்தை ஆமோதித்ததற்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே! ‘.

      நீக்கு
  4. பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      நீக்கு
  5. பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு T.N.முரளிதரன் அவர்களே!

      நீக்கு
  6. While the news is shocking enough It does not surprise me immune as I have become to too many scandals that have been reported in the media during the last few years involving huge amounts with the dramatis personae moving about freely with triumphant smiles on their faces and the people of the country according them rousing welcomes. vasudevan

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே! முன்பு ஊழல் என்ற சொல் வெறுக்கப்பட்ட ஒன்றாக இருந்தது. ஆனால் இன்றோ ஊழல் செய்து விட்டு சிறை சென்று வருவோரை, தாங்கள் கூறியதுபோல் ;இராஜ மரியாதை’ கொடுத்து வரவேற்கும் கூட்டத்தைப் பார்க்கும்போது நேர்மைக்கு இங்கு இடமில்லையோ என எண்ணத் தோன்றுகிறது,

      நீக்கு
    2. உள் கருத்தைப் புரிந்து இரசித்தமைக்கு நன்றி திரு வாசு அவர்களே!

      நீக்கு
  7. யோசிக்க வேண்டிய ஓன்று .தங்களுக்கு வேண்டியவரை கொண்டுவர இப்படி செய்து இருக்கலாம் என்ற வினாவும் எழாமல் இல்லை .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ஸ்ரீநிவாசன் அவர்களே! நீங்கள் கூறுவதுகூட ஒரு காரணமாக இருக்கலாம்.

      நீக்கு
  8. பதில்கள்
    1. வருகைக்கும் நன்றி திரு அருண் குமார் அவர்களே! நான் கூட நீங்கள் நினைப்பதுபோல் தான் நினைத்தேன் அந்த தகவலைப் படித்தவுடன்.

      நீக்கு
  9. உங்கள் மகன்களில் யார் நல்லவன் என்று ஒரு மூதாட்டியைக் கேட்டபோது அவள் சொன்னாளாம், அங்க பாருங்க, கூரை மேல் கையில் கொள்ளியோடு நின்று கொண்டு கூரைக்குத் தீ வைப்பேன் என்கிறானே, அவன்தான் என் மகன்களிலேயே மிக நல்லவன் என்றாளாம்.

    இன்று பதவிகளில் இருக்கும் அனைவரும் அந்த மூதாட்டியின் மகன் போன்றவர்களே. என்ன செய்ய முடியும்? அதில் ஒருத்தன் கையில் பதவியைக் கொடுத்துத்தான் ஆகவேண்டும். அவர்களை விட்டால் அடுத்தவர்கள் இவர்களை விட மோசமானவர்களாகத்தான் இருப்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே! தாங்கள் கூறுவதும் சரிதான். வேறு வழியில்லாமல் இவர்களை எடுத்திருக்கும் பட்சத்தில், அவர்களின் ‘திறமை’யை இவ்வாறு வெளிச்சம் போட்டு காட்டியிருக்கவேண்டாம் என நினைக்கிறேன்.

      நீக்கு
    2. இது வழக்கமாக நடக்கும் ஒன்று. தகுதி உள்ள பலர் பதவி உயர்வு கிடைக்காமலும், தகுதி இல்லதவர் உயர் பதவியில் அமர்ந்து மற்றவர் உழைப்பில் நல்ல பெயர் எடுப்பதும் நாம் வங்கிகளில் கண்டது தானே? அவரவர் கொடுப்பினை அல்லது ச்ம்மந்தப் பட்டர்வகளை சரி செய்யும் திறமை.

      நீக்கு
    3. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு L.N.கோவிந்தராஜன் அவர்களே! திறமை இல்லாதவர்கள் உயர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவதும், திறமையுள்ளவர்கள் புறக்கணிக்கப்படுவதும் தான் வேதனை தருகிறது. என்று இது மாறுமோ?

      நீக்கு
  10. வங்கிகளுக்கான செயல் இயக்குனர்களை தேர்ந்தெடுக்கும்போது நேர்முகத்தேர்வு உண்டா என்று தெரியவில்லை. பெரும்பாலும் சீனியாரிட்டி அடிப்படையில்தான் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கேள்விக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! பொதுத்துறை வங்கிகளுக்கான செயல் இயக்குனர்களை நேர்முகத்தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கும் முறை பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

      நீக்கு