புதன், 8 அக்டோபர், 2014

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 14




அந்த ஏமாற்றுப் பேர்வழியிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு வங்கி

கிளைக்குத் திரும்பியவுடன் அந்த கிளை மேலாளர் செய்த முதல் 

வேலை தலைமையகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டதுதான்.

 

அங்குள்ள வங்கித் தலைவரின் தனிச் செயலாளரை அழைத்து 

தலைவரிடம் பேசவேண்டும். என்றிருக்கிறார். அதற்கு அவர் என்ன 

விஷயமாக பேசவேண்டும்?’ என்றதற்கு கிளை மேலாளர் நடந்ததை 

சொல்லி தலைவர் சொன்னபடி அவரது மைத்துனரிடம் பணத்தை 

கொடுத்துவிட்டேன். அதை சொல்லத்தான் பேச வேண்டும். 

என்றிருக்கிறார்.

 

உடனே அந்த அலுவலர் எனக்குத் தெரிந்து நமது தலைவர் நேரடியாக 

கிளை மேலாளர்களிடம் பேசமாட்டாரே.அப்படியே இருந்தாலும் என்னிடம் 

சொல்லி உங்களுக்கு தொலைபேசி இணைப்பை தர சொல்லியிருப்பாரே.

அப்படி ஏதும் செய்யவில்லையே. இருங்கள். கேட்டு சொல்கிறேன். என்று 

சொன்னபோது தான் கிளை மேலாளருக்கு நாம் தான் அவசரப்பட்டு 

விசாரிக்காமல் ஏமாந்துவிட்டோமோ என்று தோன்றியிருக்கிறது.

 

தொலைபேசி இணைப்பில் காத்திருந்தபோது, திரும்பவும் இணைப்பில் 

வந்த வங்கித் தலைவரின் தனிச்செயலர், தலைவரிடம் கேட்டேன்.அவர் 

உங்களுக்கு அது போன்று எதுவும் சொல்லவில்லை என்கிறார். நீங்கள் 

ஏன் தீர விசாரிக்காமல் பணத்தை கொடுத்தீர்கள். இப்போது 

கூப்பிட்டதுபோல் அப்போது என்னைக் கூப்பிட்டு விவரத்தை   

சொல்லி கேட்டிருக்கலாமே. உடனே நீங்கள் காவல் நிலையத்தில் 

புகார் கொடுங்கள். என்றதும் தான் ஏமாற்றப்பட்டது உண்மைதான் 

என்று தெரிந்திருக்கிறது அந்த கிளை மேலாளருக்கு.உடனே காவல் 

நிலையம் சென்று புகார் கொடுத்திருக்கிறார். 

 

அவர்களும் நீங்கள் பணத்தை கொடுக்க சென்றபோது அருகே 

நின்றிருந்த காவலர்களிடம் என்ன? ஏது? என்று விசாரித்திருக்க

வேண்டாமா?’ என்று சொல்லி விட்டு, காவலர்களுடன் இருந்த அந்த 

ஆள் யார் என்று மேற்கொண்டு தீர விசாரணை செய்தபோது அவர் 

சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டவர் 

என்பதையும் போகும் வழியில் தனது வழக்கமான வேலையை 

செய்துவிட்டார் என்பதையும் தெரிந்துகொண்டனர்.

 

உடனே அவரை பிடிக்க முயற்சி செய்தபோது விசாரணை நடக்க 

இருக்கும் நீதிமன்றத்திற்கு பேருந்தில் காவலர்கள் அழைத்து 

சென்றுவிட்டனர்  எனத் தெரிந்தது. உடனே தாங்களும் அவரை அழைத்து 

செல்லும் ஊருக்கு சென்று அந்த நபர் நீதி மன்றத்தில் பிணை பெற்று

வெளியே வரும்போது திரும்பவும் கைது செய்து விட்டனர்.

 

அவரிடம் நீதிமன்றம் செல்லும்போதும் ஏன் இவ்வாறு செய்தாய்?’ எனக் 

கேட்டதற்கு அங்கு வழக்கறிஞர் வைத்து வாதாட பணம் தேவைப்பட்டதால் 

அவ்வாறு செய்ததாக சொன்னாராம். திரும்ப அழைத்து வந்து உரிய 

ஆணை பெற்று சிறைச்சாலையில் அடைத்து விட்டனர்.

 

இந்த நிகழ்வு நடந்தபிறகு எனக்கு சென்னைக்கு மாற்றல் கிடைத்து 

வந்துவிட்டேன். பிறகு ஆறு திங்களுக்குப் பிறகு பதவி உயர்வு பெற்று 

கேரளாவில் உள்ள கோட்டயம் சென்றுவிட்டேன். அதனால் அந்த வழக்கு

என்னவாயிற்று என்பதை மேற்கொண்டு அறிய முடியவில்லை.

 

ஒருவேளை அவருக்குத் தண்டனை கிடைத்து சிறை வாசம் 

அனுபவித்துவிட்டு வெளியே கூட வந்திருக்கலாம்.

 

ஆனாலும் எனக்கு ஒரு ஐயம் இருந்துகொண்டே இருந்தது. இந்தியன் 

திரைப்படத்தில் இந்தியன் தாத்தா கடைசி உச்சகட்ட காட்சியில் தீ 

விபத்தில் மாண்டு போனதாக எல்லோரும் நினைக்கும்போது, 

வெளிநாட்டிலிருந்து அவர் காவல் துறை அலுவலரிடம் தான் உயிரோடு 

இருப்பதை தொலை பேசி மூலம் தெரிவிப்பதுபோல் இந்த நபரும் 

திரும்பவும் ஒருவேளை வேறொரு இடத்தில் தலை காட்டுவார் 

என நினைத்திருந்தேன். 

 

நான் நினைத்தது சரியென்றே தெரிந்தது பின்னர் நான் கேள்விப்பட்ட 

தகவல்கள். இந்த தடவையும் அவர் கூறி வைத்தது வங்கி 

அலுவலர்களைத்தான். அவரால்  ஏமாற்றப்பட்டவர் வேலூர் மாவட்டத்தில் 

உள்ள ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கியின் கிளையில் 

பணியாற்றிக்கொண்டிருந்த அலுவலர் ஒருவர். 

 

வங்கியில் பணியாற்றியவரை தன் வலையில் சிக்க வைத்து பணம் 

பெற்ற இந்த நிகழ்வை பார்க்கும்போது, இதை செய்தவரும் நமது பல்குரல் 

மன்னனாகத்தான் இருக்கவேண்டும். ஆனாலும் அது அவர் தானா என 

சரியாகத் தெரியவில்லை. 

  

ஒரு நாள் காலை அந்த வங்கியின் கிளைக்கு காலையில் தொலைபேசி  

அழைப்பு ஒன்று வந்தது. வங்கி ஊழியர் ஒருவர் தொலைபேசியை  

எடுத்ததும் அதில் பேசியவர்  மேலாளர் இருக்கிறாரா? எனக்  

கேட்டிருக்கிறார். அன்று காலையில் மேலாளர் ஏதோ வேலையாக  

வெளியே செல்வதால் சற்று நேரம் கழித்துத்தான் வருவதாக 

சொல்லியிருந்ததால் அந்த ஊழியர் அவர் இல்லையென்று சொன்னதும்,

தொலைபேசியில் பேசியவர் மேலாளருக்கு அடுத்த நிலையில் உள்ள 

அலுவலரிடம் பேச வேண்டும் என்றிருக்கிறார். 

 

உடனே அந்த அலுவரிடம் தொலைபேசியைக் கொடுத்திருக்கிறார்  

முதலில் பேசிய ஊழியர். அந்த அலுவலர் தொலைபேசியில் பேசிய 

நபரிடம் மேலாளர் வெளியே சென்றிருக்கிறார் என்ன வேண்டும் 

உங்களுக்கு?’என்றதும் தொலைபேசியில் பேசியவர்  நான் தான்    

வங்கியின் தலைவர் பேசுகிறேன். என்றிருக்கிறார்.  

 

தொடரும்







18 கருத்துகள்:

  1. ஆகா வட்டம் சுத்துதோ!
    என்று இவைகள் மாறும்!.....
    மாறாது!...மாறாது.!...
    நல்ல பதிவு.
    இனிய பாராட்டு..
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!

      நீக்கு
  2. காத்திருக்கிறேன், மீதியைப் படிக்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும்,தொடர்வதற்கும்,காத்திருப்பதற்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!

      நீக்கு
  3. எனக்கு ஒன்று புரியவில்லை ஐயா, அதாவது பொது மக்களின் பணவர்த்தனை நிடைபெறும் இடம் என்பதால்,வங்கியில் வேலை பார்ப்பவர்கள் மிகவும் சுதாரிப்போடு இருக்கவேண்டும் என்று சொல்லுவார்கள். அப்படி இருக்கும்போது, எவ்வாறு இப்படி சொல்லிவைத்த மாதிரி வங்கி அலுவலர்கள் ஏமாறுகிறார்கள்?

    வங்கி அலுவலர்களுக்காக, இந்த பதிவுகளையெல்லாம் சேர்த்து நீங்கள் கண்டிப்பாக ஒரு புத்தகம் எழுதவேண்டும் ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு சொக்கன் சுப்ரமணியன் அவர்களே! நீங்கள் சொல்வது சரிதான். வங்கியில் பணிபுரிவோர் விழிப்போடு இருந்தால்தான் தங்களையும் வங்கியையும் காப்பாற்றமுடியும். ஆனாலும் சிலர் தனது மேல் அலுவலர் பேசுகிறார் என்றதும் அளவு மீறிய ஆர்வம் காரணமாக சரியாக சிந்திக்காமல் செயல்படுவதால் ஏற்படுகின்ற விளைவுகள்தான் இவைகள்.

      நீங்கள் சொல்லியுள்ள ஆலோசனைக்கு நன்றி. செயல்படுத்த முயற்சிக்கிறேன். நேரம் இருப்பின் இதற்கு முன்பு நான் எழுதியுள்ள ‘வாடிக்கையாளர்களும் நானும்’ மற்றும் ‘ Boss கள் பலவிதம்’ என்ற தொடர் பதிவுகளை படிக்கவும்.

      நீக்கு
    2. கண்டிப்பாக படிக்கிறேன் ஐயா.

      நீக்கு
    3. நன்றி திரு சொக்கன் சுப்ரமணியன் அவர்களே!

      நீக்கு
  4. பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி தேவகோட்டை திரு KILLERGEE அவர்களே!

      நீக்கு
  5. மேலாளரின் குரல் தொலைபேசியில் அடையாளம் தெரியாததால் வரும் தொல்லைகளோ? தொடரக் காத்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திருG.M. பாலசுப்ரமணியம் அவர்களே! தொலைபேசியில் கூப்பிடுகிறவரின் குரல் அசல் குரல் போல் இருந்ததால் வந்த தொல்லைகள் தான் இவைகள்.சற்று கூர்ந்து கவனித்து கேட்டிருந்தால் ஏமாறாமல் இருந்திருக்கலாம்.

      நீக்கு
  6. அய்யா ஒரு சின்ன சந்தேகம்! அந்த ஆசாமி வங்கி அதிகாரிகளை மட்டும் குறிவத்து ஏமாற்றி இருப்பதைப் பார்க்கும்போது, அவன் ஒரு முன்னாள் ஊழியனாக இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசாமியாக இருப்பானோ என்ற சந்தேகம் வருகிறது.
    Tha.ma.1

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! ஏமாற்றிய நபர் வங்கியாளர்களை மட்டுமல்ல காப்பீட்டுத் துறையினரையும் மாவட்ட ஆட்சியரையும் ஏமாற்றி உள்ளார். அந்த வங்கியில் பணி புரிந்தவர் அல்லர்.

      த.ம வாக்களிப்பிற்கு நன்றி.

      நீக்கு
  7. பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு ‘தளிர்’ சுரேஷ் அவர்களே!

      நீக்கு
  8. வங்கியில் பணிபுரிபவர்கள், தினம் அடுத்தவர்களின் பணத்தை அதிகமாகக் கையாளுவதால் பணவிஷயத்தில் மற்றவர்களைவிட கவனமாக இருப்பார்கள் என்று நினைத்தேன். ஏமாறவேண்டும் என்றிருந்தால் எப்படியாவது ஏமாந்துவிடுவார்கள் என்பது புரிகிறது. எப்படியிருந்தாலும், ஏமாந்தவர்களும் ஓரளவுக்கு முட்டாள்கள்தான். பதவிக்கு தேவைக்கதிகமாக மதிப்பு கொடுத்து வேலை செய்யும் மனப்பாங்கும் இதற்குக் காரணம் என்று நினைக்கிறேன். தற்போதைய நாட்டு நடப்பையே பாருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! ‘வங்கியில் பணிபுரிபவர்கள், தினம் அடுத்தவர்களின் பணத்தை அதிகமாகக் கையாளுவதால் பணவிஷயத்தில் மற்றவர்களைவிட கவனமாக இருப்பார்கள் என்று நினைத்தேன்.’ என்று சொல்லியிருக்கிறீர்கள். பெரும்பாலோர் அப்படித்தான் இருக்கிறார்கள்.ஒரு சிலர் மேலதிகாரிகளின் நன் மதிப்பைப் பெறுவதாக நினைத்துக்கொண்டு அவர்களுக்கு உதவினால் தனக்கு நல்லது நடக்கும் என்கிற மனப்பாங்கு உடையவர்களாக இருப்பதால்தான் இது போன்ற நிகழ்வுகள் நடக்கின்றன.

      நீக்கு