புதன், 13 ஏப்ரல், 2016

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.24


1967 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்களில் மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தலில் வெற்றிபெற்றது போலவே பாராளுமன்றத் தேர்தலிலும் தி.மு.க அணிக்கு வெற்றி முகம் தான். திமுக 25 தொகுதிகளிலும், சுதந்திரா கட்சி 6 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 4 இடங்களிலும்,முஸ்லிம் லீக் 1 இடத்திலும் வெற்றி பெற்று 39 இடங்களில் 36 இடங்களை கைப்பற்றின. ஆண்ட காங்கிரசோ வெறும் 3 இடங்களோடு திருப்தி பட்டுக்கொள்ளவேண்டியதாயிற்று.




தென் சென்னை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட அறிஞர் அண்ணா அவர்கள் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் திரு K.குருமூர்த்தி அவர்களை விட 81978 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். ‘ஆனால் அவர் தமிழக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டதால் அவர் அந்த தொகுதியின் உறுப்பினர் பதவியை துறந்ததால் அந்த இடத்தில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டு அதில் திரு முரசொலி மாறன் அவர்கள் வெற்றி பெற்றார்.

1967 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 6 ஆம் நாள் அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக பதவியேற்றார். தமிழ் நாட்டில் காங்கிரஸ் தோற்று தி.மு.க வெற்றி பெற்றதன் காரணம் மொழிக்கொள்கையில் தாங்கள் கடைப்பிடித்த வீண்பிடிவாதமே என்பதை உணர்ந்த மய்ய அரசு அதே ஆண்டு நவம்பர் திங்களில் அலுவலக மொழிகள் சட்டத்தில் (Official Languages Act) திருத்தம் கொண்டு வர முயற்சிகள் மேற்கொண்டது.

1967 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 27 ஆம் நாள் காங்கிரஸ் அரசு பாராளுமன்றத்தில் அதற்கான ஒரு சட்ட முன்வரவை (Bill) அறிமுகப்படுத்தியது. பின்னர் டிசம்பர் திங்கள் 16 ஆம் நாளன்று அந்த சட்ட முன் வரைவை சட்டமாக நிறைவேற்ற வாக்கு கோரியபோது அதற்கு ஆதரவாக 205 உறுப்பினர்களும் எதிராக 41 உறுப்பினர்களும் வாக்களித்தனர். பெரும்பான்மையோர் வாக்களித்ததால் அந்த சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் அது குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு 1968 ஆம் ஆண்டு சனவரி திங்கள் 8 ஆம் நாள் அவர் ஒப்புதல் தந்ததும் திருத்தப்பட்ட அலுவலக மொழிகள் சட்டம் நடைமுறைக்கு வந்தது.

இந்த சட்ட திருத்தத்தின் மூலம் 1963 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட அலுவலக மொழிகள் சட்டத்தின் (Official Languages Act) பிரிவு 3 இல் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. அது என்ன என்று அறியுமுன் 1963 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டம் பற்றி அறிந்துகொள்வது முக்கியம்.

அந்த சட்டம் பற்றி இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம். 6 இல் விரிவாக எழுதியிருந்தேன். அதை திரும்பவும் கீழே தந்துள்ளேன்.

“1963 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தில் பிரிவு 3 இல் ஆங்கிலம் இந்தியுடன் தொடரலாம் (may continue) என்றுள்ளதை ஆங்கிலம் இந்தியுடன் தொடரும் (shall continue) என மாற்ற வேண்டும் என தி.மு.க பாராளுமன்ற உறுப்பினர்கள் வாதிட்டனர் காரணம் தொடரலாம் என இருந்தால் வருங்கால அரசு அதை தொடராமலுமிருக்கலாம் என பொருள் கொள்ள வாய்ப்பு உண்டு என்றும் மேலும் சிறுபான்மையினரின் கருத்தை ஒத்துக்கொள்ளாமல் போகவும் இந்தி பேசாதோரின் கொள்கைகளை அலட்சியம் செய்யவும் வாய்ப்புண்டு என வாதிட்டனர்.

ஆனால் திரு நேரு அவர்கள் ஏப்ரல் 22 ஆம் நாள் அந்த விவாதங்களுக்கு பதில் அளிக்கும்போது, ஆங்கில சொற்களான may மற்றும் shall இரண்டும் அந்த இடத்தில் ஒன்றே என்று வாதிட்டார். அதற்கு தி.மு.க உறுப்பினர்கள் இரண்டும் ஒன்று என்றால் ஏன் shall என குறிப்பிடவில்லை என குரல் எழுப்பினார்கள்.

மாநிலங்களவையில் அப்போது உறுப்பினராக இருந்த அறிஞர் அண்ணா அவர்களும் ஆங்கிலமே அலுவலக மொழியாக காலவரையின்றி தொடரவேண்டும் என்றும் அப்படி தொடர்ந்ததால் தான் இந்தி பேசுவோருக்கும் இந்தி பேசாதோருக்கும் இடையே சாதக பாதகங்கள் சமநிலைப்படும் என வாதிட்டு பேசினார்.

ஆனாலும் சட்ட முன்வரைவில் குறிப்பிட்டிருந்த அந்த சொல் (may) திருத்தப்படாமல் 1963 ஆம் ஆண்டு ஏப்ரல் 27 ஆம் நாள் அலுவலக மொழிகள் சட்டம் (Official Languages Act) இயற்றப்பட்டது.’

1968 ஆம் ஆண்டு அலுவல் மொழிகள் சட்டத்தின் (Official Languages Act) பிரிவு 3 இல் கொண்டு வரப்பட்ட அந்த திருத்தத்தின்படி அனைத்து அலுவலக நடவடிக்கைகளிலும் காலவரையற்ற மெய்நிகர் இரு மொழிக்கொள்கையை (Virtual indefinite policy of bilingualism) அதாவது ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளைக் கடைப் பிடிக்க உறுதி தரப்பட்டது.

இதற்கிடையே 1967 ஆம் ஆண்டு நவம்பர் திங்களில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட திருத்தப்பட்ட சட்டம் மும்மொழித்திட்டம் பற்றிய தமிழகத்தின் கவலைகளைப் போக்காததால் இந்தி திணிப்பு எதிர்ப்பாளர்கள் அதிருப்தியுற்றார்கள். ஆனால் தாங்களே ஆட்சிக்கு கொண்டு வந்த தி.மு.க ஆட்சியில் இருந்ததால் திரும்பவும் போராட்டத்தை துவக்கத் தயங்கினார்கள்.

தமிழக இந்தி எதிர்ப்பு மாணவர்கள் மன்றத்தில் இருந்த மிதவாத கொள்கை கொண்டோர் அண்ணாவின் அரசு அந்த ஆண்டுதான் பதவியேற்றிருப்பதால் அவரது அரசு ஆவன செய்ய சில மாதங்கள் அவகாசம் தரவேண்டும் என்ற கருத்துடையவர்களாக இருந்தனர். ஆனால் அதில் இருந்த தீவிர கொள்கை உள்ளவர்களோ உடனே போராட்டத்தை தொடங்கவேண்டும் என்றனர். அதனால் இயக்கம் அந்த பல பிரிவுகளாக பிளவுபட்டது.

தீவிரவாத பிரிவைச் சேர்ந்தோர் போராட்டத்தை மீண்டும் துவக்கினார்கள். அவர்கள் தங்கள் கோரிக்கைகளான 1. மும்மொழித் திட்டத்தைக் கைவிட வேண்டும் 2. பள்ளிகளில் இந்தி கற்பிப்பதை நீக்க வேண்டும் 3.தேசிய மாணவர் படையில் (NCC) இந்தி ஆணைகள் இடுவது நிறுத்தப்பட வேண்டும் 4.இந்தித் திரைப்படங்கள், பாடல்கள் தடை செய்யப்பட வேண்டும்;5.தென்னிந்தியாவில் இந்தியைப் பரப்ப நிறுவப்பட்ட நிறுவனமான தட்சிண பாரத் இந்தி பிரசார சபை மூடப்பட வேண்டும் ஆகியவைகைகளுடன் போராட்டத்தில் மும்முரமாக இறங்கினார்கள்.

1967 ஆம் ஆண்டு டிசம்பர் 19 நாளன்று துவங்கிய போராட்டம் டிசம்பர் 21 ஆம் நாளன்று வன்முறை போராட்டமாக மாறியது.


தொடரும்



26 கருத்துகள்:

  1. நண்பரே அண்ணா முதல்வராக தேர்வு செய்யப்பட்டதால் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமா ? உறுப்பினர் பதவி வேண்டாமா ?
    தொடர்ந்து வருகிறேன் சரித்திரம் அறிய..
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும், தொடர்வதற்கு நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே! 1967 ஆம் ஆண்டு நடந்த சட்ட மன்ற தேர்தலில் அறிஞர் அண்ணா போட்டியிடவில்லை. தென் சென்னை பாராளுமன்ற தொகுதியில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.சட்டமன்ற தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்று அண்ணா முதல்வராக பதவியேற்றதால், வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்தார். அப்போது தமிழகத்தில் சட்ட மேலவை (Legislative council) இருந்தது. அமைச்சராக பதவியேற்ற ஒருவர் ஆறு திங்களுக்குள் சட்டமன்றத்திற்கோ அல்லது மேலவைக்கோ உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்ற சட்ட விதிப்படி அண்ணா அவர்கள் மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

      நீக்கு
  2. //1967 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்களில் மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தலில் வெற்றிபெற்றது போலவே பாராளுமன்றத் தேர்தலிலும் தி.மு.க அணிக்கு வெற்றி முகம் தான்.//

    மிகச்சிறப்பானதோர் வெற்றியே. நம் தமிழகப் பிரச்சனைகளைப்பற்றி பாராளுமன்றத்தின் கவனத்திற்கு எடுத்துச்சென்று புரிய வைக்கக் கிடைத்த மாபெரும் வாய்ப்பாகும் இது.

    >>>>>

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! நீங்கள் சொன்னது சரியே!

      நீக்கு
  3. //‘ஆனால் அவர் தமிழக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டதால் அவர் அந்த தொகுதியின் உறுப்பினர் பதவியை துறந்ததால்//

    மாபெரும் அறிவாளியும் தமிழிலும் ஆங்கிலத்திலும் அழகாகவும் சரளமாகவும் பேசக்கூடிய அறிஞர் அண்ணா அவர்கள் அதன்பின் பாராளுமன்றத்தில் பேச முடியாமல் போனதில் ஒரு பக்கம் நமக்கு வருத்தமே. இருப்பினும் அவர்கள் தமிழக முதல்வரானதில் நம் அனைவருக்குமே மிகுந்த மகிழ்ச்சியே. :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. அண்ணா அவர்கள் முதன் முதல் 1962 இல் பாராளுமன்ற மக்களவை உறுபினராக தேர்ந்தெடுக்கப்பட்டதும் அவர் பேசிய கன்னிப் பேச்சை (Maiden speech) அப்போதைய பிரதமர் பண்டிட் ஜவகர்லால் நேரு அவர்கள் இரசித்துக் கேட்டதாக சொல்வார்கள். அவரது ஆங்கிலம் மற்றும் தமிழ் பேச்சுக்கள் கேட்பவர்களை அவரிடம் ஈர்க்கவைத்தது உண்மையே. இந்தி திணிப்பு பற்றி அவர் மாநிலங்கள் அவையில் “ஆங்கிலமே அலுவலக மொழியாக காலவரையின்றி தொடரவேண்டும் என்றும் அப்படி தொடர்ந்தால் தான் இந்தி பேசுவோருக்கும் இந்தி பேசாதோருக்கும் இடையே சாதக பாதகங்கள் சமநிலைப்படும் என வாதிட்டு பேசியது நினைவு கூறத்தக்கது.

      நீக்கு
  4. //தொடரலாம் என இருந்தால் வருங்கால அரசு அதை தொடராமலுமிருக்கலாம் என பொருள் கொள்ள வாய்ப்பு உண்டு என்றும் மேலும் சிறுபான்மையினரின் கருத்தை ஒத்துக்கொள்ளாமல் போகவும் இந்தி பேசாதோரின் கொள்கைகளை அலட்சியம் செய்யவும் வாய்ப்புண்டு என வாதிட்டனர். //

    இது தொலை நோக்குடன் கூடிய மிகச்சரியான வாதமே.

    >>>>>

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த வாதம் சரியென்பதை பின்னர் நடந்த நிகழ்வுகள் மெய்ப்பித்துவிட்டன.

      நீக்கு
  5. //ஆனால் திரு நேரு அவர்கள் ஏப்ரல் 22 ஆம் நாள் அந்த விவாதங்களுக்கு பதில் அளிக்கும்போது, ஆங்கில சொற்களான may மற்றும் shall இரண்டும் அந்த இடத்தில் ஒன்றே என்று வாதிட்டார்.

    அதற்கு தி.மு.க இருப்பினர்கள் இரண்டும் ஒன்று என்றால் ஏன் shall என குறிப்பிடவில்லை என குரல் எழுப்பினார்கள். //

    நியாயமானதோர் உரிமைக்குரல்தான் எழுப்பியுள்ளனர். அவர்களுக்கு இப்போதும் நம் பாராட்டுகள்.

    >>>>>

    பதிலளிநீக்கு
    பதில்கள்


    1. உங்கள் கருத்தோடு உடன்படுகின்றேன். அப்போது உரிமைக்குரல் எழுப்பிய உறுப்பினர்களுக்கு நானும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

      நீக்கு
  6. //1967 ஆம் ஆண்டு டிசம்பர் 19 நாளன்று துவங்கிய போராட்டம் டிசம்பர் 21 ஆம் நாளன்று வன்முறை போராட்டமாக மாறியது. //

    சரித்திரப் பகிர்வு மிகவும் சுவாரஸ்யமாகவே செல்கிறது. பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள். தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர் கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!

      நீக்கு
  7. இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.24

    தொடர் பதிவு அருமை நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு அஜய் சுனில்கர் ஜோசப் அவர்களே!

      நீக்கு
  8. எந்த ஒரு போராட்டத்திலும் ஏகோபித்த கருத்துக்கள் இருப்பதில்லை சிலர் மித வாதிகள் சிலர் தீவிர வாதிகள் அது என்னவோ சில போராட்டங்கள் வன் முறையில் முடிகின்றன. நமக்கு வன்முறைதான் பலனளிக்கும் என்னும் எண்ணம் வேரூன்றி விட்டது

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் வன்முறையில் போராட்டங்கள் முடிவதற்கு போராட்டக்காரர்கள் மட்டும் காரணமல்ல என்பது எனது கருத்து.

      நீக்கு
  9. ஆரம்ப கலத்தில் தி.மு.க தமிழர்களீன் நெஞ்சில் பால் வார்த்தது என்னெவோ உண்மைதான்.காலப்போக்கில் அது விஷ்மானதுதான் கொடுமை.கொள்ளையடிப்பதில் புதுப்புது வழிகளை அவர்கள் அறிமுகப்படுத்த பாடம் கற்றூக்கொண்ட அ.தி.மு.க கையூட்டுக்கலாச்சாரத்தை நிரந்தரமாக்கியது.இதுதான் இன்றைய நிலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கர்னல் கணேசன் அவர்களே! நீங்கள் சொல்வது சரியே. ஆரம்பத்தில் இருந்த கொள்கைப்பிடிப்பு நீர்த்துப்போய் அரசியலுக்கு வருவது தங்களின் ஆதாரத்தை பெருக்கிக்கொள்வதற்கே என்ற நிலை ஏற்பட்டிருப்பது துரதிர்ஷ்டமே!

      நீக்கு
  10. அய்யா...

    சுதந்திர இந்தியாவின் சமகால வரலாறு சரியாக தொகுக்கப்படவில்லை. முக்கியமாய் தமிழ் நாட்டின் அரசியல் வரலாறு ! இந்த குறையை போக்கும் ஆவணமாய் திகழ்கிறது உங்களின் இந்த தொடர் பதிவு.

    இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் புடம் போடப்பட்டு, மிசா காலத்தில் பக்குவப்பட்ட தி மு க என்ற மக்கள் இயக்கம் கால போக்கில் ஆட்சி சுகத்துக்கும் அதிகார சலுகைகளுக்கும் பழகி நோக்கம் மறந்ததின் காரணத்தை ஆராய்ந்தால் இன்றைய ஒட்டுமொத்த அரசியல் சீரழிவுக்கான காரணங்களின் மூலம் கிடைக்கலாம் !

    நன்றி
    சாமானியன்

    எனது புதிய பதிவு " முடிவில்லாத பாதைகளும் முற்றுப்பெறாத பயணங்களும் - 1 "
    http://saamaaniyan.blogspot.fr/2016/04/1.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி


    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு சாமானியன் சாம் அவர்களே! கர்னல் கணேசன் அவர்களின் பின்னூட்டதிற்கு சொன்ன கருத்தையே இங்கும் வலியுறுத்த விரும்புகிறேன். நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரி.

      தங்களின் வலைப்பதிவிற்கு வந்து படித்து நிச்சயம் பின்னூட்டம் இடுவேன்.

      நீக்கு
  11. கிடைத்த அருமையான வாய்ப்பினை, தமிழ் நாட்டுக்கு உபயோகப்படுத்தாமல் அரசியல்வாதிகள் சொந்த நலனுக்கு உபயோகப்படுத்திவிட்டார்கள். அது மட்டுமல்லாமல், வரும்தலைமுறையினருக்கு அதில் தவறில்லை என்ற எண்ணத்தையும் வளர்த்துவிட்டார்கள். நிகழ்ந்தவைகளை தெரிந்துகொண்டால், எவ்வளவு பேர் ஏமாற்றப்பட்டுவிட்டார்கள் என்று வருத்தமே மிஞ்சுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! நீங்கள் சொல்வதுபோல் கிடைத்த வாய்ப்பு முழுவதையும் தமிழக நலனுக்கு உபயோகப்படுத்தியிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். அதை நினைத்து நினைத்து வருந்தவேண்டியதுதான் போல் இருக்கிறது.

      நீக்கு
  12. தொடர்கிறேன் நண்பரே!மலரும் நினைவுகளை தூண்டுவதாகும் தங்கள்பதிவு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும், தொடர்வதற்கும் நன்றி ஐயா!

      நீக்கு
  13. இன்றுதான் இந்த பதிவைப் படித்து முடித்தேன். தொடர்கின்றேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!

      நீக்கு