வெள்ளி, 22 நவம்பர், 2019

சாமானியனும் சர்க்கரை நோயும்






சர்க்கரை நோய் என எல்லோராலும் அழைக்கப்படுகின்ற நீரிழிவு நோய்  (Diabetes) பற்றி நம்மில் பலருக்கு, ஏன் அனேகருக்கு சரியான புரிதல் இல்லை என்றே சொல்லலாம்.

‘எத்தைத் தின்றால் பித்தம் தீரும்?’ என்ற பழமொழிக்கேற்ப இந்த குறைபாடு உள்ளவர்கள் அதிலிருந்து விடுபட வெண்டைக்காயை சாப்பிடலாமா அல்லது வெந்தயத்தை சாப்பிடலாமா அல்லது நாவற்பழ கோட்டையை பொடி செய்து சாப்பிடலாமா என்று முயற்சி செய்துகொண்டு இருக்கையில், குறிப்பிட்ட நாட்களுக்குள் இந்த குறைபாட்டை அறவே நீக்கமுடியும் என்ற உறுதியை புலனம் (WhatsApp) மூலம் தந்து, இலவச ஆலோசனை வழங்கி  மக்களை குழப்புவதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. 

பொதுவாக சர்க்கரை நோயை பணக்காரருக்கான நோய் என்று சொல்லிக்கொண்டிருந்த வேளையில், அதை பொய்யாக்கி இந்த நோய் பாரபட்சமின்றி பணம் படைத்தோரிலிருந்து பாமரன் வரை தாக்கி, பலரின் குடும்ப பொருளாதாரத்தையே சீரழித்து கொண்டு இருக்கிறது என்பதை நாம் அறிவோம். 

இந்த நோய் பற்றி அனைவருக்கும் புரியும் வகையில் விளக்கி, அதிலிருந்து எவ்வாறு குணமடைவது என்று சொல்வார் உண்டோ என்று எண்ணிக்கொண்டிருந்த வேளையில் மருத்துவர் கிருஷ்ணன் சுவாமிநாதன் அவர்களின் ‘சாமானியனும் சர்க்கரை நோயும்’ என்ற நூலை வாசிக்க நேர்ந்தது. 

சில நூல்கலைப் பார்த்ததும்  படிக்கும் ஆர்வம் ஏற்படுவதில்லை. அதுவும் குறிப்பாக அறிவியல் மற்றும் மருத்துவ நூல்களில்  பெரும்பாலும் தொழில்நுட்பச் சொற்றொடர்களை சேர்த்து எழுதியிருப்பதால், ஆங்கிலம் தெரியாதோர் மற்றும் ஆங்கிலம் தெரிந்திருந்தாலும் அந்த தொழில்நுட்பச் சொற்றொடர்களை புரிந்துகொள்ள முடியாததால் யாரும் அறிவியல் நூல்களை படிப்பதில்லை. 

ஆனாலும் ‘சாமானியனும் சர்க்கரை நோயும்’  என்ற இந்த நூலின் தலைப்பு தான்  என்னை ஈர்த்து வாசிக்கத் தூண்டியது.

இந்த நூலின் ஆசிரியர் Kovai Medical Centre & Hospital (KMCH) இன்  சர்க்கரை மற்றும் நாளமில்லா சுரப்பி மருத்துவர் டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன் MDFRCP அவர்கள்.

ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகள் இங்கிலாந்திலும், ஸ்காட்லாந்திலும் சர்க்கரை நோய் பற்றி கற்றறிந்து ஆங்கிருந்த வல்லுனர்களிடம் பயின்று, அதற்கான பல்வேறு சிகிச்சை முறைகளை ஆராய்ந்த பிறகு இந்தியா திரும்பி வந்து  தனது சேவையை ஆற்றிக்கொண்டு இருக்கும் இவர், தான் கற்றதையும் பெற்றதையும் தன்னோடு வைத்துக்கொள்ளாமல் இந்த நூலை எழுதியதன் மூலம் சர்க்கரை நோயாளிகளுக்கும் ஏன் மருத்துவம் படித்துவிட்டு புதிதாய் மருத்துவ சேவை தொடங்கும் இளம் டாக்டர்களுக்கும் உதவி புரிந்திருக்கிறார் என்றே சொல்லலாம். 

இந்த நோய் பற்றிய விவரங்களை 34 பகுதிகளாகப் பிரித்து மிகவும் எளிமையாக தந்துள்ளார். இந்த பகுதிகளில் சர்க்கரை நோயின் வரலாறு பற்றியும், அதன் வகைகள் பற்றியும், அது வந்தால் ஏற்படும் மன உளைச்சல் பண விரயம் பற்றியும், குழந்தைகளுக்கும் சர்க்கரை நோய் வரும் என்பது பற்றியும், இன்சுலின் பயன்படுத்துவது பற்றியும், இந்த நோய் வந்தால் எந்தெந்த அவயவங்கள் பாதிக்கப்படும் என்பது பற்றியும் இந்த நோயின் தாக்கத்தை  எப்படி நம் கட்டுக்குள் வைத்திருக்கலாம் என்பது பற்றியும்  மிக விரிவாக சொல்லியிருக்கிறார். 

ஒவ்வொரு பகுதியின் இறுதியிலும் அந்த பகுதியின் மிக முக்கியமான கருத்தை முத்தாய்ப்பாக கட்டமிட்டு சொல்லி படித்ததை நினைவூட்டியிருப்பது பாராட்டவேண்டிய ஒன்று.  ஆங்காங்கே வள்ளுவரையும் பாரதியையும் மேற்கோள் காட்டி இடையிடையே நகைச்சுவையும் இணைத்து நூலைப் படிக்கும் சுவாரஸ்யம் குறையாமல் சொல்லவேண்டிய மருத்துவ அறிவுரைகளை  சொல்லியிருப்பதைப் பார்க்கும்போது  இவருக்குள்ளும் ஒரு எழுத்தாளர் ஒளிந்துகொண்டு இருக்கிறார் என்றே சொல்லத் தோன்றுகிறது.  

பல இடங்களில் உண்மை நிகழ்வுகளை எடுத்துக்காட்டி இந்த நோய் வந்தால் எப்படி அதை வீழ்த்தலாம் என சர்க்கரை நோயாளிகளுக்கு ஆறுதலும் நம்பிக்கையும் தரும் வகையில்  சொல்லியிருப்பதையும்  இங்கு  குறிப்பிட்டே ஆகவேண்டும். 

‘விரலளவு எண்ணெய், கையளவு சோறு, இரண்டு கையளவுக்கும் அதிகமாகக் காய்கறிகள், இருபது நிமிட நேரம் வேகமாக நடத்தல், மலையளவு நல்ல எண்ணங்கள் ஆகிய கூட்டணியுடன் இருந்தால் நம்மை எந்த நோயும் அண்டாது என்ற இரகசியத்தை உரக்க சொல்லி உற்சாக மூட்டியிருக்கிறார் நூலாசிரியர்.   

இந்த நூலைப் படிக்கும்போது டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன் அவர்களே நேரில் நம்முடன் உரையாடுவது போன்ற தோற்றம் ஏற்படுகிறது என்பது உண்மை.  சர்க்கரை நோய் நம் உடலின் முக்கியமான உறுப்புகளைத் தாக்கும் மோசமான, சத்தம் போடாத கொலைகாரன் என்று அச்சமூட்டுவதுபோல்  சொன்னாலும், சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தால் சேதாரங்களை பெருமளவில் தடுத்துவிடலாம் என்று சொல்லியிருப்பது ஆறுதல் தரும் தகவல்.

நூலின் இறுதியில் சர்க்கரை நோயை முறியடிக்க எந்த மாதிரியான வாக்குறுதிகளைக் கடைப்பிடித்து உடல் நலத்துடன் நீண்ட காலம் வாழலாம் என சொல்லியிருப்பது நிச்சயம் சர்க்கரை நோயாளிகளுக்கு  நேர்மறை எண்ணங்களை உண்டாகும் என்பதில் ஐயமில்லை . 

இந்த நூல் மூலம் ‘சர்க்கரை நோயை வருமுன் காப்போம். வந்தால் வீழ்த்துவோம்.; என்பது தான் சொல்ல முயற்சிப்பது என்கிறார் நூலாசிரியரான டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன்.

முதல் வகை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பணமில்லாத காரணத்தால் சிகிச்சை மறுக்கப்படக்கூடாது என்பதற்காக ‘இதயங்கள்’ அறநிலை என்ற இயக்கத்தை  தோற்றுவித்து, ஆதரவற்ற நோயாளிக் குழந்தைகளை வாழவைத்துக் கொண்டு இருக்கிறார்.  அவரது தன்னலமற்ற  இந்த சேவையை பாராட்டியே ஆகவேண்டும். இந்த நூல் விற்பனை மூலம் வரும் இலாபம் ‘இதயங்கள்’ அறநிலை இயக்கத்திற்கு செல்கிறது என்பது மெச்சத்தகுந்த தகவல். 

இந்த நூல் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கவேண்டிய ஒன்று. இதை வெளியிட்டிருப்பவர்கள் :

உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம் 
டாக்டர் என்.ஜி,பி. கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) வளாகம்
காளப்பட்டி சாலை, கோயம்புத்தூர் 641048 
நூலின் விலை ரூபாய் 100. 












24 கருத்துகள்:

  1. சிறந்த அறிமுகம்
    பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு யாழ்பாவாணன் அவர்களே!

      நீக்கு
  2. உங்களுடைய பதிவை படித்த பிறகு எனக்கும் இந்த நூலை வாங்க வேண்டும் என்ற ஆவல் உள்ளது. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், எனது பதிவைப் பார்த்து இந்த நூலை வாங்க விரும்புவதற்கும் நன்றி. திரு டிபிஆர் ஜோசப் அவர்களே! உங்களது முகவரியை கீழே குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கு குறுந்தகவல் மூலம் அனுப்பி, நூலை அனுப்புமாறு கேட்டுக்கொண்டால் VPP மூலம் இந்த நூல் தங்களின் கைக்கு வந்து சேரும். 9443291655

      நீக்கு
  3. பதில்கள்

    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திருமதி கௌசி அவர்களே!

      நீக்கு
  4. எனக்கும் தேவைப்படும் நூல்...

    நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு, நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! உங்களது முகவரியை கீழே குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கு குறுந்தகவல் மூலம் அனுப்பி, நூலை அனுப்புமாறு கேட்டுக்கொண்டால் VPP மூலம் இந்த நூல் தங்களின் கைக்கு வந்து சேரும். 9443291655

      நீக்கு
  5. தங்களது விமர்சனம் நூலை வாங்கும் ஆவலைத் தூண்டுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி தேவக்கோட்டை திரு கில்லர்ஜி அவர்களே! நூல் வேண்டுமெனில் உங்களது முகவரியை கீழே குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கு குறுந்தகவல் மூலம் அனுப்பி, நூலை அனுப்புமாறு கேட்டுக்கொண்டால் VPP மூலம் இந்த நூல் தங்களின் கைக்கு வந்து சேரும். 9443291655

      நீக்கு
  6. பதில்கள்
    1. வருகைக்கு நன்றி திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களே! அவசியம் வாங்கி படித்துப் பாருங்கள். மிக அருமையான பயனுள்ள நூல்.

      நீக்கு
  7. இன்று பெரும்பாலும் அனைவருக்கும் மிகவும் பயனளிக்கும் நூல் அறிமுகம். பாராட்டுகள். நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு வை கோபாலகிருஷ்ணன் அவர்களே! இந்த நூல் அனைவருக்கும் பயனளிக்கும் நூல் என்பது உண்மையே.

      நீக்கு
  8. அனைவருக்கும் வாங்கி, படித்து, பாதுகாக்க வேண்டிய நூலைப் பற்றிய சிறப்பான மதிப்புரைக்கு நன்றி.
    தமிழ் விக்கிபீடியா டிசம்பர் 2019இல் நடத்துகின்ற ஆசிய மாதம் போட்டியில் கலந்துகொண்டு கட்டுரைகளை எழுதி வருகிறேன். இந்த மாதம் 30ஆம் நாள் வரை இப்போட்டி நடைபெறுகிறது. தமிழில் இல்லாத செய்திகளை/பதிவுகளை ஆங்கில விக்கிபீடியாவிலிருந்து தமிழுக்குக் கொண்டு வரும் என்னுடைய சிறிய முயற்சி. ஒரு நாளைக்குக் குறைந்தது ஒரு கட்டுரையாவது எழுத/மொழிபெயர்க்க திட்டமிட்டு எழுதி வருகிறேன். ஆதலால் கருத்துரை இடுவதில் தாமதமாகிறது. பொறுத்துக்கொள்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே! தமிழ் விக்கிபீடியா டிசம்பர் 2019 இல் நடத்துகின்ற ஆசிய மாதம் போட்டியில் கலந்துகொண்டு கட்டுரைகளை எழுதி வருவது அறிந்து மிக்க மகிழ்ச்சி! தமிழில் இல்லாத செய்திகளை/பதிவுகளை ஆங்கில விக்கிபீடியாவிலிருந்து தமிழுக்குக் கொண்டு வரும் தங்களின் அரிய முயற்சிக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும். போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்!

      நீக்கு
  9. மனம் கவர்ந்த நூல் அறிமுகம் சார். ஒரு மருத்துவ நூலின் அறிமுகம் தான். இருந்தாலும் எளிமையான நடையில் நூலின் சிறப்பைச் சொல்லி நீங்கள் விவரித்திருந்த விதம் அந்த நூலை வாங்கிப் பயன் பெற வேண்டியவர்களுக்கான உங்களான சேவை போல அமைந்திருந்தது தான் சிறப்பு.

    இந்த நோயால் பாதிக்கப்படாதோரும் நோய் பற்றிய அறிவு பெற வாங்கி வாசித்தறிய வேண்டும். சக்கரை நோய் பாதிக்காத ஒரு சமுதாயத்தை ஏற்படுத்த நாம் ஒன்று கூடி ஏதாவது சேவை செய்தாக வேண்டும் என்ற உந்தித்தள்ளும் உணர்வை நூலை அறிமுகப்படுத்திய உங்கள் எழுத்துத் தொண்டு ஏற்படுத்தியது என்பதைச் சொல்லித் தான் ஆக வேண்டும்.

    நூலின் பத்து பிரதிகளாவது வாங்கி இந்த நோயால் பாதிக்கப்பட்டோர் என்று தெரிந்தால் அவர்களுக்கு வழங்கலாமோ என்ற யோசனை மனதில் ஓடுகிறது.

    நூலை வி.பி.பி.யில் அனுப்புவார்களா என்று தெரியவில்லை. நூலை எப்படீப் பெறுவது என்ற கூடுதல் விவரம் தெரிந்தால் அது இன்னும் உபயோகமாக இருக்கும். தொலைபேசி எண் கிடைத்தாலும் தொடர்பு கொள்ள ஏதுவாக இருக்கும்.

    அல்லது சென்னாயில் எங்கு கிடைத்தாலும் வேண்டிய பிரதிகளை நேரில் வாங்கிக் கொள்வேன். மிகவும் பயனுள்ள ஒரு மருத்துவ நூலை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி, ஐயா.

    பி.கு: உங்களின் இந்த நூலின் விமரிசனத்தை வேறு தளங்களில் நான் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றால் அதற்கான அனுமதி வேண்டுகிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், மனம் திறந்த பாராட்டுக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே! உங்களது முகவரியை கீழே குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கு குறுந்தகவல் மூலம் அனுப்பி, நூலை அனுப்புமாறு கேட்டுக்கொண்டால் VPP மூலம் இந்த நூல் தங்களின் கைக்கு வந்து சேரும். 9443291655. எனது இந்த பதிவை வேறு தளங்களில் தாங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதைப்பார்த்து படித்து பலர் பயன்பெறுவார்கள் என்றால் மிக்க மகிழ்ச்சியே.

      நீக்கு
    2. இங்கு வந்து பின்னூட்டம் போட்டிருப்போருக்கும் உதவியாக கைப்பேசி எண்ணையும் கொடுத்திருப்பது பெரியதொரு உதவியாக இருக்கும். புத்தகம் வாங்கி பயன் அடைவோர் அடையட்டும்.

      நீக்கு
    3. மீள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே!

      நீக்கு
  10. இந்த நோய் குறித்த அறிவு பற்றாக் குறையால் அந்தநோயை அறியும் சோதனயில் மூத்திரமும் ஒன்று அதை மாற்றி வைத்து அறியாமை காரணமாக உயிர் விட்டவர் என் தந்தை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்பிரமணியம் அவர்களே! இந்த நோய் பற்றிய சரியான புரிதல் இல்லாத காரணத்தால் தங்களின் தந்தையாரின் உயிர் பிரிய நேரிட்டது என அறிந்து மிக வருத்தப்பாட்டேன். இந்த நூல் தற்போது எல்லோருக்கும் இந்த நோய் பற்றிய ஐயங்களை தீர்த்துவிடும் என்பது எனது கருத்து.

      நீக்கு
  11. இந்த பதிவை படித்துவிட்டு, செய்தி பரிமாற்ற செயலியில் (புலனத்தில்) நண்பர் திரு நமச்சிவாயம் அவர்கள் அனுப்பிய கருத்து.

    சர்க்கரை நோய் குறித்த நூலுக்கு தெளிவான அறிமுகம் தந்தமைக்கு நன்றி ஐயா.

    இந்த நோய் குறித்த அஞ்ஞானம் நீக்க இந்த நூல் உதவும் என்பதில் ஐயமில்லை.

    நம் சுற்றத்தார் மற்றும் நண்பர்களிடமும் இந்த நூல் குறித்து பகிர்ந்துகொள்வது நம் சமுதாய கடமையாக உணர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு நமச்சிவாயம் அவர்களே!

      நீக்கு