ஞாயிறு, 5 ஜூலை, 2020

எது சிறந்தது ? 2





பிறர் பரிமாற, அமர்ந்து உண்ணும் முறை பற்றி பார்த்துவிட்டு பின்னர்  நாமே எடுத்து தட்டில் போட்டு சாப்பிடும் எடுத்தூண் முறை பற்றி பார்ப்போம். 



அமர்ந்து உண்ணும் முறை:

முன்பெல்லாம் தரையில் பந்தி பாய் ( உண்ணும்போது உட்கார விரிக்கும் நீண்டபாய் ) விரித்தோ அல்லது பலகையிலோ (இதை மணப்பலகை என்றும் சொல்வதுண்டு) கால்களை மடக்கி அமர்ந்து உண்ணும் வழக்கத்தைக் கொண்டிருந்த நாம், இப்போது வீட்டில் நாற்காலியில் அமர்ந்து, சாப்பிடும் மேசையில் தட்டு அல்லது இலையில் சாப்பிடும் வழக்கத்திற்கு மாறிவிட்டோம்.




                                                                பந்தி பாய்



                                                         
                                                              மணப்பலகை

  
அப்போதெல்லாம் திருமணம் போன்ற நிகழ்ச்சிகள், இப்போது போல் திருமண மண்டபங்கள் இல்லாததால் வீட்டில் தான் நடக்கும், அப்போது வரும் விருந்தினர்களுக்கு, வீட்டில் உள்ள பட்டாசாலை என்னும் முதன்மைக் கூடத்தில், தரையில் பந்திபாய் விரித்து வாழை இலையில் விருந்து பரிமாறப்படும். 

வீடு சிறியதாக இருந்து, வரும் விருந்தினர்களுக்கு விருந்து பரிமாற இடம் போதாது என்றால், வீட்டிற்கு பின்பக்கத்திலோ அல்லது பக்கத்திலோ உள்ள காலி மனையில் கொட்டார பந்தல் போட்டு பக்கத்தில் தென்னங்கீற்றால் தட்டிகள் கட்டி மறைத்து  தரையை சாணத்தால் மெழுகி சாப்பிடும் இடத்தை ஏற்பாடு செய்துவிடுவார்கள். 

அங்கே வயது வேறுபாடு இல்லாமல் அனைவரும் தரையில் அமர்ந்தே சாப்பிடும் வழக்கம் அப்போது இருந்தது.

தரையில் அமர்ந்து கால்களை குறுக்காக மடக்கி, சம்மணம் போட்டு உட்கார்ந்து சாப்பிடுவது உடல் நலத்திற்கு எந்த வகையில் நல்லது என்பதை பார்ப்போம். 

யோகாசனம் என்னும் ஒரு குறிப்பிட்ட நிலையில் உடலை இணக்கமாக இருக்க வைக்கும் பயிற்சியை செய்பவர்கள் முதலில் செய்வது தலைமை ஆசனமாகிய பத்மாசனம் தான்.  

இந்த ஆசனத்தில் வலது பாதம் இடது தொடையின்மேலும், இடதுபாதம் வலது தொடையின்மேலும் பொருந்தும்படியாக அமைத்து அமரும்போது பாதங்கள் மலர்ந்து தாமரை மலர்போலத் தோற்றம் தருவதால், இதனைப் பத்மாசனம், கமலாசனம், தாமரை ஆசனம் என அழைக்கிறார்கள். 

சாப்பிட உட்காரும் நிலையும் ஒரு ஆசனம் போன்றது தான். ஆனால் அது பத்மாசனம் அல்ல. கால்களை குறுக்காக மடக்கி சம்மணம் போட்டு தரையில் சாப்பிட உட்காரும் போது, பாதங்கள் மேல்நோக்கி இல்லாமல் இருப்பதால் இதை ‘சுகாசனா' அல்லது ‘பாதி பத்மாசனா' என சொல்வதுண்டு.  

இந்த முறையில் சாப்பிட அமரும்போதே செரிமானத்திற்கு ஆயத்தமாக இருக்குமாறு மூளைக்கு தகவல் சென்றுவிடுகிறதாம். . சாப்பிடும் தட்டு அல்லது இலை தரையிலிருப்பதால் நாம் இயல்பாகவே குனிந்து, நிமிர்ந்து தான் சாப்பிடமுடியும். அப்போது வயிற்றுத் தசைகள் சுருங்கி விரிவதால் அமிலம் சுரப்பதால் அது  நாம் சாப்பிடும் உணவை செரிக்க வைக்கிறதாம். 

பாதி பத்மாசன நிலையில் இருக்கும் போது வயிற்றைச் சுற்றியுள்ள தசைகள் இறுக்கமடைவதால், அந்த இடத்தில் ஏற்படும் வலிகள் குறைகின்றன. மேலும் வயிறு அழுத்தப்படாமல் இருப்பதால் செரிமானத் திறனும் அதிகரிக்கிறது என சொல்லப்படுகிறது. 

தரையில் அமர்ந்து சாப்பிடுவதால், நாம் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதையும் மூளை தெளிவாக நமக்குச் சொல்லி விடுவதால், நாம் அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டு உடல் எடையைக் கூட்டி அவதிப்படத் தேவையில்லை.தேவையான, அளவான உணவைத் சாப்பிடுவதால்  நம் உடல் எடையும் தானாகக் குறையத் தொடங்கும். 

தரையில் நேராக அமர்ந்து சாப்பிடுவது, முதுகெலும்பும், தோள்களும் சீரான நிலையில் இருக்க வழி செய்வதோடல்லாமல் முழங்கால் மூட்டுகளும், இடுப்பு எலும்புகளும் வலுவடைய உதவுகிறது. மேலும்  அடிக்கடி உட்கார்ந்து எழுந்திருப்பதால் முழங்கால் மூட்டுகளும், இடுப்பு எலும்புகளும் மிகவும் இலகுத் தன்மை அடைந்து நோய்கள் வராமல் இருக்க உதவுகின்றன. 

தரையில் உட்கார்ந்து எழுந்திருப்பதால் நம் உடலின் வலிமை அதிகரித்து ஆயுளும் கூடுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது 

ஆனால் தற்போது தரையில் அமர்ந்து சாப்பிடும் வழக்கம் மறைந்து வீட்டிலும் திருமண நிகழ்ச்சிகளிலும் நாற்காலியில் அமர்ந்து, சாப்பிடும் மேசையில் உணவருந்தும் பழக்கமாகிவிட்டது. அது பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம். 

தொடரும்



18 கருத்துகள்:

  1. எங்கள் வீட்டில் அனைவரும் தரையில் அமர்ந்து சாப்பிடும் வழக்கம் தான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! ‘வீட்டில் அனைவரும் தரையில் அமர்ந்து சாப்பிடுகிறோம்’ என்று நீங்கள் சொல்வதைக் கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது.

      நீக்கு
  2. பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு சிவபார்கவி அவர்களே! தாங்கள் கூறுவதுபோல் உணவு உண்ண பயன்படுத்தும் மேசைகளை மக்களாட்சி நடைபெறும் நாடான நம் நாட்டில் தடை செய்யமுடியாது என்றே நினைக்கிறேன். இருப்பினும் மக்களே தாங்களாக அதை பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.

      நீக்கு
  3. தரையில் அமர்ந்து சாப்பிடும் வழக்கம் பல வீடுகளில் இப்போது இல்லவே இல்லை. அதன் பயன்கள் பலருக்கும் புரிவதில்லை.

    சிறப்பான தகவல்கள். தொடரட்டும் பகிர்வுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும்,பாராட்டுக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!

      நீக்கு
  4. அருமையான கட்டுரை நண்பரே சொகுசு வாழ்வில் மயங்கியதால்தான்.

    இன்று மருத்துவமனைகள் பெறுகி விட்டது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும்,பாராட்டுக்கும் நன்றி தேவக்கோட்டை திரு கில்லர்ஜிஅவர்களே! நீங்கள் சொல்வது சரியே.

      நீக்கு
  5. தரையில் அமர்ந்து உண்பதுதான் உடலுக்கு நல்லது என்றாலும் சாப்பிட்ட பின்,இரண்டு மூன்று முறையாவது குனிந்து அந்தப் பாத்திரங்களை மறுபடியும் எடுத்து அடுப்படியில் வைக்கணும். அந்த இடத்தைச் சுத்தம் செய்யும் வேலை வேறு, வீட்டு வேலைகளில் இப்பொழுது யாரும் பங்கு போட்டுக்கொள்ள விரும்பாததும் இந்தப் பழக்கம் மறைந்து விட ஒரு காரணம் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி abayaarunajp அவர்களே! சாப்பிடுவோருக்கு குனிது பரிமாறியதும், சாப்பிட்ட பின், இரண்டு மூன்று முறையாவது குனிந்து அந்தப் பாத்திரங்களை மறுபடியும் எடுத்து வைப்பதும் அந்த இடத்தைச் சுத்தம் செய்வதும் உடற்பயிற்சி போன்றவை தான்.அந்த காலத்தில் தரையில் பாய்போட்டு படுத்து காலையில் எழுந்ததும்,சுருட்டி வைப்பதும்,கிணற்றில் நீர் இறைப்பதும்,ஆட்டுக்கல்லில் மாவு அரைப்பதும் போன்ற வேலைகளை செய்ததால்,மூட்டுவலி போன்ற உபாதைகள் இல்லாமல் நலமுடன் வாழ்ந்தார்கள்.

      நீங்கள் சொல்வதுபோல் வீட்டு வேலைகளில் இப்பொழுது யாரும் பங்கு போட்டுக்கொள்ள விரும்பாததால்தான் இன்று உடல் பெருத்து உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்று பயிசி செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

      நீக்கு
  6. எங்கள் வீட்டிலும் தரையில் அமர்ந்தே சாப்பிடுகிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம் அவர்களே! தங்கள் வீட்டில் தரையில் அமர்ந்து சாப்பிடுவது அறிந்து மகிழ்ச்சியுற்றேன்.

      நீக்கு
  7. எனக்த தரையில் அம்ரவே முடியாது முடிந்தபொதுதரையிலும் அமர்ந்து சாப்பிட்டு இருக்கிறோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்பிரமணியம் அவர்களே! இந்த வயதில் தங்களால் தரையில் அம்ர்ந்து உண்ணமுடியாதது தான். தரையில் அமர்ந்து உண்ணும் வழக்கத்தை கைவிட்டுவிட்டால் பின் தரையில் அமர இயலாது தான்.

      நீக்கு
  8. இந்தத் தொடரில் சாப்பிடும் தட்டிலேயே கை கழுவி எழுந்து விடும் சோம்பேறித் தனத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள். 'எவ்வளவு தான் செய்வார்கள், இந்தப் பெண்கள்?' என்று அந்தப் பகுதிக்கு தலைப்பிட்டாலும் சரியே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே! தங்களின் ஆலோசனைக்கு நன்றி!

      நீக்கு
  9. என் சிறு வயதில் என் தாத்தா வசித்த போடி நாயக்கனூரில் விடு முறையை கழித்த நாட்கள் நினைவுக்கு வந்தது். நாங்கள் தரையில் உட்கார்ந்து சாப்பிட்ட பின் அந்த இடத்தை சாணம் கொண்டு சிதறிய பருக்கைகளை அகற்ற சுத்தம் செய்வார்கள். வீட்டிலேயே பசு மாடு இருந்ததால் அவ்வாறு சுத்தம் செய்ய முடிந்தது் மிகவும் ஆரோக்யமான நாட்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி ரகுநாதன் அவர்களே! எனது பதிவு தங்களது சிறுவயது நாட்களை அசைபோட வைத்தது என அறிந்து மகிழ்ச்சி!

      நீக்கு