திங்கள், 9 மே, 2011

வங்கியாளர்களைப் பற்றிய நகைச்சுவை 2

சென்ற பதிவில்,வங்கியாளர்களைப் பற்றிய ஒரு Rhyme
ஒன்றை பதிவேற்றி இருந்தேன்.நண்பர் திரு ADAM
அவர்கள் அது ஜோக் அல்ல என்று பின்னூட்டம்
இட்டிருந்தார்.

அவருக்கும்,அவரது கருத்தை ஆதரிக்கும்
நண்பர்களுக்கும் இலண்டனிலிருந்து வரும்
'The Guardian' சொன்ன கருத்தை கீழே தருகிறேன்.

“What’s the problem with Banker Jokes? Bankers
don’t think they’re funny, normal people
don’t think they’re Jokes.”

எனவே நான் பதிவேற்றுவது நகைச்சுவையாக சிலருக்கு
தெரியாமல் இருக்கலாம். ஆனால் அதில் கிண்டல்
இருப்பதை நிச்சயம் அனைவரும் ஒப்புக்கொள்ளுவார்கள்
என நம்புகிறேன்.

இனி !

ஒரு மனிதன் நீண்ட நாட்கள் கடவுளை நினைத்து
ஊண் உறக்கமின்றி தவம் இருந்தான்.அவனது தவத்தை
மெச்சி கடவுள் அவன் முன் தோன்றி,‘பக்தா! உன்
தவத்தை மெச்சினோம்.உனக்கு என்ன வரம் வேண்டும்
கேள்.’ என்றார்.

அதற்கு அந்த மனிதன் ‘இறைவா! இப் பிறவியில்
நான் பார்த்த வேலைகள் எனக்கு பிடிக்கவில்லை.
மன நிறைவும் கிடைக்கவில்லை.எனவே அடுத்த
பிறவியிலாவது நான் விரும்பும் வேலை கிடைக்க
வரம் தரவேண்டுகிறேன்.’ என்றான்
.
கடவுளும் ‘சரி அப்படியே ஆகட்டும்.நீ என்ன
வேலையில் சேர விரும்புகிறாய் ?’என்றார்.

‘ஈசனே! நான் அடுத்த பிறவியில் ஒன்று
திரைப்பட நடிகனாக வேண்டும் அல்லது
இந்திய அரசுப் பணியில் (I.A.S.) சேரவேண்டும் அல்லது வங்கி மேலாளராக வேண்டும்.’என்றான்.

கடவுளுக்கு ஒரே ஆச்சர்யம். இவ்வுலகில்
எத்தனையோ வேலைகள் இருக்க இந்த மூன்றை
மட்டும் ஏன் இவன் தேர்ந்தெடுத்திருக்கிறான்
என எண்ணி, ’ஏனப்பா, நடிகனாக வேண்டும்
என்கிறாய்?’ என்றார்.

‘ஐயனே! திரைப்பட நடிகனானால் வயதானாலும்
கூட நடித்துக்கொண்டு இருக்கலாம். எப்போதும்
இளைஞனாக நடிப்பதால் தன்னைவிட பல மடங்கு
வயதில் குறைந்த குமரிகளோடு ‘டூயட்’ பாடி
காதல் செய்ய இயலும். தயாரிப்பாளர் செலவில்
உலகில் உள்ள எல்லா நாடுகளையும் பார்க்கமுடியும்.

ஒரே ஆளாக இருந்து அநேகம் பேரை ஒரே சமயத்தில்
துவம்சம் செய்ய முடியும். சீறி வரும் ‘புல்லெட்’டை
கூட பல்லால் கடித்து பிடித்து திரும்ப வந்த இடத்திற்கே
அனுப்பமுடியும்.

நடிப்புக்காக தரும் பணத்தை கறுப்பு பணமாக
வாங்கிக்கொண்டு வருமான வரித்துறையையும்
அரசையும் ஏமாற்ற முடியும். அப்பாவி/ஏமாளி
இரசிகனை உசுப்பேற்றி மன்றம் வைக்க ஆதரவு
கொடுத்து பின்னால் அதை அரசியல் கட்சியாக மாற்றி
பதவியில் அமர முடியும்.மொத்தத்தில் படிக்காமலேயே
எல்லா வசதிகளையும் அனுபவிக்க முடியும்.’ என்றான்.

‘சரி.ஏன் I.A.S. ஆக வேண்டும் என்கிறாய்?’ என்றார் கடவுள்.

I.A.S. ஆனால் தொழில் நுட்ப படிப்பு
படிக்க வில்லை என்றாலும் கூட,ஓராண்டு முசோரியில்
தரும் பயிற்சிக்கு பிறகு ‘எல்லாம் தெரிந்தவராக’
ஆகிவிடலாம். பணிக்காலத்தில் Electronics Corporation
தலைவராகவும் ஆகலாம். Atomic Energy Commission
தலைவராகவும் ஆகலாம். The Indian Council of
Agricultural Research (ICAR)
தலைவராகவும்
ஆகலாம் அல்லது Hindustan Aeronautics Limited (HAL)
தலைவராகவும் ஆகலாம். மொத்தத்தில் நினைத்த
துறைக்கு தலைவராக ஆகலாம்.

‘ஊதிய கமிஷன்’ சம்பளம் நிர்ணயிக்கும்போது
தங்களுக்கு எல்லோரை விடவும் அதிகம் வருமாறு
பார்த்து கொள்ளலாம். பணியின் போது அரசு செலவில்
வெளி நாட்டில் சென்று படித்தும் வரலாம்.

பணி நிறைவுக்கு பின் ‘World Bank அல்லது
'Asian Development Bank’ போன்றவைகளில்
கொழுத்த சம்பளத்தில் அமர்ந்துவிடலாம்.
அதனால் தான் I.A.S. ஆக விரும்புகிறேன்’
என்றான்.

‘அது சரி.ஏன் வங்கி மேலாளராக ஆக
வேண்டுமென்கிறாய்?’ என்றார் கடவுள்.

‘இறைவா, வங்கி மேலாளராக ஆனால்,
தொழில் நுட்பம் தெரியாவிட்டாலும் கூட,
தொழிற்சாலைகளுக்கு கோடிக்கணக்கில் கடன்
அனுமதி வழங்கமுடியும். காரணம் இல்லாமலேயே
கடன் விண்ணப்பத்தை நிராகரிக்கவும் முடியும்.
பெரிய முதலாளிகளுக்கு கடனைக்கொடுத்துவிட்டு
அவைகளை வாராக்கடன் என அறிவித்து அதற்கான
‘பலனை’ அனுபவிக்க முடியும்.

மொத்தத்தில் ஒரு அரசனைப்போல் வாழமுடியும்.’
என்றான்.

அவனுடைய பதிலைக்கேட்ட கடவுள்
‘மறைந்தே’ போனார்!!



நகைச்சுவை துணுக்குகள் தொடரும்

வெள்ளி, 6 மே, 2011

வங்கியாளர்களைப் பற்றிய நகைச்சுவை 1

நகைச்சுவை பல ரகம்.பிறர் மனதை புண்படுத்தாத
வகையில் படிப்போருக்கும்,கேட்பொருக்கும் அவை
சிரிப்பை அல்லது புன் சிரிப்பை உண்டாக்குமானால்
உண்மையில் அவை நகைச்சுவைதான்.

நம்மிடையே உலாவி வரும் நகைச்சுவை
துணுக்குகளை வகைப்படுத்தினால் அவை இனம்
சார்ந்த,மொழி சார்ந்த,தொழில் சார்ந்த,
நகைச்சுவைகள் என்ற பல தலைப்பின் கீழ்
பிரிக்கலாம்.

இங்கே நான் வங்கித்துறையைச் சேர்ந்தவன்
என்பதால் வங்கியாளர்களைப் பற்றிய நகைச்சுவை
துணுக்குகள் மற்றும் வங்கியாளர்களை பற்றிய
மற்ற துணுக்குகளையும் தரலாமென நினைக்கிறேன்.


நான் படித்த, கேட்ட, மின் அஞ்சலில் வந்த
என் வங்கி பயிற்சி கல்லூரியில் சொன்ன
துணுக்குகளைத்தான் பதிவேற்ற இருக்கிறேன்.
மற்றபடி யாருடைய மனதையும் புண்படுத்த அல்ல.

மழலையர் பள்ளியில் குழந்தைகளுக்கு Rhymes
எனப்படும் எதுகை மோனை உடன் கூடிய பாடல்களை
சொல்லிக்கொடுப்பார்கள். அப்படிப்பட்ட பாடல்
ஒன்றை மாற்றி, வங்கியாளர்களுக்கு பொருந்தும்
வகையில் எழுதப்பட்ட ஒரு பாடல் எனக்கு
மின் அஞ்சலில் வந்தது. அதை கீழே தந்திருக்கிறேன்.
தமிழில் மொழி பெயர்த்தால் அதனுடைய வீச்சு
குறைந்துவிடுமோ என்ற ஐயத்தால் அதை
ஆங்கிலத்லேயே தந்திருக்கிறேன்.

A BANKER'S RHYME


Johny Johny! Yes Papa!
Banking service? Yes Papa!
Many tensions? Yes Papa!
Work pressure? Yes Papa!
BP-Sugar? Yes Papa!
Family life? No Papa!
Wage revision? Ha Ha Ha!!!





நகைச்சுவை துணுக்குகள் தொடரும்

செவ்வாய், 3 மே, 2011

எங்கே மனிதாபிமானம்?

இன்று காலை மின் கட்டணத்தை செலுத்தலாம் என
எண்ணி மின் கட்டணம் வசூலிக்கும் அலுவலகத்திற்கு
காலை சுமார் 8.30 மணிக்கு சென்றேன்.

மின் வாரியத்தின் புதிய முறைப்படி மின் அளவீட்டார்கள்
வீட்டிற்கு வந்து மின் உபயோகத்தை கணக்கிட்டு
நமது மின் அட்டையில் பதிவு செய்த நாளிலிருந்து,
இருபது நாட்களுக்குள் கட்டணம் கட்டினால் போதும்.
இருந்தாலும் அதுவரை ஏன் காத்திருக்கவேண்டும் என
எண்ணி மின் பயன் கணக்கிட்ட நான்காம் நாளே
கட்டணம் செலுத்த கிளம்பிவிட்டேன்.

இன்றைய நாளை தேர்ந்தெடுத்ததன் காரணம் இன்று
செவ்வாய் கிழமை என்பதால் தான்.சென்னையில்
செவ்வாயன்று பலர் பணம் செலவழிக்க தயங்குவார்கள்
என்பதால், கட்டணம் செலுத்தும் இடத்தில் கூட்டம்
இருக்காது என நினைத்து அங்கு சென்றால்,மிக நீண்ட
வரிசையில் பயனாளிகள் பணம் செலுத்த நின்றிருந்தனர்.

எல்லோரும் என்னைப்போல் நினைத்து வந்திருப்பார்கள்
போலும்!

மின் வாரிய அலுவலகத்துக்கு வெளியே
போடப்பட்டிருந்த பந்தல் வரை ‘கியூ’
இருந்ததால் நான் வெளியே வெயிலில்
நிற்கவேண்டியதாயிற்று.அப்போது பந்தலின்
உள்ளே,பணம் கட்டுவோர் வரிசைக்கு அருகே
நின்றுகொண்டிருந்த ஒரு பெண் (வயது சுமார் 25
இருக்கலாம்) என்னிடம் சைகை காண்பித்து தான்
எனக்கு முன்பு இருப்பதை உறுதி படுத்தினார்.
காலை 8.30 மணி வெயிலில் கூட நிற்கமுடியாமல்
உள்ளே நின்றுகொண்டிருந்தார்.

பணம் வாங்கும் ஊழியர் ஒவ்வொருவரிடமும்
சில்லறை கேட்டு இல்லை, என்போரிடம் வாதம்
செய்து கொண்டிருந்ததால் வரிசை மெல்ல நகர்ந்து
கொண்டு இருந்தது.எனக்கு முன்பு நிற்க வேண்டிய
பெண்ணுக்கு முன்னால் இருந்தவர் பணம் கட்ட
தொடங்கியவுடன் அந்த பெண் வந்து கியூவில்
சேர்ந்துகொண்டார்.

அப்போது சுமார் 80 வயது இருக்கும் மூதாட்டி ஒருவர்
கட்டணம் செலுத்த வந்தார். வெகு தூரம் நடந்து
வந்து இருப்பார் போலும். வியர்வை முகத்தில் வழிய,
மிகவும் களைப்போடும், அலுப்போடும் வந்து எங்கள்
அருகே இருந்த படிக்கட்டில் அமர்ந்துவிட்டார். அவர்
பெரு மூச்சு விடுவதை பார்க்கவே கஷ்டமாயிருந்தது.

அப்போது எங்கள் வரிசையில் இருந்த ஒரு பெண்
(அவருக்கு தெரிந்தவர் போலும்) ‘ஏன் ஆயா,
இந்த வெயிலில் நீ வரணுமா? என்னிடம்
கொடுத்திருந்தால் நான் கட்டியிருக்கமாட்டேனா?
ஆமாம் ஏன் உன் மருமகள் வந்து கட்டியிருக்கலாமே?’
என்றார். அதற்கு அந்த மூதாட்டி, என்ன செய்வது
எல்லாம் என் தலையெழுத்து. இந்த வேகாத வெயிலில்
வறுபடவேண்டும் என்று இருக்கிறது போலும்’ என்றார்.

உடனே அந்த பெண் ‘ ஆயா நீ கியூவில் நிற்காமல்
முன்னால் நிற்பவரிடம் சொல்லிவிட்டு, பணத்தை
கட்டு.’ என்றார். அந்த மூதாட்டியும் எனக்கு முன்னால்
பணம் கட்ட தயாராக இருந்த அந்த ‘இளைஞி’யிடம்,
'அம்மா. நான் உங்களுக்கு முன்னால் கட்ட
அனுமதிப்பீர்களா?’ என்றார். ஆனால் அந்த
பெண்ணோ கொஞ்சம் கூட வயதுக்கு மதிப்பு
தராமல் மிகவும் காட்டமாக,’பின்னால் இருப்பவர்களிடம்
கேட்டுவிட்டு கட்டு’ எனச்சொல்லிவிட்டு தன் முறை
வந்ததும் பணம் கட்ட ஆரம்பித்துவிட்டார்.

தன்னாலேயே வெயிலில் நிற்க முடியவில்லையே
அந்த வயதான மூதாட்டி எவ்வாறு நின்று கட்டுவார்
என்று கூட யோசிக்கவில்லை. உடனே நான்
‘அம்மா யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள்.
நீங்கள் எனக்கு முன்னால் பணம் கட்டுங்கள்.’
என்றேன். பின்னால் இருந்த ஒருவரும் அதை
எதிர்க்கவில்லை.

அந்த பெண் கட்டணத்தை கட்டிவிட்டு என்னை
ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு தனது துப்பட்டாவை
தீவிரவாதிகள் முகத்தை மறைப்பதுபோல்
கட்டிக்கொண்டு அவரது வாகனத்தில் பறந்துவிட்டார்.
பின் அந்த மூதாட்டி கட்டணத்தைக் கட்டிவிட்டு
எனக்கு நன்றி சொல்லி கிளம்பினார்.

நான் கட்டணத்தை கட்டிவிட்டு வீடு வரும் வரை
அந்த சம்பவத்தையே எண்ணி வந்தேன். அந்த
மூதாட்டிக்கு வழி விட்டிருந்தால் அந்த பெண்ணுக்கு
சில நிமிடங்கள்தான் தாமதமாயிருக்கும். அந்த
விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை கூட அவருக்கு
இல்லையே என நினைத்து வருந்தினேன்.

வயதானவர்களுக்கு இளையோர் கொடுக்கும்
மரியாதை குறைந்துவருகிறதா? அல்லது அது
இல்லவே இல்லையா?

நீங்களே சொல்லுங்கள்!

ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

நினைவோட்டம் 44

அடுத்து எனது நினைவில் நிற்கும் நண்பர் திரு கண்ணன்.
எப்போதும் சிரித்த முகத்தோடு இருப்பார். அதிகம்
பேச மாட்டார். எனக்கு மட்டுமல்ல நண்பர் திரு துரைராஜ்
மற்றும் திரு பார்த்தசாரதி அவர்களுக்கும் நண்பர்.

S.S.L.C தேர்வு முடிந்த அன்று (1960 பிப்ரவரி) இரவு,
விருத்தாசலம் இராஜராஜேஸ்வரி திரை அரங்கில்
‘சகோதரி’ திரைப்படத்தை அவரோடு இரண்டாம் காட்சி
பார்த்து விடைபெற்றேன். அதற்கு பிறகு தொடர்பே
இல்லை. திரும்ப பணி ஓய்வு பெற்று சென்னை
திரும்பியவுடன், நாற்பத்துஆறு ஆண்டுகள் கழித்து,
ஆண்டு நண்பர் துரைராஜ் அவர்களின் மகனின்
திருமணத்தில் சந்தித்தது போது ஏற்பட்ட உணர்வையும்,
மகிழ்ச்சியையும், எழுத்தில் விளக்க இயலாது.

அடுத்து எனது நினைவில் நிற்கும் நண்பர்
திரு கிருஷ்ணமூர்த்தி. அவர் பள்ளி இறுதி தேர்வு
முடித்து, கல்கத்தா சென்றார். அங்கு வேலை
பார்த்துக்கொண்டே படித்ததாக கேள்வி. அவர்
இப்போது எங்கு இருக்கிறார் எனத்தெரியவில்லை.
ஒன்பதாம் வகுப்பில் இருக்கும்போது தினம்
காலை 9 மணிக்கு வீட்டுக்கு வந்துவிடுவார்.
நானும் அவரும் அய்யனார் கோவில்
தெருவிலிருந்து மணிமுத்தா ஆற்றை (?)
கடந்து தினம் பள்ளிக்கு செல்வது வழக்கம்.

அடுத்து எனக்கு பிடித்த நண்பர் திரு இராஜாமணி.
அவருடைய தந்தை இரயில்வே துறையில்
இருந்தார். விருத்தாசலத்தில் படிப்பு முடித்து
நான் திருச்சி புனித வளவனார் (St.Joseph)
கல்லூரியில் சேர்ந்தபோது அவர் திருச்சி
ஜமால் முகமது கல்லூரியில் புகுமுக வகுப்பு
படித்து பின் ‘வாரங்கலி’ல் உள்ள வட்டார
பொறியியல் கல்லூரியில்(R.E.C) படித்து
பொறியாளராக ஆனார் என்பது வரை
தெரியும். இப்போது எங்கிருக்கிறார்
எனத்தெரியவில்லை.

எனது இன்னொரு நண்பர் திரு பார்த்தசாரதி
சென்னை மருத்துவக்கல்லூரியில் படித்து
மருத்துவராகிவிட்டார்.அவர் இருப்பிடமும்
தெரியவில்லை.

என்னால் மறக்கமுடியாத நண்பர்
திரு சிகாமணி. அவர்தான் என்னோடு
மனோகரா நாடகத்தில் ‘வசந்தசேனையாக’
நடித்தவர். அவரும் நண்பர் திரு பழமலை போல்,
தமிழ் பேராசிரியராக பணியாற்றியதாக கேள்வி.

என்னோடு படித்த இன்னொரு நண்பர்
திரு இராஜசேகரன் ராஸ். அவரை எல்லா
ஆசிரியர்களுக்கும் பிடிக்கும். என் அண்ணனிடம்
டியூஷன் படித்தவர். அண்ணாமலை பல்கலை
கழகத்தில் இயந்திரவியலில் பொறியியல் பட்டம்
பெற்று தமிழ்நாடு வேளாண் தொழில்கள் கழகத்தில்
(Tamilnadu Agro Industries Corporation) வேலை
பார்த்தார் என்பது வரை தெரியும்.

இன்னொரு நண்பரான திரு C.சுப்பிரமணியன்
எனது உறவினரும் கூட. பத்தாம் வகுப்பு படிக்கும்போது
எங்கள் வீட்டில் தங்கியிருந்து படித்தார்.எங்களது
வகுப்பில் இன்னொரு C.சுப்பிரமணியன் இருந்ததால்
தனது ஊரின் பெயரின் முதலெழுத்தான R ஐ சேர்த்து
R.C. சுப்பிரமணியன் என மாற்றிக்கொண்டார்.
பள்ளிப்படிப்பு முடிந்து ஆசிரியப்பயிற்சி பெற்று
ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்று தற்சமயம்
சொந்த ஊரான இராஜேந்திரப்பட்டினத்தில்
வேளாண்மை செய்து வருகிறார்.

இன்னும் பல நண்பர்களை பற்றி எழுத
நினைத்தாலும், பதிவின் நீளம் கூடும் என்பதால்
பள்ளி நண்பர்களைப்பற்றிய நினைவுகளை
இத்தோடு முடித்துக்கொள்கிறேன்.


நினைவுகள் தொடரும்


வே.நடனசபாபதி

வியாழன், 7 ஏப்ரல், 2011

நம்பலாமா நாடி சோதிடத்தை? 4

அவர் படித்து சொன்ன பாடல்களின் படி,
திரு ஷெனாய் அவர்கள் ஒரு வாணிபம் செய்யும்
குடும்பத்தை சேர்ந்தவர்.ஆனால் அவர் இப்போது
இருப்பதோ நிதி சார்ந்த அரசுப்பணி.தற்சமயம்
பெற்றோர்கள் உயிருடன் இல்லை.துணைவியார்
திருமதி லலிதா.மனைவியின் உடல் நலம்
குன்றும்.ஆனால் கவலைப்படும்படியாக இருக்காது.

திரு ஷெனாயின் எதிர்காலம் பிரகாசமாயிருக்கும்.
பதவி உயர்வு பெற்று மேன்மேலும் உயர வாய்ப்பு
உண்டு.70 வயதுக்கு மேல் ஓகோ என்று இருப்பார்.
திரும்பவும் குடும்பத்தொழிலான வாணிபத்தை
செய்வார். இரும்பு வியாபாரம் செய்வார்.
வெளி நாடு எல்லாம் சென்று வருவார்.
நல்ல பணப்புழக்கம் இருக்கும்.

இரண்டு பிள்ளைகளில் மூத்த பையன் சரியாக
படிக்காமல் நின்று விடுவார். சொன்ன பேச்சை
கேட்கமாட்டார். இளையவர் நன்றாக படிப்பவர்.
எனவே அவரைப்பற்றி கவலை வேண்டாம்.
மூத்தவர் எதிர்காலம் பற்றித்தான் கவலை
இருக்கும்.அதற்காக செய்யவேண்டிய சாந்திகளை
செய்தால் எல்லாம் நல்லபடியாக நடக்கும்.

அந்த நோட்டில் உள்ள பாடல்களைப்படித்து
பொருள் சொன்னபோது எனது நண்பரின் முகம்
மலர்ந்தது உண்மை.

பாடல்கள் முடிந்தபின், அந்த சோதிடர் “என்ன
சார். திருப்திதானே.உங்கள் மூத்த மகனின்
நன்மைக்காக ஒரு சாந்தி செய்தால் எல்லாம்
நல்லபடியாக நடக்கும். என்ன சாந்தி
செய்யவேண்டும் என்று பார்க்க நீங்கள்
ரூபாய் 200 தரவேண்டும். என்ன பார்க்கலாமா?’
என்றார்.

திரு ஷெனாய் சம்மதம் சொல்லு முன்பே,
நான் அவரிடம் சைகை காட்டிவிட்டு,’வேண்டாங்க.
அப்புறம் பார்த்துக்கொள்ளுகிறோம்’
எனச்சொன்னேன். அவர் எவ்வளவோ சொல்லியும்
நான் வேண்டாமெனக்கூறி, திரு ஷெனாய்
அவர்களை அழைத்துக்கொண்டு வெளியே
வந்துவிட்டேன்.

நாங்கள் இருவரும் வைத்தீஸ்வரன் கோவிலிருந்து
சிதம்பரம் வரும் வரை எதுவும்
பேசிக்கொள்ளவில்லை. சிதம்பரம் வந்து கடலூர்
செல்லும் பேரூந்தில் ஏறி உட்கார்ந்ததும்
திரு ஷெனாய் என்னிடம், ’சபாபதி! அவர்
சொன்னது எல்லாமே சரியாய் இருந்தது.
பின் ஏன் சாந்தி பற்றி,நாடி பார்க்கவேண்டாமென்று
சொல்லிவிட்டீர்கள்?’ என்றார்.அவரது பேச்சில்,
நான் அவரை மேற்கொண்டு நாடி பார்க்க விடாது
குறித்த வருத்தமும் ஆதங்கமும் இருந்தது.

‘சார்.அவர் சொன்னது எல்லாம் சரியா?’என்றேன்.

ஆமாம். நடந்தது எல்லாம் சரியாகத்தானே
சொன்னார். என் மனைவியின் பெயரைக்கூட
சரியாகச்சொன்னார். மற்றும் என் பையன்கள்
பற்றியும் என் குடும்பத்தைப்பற்றியும் சொன்னது
எல்லாம் சரி.அவர் சொன்னபடி செய்யவேண்டிய
சாந்தி பற்றி நாடி பார்த்திருக்கலாமே?’ என்றார்.

நான் சொன்னேன்.‘அவர் எங்கு சார் சொன்னார்?
நீங்கள்தான் எல்லாவற்றையும்,கேட்டது,கேட்காதது
எல்லாவற்றையும் சொல்லிவிட்டீர்கள்.உங்கள்
குடும்பத்தைப்பற்றி இதைவிட விவரமாக
சொல்லமுடியாது. அதை வைத்து பாட்டாக
எழுதி வந்து படித்துவிட்டார்.

முதலில் நாம் நுழையும்போது நம்மோடு பேச
வந்தவரை பேசவிடாமல் தடுத்ததுமே எனக்கு
சின்ன சந்தேகம். பின்பு நீங்கள் மட்டும் தான்
வரலாம் என்றதும் அது இன்னும் அதிகமாயிற்று.
உள்ளே சென்று அவர் கேட்ட கேள்விகள்,எனக்கு
அவை Leading Questions போல தெரிந்ததால்,
அவர் என்ன செய்கிறார் என்பதை உன்னிப்பாக
கவனித்தேன். நீங்கள் அவருக்கு பதில் சொல்லும்
நிலையில் இருந்ததால் அவரது செய்கைகளை
கவனிக்கவில்லை.

அவர் உங்களிடம் கேட்ட கேள்விகள் அந்த
ஓலையில் இருப்பதாகத்தெரியவில்லை.
அதைப்பார்த்து படிப்பதுபோல் பாசாங்கு செய்து,
அவருக்குத்தேவையான பதில்களை
உங்களிடமிருந்து வாங்கிக்கொண்டார்.ஒன்று மட்டும்
நிச்சயம் அவரது பேச்சுத்திறமையால்
மாஜிக் நிபுணர்கள் போல் உங்கள் போன்றோரை,
தன்வயப்படுத்தி பதில்களைப் பெற்றுக்கொள்கிறார்
என்பதே.

வழக்கமாக மூன்றாவது நபரை அனுமதிப்பது
இல்லையாதலால், உங்களைப்போல் வருவோருக்கு
அவர் என்ன செய்கிறார் என்பதை கவனிக்க
நேரமிருக்காது.

ஒரு விஷயத்தை நாம் பாராட்ட வேண்டும்.
வரும் வாடிக்கையாளர்கள் சொல்லும் விவரங்களை
மறக்காமல் மனதில் இருத்தி, உள்ளே சென்றதும்
அவைகளை ஒன்று விடாமல் பாட்டாக
எழுதி வருகிறார்களே அதற்காக.

நான் நினைக்கிறேன் அவர்கள் மாதிரி பாடல்
வடிவம் ஒன்றை ஏற்கனவே வைத்திருக்கிறார்கள்.
சேகரித்த விவரங்களை ஆங்காங்கே நிரப்பி
பாடல்போல் ஆக்கி வந்து படிக்கிறார்கள்.

ஒன்று கவனித்து இருப்பீர்கள் அனைவரையும்
சாந்தி செய்ய சொன்னதையும்,அதற்கான
நாடியைப்பார்க்கலாமா எனக்கேட்டதையும்.
நீங்கள் சரி என்று சொல்லியிருந்தால்,முன்பே
என்ன சாந்தி, எவ்வாறு செய்யவேண்டும் என
எழுதியுள்ள ஓலையைப்படித்து உங்களிடமிருந்து
பணத்தைக்கறந்து இருப்பார்கள்.பின்பு
சாந்திக்கான செலவுக்கும் நீங்கள் பணம்
தரவேண்டியிருந்திருக்கும்.

இங்கே நாடி சோதிடத்திற்கு பணம் பறிப்பதை
விட சாந்தி செலவுக்கு அதிகம்
பிடுங்கிக்கொள்வார்கள் என நினைக்கிறேன்.
அதனால் தான் நான் ஒன்றும் வேண்டாம்
எனக்கூறிவிட்டேன்.’

‘சபாபதி நீங்கள் சொன்னது சரி என்றாலும்
கூட, அவர் எவ்வாறு என் மனைவியின்
பெயரை சரியாக சொன்னார்? நான்தான்
அதை சொல்லவில்லையே.’ என்றார்.

‘சார். உங்கள் மனைவியின் பெயரில்
உள்ள எழுத்தைக்கேட்டு, உங்கள் பதில்
மூலமே அவர் அதை கண்டுபிடித்துவிட்டார்.
அப்படி கண்டுபிடிக்கமுடியவில்லை என்றால்
அதை சொல்லியே இருக்கமாட்டார்.

இன்னொன்றையும் கவனித்து இருப்பீர்கள்.
அவர் சொன்னது எல்லாம்
எதிர்காலத்தைப்பற்றியே. கடந்த காலத்தில்
நடந்தவைகளை எல்லாம் அவர்
சொல்லவில்லை. காரணம் நீங்கள் அதை
சொல்லவில்லை!’என்றேன்.

திரு ஷெனாய் அவர்கள் முகத்தில் சுரத்தே
இல்லை. ஏமாந்துவிட்டோமே என்ற நினத்தார்
போலும். அதற்கு பிறகு கடலூர் வரும்
வரையில் அவர் பேசவே இல்லை. கடலூர்
பேரூந்து நிலையத்தில் இறங்கி வருகிறேன்
எனச்சொல்லி சென்றுவிட்டார்.

நான் இதன் மூலம் சோதிடமே ஏமாற்று
எனச்சொல்லவிரும்பவில்லை.

எங்களது வேளாண் படிப்பில் சொல்வார்கள்.
Agriculture is an Art and Science என்று.
அதுபோல சோதிடமும் ஒரு அறிவியல் கலைதான்.
ஆனால் இப்போதோ நம்மிடையே போலிகள்
அதிகம் உள்ளதால் உண்மையாக சோதிடம்
பார்ப்பவர்களை நம்மால் கண்டறியமுடியவில்லை,
என நினைக்கிறேன்.

திரும்பவும் தலைப்புக் கேள்விக்கே வருகிறேன்.

நம்பலாமா நாடி சோதிடத்தை?

‘ஏமாறாதே,ஏமாறாதே, ஏமாற்றாதே,ஏமாற்றாதே,’
என்று அடிமைப்பெண் திரைப்படத்தில்
திரு TMS பாடும் பாடல் ஏனோ நினைவுக்கு வருகிறது
!

புதன், 6 ஏப்ரல், 2011

நம்பலாமா நாடி சோதிடத்தை? 3

சிறிது நேரம் கழித்து அவர் கையில் ஒரு பனை
ஓலை கட்டுடன் வந்தார். அது பழுப்பு நிறத்தில்
மிக பழைய ஓலைச்சுவடி போல் தோற்றமளித்தது.

“சார். உங்களுக்கான சுவடிபோல,இந்த உலகில்
பிறந்த பல்லாயிரக்கணக்கான பேருடைய சுவடிகள்
உள்ளே இருக்கின்றன.அவைகளிலிருந்து உங்களது
சுவடியை கண்டெடுப்பது அவ்வளவு சுலபமல்ல.
அந்த சுவடிகளிலிருந்து உங்களது சுவடியை
கண்டுபிடிக்க,நீங்கள் வைத்த கைரேகையைக்
கொண்டு உங்களைபற்றிய அடிப்படை
விவரங்களை கொண்ட சுவடிக்கட்டை
எடுத்து வந்திருக்கிறேன்.

இந்த சுவடி கட்டில் உள்ள விவரங்களை
கொண்டுதான் உங்களது சுவடியை
கண்டுபிடிக்கவேண்டும்.

இதுதான் நான் முன்பே சொன்ன Index
ரிஜிஸ்டர் போன்ற ஆதார சுவடி.இந்த சுவடியில்
நீங்கள் பிறந்த நாளன்று பிறந்த அனைவருடைய
முக்கிய விவரங்களும் இருக்கும்.இதிலிருந்து
உங்களுடைய விவரங்களை அறிய நான்
இதைப்பார்த்து உங்களிடம் கேள்விகள்
கேட்கும்போது, நீங்கள் உண்டு அல்லது இல்லை
என பதில் சொல்லவேண்டும்.
நீங்கள் சொல்லும் பதில் ஆமாம் என்று
இருந்தால் அந்த பக்கத்தை பார்த்து மேலே
செல்வேன். இல்லை என பதில் தந்தால் நான்
அடுத்த பக்கத்திற்கு செல்வேன்.

இந்த அந்த பதில் மூலம் நான் உங்களது
சுவடிக்கான அடிப்படை விவரத்தை என்னால்
பெறமுடியும். அந்த விவரத்துடன் உள்ளே
சென்று உங்களது சுவடியைக்கண்டுபிடித்து
எடுத்துவருவேன். நீங்கள் தயாரா?” என்றார்.

நாங்கள், “சரி.கேளுங்கள் என்றோம்” என்றோம்.

உடனே அவர் விநாயகப்பெருமான் மீது ஒரு
பாடலைப்பாடிவிட்டு அந்த அரத பழைய
ஓலைசுவடிக்கட்டை மிக மெதுவாக பிரித்தார்.

ஆங்கிலம் தெரியாத வெளிநாட்டு அதிபர்கள்
வரும்போது அவர்கள் பேசுவதை நமது
தலைவர்களிடம் மொழிபெயர்த்து சொல்லும்
துபாஷி எனப்படும் மொழிபெயர்ப்பாளர்கள் போல்,
நான் அந்த சோதிடர் தமிழில் கேட்கும்
கேள்விகளை, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து
திரு ஷெனாய் அவர்களிடம் சொல்லி,அவரது
பதிலை வாங்கி, திரும்பவும் அதை தமிழில்
மொழிபெயர்த்து கொடுத்தது எனக்கு ஒரு
புதிய அனுபவமாக இருந்தது.

அவர் கேட்ட கேள்விகளும், பதில்களும் கீழே.
(பதில் இல்லை என சொல்லும்போது அவர்
ஓலையின் அடுத்த பக்கத்தை புரட்டி கேட்டார்)


‘நீங்கள் பணி செய்து கொண்டு இருக்கிறீர்கள்?’
‘ஆமாம்’

‘தனியார் நிறுவனத்தில்?’
‘இல்லை.’

‘அரசுப்பணியில்?’
‘இல்லை. ஆனால் அரசின் கட்டுப்பாட்டில்
உள்ள நிறுவனத்தில்.’

‘நீங்கள் செய்யும் பணி கல்வி துறையிலா?’
‘இல்லை.’

‘மருத்துவத்துறையிலா?’
‘இல்லை.’

‘நிதித்துறையிலா?’
‘ஆமாம். வங்கியில்”

‘உங்களது பெற்றோர்கள் உயிருடன் இருக்கிறார்கள்?’
‘இல்லை.’

‘உங்கள் தந்தை விவசாயி?’
‘இல்லை.’

‘வாணிபம் செய்தவரா?’
‘ஆமாம்’

‘துணி வணிகமா?’
‘இல்லை. மளிகை வியாபாரம்.’

‘மொத்த வியாபாரம் (அ) சில்லறை வியாபாரம்?’
‘சில்லறை வியாபாரம்’

‘உங்களுக்கு திருமணமாகிவிட்டது?’
‘ஆமாம்’

‘உங்களது மனைவியின் பெயர்
ஐந்தெழுத்து கொண்டது?
‘இல்லை.’

‘நான்கெழுத்து?’
‘இல்லை.’

‘மூன்றெழுத்து?’
‘ஆமாம்’

‘முதல் எழுத்து வல்லினமா?’

(இந்த இடத்தில் மொழிபெயர்க்க
நான் சிரமப்பட்டேன். அதை எப்படி
சொல்வது யோசித்து கஷ்டப்பட்டு விளக்கினேன்.)
‘இல்லை.’

‘மெல்லினமா?’
‘இல்லை.’

‘இடையினமா?’
‘ஆமாம்.’

‘இடையினத்தில் எத்தனாவது எழுத்து?’
‘மூன்றாவது”

‘நெடில் (அ) குறில்?’
‘குறில்’

‘கடைசி எழுத்து எந்த இனம்?’
‘வல்லினம்”

‘எத்தனாவது எழுத்து?’

'நான்காவது எழுத்து'

‘நெடில் (அ) குறில்?’
‘நெடில்’

‘குழந்தைகள் மூன்று பேர்?’
‘இல்லை.’

‘இரண்டு பேர்?’
‘ஆமாம்’

‘ஒரு பெண் ஒரு ஆண்?’
‘இல்லை.’

‘இருவரும் பெண்?’
‘இல்லை.’

‘இருவரும் ஆண்?’
‘ஆமாம்’

இப்படியாக அவர் பல கேள்விகள் கேட்க,
நான் மொழி பெயர்க்க, நண்பர் பதிலை
சொல்ல, சுமார் அரை மணி நேரம் கழிந்தது.
பிறகு அவர் ‘சரி.பொறுங்கள்.நான் போய்
உங்களுடைய ஓலைச் சுவடியை எடுத்து
வருகிறேன்’எனக்கூறி உள்ளே சென்றார்.

(பதிவு நீள்வதன் காரணமாக அவர் கேட்ட
எல்லா கேள்வியையும் தரவில்லை)

சுமார் 15 நிமிடங்கள் கழித்து இன்னொரு
பழைய ஓலைச் சுவடி கட்டுடன் வந்தார்.

‘இதோ உங்களுடைய சுவடி. இதை நான்
படித்து,பின் எழுதித்தர நேரமாகும்.எனவே
இன்னும் சிறிது நேரம் பொறுத்தால் இதை
படிவெடுத்து கொண்டுவருகிறேன்’ என்றார்.
நாங்களும் சரி என்றோம்.

பின்பு அரை மணி கழித்து, நான்கு பக்கமும்
மஞ்சள் தடவிய ஒரு 40 பக்க நோட்
புத்தகத்துடன் வந்தார். அதில் எல்லாமும்
பாடல் வடிவிலேயே, வெண்பா நடையில்
கவிதைகளாய் இருந்தன. இலக்கண சுத்தமாக
இருந்ததா என தெரியவில்லை.

அவர் பக்கங்களை புரட்டி படிக்க (பாட)
ஆரம்பித்தார்.


தொடரும்

செவ்வாய், 5 ஏப்ரல், 2011

நம்பலாமா நாடி சோதிடத்தை? 2

வைத்தீஸ்வரன் கோவிலுக்கு போனவர்களுக்கு தெரியும்
மயிலாடுதுறையிலிருந்து சிதம்பரம் செல்லும் சாலை
ஊர்அருகில் வந்ததும் வளைந்து செல்லும் என்று.
நாங்கள் அந்த வளைவில் இறங்கி நாடி சோதிடர்
பற்றி விசாரிக்க எண்ணியபோது,எங்களுக்கு வேலை
வைக்காமல் ஒருவர் வந்து “என்ன சார், நாடி
சோதிடம் பார்க்கவேணுமா?” (எங்கள்
முகத்தைப்பார்த்தே தெரிந்து கொண்டார் போலும்!)
என்று கேட்டு கையைப்பிடித்து இழுக்காத குறையாக
மேல வீதியில் உள்ள ஒரு ‘பிரபல’ சோதிடர் வீட்டிற்கு
அழைத்து சென்றார்.

அந்த சோதிடருடைய இல்லத்தின் முன்,வருவோரும்
போவோருமாக கூட்டம் அதிகம் இருந்தது.
(அப்போதெல்லாம் அவர் ஒருவர் தான் நாடி சோதிடம்
பார்த்து சொல்லிக்கொண்டிருந்தார்.இப்போதோ அவரிடம்
‘வேலை’ பார்த்தோரும், இன்னும் பலரும் வைத்தீஸ்வரன்
கோவிலை சுற்றியும் மற்ற ஊர்களிலும் ஐயங்கார் பேக்கரி
மற்றும் மதுரை முனியாண்டி விலாஸ் போல கிளைகளை
திறந்துமக்களுக்கு‘சேவை’செய்து கொண்டு இருக்கிறார்கள்! )

நாங்கள் அங்கே சென்றபோது உள்ளே இருந்து வந்த ஒரு
வாடிக்கையாளர் எங்களைப்பார்த்து ஏதோ சொல்ல வந்தார்.

அதற்குள் எங்களை அழைத்து(இழுத்து) சென்றவர்,
அவரிடம் பேசவிடாமல் செய்து உள்ளே அமரச்
செய்துவிட்டார்.

சற்று நேரத்தில் நாங்கள் இருந்த இடத்திற்கு,நெற்றியில்
விபூதி பட்டை சந்தன பொட்டுடன் ஒருவர் வந்தார்.
”எங்கிருந்து வருகிறீர்கள்” என்று எங்களிடம் கேட்டார்.
கடலூரிலிருந்து என்று சொல்லாமல் சென்னையிலிருந்து
என்று சொன்னேன்.

உடனே ‘யாருக்கு நாடி சோதிடம்பார்க்கவேண்டும்?’
என்றார். நான் திரு ஷெனாய்அவர்களைக்காட்டியதும்,
அவரிடம் ஒரு தாளில் கைரேகை வைக்க சொல்லி
அவருடைய பெயரையும், பிறந்த ஊரையும் மற்றும்
பிறந்த தேதியையும் கேட்டார்.

‘அது எதற்கு?’ என்று நான் கேட்டவுடன்,“சார்
எங்களிடம் உலகத்தில் பிறந்த அனைவருடைய
விவரங்களும் உள்ள பல்லாயிரக்கணக்கான
ஓலைகள்உள்ளன.இவர் பிறந்த தேதியில் அநேகம்
பேர்பிறந்திருக்கலாம் அதனால் அவருடைய விவரம்
உள்ள நாடியை(ஓலையை) கண்டறிந்து எடுக்க
இந்த விவரம் வேண்டும்’ என்றார்.

அவர் கேட்ட விவரத்தை கொடுத்து, திரு ஷெனாய்
அவர்கள் கைரேகையைப்பதித்ததும், ‘உங்களது
நாடியைப்பார்க்க மொத்தம் ரூபாய் 100 ஆகும்.
இப்போது முன் பணமாக ரூபாய் 60 கொடுங்கள்.
பாக்கியை பிறகு தரலாம். நாடி பார்த்து ஏதேனும்
சாந்தி அல்லது பரிகாரம் செய்யவேண்டும் என்று
வந்தால் அதன் விவரம் அறிய அதற்கு தனியாக
பணம் தர வேண்டியிருக்கும்’ என்றார்.

சரி என சொல்லி அவர் கேட்ட பணத்தை கொடுத்ததும்
திரு ஷெனாய் அவர்களை ‘நீங்கள் மட்டும் உள்ளே
வாருங்கள்’ என்றார். உடனே நான் அவருக்கு தமிழ்
சரியாக பேச வராது. அதனால் நானும் கூட வருகிறேன்’
என்றேன். சற்றே தயக்கத்தோடு என்னையும் உள்ளே
செல்ல அனுமதித்து அந்த வீட்டிற்கு பின்னே
அழைத்து சென்றார்.

அப்படி செல்லும்போது, எனது தூரத்து உறவினர்
(அப்போது தஞ்சை மாவட்டத்தில் காவல் துறை
கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆய்வாளாராக
இருந்தவர்)ஒருவர் எங்களைக்கடந்து
செல்வதைப்பார்த்தேன்.ஆனால் அவர்
என்னைப்பார்க்கவில்லை.

அவரைப்பார்த்ததும் எனக்கு சற்றே நம்பிக்கை வந்தது.
காரணம் ஒரு மாவட்ட காவல் துறை அலுவலரே அங்கு
வருகிறார் என்பதால்.

அந்த வீட்டிற்கு பின் உள்ள தோட்டத்தில், திறந்த வெளி
குடிசை போன்ற அமைப்பில் தரையில் சிமெண்ட்
போடப்பட்டு, சின்ன சின்ன வட்டமான இடத்தில்
நான்கைந்து அமரும் இடங்கள் இருந்தன. உட்காருவதற்கு
நாற்காலிகளும் இருந்தன. அவற்றில் ஒன்றைத்தவிர
மற்ற இடங்களில் எங்களைப்போன்று வந்தோர்
அமர்ந்திருக்க,அவர்களிடம் பனை ஓலை சுவடிகளுடன்
அந்த சோதிட நிலையத்தின் ஊழியர்களும்(சோதிடர்கள்)
அமர்ந்து, அதை படித்து காட்டிக்கொண்டிருந்தனர். எல்லா
இடங்களிலும் வாடிக்கையாளர் ஒருவர் மட்டுமே இருக்க,
விதிவிலக்காக நாங்கள் இருவர் சென்று,காலியாக இருந்த
குடிலில் அமர்ந்தோம்.

அப்போது நான் கேட்டேன்.‘சோதிட நிலையத்தின்
உரிமையாளரான தலைமை சோதிடர் வந்து நாடி
படிக்க மாட்டாரா என்று?’எங்களை அழைத்து சென்ற
அந்த‘குட்டி’ சோதிடர் நான் ஏதோ கேட்கக்கூடாத
கேள்வியைக்கேட்டதுபோல் என்னைப்பார்த்து,‘அய்யா
அவர்கள், எல்லோருக்கும் வரமாட்டார். முக்கிய
பிரமுகர்களாயிருந்தால்(V.I.Ps) மட்டும் அவரது
அறையில் நாடி பார்ப்பார். மற்றவர்களுக்கெல்லாம்
எங்களைப்போன்ற அனுபவம் உள்ளவர்கள் தான்
நாடி பார்ப்போம்’ என்றார்.

நாங்கள் முக்கிய பிரமுகர்கள் இல்லை என்பதை
அவர் சொல்லாமல் சொல்லிவிட்டார்!

பிறகு அவர் ‘சார் நீங்கள் தந்த விவரங்களை வைத்து
உள்ளே சென்று Index நாடி எடுத்து வருகிறேன்.
பொறுத்திருங்கள்’ என்றார்.

அது எதற்கு என்றதும், ‘என்னிடம் நீங்கள்
எங்கே வேலை பார்க்கிறீர்கள்?’ என்றார். ‘வங்கியில்’
என்றதும், ‘உங்கள் வங்கியில் சேமிப்பு அல்லது
நடப்பு கணக்கு எண்ணை சொன்னதும், Index Register ல்
பார்த்து கணக்கை எடுப்பது இல்லையா? அதுபோல்தான்
இதுவும்’ என சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.

நாங்கள் அவரது வருகைக்காக காத்திருந்தோம்.


தொடரும்