செவ்வாய், 9 அக்டோபர், 2012

வாடிக்கையாளர்களும் நானும் 8




ஒரு நாள் மதியம் வங்கிக் கிளையில் அமர்ந்து காலையில்  
ஆய்வுக்கு சென்று வந்த பண்ணைகள் பற்றிய எனது 
அறிக்கையை தயார் செய்து கொண்டு இருந்தேன். அப்போது 
கிராமவாசி ஒருவர் தயங்கித் தயங்கி வங்கிக்குள் வந்தார்.

அவர் Counter அருகே வந்ததும் அவர் விவசாயி போல் 
தோற்றமளித்ததால் ‘என்ன வேண்டும்?” எனக் கூட கேட்காமல், வழக்கம்போல் அவரிடம்என்னைக்காட்டி அவரைப் போய்  
பாருங்கள் என என்னிடம் அனுப்பிவிட்டார்கள்.

அவர் நேரே என்னிடம் வந்ததும், அவரை வரவேற்று 
உட்கார சொல்லி,அவருக்கு ஏதாவது விவசாயக் கடன் 
தேவையா   எனக் கேட்டேன். அவர் அதெல்லாம் வேண்டாங்க. 
இதைப்பாருங்க. என்று தயங்கியபடி கையில் வைத்திருந்த 
பையிலிருந்து ஒரு கத்தை தாட்களை என்னிடம் நீட்டினார்.

அவைகளை வாங்கிப் பார்த்தபோது,அவைகள் பாரத ரிசர்வ் 
வங்கியால் வெளியிடப்பட்ட குறிப்பிட்ட காலத்தில்
முதிர்வடையைக்கூடிய பத்திரங்கள்(Bonds). அந்த பத்திரங்கள் 
முதிர்ச்சி காலம் முடிந்து, மூன்று ஆண்டுகள் ஆகியிருந்தன.
பத்திரங்களின் முதிர்வுத்தொகை மட்டும் ரூபாய் 15,000 க்கு 
மேல் இருக்கும்.

நான் அவரிடம், ‘இந்த பத்திரங்களை எங்களிடம் ஏன் 
தருகிறீர்கள்?இவைகள் முதிர்ச்சி அடைந்தவுடன் சென்னை 
ரிசர்வ் வங்கிக்கு அல்லவா அனுப்பி பணத்தை 
பெற்றிருக்கவேண்டும். இப்போது வந்து எங்களிடம்  
கொடுத்தால் நாங்கள் என்ன செய்வது?’ என்றேன்.

அதற்கு அவர் சார். இந்த பத்திரங்களை வருவாய்த்துறை 
ஆய்வாளரும்(Revenue Inspector), வட்டாட்சியரும் (Tashildar) 
சில ஆண்டுகளுக்கு முன்எங்கள் ஊருக்கு வந்து வாங்கச்
சொல்லி கட்டாயப்படுத்தியால் வாங்கும்படி ஆகிவிட்டது. 
இந்த பத்திரங்களை வாங்க சொன்னவர்கள் அது எப்போது
முதிர்ச்சி அடையும் என்றோ, பணத்தை எப்போது 
திரும்பப்பெற என்ன செய்யவேண்டும் என்றோ 
சொல்லவில்லை.நானும் இந்த பத்திரங்கள் வந்ததும் வாங்கி 
அப்படியே பெட்டியில் வைத்துவிட்டேன்.

இன்று தற்செயலாக இதைப் பார்த்ததும் என்ன செய்வது 
என்று தெரியாததால் ஏதாவதொரு வங்கியில் கேட்கலாமென்று நினைத்தபோது எனக்குத்தெரிந்த ஒருவர் உங்கள் வங்கியின் 
பெயரை சொன்னதால் இங்கு வந்தேன். எனக்கு உங்கள் 
வங்கியில் கணக்கு இல்லை. இருந்தாலும் நீங்கள்தான் இந்த 
பணத்தைப் பெற்று தரவேண்டும்’என்றார்.

கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை அரசு அதிகாரிகளின் 
வற்புறுத்தலால் எங்கு முதலீடு செய்கிறோம் எனத்தெரியாமல் 
கட்டிவிட்டு அதை திரும்பப்பெற அலையும் அவரைப் பார்க்க
எனக்கு பரிதாபமாக இருந்தது.

இன்றைக்கும் அரசு, அது வெளியிடும் பத்திரங்களையும் 
தேசியசேமிப்பு பத்திரங்களையும் தனது வருவாய்த்துறையின் 
ஊழியர்கள் மூலம் விவசாயிகளையும் கிராம மக்களையும் வற்புறுத்தி/துன்புறுத்தி விற்பனை செய்கிறது என்பது தான் 
வேதனையான செய்தி.

(இது இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாக நடக்கிற ஒன்றுதான்.
இது பற்றி நான் 15/11/2009 சிவபூஜையில் கரடிஎன்ற
தலைப்பில் ஒரு நிகழ்வு பற்றி எழுதும்போது குறிப்பிட்டு 
இருக்கிறேன்.)

அந்த பணி எங்களுடைய வங்கிப்பணி  அல்ல என்றாலும், 
அந்தவணிக நடவடிக்கை (Transaction) எந்த வகையிலும் எங்கள் 
வங்கிக்கு உபயோகம் இல்லை என்றாலும் அவருக்கு உதவ நான் எண்ணினேன் அது எனது (களஅலுவலர்) பணி இல்லை என்ற
போதிலும். நமது வங்கியை நாடி வந்துள்ளாரே அதற்காவது
 உதவவேண்டும் என நினைத்தேன்.

அவரிடம் சொன்னேன். நான் ஒரு கடிதம் எழுதி தருகிறேன். 
அதைநீங்கள் வெளியே சென்று தட்டச்சு செய்து சென்னை 
ரிசர்வ் வங்கிக்கு பதிவு அஞ்சல்மூலம் அனுப்புங்கள். அவர்கள் 
உங்களுக்கு அந்த முதிர்வடைந்த தொகையை வரைவு(கேட்பு)
காசோலை (Demand Draft)  மூலம் அனுப்புவார்கள். என்றேன்.

உடனே அவர்,’சார். நீங்களே இங்கேயே தட்டச்சு செய்து 
கொடுத்தால்நன்றாக இருக்கும்.நான் இன்றே அஞ்சலில் 
அனுப்பி விடுவேன்.என்றார்.

உதவி செய்ய முடிவெடுத்த பின், மாட்டேன் என 
சொல்லமுடியாததால்,ரிசர்வ் வங்கிக்கு, பத்திரம் 
முதிர்வடைந்தபோது ஒரு சில காரணங்களால் தொகையைத் 
திரும்பப்பெற இயலவில்லை என்றும். முதிர்வடைந்த 
தொகையை தருமாறு கேட்டு கடிதம் எழுதி எங்கள் வங்கியிலேயே
தட்டச்சு செய்து அவரிடம் கொடுத்து அதை அந்த பத்திரங்களோடு
இணைத்து பதிவு அஞ்சலில் அனுப்ப சொன்னேன். 

அதோடு அவரைப்பற்றி மறந்தேவிட்டேன். ஆனால் நான் 
செய்த அந்த சிறு உதவி, வங்கிக்கு ஒரு நல்ல 
வாடிக்கையாளரைப் பெற்றுத் தரப்போகிறது என்று அப்போது 
எனக்குத் தெரியவில்லை.    






 தொடரும்


 

வெள்ளி, 5 அக்டோபர், 2012

வாடிக்கையாளர்களும் நானும் 7





பம்ப் செட்கடன் பெற்றிருந்த இன்னொரு வாடிக்கையாளரின்   தோட்டத்திற்கு ஆய்வுக்கு சென்றபோது எனக்கு ஏற்பட்ட 
அனுபவம் வேறு வகையானது.

நான் சென்றபோது அந்த வாடிக்கையாளர் தோட்டத்தில் 
இல்லை.அவரது வயதான தாயார் மட்டும்தான் இருந்தார். 
அந்த வாடிக்கையாளர் அவ்வளவு வசதியானவர் இல்லை 
என்பது அவரது வீட்டைப் பார்த்ததும் தெரிந்துகொண்டேன்.

நான் எங்கிருந்து வருகிறேன் என சொல்லிவிட்டு பம்ப் செட் வைக்கப்பட்டிருந்தகிணற்றை காட்டுமாறு அவரது தாயாரிடம் 
சொன்னேன். அவரும் கூட வந்து அது பொருத்தப்பட்டு இருந்த 
கிணற்றை காட்டினார்.அந்த இறைப்பானில் (Pump) 
பொறிக்கப்பட்டு இருந்த வரிசை எண்ணும் (Serial Number), 
நாங்கள் கடன்கொடுத்தபோது கடையில் தரப்பட்ட 
விலைப்பட்டியலில் (Invoice) கொடுக்கப்பட்டு இருந்த வரிசை 
எண்ணும் ஒன்றா என்பதை சரி பார்த்துவிட்டு, அவரிடம் 
அங்கு பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் பற்றி விசாரித்து 
பேசிக்கொண்டு இருந்தேன்.

எனக்குத்தேவையான விவரங்கள் கிடைத்ததும் அவரிடம்,
சரிங்கம்மா. நான்வருகிறேன். உங்கள் மகன் வந்தால் 
வங்கியிலிருந்து கள அலுவலர் (Field Officer)வந்தார்.என்று 
சொல்லுங்கள். என்றேன். 

உடனே,’சார்.கொஞ்சம் இருங்கள்.எனக்கூறி அவர் வீட்டின் 
உள்ளே சென்றார். திரும்ப வெளியே வந்து சார். உங்களுக்கு 
காப்பி தரலாமென பார்த்தால் பால் இல்லை. வரக்காப்பி
சாப்பிடுகிறீர்களா?’ என்றார் அன்புடன்.

வரக்காப்பி என்பது பால் சேர்க்காத வெறும் சர்க்கரை போட்ட
காப்பி வடிசாறு (Decoction). (இதை கட்டங்காப்பி என்றும் 
கேரளாவில் சொல்வதுண்டு.)

எனக்கு அது சாப்பிட்டு பழக்கம் இல்லையாதலால், அன்போடு 
அதைமறுத்துவிட்டு கிளம்ப யத்தனித்தேன். உடனே அவர் 
கொஞ்சம் இருங்கள்சார். எனக் கூறிவிட்டு உள்ளே சென்றார். 

எதற்காக இருக்க சொல்கிறார் என நினைத்துக்கொண்டு 
இருந்தபோது, உள்ளிருந்து வந்த அவர் கையில் 5 ரூபாய் 
நோட்டு இருந்தது. அதை என்னிடம் நீட்டி, சார். 
இந்தாருங்கள்.என்றார்.

அவர் அவ்வாறு திடீரென ஐந்து ரூபாய் நோட்டை நீட்டியதும் 
எனக்கு அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. 
கிராமப்புறங்களில்ஆய்வுக்கு வருபவர்களுக்கு அன்பளிப்பு 
என்ற பெயரில் சிலர் பணத்தைதருவதுண்டு. ஆய்வுக்கு 
செல்லும் சிலர் அதை எதிர்பார்ப்பதும் உண்டு.

ஒருவேளை எனக்கும் அவ்வாறு தருகிறாரோ என்று 
நினைத்து இது எதற்குஅம்மா? எனக்கு வங்கியில் நல்ல
சம்பளம் தருகிறார்கள். நான்என் பணியைத்தான் செய்தேன். 
எதையும் எதிர்பார்த்து அல்ல. என்றுசொன்னேன்.

அய்யய்யோ. தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள் சார். 
உங்களுக்கு பால்போட்டு காப்பி தரமுடியல்ல.அதான் நீங்க 
கடையிலே காப்பி குடிப்பதற்கு இதைத் தருகிறேன்.என்றார்.

நான் அவரிடம்.அதெல்லாம் வேண்டாம் அம்மா. உங்கள் 
உபசரிப்புக்குநன்றி. நீங்கள் காப்பி கொடுக்க நினைத்ததே 
எனக்கு காப்பி குடித்ததுபோல் ஆகிவிட்டது. இந்த பணத்தை 
நீங்கள் வங்கியில் வட்டிக்கு பணம் கட்ட உபயோகித்து 
கொள்ளுங்கள். எனக் கூறிவிட்டு விடை பெற்றேன்.

(அப்போது அந்த கடனுக்கு அவர்கள் கட்டவேண்டிய 
வட்டித்தொகை ஆண்டொன்றுக்கு ரூபாய் 135. அதாவது 
ஒரு மாதத்திற்கு ரூபாய் 11.25 அதாவது நான் காஃபி 
குடிப்பதற்காக அவர் கொடுத்த பணம் கிட்டத்தட்ட
கட்டவேண்டிய மாத வட்டியில் பாதித்தொகை.)   

அது கையூட்டு அல்ல என்பது தெரிந்ததால் அவ்வாறு 
அவர் பணம் கொடுத்ததை நான் தவறாக நினைத்து 
கோபப்படவில்லை. ஏனெனில்வீட்டுக்கு வந்தவர்களை 
காப்பி கொடுத்து உபசரிக்க முடியவில்லையே என்பதால்தான் 
அவ்வாறு செய்து இருக்கிறார் என்பதை புரிந்துகொண்டேன்.   

அப்போதிருந்த விலைவாசியில் ஐந்து ரூபாய் என்பது 
அவருக்கு பெரிய தொகைதான்.ஏனெனில் அப்போது நகர்ப்புற 
உணவு விடுதிகளில் காஃபியின் விலை வெறும்  
20 காசுகள்தான். அவர் கொடுத்த பணத்திற்கு 25 காஃபிகள்
சாப்பிடலாம். ஆனாலும் விருந்தோம்பலுக்கு விலை 
உண்டா என்ன?

கிராமப்புறங்களில் சிலர் வெகுளிகளாகவும்,வந்திருப்பவர்களை 
அவர்கள் அலுவலக ரீதியாக வந்திருந்தாலும், விருந்தினர்கள் போல்நினைத்து உபசரிக்கும் பழக்கம் உள்ளவர்களாகவும் 
இருக்கிறார்கள் என்பதை அப்போது கண்டேன்.

எனக்கு கிடைத்த அடுத்த அனுபவம் இதைவிட சுவாரஸ்யமானது.
அது அடுத்த பதிவில்!


தொடரும்

திங்கள், 1 அக்டோபர், 2012

வாடிக்கையாளர்களும் நானும் 6



அந்த பண்ணைக்கு சென்று திரும்பிய பின், நான் யாருக்கும்
என்ன பயிர் / இரகம் பயிரிடுவது என்பது பற்றி  ஆலோசனை
சொன்னது இல்லை. கடை விரித்தேன் கொள்வாரில்லை.
கட்டிவிட்டேன் என்று வள்ளலார் சொன்னதுபோல் நானும்
எனது ஆலோசனையைக் கேட்க ஆள் இல்லாததால், அதைத்
தொடரவில்லை.

எங்களது வங்கியில் தலைமை அலுவலகத்தில் இருந்த
வேளாண்மை நிதித்துறை ஒவ்வொரு பயிருக்கும் ஒரு ஏக்கரில்
ஒரு பயிரை விளைவிக்க என்ன செலவாகும் என கணக்கிட்டு,
அதில் எவ்வளவு கடனாகத் தரலாம் என நிச்சயித்து கிளைகளுக்கு
அறிவித்து இருந்ததால் என் போன்ற கள அலுவலகர்களின் பணி
சுலபமாக இருந்தது.

வயலுக்கு சென்று கடன் விண்ணப்பிப்போர் கொடுத்த தகவல்
சரியா என சரிபார்த்து விளைவிக்கப்பட்டிருக்கும் பயிருக்குத்
தகுந்தாற்போல் கணக்கிட்டு கடன் தொகையை சிபாரிசு செய்ய வேண்டியதுதான்.

இதன் காரணமாக நான் படித்ததையும்,தேசிய விதைக் கழகத்தில் பணியாற்றியபோது தெரிந்துகொண்டதையும் பகிர்ந்துகொள்ள
வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. இன்னும் சொல்லப்போனால்
வங்கியில் பணியாற்றிய 34 ஆண்டுகளில் சுத்தமாக நான் படித்த வேளாண்மை தொழில் நுட்பத்தை மறந்தே போனேன் என்பதுதான்
உண்மை. நான் கூட விளையாட்டாக சொல்வதுண்டு என்னால்
சோளம்(Sorghum) எது, கரும்பு(Sugarcane) எது என்று கண்டுபிடிக்க
முடியாது என்று?(ஏனெனில் இரண்டுமே ஆரம்ப கட்டத்தில் பார்க்க 
ஒன்று போல் இருக்கும்,)

எனக்கு ஏற்பட்ட இன்னொரு அனுபவம் வேறொரு பாடத்தைக்
கற்றுத்தந்தது.

எங்கள் வங்கியில் பம்ப் செட் கடன் பெற்றவர்களின்
பண்ணைகளுக்கு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சென்று
பம்ப் செட் இருக்கிறதா எனப் பார்த்துவிட்டு அந்த விவசாயியின்
வருமானம் அதை நிறுவியபின் எவ்வளவு உயர்ந்துள்ளது
என்பதை கள அலுவலர்கள் ஆய்வு செய்து அறிக்கை
தரவேண்டும். .

அதன்படி ஒரு கிராமத்தில் இருந்த ஒரு விவசாயிக்கு
கொடுத்திருந்த பம்ப் செட்டை பார்க்க சென்றிருந்தேன். அந்த
விவசாயியின் தோட்டம் இருந்த இடம் தெரியாததால், அந்த
கிராமத்தில் இருந்த ஒருவரிடம் விசாரித்தேன்.

உடனே அவர் நான் கேட்டதற்கு  பதில் சொல்லாமல்
நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?’ என்று கேட்டார். நான்
அவரிடம் சிண்டிகேட் வங்கியிலிருந்து வருகிறேன்
என்று சொல்லிவிட்டேன்.

உடனே அவர் உங்கள் பாங்கில் அவர் கடன் வாங்கி தவணை
கட்டலைங்களா?’ என்று கேட்டார். நான் அப்போது நினைத்தேன்
நான் வங்கியிலிருந்து வருகிறேன் அவரிடம் என
சொல்லியிருக்கக்கூடாது என்று.

பொதுவாகவே நம் எல்லோருக்கும் மற்றவர்களைப்பற்றி
அறிந்துகொள்ளும் ஆர்வம் (Inquisitiveness) இருக்கும். அதுவும்
கிராமத்தில் கேட்கவே வேண்டாம்.      

அதெல்லாம் இல்லைங்க. அவரது தோட்டத்தைப் பார்க்க
வந்தேன். அவரது தோட்டம் எது என்று சொல்லுங்கள். என்றேன்.  
நான் சொன்ன பதிலில் அவருக்கு நம்பிக்கை இல்லை. இருப்பினும்
வேறு வழியின்றிஅந்த தோட்டம் இருக்கும் இடத்தை சொன்னார்.

அவர் சொன்னபடியே அந்த தோட்டத்தை அடைந்தபோது அந்த
விவசாயி அங்கு இருந்தார். அவரிடம் என்னை
அறிமுகப்படுத்திக்கொண்டு நான் அங்கு வந்த விஷயத்தை
சொன்னேன். அவர் கேட்ட முதல் கேள்வி எப்படி நீங்கள் என்
தோட்டத்தை கண்டுபிடித்தீர்கள்?’ என்பதுதான்.

நான் வழி விசாரித்து வந்தேன். என்றதும், அவர் கேட்ட
அடுத்த கேள்வி வங்கியிலிருந்து வருகிறேன் என்று
சொன்னீர்களா?’ என்பதுதான்.

ஆமாம். என்று சொன்னதும் அதுவரை சிரித்த முகத்தோடு  
இருந்த அவர். சிறிது கோபத்தோடு, ஏன்.சார். நான்தான் கடன்
வாங்கும்போதே சொன்னேனே. தவணையை ஒழுங்காக கட்டிவிடுவேன்.வங்கியிலிருந்து யாரும் எனது வீட்டிற்கோ
அல்லது தோட்டத்திற்கோ வரவேண்டாம்.நோட்டீசும் அனுப்ப
வேண்டாமென்று.

நான் ஒழுங்காய் தவணை செலுத்திக் கொண்டு இருக்கும்போது
ஏன் தேடி வந்தீர்கள். நான் வாங்கிய கடனோ வெறும்
1500 ரூபாய்கள் மட்டும்தான்.ஏதோ இலட்சக்கணக்கில் கடன்
வாங்கி வங்கிக்கு கட்டாததுபோல் வீடு தேடி வந்துவிட்டீர்களே.
என்றார்.

நான் அவரிடம் பொறுமையாக, சார். நீங்கள்  கடன் வாங்கும்போதே சொல்லியிருப்பார்கள். உங்கள் கடன் நிலுவையில் இருக்கும் வரை ஆறுமாதத்திற்கு ஒருமுறை எங்கள் வங்கியின் அலுவலர்கள்
உங்கள் இடத்திற்கு வந்து பம்ப் செட் இருக்கிறதா என பார்ப்பார்கள்
என்று. அந்த நிபந்தனையை ஏற்றுக் கொண்டு நீங்களும் கையொப்பம் இட்டிருக்கிறீர்கள். அதனால்தான் நான் வந்திருக்கிறேன்.என்றேன்.
(வங்கிப்பணியில் நான் சேருமுன்பே கொடுக்கப்பட்ட கடன் அது)

எனது பதிலில் சமாதானம் அடையாத அவர் சரி நீங்கள் வந்த
வேலையைப் பாருங்கள். நான் நாளை வங்கிக்கு வருகிறேன்.
என்றார்.

நான் எனது  பணியை முடித்துவிட்டு இருப்பிடம் திரும்பினேன்.
பின்பு யோசித்ததில் அவர் கோபம் சரி என்றே தோன்றியது.
காரணம் அப்போது (1969-70) கடன் வாங்குவது ஏதோ கௌரவக்
குறைவு போல் கருதப்பட்டது.(ஆனால் இப்போது வங்கியில் கடன்
வாங்குவது தான் கௌரவமாக/உரிமையாக கருதப்படுகிறது!)

தான் கடன் வாங்கியது ஊரில் ஒருவருக்குத் தெரிந்தால்
அவர் மூலம் எல்லோருக்கும் தெரிந்து தன்னை ஒரு மாதிரியாகப்
பார்ப்பார்களே என அவர் நினைத்திருக்கலாம்.

சொன்னபடியே அவர் மறுநாள் வங்கிக்கு வந்தார். வந்தவுடன்
வட்டியையும் சேர்த்து எவ்வளவு கட்டவேண்டும்?’ எனக் கேட்டார். கணக்கிட்டு சொன்னவுடன் நான் முழுத்தொகையும் கட்டி
என் கணக்கை முடித்துக்கொள்கிறேன். என்று சொன்னதும்
எனக்கு தூக்கிவாரிப் போட்டது.

நான் உடனே அவரிடம் நீங்கள் இப்போது கணக்கை முடிக்கத் தேவையில்லை. நீங்கள் தவணை முறையில் இன்னும் நான்கு
ஆண்டுகள் கட்டலாம். என்றேன். நான் எவ்வளவோ எடுத்து
சொல்லியும் அவர் விடாப்பிடியாக முழுத் தொகையையும்
கட்டிவிட்டு திரும்பிவிட்டார்.

நாம் அவரைப்பற்றி விசாரித்ததால்தானே அவர் கணக்கை முடித்துக்கொண்டார் என எண்ணியபோது, எனக்கு என்னவோ
போல் ஆகிவிட்டது.

வாடிக்கையாளர்களில் சிலர் தொட்டால் சிணுங்கி
போன்றவர்கள் என்பதை உணர்ந்து கொண்டதால், அந்த
நிகழ்வுக்குப் பிறகு கடன் பெற வருபவர்களிடம் வங்கியின்
விதிகளை எடுத்து சொல்லி வங்கி அலுவலர்கள் அவர்கள்
இடத்திற்கு வருவது அவர்களுக்கு எந்த விதத்திலும் கௌரவக்
குறைச்சல் இல்லை என்பதை புரிய வைத்தேன்.   

தொடரும்