திங்கள், 8 ஏப்ரல், 2013

வாடிக்கையாளர்களும் நானும் 41



நான் பணியாற்றிய ஊரில் இருந்த வங்கியாளர்கள் மன்றத்தில் (Bankers Club) அந்த ஆண்டு நடந்த மன்ற ஆட்சிக் குழு தேர்தலில் செயலாளர் பதவிக்கு யாரும் போட்டியிட விரும்பாததால், புதிதாக மாற்றலாகி வந்த ஒருவரை பொறுப்பாளர்களாக நியமிக்கலாம் என முடிவெடுத்து அப்போதுதான் மாற்றலாகி அந்த ஊருக்கு வந்திருந்த என்னை, நான் போட்டியிடாதபோதும் செயலாளராக ஆக்கிவிட்டார்கள்.

நான் அந்த பொறுப்பை ஏற்றவுடன் கவனித்தேன் மன்றத்தின் நிதி நிலை மோசமாக இருந்ததை. வங்கியாளர் மன்றத்தின் நிதி நிலையை பெருக்கவும் அதை சுறுசுறுப்பாக இயங்கவும்  சில யோசனைகளை மன்ற குழு முன் வைத்தேன்.

அதுவரை அந்த ஊரில் இருந்த வங்கி கிளை மேலாளர்களில் பலர் மன்றத்தில்  உறுப்பினராக சேராமல் இருந்தார்கள். முதலில் அனைவரையும் உறுப்பினராக்குவது, மன்ற உறுப்பினராக கிளை மேலாளரை மட்டும் சேர்க்காமல் அந்த வங்கியின் கிளைக்கே உறுப்பினர் தகுதி நிலை (Membership Status) தருவது, அதன் மூலம் மன்றத்தின் கூட்டங்களில் கிளை மேலாளர்கள் மட்டுமல்லாமல் மற்ற வங்கி அலுவலர்களையும் கலந்து கொள்ள அனுமதிப்பது, யார் வந்தாலும் வராவிட்டாலும் ஓவ்வொரு மாதமும் 15 ஆம் நாள் மன்றக் கூட்டத்தை பொருளாளர் பதவி வகிக்கும் கிளையில் நடத்துவது போன்ற எனது கருத்தை மன்ற  ஆட்சிக்குழு ஏற்றுக்கொண்டது. அதன்படி எல்லோரையும் உறுப்பினராக சேர்த்து மாதாமாதம் ஒழுங்காக கூட்டத்தை நடத்தி வந்தோம்.

அந்த கூட்டங்களில் பெயரளவுக்கு வெறுமனே கூடி காபி டிஃபன் சாப்பிட்டு திரும்பாமல், வங்கியாளர்களுக்கு இருந்த பொது பிரச்சினைகள் (அரசியல்வாதிகள் லோன் மேளா என்ற பெயரில் வங்கி மேலாளர்களை அவர்கள் விரும்பும் கட்சிக்காரர்களுக்கு கடன் கொடுக்க கட்டாயப்படுத்தி தொந்தரவு செய்வது போன்றவை அப்போது இருந்த பிரச்சினைகள்.) பற்றி விரிவாக பேசி அனைவரின் கருத்தையும் கேட்டு, எப்படி அந்த பிரச்சினையை எதிர்கொள்வது என்பது பற்றி என்றெல்லாம் விவாதிக்க ஆரம்பித்தோம்.

வங்கியாளர்கள் மன்றத்தின் கூட்டத்தில் அனைவருக்கும் உபயோகமான விஷயங்கள் குறித்து முடிவெடுக்க ஆரம்பித்ததால் கூட்டத்திற்கு வருவோர் எண்ணிக்கை கூடியது என்பது உண்மை.

ஒரு கூட்டத்தில் நான் சொன்னேன். வங்கி வணிகத்தை பெருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் நம்மில் பலர் மற்றவர்களுக்கு தெரியாமல் வாடிக்கையாளர்களை தம் பக்கம் இழுக்க முயற்சிப்பது ஒரு சில வாடிக்கையாளர்களுக்கு சௌகரியமாக ஆகிவிட்டது.

நாம் அனைவரும் தேவையில்லாமல் போட்டி போடுவதால், ஒருவரே பல வங்கிகளில் அதே சொத்தின் மேல் கடன் வாங்கி கட்டாமல் நமக்கு சிக்கலை ஏற்படுத்துகிறார்கள். எனவே இனி நாம் ஒவ்வொரு கூட்டதிலும் நம் வங்கிக்கு புதிதாய் வந்துள்ள வாடிக்கையாளர் பற்றி சொல்வோம். அதன் மூலம் நம்முடைய வாடிக்கையாளர் யார் என எல்லோருக்கும் தெரிய வாய்ப்புண்டு. அதன் மூலம் ஒரு வங்கியின் வாடிக்கையாளர் வேறொரு வங்கியில் கடன் பெறுவதை தடுக்க முடியும். என்றேன்.

ஆனால் எனது கருத்தை சிலர் ஏற்றுக் கொள்ளவில்லை.இருப்பினும் நான் மட்டும் எங்கள் கிளையின் புதிய வாடிக்கையாளர் பற்றி மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் வழக்கத்தை கொண்டிருந்தேன். அதுவே எனக்கு அந்த காகிதப்பை தயாரிக்கும் வாடிக்கையாளர்கள் விஷயத்தில் பின்னால் உதவியது.

காகிதப்பை தயாரிக்கும் அந்த அச்சகத்திற்கு ஆய்வுக்கு சென்ற அன்று மாலையே  வங்கியாளர்கள் மன்றம் (Bankers Club) கூட்டம் இருந்ததால், எனது வழக்கப்படி அந்த கூட்டத்தில் புதிதாய் கடன் கேட்டு எங்கள் கிளைக்கு வந்த அந்த இரு சகோதரர்கள் பற்றியும் அவர்கள் அச்சகம் சென்று வந்ததும் பற்றியும் கூறினேன்.

உடனே ஒரு மேலாளர் அந்த வாடிக்கையார்களின் பெயரையும் அந்த அச்சகத்தின் பெயரையும் கேட்டார். நான் சொன்னதும், அய்யய்யோ. சபாபதி. அவர்கள் எங்கள் வங்கியின் வாடிக்கையாளர்கள். எங்கள் வங்கியில் அவர்களது தொழிற்படு மூலதனத்திற்காக (Working Capital) அவர்களது இருப்பின் மேல் மிகைப்பற்று (Overdraft) பெற்றிருக்கிறார்கள். இரண்டு ஆண்டுகளாக அவர்கள் நிதி நிலை சரியில்லை. வட்டியையும் கட்டவில்லை.

அவர்களது மிகைப்பற்றையும் புதுப்பிக்கவில்லை. அதனால் அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க இருக்கிறோம். நீங்கள் ஏதும் கடன் தந்து விடவில்லையே.’ என்றார்.

இல்லை.இன்று மதியம்தான் அவர்களது அச்சகத்தை பார்வையிட்டு வந்திருக்கிறேன்.என்றேன். 

அதற்கு அவர் அப்படியென்றால் அங்கே சுவற்றில் இரண்டு மூன்று இடங்களில் Hypothecated to என்று எங்கள் வங்கியின் பெயர் கொண்ட பலகை இருந்திருக்குமே. நீங்கள் அதை பார்க்கவில்லையா?’ என்றார்.

அப்படி ஏதும் பலகைகள் இல்லையே.  என்று சொன்னபோது திடீரென மதியம் அந்த வாடிக்கையாளர்கள் நடந்து கொண்ட விதம் நினைவுக்கு வந்தது.

திடீரென ஆய்வுக்கு நாங்கள் அந்த அச்சகத்திற்கு சென்றதை எதிர்பார்க்காத அவர்கள், எங்களை கண்டதும் திகைத்து பின் எங்களுக்கு காபி தந்து காக்க வைத்திருக்கிறார்கள்.  அந்த நேரத்தில் அந்த வங்கியின் பெயர் இருந்த பலகைகளை எடுத்துவிட்டு எங்களுக்காக அச்சு இயந்திரங்களை சுத்தம் செய்வதுபோல் செய்து எங்களை ஏமாற்ற நினைத்திருக்கிறார்கள். நான் என் உள்ளுணர்வுப்படி அவர்களின் நடவடிக்கைகளை சந்தேகப்பட்டது சரிதான் என்று சந்தோஷப்பட்டுக்கொண்டேன்.

அன்று மதியம் நடந்ததை அந்த கூட்டத்தில் விரிவாக சொன்னதும் எல்லோரும் ஒரே குரலில் இன்று நடந்ததை பார்க்கும்போது, செயலாளர் சொன்னது சரிதான்.  இனி நாம் நம்முடைய வாடிக்கையாளர்கள் பற்றிய விவரங்களை பகிர்ந்து கொள்ளாவிட்டால் ஏமாற்றப்படுவது நாமாகத்தான் இருப்போம். என்றார்கள்.

அந்த கூட்டம் முடிந்ததும் அச்சகத்திற்கு கடன் கொடுத்திருந்த வங்கி மேலாளரிடம்,’கவலை வேண்டாம். நான் அவர்களுக்கு கடன் தரமாட்டேன். என சொல்லி வந்தேன்.

மறு நாள் காலை எதிர்பார்த்ததுபோல் அந்த சகோதரர்கள் இருவரும் வங்கிக்கு வந்தனர். சார். எங்கள் தணிக்கையாளர் (Auditor)  ஊரில் இல்லை. அவர் வந்ததும் நீங்கள் கேட்ட சான்றிதழை தந்துவிடுகிறோம். அதற்குள் நீங்கள் கடன் விண்ணப்பத்தைக் கொடுத்தால் அதை நிறைவு செய்து தந்துவிடுவோம். என்றார்கள்.

நான்.அதற்கு முன் நீங்கள் ஒன்று செய்யவேண்டுமே.என்றேன். சொல்லுங்கள். சார். என்ன  செய்யவேண்டும்?’ என்று அவர்கள் கேட்டபோது, நீங்கள் இங்குள்ள வங்கிகளில் உங்களுக்கு கடன் ஏதும் இல்லை என்ற சான்றிதழை (No Dues Certificate) எல்லா வங்கிகளிடமிருந்தும் பெற்று தரவேண்டும். என்றேன்.

அவர்கள் அதை எதிர்பார்க்கவில்லை என்பது அவர்கள் முகத்திலேயே தெரிந்தது.  அதற்கு அவர்கள்,’சார்.இங்கு 21 வங்கிகளின் கிளைகள் உள்ளன. எல்லா கிளைகளுக்கும் சென்று சான்றிதழ் வாங்கி வருவது கடினம் சார். என்றார்கள்.

நானும் விடாப்படியாக, சரி அப்படி என்றால் 5  பெரிய வங்கிகளிடமாவது சான்றிதழ் வாங்கி வாருங்கள். என சொல்லிவிட்டு, 5  வங்கிகளின் பெயரை சொல்லும்போது அவர்கள் கடன் பெற்றிருந்த வங்கியின் பெயரையும் சொன்னேன்.

அந்த வங்கியின் பெயரை சொல்லும்போது அவர்கள் முகம் மாறுவதை கவனித்தேன். உடனே அவர்கள், சார். எங்கள் பேரில் நம்பிக்கை இல்லையா? நாங்கள் எந்த வங்கியிலும் கடன் வாங்கவில்லை.அப்படி இருக்கும்போது ஒவ்வொரு வங்கிக்கும் சென்று No Dues Certificate வாங்கி வருவதென்பது  எங்களுக்கு Delicate ஆக இருக்கிறது. என்றனர்.

நீங்கள் எங்கும் கடன் வாங்கவில்லை என்றால் ஏன் கவலைப்படுகிறீர்கள்? அது சரி. நீங்கள் வேறு எங்கும் கடனே வாங்கவில்லையா?’ என்றேன்.

அவர்கள் உடனே இல்லை. சார். என்றதும், அந்த வங்கியின் பெயரை சொல்லி “அங்கு கூட வாங்க வில்லையா?’ என்றேன். அதற்கு அவர்கள் பதில் சொல்லாமல் இருந்தனர்.

நான் சொன்னேன். நீங்கள் அந்த வங்கியில் மேல் மிகைப்பற்று வாங்கியிருக்கிறீர்கள் என்பதும், கடந்த இரண்டு ஆண்டுகளாக வட்டி கட்டவில்லை என எனக்குத் தெரியும். நீங்கள் நேர்மையாய் வணிகம் செய்பவராய் இருந்தால் முதன் முதல் இங்கு கடன் கேட்டு வந்தபோதே அந்த வங்கியில் உள்ள கடன் பற்றி சொல்லி, அந்த வங்கியை விட்டு ஏன் எங்கள் வங்கிக்கு வர விரும்புகிறீர்கள் என்பதை  சொல்லியிருப்பீர்கள்.

ஆனால் நீங்கள் அதை மறைத்து எந்த வங்கியிலுமே கடன் பெறவில்லை என சொல்லியதிலிருந்தே உங்களது நோக்கம் தெளிவாகத் தெரிகிறது. எனவே உங்களுக்கு கடன் தர நான் தயாராக இல்லை. ஒன்று மட்டும் இளைஞர்களான உங்களுக்கு சொல்வேன். தயைவு செய்து நேர்மையாய் இருங்கள். உண்மையில் நீங்கள் கஷ்டப்பட்டால், உங்கள் வங்கியே மேற்கொண்டு உங்களுக்கு உதவி செய்யும். எனவே நீங்கள் அந்த வங்கிக்கே செல்வது நல்லது. போய் வாருங்கள். என்றேன்.

ஒன்றுமே பேசாமல் இருவரும் எழுந்து சென்றுவிட்டனர். ஆனால் எனக்கோ எங்கள் வங்கிக்கு வர இருந்த ஒரு வாராக் கடன் கணக்கை தவிர்த்த மகிழ்ச்சி.
   

தொடரும்

செவ்வாய், 2 ஏப்ரல், 2013

வாடிக்கையாளர்களும் நானும் 40



அன்று மதியம் கள அலுவலருடன் அந்த வாடிக்கையாளர்கள் கொடுத்திருந்த முகவரிக்கு சென்றேன். நகரின் மய்யப்பகுதியில் நெருக்கடியான தெருவில் இருந்த அந்த முகவரி உள்ள வீட்டைக் கண்டுபிடித்தோம்.அவர்கள் சொன்ன  அந்த அச்சகம் அவர்களது வீட்டின் முதல் தளத்திலேயே இருந்தது.

நாங்கள் சென்றபோது வீட்டில் ஒரு பெரியவர் இருந்தார். அவர் எங்களைப் பார்த்து, என்ன  வேண்டும்?’ என்று கேட்டதும் நாங்கள் அந்த வாடிக்கையாளரின் பெயரைச் சொல்லி, அவர் இருக்கிறாரா? அவரைப் பார்க்கவேண்டும். என்றேன்.

அவர் உடனே அமருங்கள். என சொல்லிவிட்டு உள்ளே சென்றார். சிறிது நேரத்தில் முதல் நாள் சந்தித்த வாடிக்கையாளர்கள் இருவரும் அவருடன் வந்தனர். எங்களைப் பார்த்ததும் அவர்கள் முகத்தில் திகைப்பு. காலையில் வங்கிக்கு வந்து கடன் கேட்டவுடன் அன்றே நாங்கள் ஆய்வுக்கு வருவோம் என எதிர்பார்க்கவில்லை போலும்.

உடனே திகைப்பை மறைத்துக்கொண்டு புன்முறுவலோடு, வாருங்கள் சார். நீங்கள் உடனே வருவீர்கள் என எதிர்பார்க்கவில்லை. அதான் உங்களைப் பார்த்ததும் திகைத்து நின்றுவிட்டோம். எனக் கூறிவிட்டு அருகில் இருந்த பெரியவரை தங்கள் தந்தை என்றும், ஓய்வுபெற்ற தமிழாசிரியர் என்றும் அவர்தான் தாங்கள் வெளியே செல்லும்போது அச்சகத்தை பார்த்துக்கொள்வதாக கூறி அறிமுகப்படுத்தினார்கள்.அவருக்கு வணக்கம் சொல்லிவிட்டு என்ன அச்சகத்தை பார்வையிடலாமா?’ என்றேன்.

உடனே இருவரும் அவசரமாக நீங்கள் வருவீர்கள் என எதிர்பார்க்காததால் அச்சகத்தில் எல்லாம் போட்டது போட்டபடி இருக்கிறது. சிறிது நேரம் அவகாசம் கொடுங்கள். சீர் படுத்திவிட்டு கூப்பிடுகிறோம். அப்போது பார்வையிடலாம். என்றனர்.

அதற்கு நான், அதனாலென்ன. அச்சகம் என்றால் அப்படி இப்படித்தான் இருக்கும். பரவாயில்லை நாங்களும் அச்சு வேலை நடப்பதை பார்த்துவிட்டு போகிறோம். நாங்களும் வேறு இடத்திற்கு செல்லவேண்டும். என்றேன்.

அவர்களில் மூத்தவர், சரி சார். நீங்கள் முதன் முதல் வந்திருக்கிறீர்கள். காபி சாப்பிட்டுவிட்டு  பார்வையிடலாமே?’ என சொல்லிவிட்டு தன் தம்பியைப் பார்த்தார். அவர் உடனே காபி வாங்க வெளியே சென்றார்.

பிறகு அவர் சார். தயவு செய்து பொறுங்கள் இதோ வருகிறேன். எனக் கூறிவிட்டு மேலே சென்றார்.  அவர் சென்ற சிறிது நேரத்தில் மேலே கேட்ட அச்சு இயந்திரத்தின் ஓசை நின்றுவிட்டது. சரி. சுத்தம் செய்வதற்காக நிறுத்திவிட்டார்கள் போல என நினைத்தாலும், என் உள்மனது ஏதோ ஒன்று சரியில்லை என சொல்லியது.

சிறிது நேரத்தில் இளையவர் உணவகத்தில் இருந்து இனிப்பு, காரம் காபியுடன் வந்துவிட்டார். வேண்டாம் என சொல்லியும் வற்புறுத்தி எங்களை சாப்பிட சொல்லி பேசிக்கொண்டே நேரத்தை ஓட்டினார். அவர் செய்ததைப் பார்த்தால் நாங்கள் மேலே செல்வதை சிறிது நேரத்திற்கு ஒத்திப் போடுவதுபோல் தெரிந்தது.. 

சுமார் அரை மணி கழிந்து மேலிருந்து அவரது அண்ணன் வந்து வாருங்கள் சார். அச்சகத்தைப் பார்க்கலாம். என அழைத்து சென்றார். முதல் தளத்தை அடைந்ததும் எல்லாம் துடைக்கப்பட்டு சுத்தமாக இருந்தது. அதுவே எனக்கு அசாதாரணமாகப் பட்டது.

அவர் என் முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தை பார்த்து,’சார். நீங்கள் வரும்போது இடம் சுத்தமாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் மேலே வந்து ஆட்களை விட்டு சுத்தம் செய்ய சொல்லி விட்டு உங்களை அழைத்து வந்தேன்.உங்களை காக்க வைத்தத்தற்கு மன்னிக்கவும்.என்றார்.

பரவாயில்லை. என சொல்லிவிட்டு அங்கிருந்த இயந்திரங்களையும், அங்கு அச்சடிக்கப்பட்டிருந்த காகிதப் பைகளையும் பார்த்துவிட்டு, அவர்களது வந்திருந்த ஆர்டர்களையும் பார்த்தோம்.

பிறகு இதுவரை தினசரி இயக்கத்திற்காக (Daily Operation)   ஏதாவதொரு வங்கியில் நடப்புக் கணக்கு (Current Account) இருக்குமல்லவா?  அந்த வங்கிக் கணக்கின் இருப்புக் கையேடு (Pass Book) காட்டுங்கள் என்றேன்.

உடனே அவசர அவசரமாக சார். நாங்கள் உங்கள் வங்கியில் உள்ள தினசரி சேமிப்புக் கணக்கைத் தவிர வேறு எந்த வங்கியிலும் கணக்கை வைத்திருக்கவில்லை. என்றார்  அவர்.

அதற்கு நான், எப்படி வங்கி கணக்கு இல்லாமல் இருக்கிறீர்கள்? உங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து காசோலை மூலம்  பணம் வந்தால் என்ன செய்கிறீர்கள்?’ என்றேன். அதற்கு அவர், உங்களிடம் சொல்வதற்கென்ன. நாங்கள் காசோலையாக பணம் பெறுவதில்லை. எல்லாமே ரொக்க நடவடிக்கைகள்தான் (Cash Transactions). என்றார்.

அவர் சொன்ன பதில் நம்பும்படியாக இல்லாததால், நான் அவரிடம் நாளை வங்கிக்கு உங்கள்  தணிக்கையாளர் (Auditor) கொடுத்துள்ள சான்றிதழுடன் வாருங்கள். எனக் கூறிவிட்டு திரும்பினேன்.

திரும்பி வரும்போது கள அலுவலர் கேட்டார்.ஏன். சார். Unit  பார்ப்பதற்கு நன்றாகத்தானே போய்க்கொண்டு இருப்பதுபோல் தெரிகிறது. ஆனால் உங்கள் முகத்தைப் பார்த்தால் அதிருப்தியாய் இருப்பதுபோல் தெரிகிறதே?’ என்று.

அதற்கு நான்  சொன்னேன். ஆமாம். ஏனோ அவர்களது நடவடிக்கை மேல்  எனக்கு சந்தேகமாக இருக்கிறது. ஏதோ ஒன்றை இவர்கள் மறைக்கிறார்கள் என நினைக்கிறேன். எனவே தீவிரமாக ஆராயாமல், அதைக் கண்டுபிடிக்காமல் இவர்களுக்கு கடன் தர விரும்பவில்லை. என்றேன்.

அன்று மாலை வங்கியாளர்கள் மன்றம் (Bankers Club) சென்றபோது  அந்த வாடிக்கையாளர் பற்றி நான் சந்தேகப்பட்டது சரிதான் எனத் தெரிந்தது.






தொடரும்

புதன், 27 மார்ச், 2013

வாடிக்கையாளர்களும் நானும் 39



வங்கிக்கு புதிதாய் கடன் கேட்டு வரும் வாடிக்கையாளர்களில் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலோர் வங்கியில் வாங்கும் கடனை நல்லபடியாக தங்களது தொழில் விரிவாக்கத்திற்கு பயன்படுத்தி இலாபம் ஈட்டி பின் வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பிக்கட்டவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாகவே இருப்பார்கள். இது நான் என் அனுபவத்தில் கண்ட உண்மை.

ஆனால் எல்லோருமே அப்படி இருக்கமாட்டார்கள் என்பதால், வங்கியில் மேலாளர்களும், அலுவலர்களும் யாரும் கேட்டவுடன் கடன் தர மாட்டார்கள். கடன் கேட்டு வருபவரைப்பற்றி தீவிர விசாரித்துத்தான் கடன் ஒப்பளிப்பு செய்வார்கள்.

வங்கியில் கடன் கேட்டு வருபவர்கள் வேறு வங்கியில் கடன் வாங்கி திருப்பிக் கட்டாமல் இருந்திருக்கக்கூடும் அல்லது பல்வேறு வங்கிகளில் அதே சொத்தை ஈடாக காட்டி கடன் வாங்கி இருக்கக்கூடும். அப்படிப்பட்டவர்களுக்கு கடன் தந்தால் அவர்கள் திருப்பிக்கட்டமாட்டார்கள் என்பது நிச்சயம்

ஒரு வேளை வாடிக்கையாளரின் கொடுக்கல் வாங்கல் (Dealings) பற்றி சரியாக விசாரிக்காமல் கொடுத்த கடன், வாராக் கடனாக ஆகிவிட்டால் அந்த கடனை ஒப்பளிப்பு செய்த அந்த மேலாளர் மேல் வங்கி நடவடிக்கை வாய்ப்புண்டு. அதனால் தான் கடன் கேட்டவுடன் கடன் கேட்பவர்களின் பின்புலம் தெரியாமல் வங்கி மேலாளர்கள் கடன் தருவதில்லை.

இதனால் சில சமயம் வாடிக்கையாளர்களுக்கு வேண்டுமென்றே மேலாளர்கள் காலம் கடத்துவது போல் தோன்றலாம். ஒரு சிலர், இந்த மேலாளர் எதையோ எதிர்பார்க்கிறார் போல அது தான் வேண்டுமென்றே கடன் தர இழுத்தடிக்கிறார் என்று கூட நினைப்பதுண்டு. (அப்படி எதிர்பார்க்கும் கருப்பு ஆடுகளும் வங்கிகளில் உண்டு என்பதும் உண்மைதான். ஆனால் அவர்களின் எண்ணிக்கை குறைவு என்றே சொல்வேன்.)

தமிழ்நாட்டில் ஒரு கிளையில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது ஒரு நாள் காலை  துடிப்புள்ள இளைஞர்கள் இருவர் என்னைப் பார்க்க வந்தனர்.உருவ ஒற்றுமையில் ஒன்று போலவே இருந்தததால் அவர்கள் சகோதரர்களாக இருக்கூடும் என நினைத்தேன். அவர்களை உட்காரச் சொல்லி வந்த நோக்கம் பற்றி விசாரித்தேன்.

நான் நினைத்ததுபோலவே இருவரும் சகோதரர்கள் தான். அவர்களில் மூத்தவர் தன்னையும் தன் தம்பியையும் அறிமுகப்படுத்திக்கொண்டு, அவர்கள் எங்கள் வங்கியின் வாடிக்கையாளர்கள் என்றும், Pigmy எனப்படும் எங்கள் வங்கியின் தின சேமிப்பு திட்டத்தில் தினம் சேமித்து வருவதாக கூறினார்.

(இந்தியாவிலேயே வங்கிகள் நாட்டுடமையாக்கப்படுவதற்கு முன் வாடிக்கையாளர்களின் வீட்டிற்கு அல்லது தொழிற் கூடங்களுக்கு அவர்கள் விரும்பும் நேரத்திற்கு முகவர்களை அனுப்பி சேமிப்புகளை திரட்டும்  திட்டத்தை தொடங்கிய வங்கி எங்கள் சிண்டிகேட் வங்கிதான் என்பதை இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.)

அவர்கள், ஜவுளி கடைகளில் புடவைகளை வைத்துத்தரும் காகிதப் பைகளை அச்சிட்டுத்தரும் அச்சகம் வைத்திருப்பதாகவும், அவைகளுக்கு நல்ல கிராக்கி இருப்பதால், தொழிலை விரிவாக்கம் செய்ய கடன் வேண்டும் என்றும் சொன்னார்.

நான் உடனே அப்போது வங்கியில் இருந்த தின சேமிப்பு முகவரை (Pigmy Agent) ஐ அழைத்து அவர்கள் தினம் எவ்வளவு தொகை சேமிக்கிறார்கள் அதுவரை அவர்கள் கணக்கில் சேர்ந்துள்ள மொத்த சேமிப்பு எவ்வளவு என்ற விவரங்களைக் கேட்டேன்.  

அவர் தந்த விவரங்கள் மூலம் அவர்கள் ஓராண்டு காலமாக இந்த திட்டத்தில் சேமிக்கிறார்கள் என்பதை தெரிந்துகொண்டேன். பின்பு அவரிடம் அச்சு இயந்திரம் சொந்த பணத்தில் வாங்கினீர்களா? அல்லது வேறு எந்த வங்கியிலாவது கடன் பெற்று வாங்கினீர்களா?’ எனக் கேட்டேன்.

அதற்கு அவர், மய்ய அரசு தொழில் முனைவோருக்குத் தரும் நீண்ட கால கடனைப்பெற்று இயந்திரம் வாங்கி நிறுவியிருக்கிறோம். இதுவரை தொழிற்படு மூலதனத்திற்காக (Working Capital) எந்த வங்கியிலும் கடன் வாங்கவில்லை. கையில் உள்ள பணத்தைக் கொண்டே மூலப்பொருட்களை வாங்கினோம். இப்போது ஆர்டர்கள் அதிகமாக குவிந்துள்ளதால் அதிக மூலதனம் தேவைப்படுகிறது. அதனால்தான் தொழிற்படு மூலதன கடன் வேண்டி உங்களிடம் வந்திருக்கிறோம். கடன் அவசரம் என்பதால் உடனே ஒப்பளிப்பு செய்யவேண்டும்  என்றார்.

உங்களுக்குக் கடன் தரத்தான்  நாங்கள் இருக்கிறோம். ஆனால் உடனே கொடுத்துவிடமுடியாது. நான் உங்களது அச்சகத்திற்கு வந்து நேரில் ஆய்வு செய்து விட்டு மற்றும் உங்களுடைய கணக்கு வழக்குகள், உங்களிடம் காகிதப்பைகள் வழக்கமாக வாங்கும் நிறுவனங்கள் பற்றிய விவரம், அவர்களோடு உள்ள வரவு செலவு கணக்குகள் இதுவரை வேறு வங்கியில் நடப்புக்கணக்கு இருந்தால் அந்தக் கணக்கின் விவரம் போன்றவைகளை ஆராய்ந்து தற்போதுள்ள நிலையில் உங்களுக்கு மேலதிக தொழிற்படு மூலதனம் தேவையென்றால் அவசியம் தருவோம். நீங்கள் கேட்பதுபோல் உடனே கொடுத்துவிடமுடியாது. என்றேன்.

உடனே அவர், எல்லா ஆவணங்களையும் உங்களுக்குத் தருகிறோம். நீங்கள் எப்போது எங்கள் அச்சகத்திற்கு ஆய்வுக்கு வருகிறீர்கள் என்று சொன்னால் நாங்கள் வந்து அழைத்து செல்கிறோம்.என்றார்.

அதற்கு நான், ஆய்வுக்கு வருவது பற்றி தின சேமிப்பு முகவர் மூலம் சொல்லி அனுப்புகிறேன்.நீங்கள் கவலைப்படாமல் போய் வாருங்கள் என அனுப்பி வைத்தேன்.

அவரது பேச்சிலும் நடையிலும் அவசரம் இருந்ததை நான் கவனித்ததை காட்டிக்கொள்ளவில்லை.

அவர்கள் வெளியே சென்றதும், கள அலுவலரிடம் அவர்கள் வந்து சென்றது பற்றி கூறிவிட்டு  இன்று மதியம் நாம் அவர்கள் இடத்திற்கு சொல்லாமல் திடீரென ஆய்வுக்கு செல்கிறோம். சீக்கிரம் சாப்பிட்டு வாருங்கள். என்றேன். 



தொடரும்