வெள்ளி, 8 நவம்பர், 2013

மீண்டும் சந்தித்தோம்! 2


சேலம் சந்திப்புக்காக ஆகஸ்ட் 27 ஆம் தேதியே முன் பதிவு செய்துவிட்டு, காத்திருந்தபோது, சேலத்திலிருந்து நண்பர் வெங்கடரமணன் 
தொலைபேசியில் ஒரு நாள் கூப்பிட்டார்.  தானும் நண்பர் பழனியப்பனும் 
வகுப்புத் தோழர்கள் அனைவருக்கும் சந்திப்பு பற்றிய நிகழ்ச்சி நிரலை 
கடிதம் மூலமும், தொலைபேசி மூலமும் தெரிவித்துவிட்டதாகவும், பலர் 
வருவது பற்றி உறுதி செய்துவிட்டாலும் இன்னும் சிலர் சந்திப்புக்கு 
வருவது பற்றி உறுதி செய்யவில்லை என்றார்.

அப்படி உறுதி செய்யாதவர்களின் பெயரை சொல்லி, அவர்களை நீயும் தொடர்புகொண்டு அவர்கள் வருவது பற்றி  உடனே உறுதி செய்யச் சொல். அப்போதுதான் எவ்வளவு பேர் வருகிறார்கள் எனத் தெரிந்தால் 
எல்லோருக்கும் தங்கும் விடுதிகளில் அறைகளை முன் பதிவு செய்யமுடியும். இல்லாவிட்டால் கடைசி நேரத்தில் தங்க அறை கிடைக்காவிட்டால் 
குடும்பத்தோடு வருபர்கள் கஷ்டப்பட நேரிடும். மேலும் எவ்வளவு பேர் 
எனத் தெரிந்தால் தான் எங்களால் உணவு வசதி, பேருந்து வசதி 
போன்றவைகளை ஏற்பாடு செய்ய தோதாய் இருக்கும்.என்றார்.

2007 ஆண்டு புதுவையில் நடந்த சந்திப்பின் போதே, எல்லோருடைய 
முகவரி தொலைபேசி/கைபேசி எண் மற்றும் யார் யார்  மின்னஞ்சல் 
முகவரி வைத்திருந்தார்களோ அதையெல்லாம் சேகரித்து  
Excel spreadsheet இல், நான் வைத்திருந்ததாலும், அண்ணாமலை 
பல்கலைக் கழகத்தில் படித்தபோது வகுப்பு நண்பர்கள் 
அனைவருடனும் அதிகம் பழகியவன் நான் என்பதாலும், என்னிடம் 
அந்த பணியை ஒப்படைத்தார் போலும்.

நானும் உடனே  அவர் சொன்ன நண்பர்கள் அனைவரையும் 
தொடர்புகொண்டு அவர்கள் சேலம் வருவதை உடனே உறுதி
செய்யுமாறு கேட்டுக்கொண்டேன். சிலர் உடனே அதை 
செய்துவிட்டாலும், உறுதி செய்யாத சிலரை நான் இரண்டு அல்லது 
மூன்று முறை தொடர்புகொள்ளவேண்டியிருந்தது.

சிலர் உண்மையிலேயே வர விருப்பம் இருந்தும் ஒரு சில சொந்த 
காரணங்களால் வர இயலாது என்றார்கள். ஆனால் சிலரோ 
கடைசிவரை வருவது பற்றி உறுதிசெய்யாமல் பிறகு சொல்கிறேன். 
என்றே சொன்னார்கள். ஆனால் ஏனோ சொல்லவில்லை!  

படிக்கும்போது என்னுடன் நெருக்கமாக இருந்த நண்பர்கள் கூட, 
நான் வற்புறுத்தி அழைத்தபோதும்  ஏனோ சந்திப்புக்கு வருவதில் 
அவ்வளவு ஈடுபாடு காட்டவில்லை. ஒருவேளை வயதாக ஆக 
சிலருக்கு இது போன்ற நிகழ்வுகளில் பங்கேற்க ஆர்வம் குறைந்துவிடும் 
போலும். அப்போதுதான் தெரிந்தது இது போன்ற சந்திப்பை நடத்துவது, 
நாம் நினைப்பதுபோல் அவ்வளவு சுலபம் அல்ல என்று.

அப்போது நினைத்துப் பார்த்தேன் முதன் முதல் புதுவை சந்திப்பை  
2007 ஆம் ஆண்டில் ஏற்பாடு செய்த நண்பர்கள் 41 ஆண்டுகளுக்குப் 
பிறகு, தங்களோடு படித்த நண்பர்களை தொடர்புகொள்ள எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள் என்று. அதே போல் தான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சந்திப்பை ஏற்பாடு செய்த நண்பர்களும் 
நிச்சயம் கஷ்டப்பட்டிருப்பார்கள்.

அக்டோபர் 7 ஆம் தேதி நண்பர் அய்யம்பெருமாள் தொடர்புகொண்டு 
கனடாவிலிருந்து வந்துவிட்டதாகவும், 9 ஆம் தேதி காலை நேரே 
என் வீட்டிற்கு தன் துணைவியாருடன் வந்துவிடுவதாகவும், அனைவரும் 
நேரே சென்ட்ரல் இரயில் நிலையம் செல்லலாம் என்றும் கூறினார்.

நான் அவரிடம் நாம் பயணிக்க இருக்கும் வெஸ்ட் கோஸ்ட் விரைவு 
இரயில் காலை 11.40 க்கு புறப்படுவதால்,வீட்டிலிருந்து 10.15 மணிக்காவது கிளம்பினால்தான் போக்குவரத்து நெருக்கடியில் சிக்காமல் குறித்த 
நேரத்திற்கு முன்பாக செல்லலாம் எனவே காலை 10 மணிக்கு 
வந்துவிடுங்கள். என்றேன்.

சொன்னபடியே அவர் துணைவியாருடன் 10 மணிக்கு வர, தயாராக 
இருந்த நானும் என் துணைவியாரும் அவர்களுடன் முன்பே ஏற்பாடு 
செய்திருந்த Call Taxi யில் பயணித்து 10.45 க்கு சென்ட்ரல் இரயில் 
நிலையத்தை அடைந்தோம்.

இரயில் நிலையத்தை  அடைந்தபோது, அங்கே நடைமேடையில் 
(Platform) எங்கள் வகுப்புத்தோழர் திரு பிச்சைதுரை அவர்களும் 
நாங்கள் பயணம் செய்ய இருந்த அதே இரயிலில் அதுவும் நாங்கள் 
பதிவு செய்திருந்த அதே பெட்டியில் முன்பதிவு செய்திருந்ததால் 
காத்திருந்தார். துணைவியார் வர முடியாததால்  தான் மட்டும் 
வந்திருப்பதாக சொன்னார்.

காலை 11.40 க்கு குறிப்பிட்ட நேரத்தில் இரயில் புறப்பட்டது.
திரு அய்யம்பெருமாள் மற்றும் அவரது துணைவியாருக்கு அதே 
பெட்டியில் வேறு இடத்தில் இருக்கைகள்  இருந்தும் எங்கள் 
இருக்கைகள் அருகே காலியாக இருந்ததால் அங்கேயே 
அமர்ந்துவிட்டார்கள். வீட்டிலிருந்தே மதிய உணவை கொண்டு 
சென்றிருந்ததால் பேசிக்கொண்டே சாப்பிட்டோம்.
  
திரு அய்யம்பெருமாள் அவர்கள் கனடா பல்கலைக் கழகங்களுக்கு 
விண்ணப்பித்தது பற்றியும், அவருக்கு முனைவர் பட்டம் பெற Toronto 
பல்கலைக் கழகத்தில் இடம் கிடைத்தது பற்றியும், கனடாவில் 
காலடியெடுத்து வைத்த முதல் நாள் அவருக்கு ஏற்பட்ட அனுபவம் 
பற்றியும் பேசிக்கொண்டே இருந்ததில் நேரம் மாலை 4 மணியை 
நெருங்கியது கூட தெரியவில்லை.

திடீரென கைபேசி ஒலித்தபோது எடுத்து பேசியபோது, சேலம் நண்பர் 
திரு செல்லையன் அவர்கள் தொடர்பில் இருந்தார். சிண்டிகேட் வங்கி 
சேலம் கிளையில் நான் முது நிலை மேலாளரக பணிபுரிந்தபோது 
அவர் என்னுடன் பணி புரிந்தவர். பிறகு கிளை மேலாளராக சேலத்தில் 
உள்ள கிளை ஒன்றில் பணியாற்றி ஓய்வு பெற்று தற்சமயம் ஒரு 
நிதி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

நான் சேலம் வருவது பற்றி அவருக்கு முன்பே அறிவித்திருந்தேன். 
அதனால் அவர் என்னை வரவேற்க சேலம் இரயில் சந்திப்பில் வந்து 
காத்திருப்பதாக சொன்னார். எங்கிருக்கிறீர்கள்?’ என்று அவர் 
கேட்டபோது தான் பார்த்தேன் அப்போது நாங்கள் டேனிஷ்பேட்டை 
நிலையத்தை தாண்டிவிட்டோம் என்பதை.

அவரிடம் அதை சொல்லிவிட்டு இன்னும்  சிறிது நேரத்தில் சேலம் 
சந்திப்பில் இருப்போம்.என்றேன் சரியாக மாலை 4.50 மணிக்கு சேலம் சந்திப்பைஅடைந்தோம்.அங்கே காத்திருந்த நண்பர் திரு செல்லையனிடம், 
நண்பர்கள் திரு அய்யம்பெருமாள் மற்றும் பிச்சைதுரை ஆகியோரை அறிமுகப்படுத்தினேன்.  

நான் நண்பரோடு வருவதாக சொல்லியிருந்ததால் பயணிக்கும் நபர்கள் 
அதிகம் என்பதால் அவர் தன் காரை கொண்டுவராமல் தன் நண்பரின் 
Van ஐ கொண்டு வந்திருந்தார். அவருக்கு அவசர வேலை இருந்ததால்,  
Van ஓட்டுனரிடம் எங்களை நாங்கள் தங்க இருக்கும்  விடுதியில் 
விட்டு விட சொல்லிவிட்டு, என்னிடம் பின் வந்து பார்ப்பதாக 
சொல்லிவிட்டு சென்றார்.

நாங்கள் அவருக்கு நன்றி சொல்லி Van இல் பயணித்து சேலம் 
பேருந்து நிலையம் எதிரே இருந்த City Tower என்ற ஓட்டலை 
அடைந்தோம். அங்கே வரவேற்பறையில் நண்பர் வெங்கடரமணன் 
எங்களுக்காக காத்திருந்தார்.

எல்லோரும் வந்துவிட்டார்களா என விசாரித்தபோது ஒரு சிலர்தான் வந்திருப்பதாகவும் மீதி பேர் அனேகமாக இரவு வந்துவிடுவார்கள் 
என்றும் சொன்னார். மேலும் இரவு உணவை நாங்களே 
பார்த்துக்கொள்ளவேண்டும் என்றும் மறு நாள் முதல் அவர்கள் 
ஏற்பாடு செய்திருப்பதாகவும் சொன்னார்.  

எங்களுக்காக  ஒதுக்கப்பட்டிருந்த அறையை அடைந்து பைகளை 
வைத்தபோது, சேலத்தில் உள்ள சிண்டிகேட் வங்கியின் கிளை 
ஒன்றில் மேலாளராக இருக்கும் நண்பர் திரு தன்ராஜ் அவர்கள் 
(இவரும் என்னோடு பணியாற்றியவர்)  வரவேற்பு அறையில் 
காத்திருப்பதாக கைபேசியில் சொன்னார்.

அவரை சென்று சந்தித்து, அவரோடு வெளியே சென்று அருகில் 
இருந்த சரவண பவன் ஓட்டலில் காபி அருந்திவிட்டு வந்தபோது, 
பல்கலைக்கழக விடுதியில் எனது அறைத்தோழர்களாக 
இருந்தவர்களும், எனது நெருங்கிய  நண்பர்களுமான நாச்சியப்பன் 
மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகியோர் வந்திருப்பதாகவும் அவர்கள் 
எனது அறைக்கு வருவதாகவும் சொன்னார்கள்.

சிறிது நேரத்தில் அவர்கள் இருவரும் தங்கள் துணைவியாருடன் 
எங்கள் அறைக்கு வந்தனர். திரு முத்துகிருஷ்ணன் 
திருநெல்வேலியைச் சேர்ந்தவர் ஆகையால் எனக்கும் 
நாச்சியப்பனுக்கும் அங்கிருந்து இருவகை அல்வாக்கள் 
வாங்கிவந்திருந்தார். 

பின்னர் நண்பர் கோவிந்தசாமி அவர்களும் தன் துணைவியாருடன் வந்து
எங்களுடன் சேர்ந்துகொண்டார்.அடுத்த அரைமணிநேரம் நாங்கள் 
பழைய நிகழ்வுகளை சொல்லி   ஒருவரை ஒருவர் கேலி செய்து கொண்டு இருந்தோம்.எங்களின் துணைவியார்கள் அதை புன்முறுவலோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.

இரவு உணவு  சாப்பிடும் நேரம் வந்ததும் வெளியே செல்லலாம் 
என சொன்னபோது நண்பர் நாச்சியப்பன் தான் சாப்பிட்டுவிட்டதாகவும் 
வெளியே சிறிது தூரத்தில் உள்ள சரவண பவன் ஓட்டலின் 
சின்ன சின்ன ஆசை என்ற உணவு விடுதியில் சிற்றுண்டி சுவையாக 
இருப்பதாக சொன்னார்.  

நான் முத்துகிருஷ்ணன் மற்றும் அய்யம்பெருமாள் கோவிந்தசாமி ஆகியோர் 
குடும்பத்தோடு அங்கு சென்று சாப்பிட்டோம். உண்மையில் அந்த 
ஓட்டலில் தரப்பட்டவை தரமாகவும் சுவையாகவும் இருந்தது.  
சென்னையில் கூட அப்படி இல்லை என்பேன்  நான்.

காலையில் 8 மணிக்கு ஏற்காடு செல்ல இருப்பதால்  7 மணிக்கு 
காலை சிற்றுண்டி சாப்பிட அருகில் உள்ள சரவண பவன் ஓட்டலுக்கு வந்துவிடவேண்டும் என நண்பர் சொல்லியிருந்ததால் எல்லோரும் 
அவரவர் அறைக்குத் திரும்பி உறங்க சென்றோம்.   

தொடரும்





திங்கள், 4 நவம்பர், 2013

மீண்டும் சந்தித்தோம்! 1



அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண் அறிவியல் பட்டப் படிப்பை  
1962-1966 இல் படித்த வகுப்புத் தோழர்களாகிய நாங்கள்  2011 ஆம் ஆண்டு 
ஆகஸ்ட் திங்கள் 13, 14 ஆகிய இரண்டு நாட்களில் அண்ணாமலை நகரில் 
சந்தித்தோம் என்பதை பிரிந்தவர் கூடினால் .....???????? 1 என்ற தலைப்பில் 
6 செப்டம்பர் 2011 இல் எழுதியிருந்தேன்.

இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் முடியும்போது மறுபடி எங்கு சந்திப்பது, 
யார் அதற்கான ஏற்பாடுகள் செய்வது எனக் கூடி பேசியபோது, அடுத்த 
சந்திப்பை 2013 ஆண்டில் நடத்த சேலம் வாழ் நண்பர்கள் பழனியப்பனும் வெங்கடரமணனும் முன் வந்ததால் அதை சேலத்திலேயே  நடத்துவது  
என முடிவாயிற்று என்று பிரிந்தவர் கூடினால் .....???????? 10 நிறைவுப் 
பகுதியில் 14,அக்டோபர் 2011 இல் எழுதியிருந்தேன்.

கடந்த சந்திப்புகளில் எங்களைப்பற்றிய அறிமுக நிகழ்ச்சியே 
ஒரு நாளை எடுத்துக் கொண்டதால் சேலம் சந்திப்பில் அதை 
செய்யவேண்டாம் என தீர்மானித்து அதற்கு பதில் இரண்டு நாட்களும் 
அருகில் உள்ள இடங்களுக்கு இன்பச்சுற்றலா செல்லலாம் என 
நாங்கள் முடிவு செய்திருந்தோம்.

நண்பர் திரு R.பழனியப்பன்  தமிழக அரசின் வேளாண்மைத் துறையில் 
இணை இயக்குனராக (Joint Director of Agriculture) பணியாற்றி ஓய்வு 
பெற்றவர். நண்பர் திரு A.K.வெங்கடரமணன் அரசுடைமையாக்கப்பட்ட 
கார்ப்பரேஷன் வங்கியில் மேலாளராக பணியாற்றி விருப்ப ஓய்வு 
பெற்றவர். நண்பர்கள் இருவருமே கல்லூரி  நாட்களைப் போலவே 
இப்போதும் சுறுசுறுப்போடு இருப்பவர்கள் என்பதால், நிச்சயம் 
சேலம் சந்திப்பும் ஒரு மறக்கமுடியாத நிகழ்வாகவே இருக்கும் 
என்பதில் எங்கள் யாருக்கும் ஐயம் இருக்கவில்லை.

அதுபோலவே கடந்த ஓராண்டு காலமாகவே நண்பர்கள் இருவரும் 
சேலத்தில் எங்களது சந்திப்பை இரண்டு நாட்கள் சிறப்பாக 
கொண்டாடவேண்டும் என தீர்மானித்து அதற்கான ஏற்பாடுகளை 
மும்முரமாக செய்து வந்தனர். அவர்களுக்கு உதவியாக 
தஞ்சையிலிருந்து திரு R.பாலசுப்ரமணியன் அவர்களும் அடிக்கடி 
சேலம் வந்து அவர்களுக்கு உதவியுள்ளார். அது பற்றி பின் எழுதுவேன்.

எங்கள் திட்டப்படி சுற்றலா எங்கு செல்லலாம் என்று யோசித்தபோது, 
சேலம் அருகில் உள்ள ஏற்காடு மலைக்கும் தர்மபுரி மாவட்டத்தில் 
உள்ள ஹோகேனக்கல் நீர்வீழ்ச்சிக்கும் செல்லலாம் என்றும், அந்த 
சந்திப்பை ஏப்ரல் அல்லது மே திங்களில் வைத்துக்கொள்ளலாம் என 
அவர்கள் தெரிவித்திருந்தார்கள்.  

நாங்கள் அனைவரும் அந்த நாளுக்காகக் காத்திருந்தபோது, இந்த 
ஆண்டு சனவரி 1 ஆம் நாள் நண்பர் திரு முருகானந்தம் அவர்கள் 
என்னை தொலைபேசியில் கூப்பிட்டு புத்தாண்டு வாழ்த்து 
சொல்லிவிட்டு, இன்னொரு மகிழ்ச்சியான செய்தியையும் சொன்னார். 
எங்களது வகுப்பு நண்பர் திரு அய்யம்பெருமாள் அவர்கள் அவர் 
தம் துணைவியாரோடு கனடாவிலிருந்து வந்திருப்பதாகவும் 
கோவையில் இருப்பதாகவும் தெரிவித்து, அவரது தொலைபேசி 
எண்ணையும் கொடுத்தார்.  

(நண்பர் அய்யம்பெருமாள் எங்களோடு இளநிலை வேளாண் அறிவியல் 
படித்துவிட்டு பின்பு எங்கள் பல்கலைக் கழகத்திலேயே முது நிலை 
வேளாண் அறிவியலில் நுண்ணுயிரியல் (Microbiology) படிப்பை 
படித்தவர். பின்னர் கனடா சென்று அங்கு காடு வளர்க்கும் 
கலையில்(Forestry) முனைவர் பட்டம் பெற்று, கனடா அரசில் 
பணிபுரிந்து ஓய்வு பெற்று தற்சமயம் கனடாவில் ஒட்டாவாவில்
(Ottawa) குடியிருப்பவர்.)

உடனே அந்த தொலைபேசியில் அவரை தொடர்புகொண்டு பேசினேன். 
47 ஆண்டுகள் கழித்து வகுப்பு நண்பரோடு பேசியது மட்டற்ற 
மகிழ்ச்சியைத் தந்தது. அவரும் என்னோடு பேசியதில் சந்தோஷப்பட்டார். 
சென்னை வரும்போது  நேரில் வந்து பார்ப்பதாகவும் சொன்னார். 
பின்பு அனுப்பிய மின்னஞ்சலில் என்னோடும் மற்ற நண்பர்களோடும் 
பேசிய பிறகு திடீரென தான் 40 ஆண்டுகள் இளமையானது போல் 
உணர்வதாக எழுதியிருந்தார்.

இரண்டொரு நாளில் எனது வீட்டிற்கு அவரது துணைவியாரோடு 
வந்தார். அப்போது தான் அவசியம் சேலம் சந்திப்பில் கலந்து கொள்ள விரும்புவதாகவும், ஆனால் திரும்பி கனடாவுக்கு பிப்ரவரியில் 
செல்வதால் உடனே ஏப்ரல் அல்லது மே திங்களில் வரமுடியாதென்றும், 
அக்டோபர் திங்களில் வைத்தால் அவசியம் வருவதாகவும் தெரிவித்தார்.

நானும் நண்பர்கள் பழனியப்பனையும்,  வெங்கடரமணனையும் 
தொடர்புகொண்டு மற்ற நண்பர்களையும் கலந்தாலோசித்து, சேலம் 
சந்திப்பை நண்பரின் வேண்டுகோளுக்கிணங்க அக்டோபர் திங்களில் 
வைக்கலாம் என்று சொன்னேன். எல்லோரும் அதை ஏற்றுக்கொண்டதால், 
சந்திப்பை அக்டோபர் திங்களில் வைக்க முடிவு செய்திருப்பதாக நண்பர் அய்யம்பெருமாளுக்கு தெரிவித்தோம்.  

நண்பர் அய்யம்பெருமாள் இன்னொரு யோசனையையும் சொன்னார். 
எல்லோரும் பார்த்திருக்கும் ஏற்காடு மலைக்கு செல்வதை விட 
அநேகம் பேர் பார்த்திராத கொல்லிமலைக்கு செல்லலாம் என்துதான் அது. 
உடனே நண்பர்கள் பழனியப்பனும் வெங்கடரமணனும் அப்படியே 
செய்யலாமே. எனக் கூறி ஆனால் ஒரே நாளில் அங்கு சென்று 
வர முடியாது. அங்கு ஒரு இரவு தங்கி மறுநாள் தான் வரமுடியும். 
எதற்கும் நாம் எல்லோரும் குடும்பத்தோடு சென்று அங்கு தங்க வசதி 
உண்டா என விசாரித்து முடிவு செய்கிறோம். என்றார்கள்.

அப்படியே அவர்கள் விசாரித்ததில் அனைவரும் தங்க வசதி 
இல்லாததால் அந்த திட்டத்தைக் கைவிட்டுவிட்டு, முன் திட்டமிட்டபடி 
ஏற்காடு செல்வதேன்றே முடிவு செய்யப்பட்டது. அக்டோபர் 10 மற்றும் 
11 தேதிகளில் சந்திப்பை வைத்துக்கொள்வது என்றும் 9 ஆம் தேதி 
மாலையே எல்லோரும் சேலம் வந்துவிடவேண்டும் என்றும் 
சேலம் நண்பர்கள் சொன்னார்கள். 10 ஆம் தேதி ஏற்காடு பயணம் என்றும் 
11 ஆம் தேதி ஹோகேனக்கல் பயணம் என்றும் சொன்னார்கள். உடனே 
நான் அந்த செய்தியை மின்னஞ்சலில் திரு அய்யம்பெருமாளுக்கு 
தெரிவிக்க, அவரும் இந்தியா வர பயண சீட்டை வாங்கிவிட்டார்.

ஓரிரு நாளில் சேலம் சந்திப்பு பற்றிய விரிவான அஞ்சல் நண்பர்கள் 
பழனியப்பன் மற்றும் வெங்கடரமணனிடமிருந்து வந்தது. நண்பர்கள் 
எல்லோரும் சந்திப்பு பற்றிய விவரத்தை அஞ்சலில் அனுப்பியிருந்தாலும், 
நானும் என் பங்குக்கு அதை உடனே Scan செய்து என்னிடம் உள்ள 
நண்பர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டேன்.

மறுநாளே நானும் என் துணைவியும் சென்னையிலிருந்து சேலம் 
செல்ல அக்டோபர் 9 ஆம் நாள் காலை வெஸ்ட் கோஸ்ட் விரைவு 
இரயிலிலும், அங்கிருந்து திரும்ப 11 ஆம் நாள் இரவு ஏற்காடு 
விரைவு இரயிலிலும் முன் பதிவு செய்துவிட்டேன்.

நண்பர் அய்யம்பெருமாளும் இடையிடையே என்னிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு சேலம் சந்திப்பை பற்றி பேசிக்கொண்டு இருந்தார். 
நான் பயணச்சீட்டு முன் பதிவு செய்ததைப் பற்றி சொன்னதும் தனக்கும் 
தன் துணைவியாருக்கும் இரயிலில் பயணச்சீட்டை முன் பதிவு செய்ய கேட்டுக்கொண்டார். அப்படியே செய்தேன்.

முதலில் என் துணைவியார் சேலம் வர இசையவில்லை. இருப்பினும் 
அவரும் வருவார் என்கிற நம்பிக்கை இருந்ததால் அவருக்கும் சேர்த்து 
பயணச்சீட்டு வாங்கிவிட்டு காத்திருந்தேன் அக்டோபர் 9 ஆம் நாளுக்கு!



தொடரும்