வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

வாடிக்கையாளர்களும் நானும் 31




இதுவரை GR Form   யாரும் கொண்டு வந்து தரவில்லை.
தொலைபேசியில் அழைத்தாலும் அந்த நிறுவனத்தில் 
யாரும் அதை எடுப்பதாகத் தெரியவில்லை. என்று எனது 
அலுவலர் சொன்னதும், நான் நினைத்தது நடந்துவிட்டதோ
என்ற ஐயம் ஏற்பட்டது. .


எதற்கும் நாமும் முயற்சிக்கலாமே என அந்த
வாடிக்கையாளரின் நிறுவனத்தை தொடர்புகொண்டேன்.
சிறிது நேரம் கழித்து தொலைபேசியை எடுத்தார் ஊழியர்  
ஒருவர். அவரிடம்
GR Form  கொச்சியிலிருந்து
வந்துவிட்டதா
? யார் கொண்டு வருகிறார்கள்?’
எனக் கேட்டேன்.

அதற்கு அவர் தனக்கு அது பற்றி தெரியாது என்றும்,
முதலாளியிடம் தான் கேட்கவேண்டும்.
என்றும்
சொன்னார்.
சரி.அப்படியானால் அவரிடம் ஃபோனைக் கொடுங்கள்.என்றேன்.அதற்கு அவர் சார், அவர் இன்று
காலையிலிருந்தே அலுவலகத்திற்கு வரவில்லை. நீங்கள்
வீட்டிற்கு ஃபோன் செய்து பாருங்கள்.
என்றார்.

சரி என்று சொல்லிவிட்டு அவரது வீட்டை தொடர்பு
கொண்டபோது
, அவரது வீட்டிலிருந்தோர், காலையில்
வெளியே போனவர் இன்னும் வீடு திரும்பவில்லை.'
என்று சொன்னார்கள்.

இப்போது போல் அப்போது கைபேசி உபயோகத்திலில்லை.
அதனால் அவரை உடனே தொடர்பு கொள்ள
முடியவில்லை.அதற்குள் எனது அலுவலர்
,’சார், மாலை
5 மணி வரை பார்ப்போம். ஒருவேளை அவர்தான் அதைக்
கொண்டு வர கொச்சிக்கு போயிருக்கிறாரோ
என்னவோ
?’ என்றார்.

அவர் சொல்வதிலும் நியாயம் இருப்பதாகப் பட்டதால்,
மாலை 5 மணி வரை காத்திருந்தேன். மணி 5 ஆயிற்று.
6
ஆயிற்று. ஆளையே காணும். திரும்பவும்
நிறுவனத்தையும் வீட்டையும்
,  தொடர்பு கொண்டபோது
பழைய
பல்லவியையே பாடினார்கள்.

எனக்கோ அந்த அன்னிய செலாவணி கிளையில்
பணிபுரிவது அதுவே முதல் தடவை. அது  போன்ற 
வணிக நடவடிக்கைகளில் (Transactions) எனக்கு 
முன் அனுபவம் இல்லாததால் மேற்கொண்டு 
என் செய்வது என்பது பற்றி அதில் அனுபவம் உள்ள 
அந்த அலுவலரிடமே கேட்டேன்.

அதற்கு அவர், சார். GR Form இல்லாமல் Bill ஐ 
நாம் Negotiate செய்யக்கூடாது. இப்போது நாம் அந்த 
தவறை செய்து விட்டோம். இனி அது வராமல் 
இந்த Bill ஐ வெளி நாட்டுக்கும் அனுப்பமுடியாது.

காரணம். கப்பலில் ஏற்றப்பட்டுள்ள சரக்குகளை
சுங்கத்துறையினர் ஆய்ந்து சான்றிதழ் தந்ததும்
,
21 நாட்களுக்குள் ஏற்றுமதியாளர்கள்
GR form உடன்
Bill
ஐ இரு படிகளில் (Duplicate) வங்கிகளுக்கு 
கொடுத்து Negotiate செய்யவேண்டும். வங்கிகளும்  
Negotiate செய்தவுடன் அது பற்றி  ரிசர்வ் வங்கிக்கு 
குறிப்பிட்ட படிவத்தில் அந்த Transaction பற்றி 
அறிக்கை தரவேண்டும்.

பின்பு வெளிநாட்டிலிருந்து பணம் வந்ததும், வங்கிகள்
திரும்பவும் ரிசர்வ் வங்கிக்கு குறிப்பிட்ட படிவத்தில்
அது பற்றிய அறிக்கையுடன் அந்த
Bill இன் இரண்டாவது
படியையும்
GR form யும் அனுப்பவேண்டும். இந்த நிலையில்
நாம் எதுவுமே செய்யமுடியாது. உடனே
GR form பெற
முயற்சிப்போம். அதற்குள் நீங்கள் எதற்கும் நமது 
வட்டார அலுவலகத்திற்கு இது பற்றி 
தெரிவித்துவிடுங்கள்.என்றார்.


நான் உடனே எனது Boss ஆன துணைப் பொது மேலாளரை தொடர்புகொண்டு,’சார். நீங்கள் சொன்னது போலவே அந்த வாடிக்கையாளரின் Bill க்கு பணத்தைக் கொடுத்துவிட்டேன்.
ஆனால் அவர் சொன்னபடி இன்று மதியம் 3 மணிக்கு 
வந்து GR form ஐ தரவில்லை. என்ன செய்வது?’ என்றேன்.

(‘நீங்கள் தானே பணத்தைத் தர சொன்னீர்கள். நீங்களே
அவரிடம் பேசி அதைக் கொடுக்க சொல்லுங்கள்.
என்றா
சொல்லமுடியும். மேலதிகாரி ஆயிற்றே
?)

ஆனால் அவர் கோபமாக, அவர் தருவார் என்றால் தருவார்.
நீங்கள் அனாவசியமாய் சந்தேகப்பட்டு குழப்பம்
உண்டாக்காதீர்கள்.
என சொல்லிவிட்டு தொலைபேசியை
வைத்துவிட்டார்.

அப்போதுதான் எனக்கே பயம் வர ஆரம்பித்தது. ஏனெனில்
காலையில் கட்டளையிடும் தொனியில் பேசியவர் இப்போது
கழுவுற மீனிலில் நழுவுற மீன் போல் நடந்துகொண்டதுதான்.
சரி. இனி நாமே இதை எதிர்நோக்கவேண்டியதுதான் என்று
நினைத்து அந்த அலுவலரிடம்
சரி. நீங்கள் வீட்டுக்குப்
போங்கள். நாளை பார்த்துக்கொள்ளலாம்.
என்றேன்.

மறுநாள் காலையிலும் அந்த வாடிக்கையாளர் வராததால்,
திரும்பவும் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். நல்ல
வேளையாக அவரே பேசினார்.
என்ன. நேற்று மதியம்
GR form
கொண்டு வந்து தருகிறேன் என்றீர்கள்.சொன்னபடி
தரவும் இல்லை அதுபற்றி ஒன்றும் தெரிவிக்கவில்லையே
?
எப்போது கொண்டு வருகிறீர்கள்
?’ என்றேன்.

அதற்கு அவர்,‘சார் ஏன் வீணாக கவலைப்படுகிறீர்கள்?
கையொப்பமிடும் அலுவலர் நேற்று மாலை வரை
வரவில்லை. அதனால்தான் கொண்டு வந்து
தரமுடியவில்லை. இன்று சனிக்கிழமையாதலால்
, இனி
திங்கள் கிழமைதான் அவர் வருவார். வந்தவுடன் அவரிடம்
கையொப்பம் வாங்கி வந்து தருகிறேன்.
என்றார்.

சரி.திங்கள் வரை காத்திருப்போம் என நினைத்திருந்தேன்.
அதற்குப் பிறகு பல திங்கள் கிழமைகள் வந்து போயின.
ஆனால் அவர்தான் வரவில்லை. தொலைபேசியில்
தொடர்பு கொண்டால்  அவர் ஊரில் இல்லை
என பதில் வந்தது.

நடந்ததை வட்டார அலுவலகத்திற்கு தெரிவிப்போம்
என நினைத்து விரிவான அறிக்கை ஒன்றை அனுப்பினேன்.
ஓரிரு நாட்களில் எங்களது  திருவனந்தபுரம் 
வட்டார அலுவலகத்திலிருந்து இருந்து 
உதவிப் பொது மேலாளர் ஆய்வுக்கு வந்தார். 

அவர் நான் தமிழ் நாட்டுக் கிளை ஒன்றில் மேலாளராக
இருக்கும்போது எனக்கு கோட்ட மேலாளராக இருந்தவர்.
என்னைப் பற்றி தெரியுமாதலால்
,அந்த Bill பற்றி கேட்டார்.
நான் நடந்ததை சொன்னதும்
, GR form இல்லாமல் நீங்கள்
Negotiate
செய்திருக்கக்கூடாது. உடனே அதைப் பெற
முயலுங்கள். இல்லாவிடில் உங்களுக்கு கஷ்டம்தான்.

என்று சொல்லி சென்றார்.

அவரது ஆய்வு முடிந்து சென்ற பிறகும், அந்த
வாடிக்கையாளர் வங்கிப் பக்கமே வரவில்லை.
கேட்கும்போதெல்லாம்
இதோ வருகிறேன் என்ற
பதிலையே சொல்லிக்கொண்டு இருந்தார்.

ஒரு நாள் காலை கிளையில் இருக்கும்போது, ஒருவர்
உள்ளே வந்தார். வந்தவரை உட்காரச்சொன்னபோது
, அவர்
உட்கார்ந்து கொண்டே
நான் ரிசர்வ் வங்கி ஆய்வாளர். 
உங்கள் கிளையின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி
வணிக நடவடிக்கைகள் பற்றி ஆய்வு நடத்த 
வந்திருக்கிறேன். இந்தாருங்கள். அதற்கான 
ஒப்புச்சான்று (Authorisation) என்றார்.

என் மன நிலை எப்படி இருந்திருக்கும் என நினைக்கிறீர்கள்?


தொடரும்

ஞாயிறு, 10 பிப்ரவரி, 2013

வாடிக்கையாளர்களும் நானும் 30





அந்த கிளையில் பணியில் நான் சேர்ந்த முதல் நாளன்று 
என்னை வந்து சந்தித்த அந்த வாடிக்கையாளர், ஏற்றுமதி 
செய்வதற்காக வங்கியில் இருவித கடன் வசதிகளைப் 
பெற்றிருந்தார்.

மூலப் பொருட்களை (Raw Materials) வாங்க PCL 
(Packing Credit Limit) எனப்படும் கடன் வசதியையும், 
ஏற்றுமதியாளர்கள்  தயாரிப்புகளை ஏற்றுமதி 
செய்ததற்கான ஆவணங்களின் மேல் தரப்படும் 
கடன் வசதியான  Bills Limit டும் தான் அவைகள்.

(ஏற்றுமதியாளர்கள் தங்கள் தொழிலை தொடர்ந்து   
நடத்த வங்கிகள் இந்த மாதிரி இரு கடன் வசதிகளை 
அளிப்பது வாடிக்கை. மூலப்பொருட்கள் வாங்கி 
தயாரிக்க உதவும் PCL எனப்படும் கடன் வசதிமூலம் 
பொருட்களை வாங்கி தயாரிப்பார்கள்.

பின்பு அவைகளை வெளிநாட்டிற்கு அனுப்ப ஏற்பாடு 
செய்துவிட்டு, அப்படி அனுப்பியதற்கான சான்றிதழ் 
ஆவணங்களை வங்கியில் கொடுத்தால் வங்கி 
Bills Limit வசதியில் பற்று (Debit) செய்து, (இதை 
வங்கியின் மொழிப்பாணியில் Negotiate என்பார்கள்)  
PCL கணக்கை முடித்து பாக்கி உள்ள பணத்தை 
வாடிக்கையாளர் கணக்கில் வரவு வைத்துவிடுவார்கள்.

இதன் மூலம் அந்த வாடிக்கையாளர் திரும்பவும் 
PCL வசதி மூலம் மூலப்பொருட்களை வாங்கி 
தொழிலை தொடர்ந்து நடத்த ஏதுவாக இருக்கும்.   
வெளிநாட்டிலிருந்து பணம் வந்ததும் Bills Limit 
வசதியில் வரவு வைக்கப்படும்.)

நான் அங்கு சென்று பணியில் சேர்ந்த சமயம், 
அவரது ஏற்றுமதி, நகைச்சுவை நடிகர் வடிவேலு 
பாணியில் சொன்னால் நல்லாத்தான் போய்கிட்டு 
இருந்தது.ஆனால் என்ன நடந்தது எனத் 
தெரியவில்லை.திடீரென அவரது வணிகத்தில் 
சுணக்கம் இருப்பதாக கேள்விப்பட்டேன்.

அப்படி இருக்கும்போது ஒரு நாள் பகல் 12 மணிக்கு 
அவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. 
அதை எடுத்து பேசியபோது, அவர் சொன்னார்.  
சார், இன்று ஒரு அனுப்புச் சரக்கு (Consignment)   
ஏற்றுமதி செய்ய ஏற்பாடு செய்து Bill of Lading யும் 
பெற்றுவிட்டோம்.

ஆனால் கொச்சியில் GR Form இல் கையொப்பமிடும் 
அலுவலர் வெளியே சென்றிருக்கிறார். அவர்  
12.30 மணிக்கு மேல்தான் வருவாராம். அவரிடம் 
கையொப்பம் பெறுவதற்காக எனது ஆள் அங்கு 
காத்துக்கொண்டு இருக்கிறார்.அவரிடம் கையொப்பம் 
வாங்கிக்கொண்டு, மதியம் 1 மணிக்கு 
எர்ணாகுளத்திலிருந்து கிளம்பும் இரயிலில் 
கிளம்பினால், இங்கு 2 மணிக்கு மேல்தான் 
வர முடியும். (அவரது தயாரிப்புகள் அப்போது 
கொச்சி துறைமுகத்திலிருந்துதான் 
ஏற்றுமதியாகிக்கொண்டு இருந்தன.)


நிச்சயம் 3 மணிக்குள் வந்து GR Form ஐ கொடுத்து
விடுகிறோம். எனவே இப்போது எங்களது Bill ஐ 
 Negotiate செய்து PCL கணக்கை முடித்துவிடுங்கள் 
என்றார். அதற்கு நான்.GR Form இல்லாமல்  
BillNegotiate செய்யமுடியாது. அது வரட்டும் 
திங்களன்று காலையில் பார்த்துக்கொள்ளலாம். 
என்றேன்.

ஆனால் அவரோ, சார். இன்று வெள்ளிக்கிழமை. 
அன்னிய செலாவணி சந்தையில் இந்திய ரூபாயின் 
மதிப்பு ஏறுமுகமாக இருக்கிறது. திங்களன்று எப்படி 
சந்தை இருக்கும் எனத் தெரியாததால் இன்றே  
Negotiate செய்தால் எங்களுக்கு உதவியாக இருக்கும். 
என்று வேண்டிக் கேட்டுக்கொண்டார்.

ஆனாலும் நான் கண்டிப்பாக GR Form  இல்லாமல் 
 BillNegotiate செய்யமுடியாது. என 
சொல்லிவிட்டேன். அவர் பல முறை கேட்டும் 
எனது பதில் முடியாது என்பதாகத்தான் இருந்தது.

சரி. என சொல்லிவிட்டு அவர் தொலைபேசியை 
வைத்துவிட்ட சிறிது நேரத்தில் தொலை பேசி 
அழைப்பு ஒன்று வந்தது. திருவனந்தபுரத்தில் 
இருந்து எனது துணைப் பொதுமேலாளர் தான் 
பேசினார்.  

என்ன சபாபதி? என்ன ப்ராப்ளம்? அந்த 
வாடிக்கையாளரின் BillNegotiate செய்யமாட்டேன் 
என்று சொல்கிறீர்களாமே? ஏன்?’ என்று கேட்டார். 
அவரிடம்,’சார். GR Form   இல்லாமல்  Bill 
Negotiate செய்ய சொல்கிறார் .அதனால் தான் 
முடியாது என்று சொன்னேன். என்றேன்.

(அந்த வாடிக்கையாளர் எனது Boss க்கு 
தொலைபேசியில் சொல்லியிருப்பார் போலும்)

அவர்தான் 3 மணிக்குள் அதை தருகிறேன் 
என்கிறாரே. இன்னும் ஏன் உங்களுக்குத் தயக்கம். 
அவர் நமது நீண்ட நாள் வாடிக்கையாளர் எனத் 
தெரியாதா? உடனே Negotiate செய்து பணத்தைக் 
கொடுங்கள். என்றார் துணைப் பொதுமேலாளர்.

நான், சார். அது 22 இலட்ச ரூபாய்க்கான  
Bill. GR Form   இல்லாமல் பணம் தருவது கடினம். 
என்றேன். அதற்கு அவர். எனக்கு அது தெரியும். 
நீங்கள் நான் சொல்கிறபடி கொடுங்கள். அவர் 
3 மணிக்கு கொடுத்துவிடுவார். எனக் கூறி 
சட்டென தொலை பேசியை வைத்துவிட்டார்.

அவர் வாய்மொழியாகத்தான் சொன்னரே தவிர 
எழுத்து மூலம் தரச்சொல்லி  ஆணை தருவதாக 
சொல்லவில்லை. ஆனால் அவரது பேச்சுத் 
தொனியில் ஒரு கட்டளையிடும் தோரணை 
இருந்ததை உணர்ந்தேன்.

அதற்குள் அந்த வாடிக்கையாளரின் அலுவலக 
உதவியாளர் வந்து என்னைப் பார்த்து சார் 
திருவனந்தபுரம் அலுவலகத்திற்கு பேசிவிட்டாராம். 
நீங்கள் ஆவன செய்வீர்கள் என்று அங்கிருந்து 
சொல்லிவிட்டார்களாம். என்று கூறி
ஆவணங்களை (GR Form  இல்லாமல்) கொடுத்தார்.

எனது  துணைப் பொதுமேலாளர் சொன்னதால் 
அந்த Bill க்கான பணத்தை கணக்கிட்டு PCL கடன் 
போக மீதியை அவரது கணக்கில் வரவு வைக்க 
ஒப்பிட்டுக் கொடுத்தேன். அதோடு வேறொன்றும் 
செய்தேன்.(அது என்னவென்று பின் சொல்கிறேன்.)

மதியம் உணவு இடைவேளை முடிந்து அறைக்கு 
வந்தபோது மணி 2.30. அந்நிய செலாவணி பார்க்கும் 
அலுவலரைக் கூப்பிட்டு 3 மணிக்கு GR Form   
வந்ததும் என்னிடம் சொல்லுங்கள் எனக்கூறிவிட்டு 
வேறு வேலையில் மூழ்கிவிட்டேன்.

சுமார் 4 மணிக்கு அந்த அலுவலர் வந்து,’சார். 
இதுவரை GR Form  யாரும் கொண்டு வந்து 
தரவில்லை. தொலைபேசியில் அழைத்தாலும் 
அந்த நிறுவனத்தில் யாரும் அதை எடுப்பதாகத் 
தெரியவில்லை. என்ன செய்வது? என்றார்.


தொடரும்