நான் தண்ணீர் குடித்து, மூழ்கிக்கொண்டிருந்த அந்த 
நேரத்தில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது.அதனால்தான் 
நான் இன்று இந்த பதிவை எழுதிக்கொண்டிருக்கிறேன்.
 
எங்கள் வீட்டிற்கு எதிர் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் 
ஒரு தம்பதியினர் இருந்தனர்.அந்த மாமா எங்கள் 
ஊருக்கு அருகில் உள்ள ஊரான கிளிமங்கலத்திலிருந்து 
வந்ததால் அவரை கிளிமங்கலத்து மாமா என்றும் 
அவரது துணைவியார் அருகில் உள்ள 
வண்ணாங்குடிகாடு என்ற ஊரை சேர்ந்தவர் என்பதால் 
அவரை வண்ணாங்குடிகாட்டு அக்கா என்றும் 
அழைப்போம்.(அவர்கள் பெயர் இதுவரை எனக்கு 
தெரியாது.) 
அவர்களுக்கு குழந்தைகள் இல்லாததால் எங்கள் 
அனைவரிடமும் அன்பாக இருப்பார்கள்.நாங்கள் 
பாதிநேரம் அவர்கள் வீட்டில் தான் இருப்போம்.
 
அந்த மாமா எங்களுக்கு நிறைய கதை சொல்லுவார்.
அவர்கள் வீட்டில் இருந்த நாரத்தை மரத்திலிருந்து 
நாரத்தை  பழங்களை பறித்து எங்களுக்கு கொடுப்பார்.
 
அன்றைக்கு எனது நல்ல நேரம்,அந்த அக்கா 
அப்போதுதான் குளித்து கரை ஏறி இருக்கிறார்.நான் 
தண்ணீர் குடித்துக்கொண்டிருப்பதையும் 
பார்த்திருக்கிறார்.
 
அவர் குளிக்க உபயோகித்த மஞ்சளை மறந்து 
படித்துறையிலேயே வைத்துவிட்டு 
சென்றுவிட்டதால் அதை எடுக்க திரும்ப 
வந்திருக்கிறார்.(இந்த காலத்தில் யார் மஞ்சளை 
உபயோகிக்கிறார்கள்?)
  
அந்த பையன் இராமநாதன் மட்டும் படித்துறையில் 
இருப்பதைப் பார்த்துவிட்டு நான் எங்கே என்று 
கேட்டிருக்கிறார். 
அவன் பதில் சொல்லாமல் முழித்தபோது தண்ணீரில் 
யாரோ தத்தளிப்பதை பார்த்து,உடனே தண்ணீரில் 
பாய்ந்து தூக்கியபோது,அது நானாக இருந்ததைக் 
கண்டு அதிர்ச்சியுற்று உடனே என்னை தலைகீழாக 
பிடித்து நீரை வெளியேற்றி இருக்கிறார். 
பின் தரையில் படுக்கவைத்து உள்ளங்கால் 
உள்ளங்கைகளை தான் கைகளால் சூடாக்கி 
தோளில் போட்டுக்கொண்டு வீட்டுக்கு  
திரும்பியிருக்கிறார். 
அதற்குள் செய்தி அறிந்து,பள்ளியில் ஐயா அவர்கள் 
அந்த பையனை நன்றாக‘விசாரித்திருக்கிறார்.அவன் 
ஏதோ விளையாட்டாக என்னைத் தண்ணீருக்குள் 
தள்ளியிருக்கிறான். அவ்வளவே. 
நான் கண் விழித்து பார்த்தபோது எங்கள் வீட்டு 
கட்டிலில் படுத்திருந்தேன். என்னை சுற்றி அம்மாவும் 
அந்த அக்காவும் உட்கார்ந்திருந்தார்கள். அப்பா சற்று 
தள்ளி நின்று கொண்டிருந்தார்கள். 
நான் கண் விழித்து பார்த்ததில் அனைவருக்கும் 
மகிழ்ச்சி. அப்பா மட்டும்‘ஏன் ஏரிக்கு தண்ணீர் 
குடிக்கப்போனாய்?’என்று கடிந்துகொண்டார்கள். 
அதற்கு வண்ணான்குடிகாட்டு அக்கா ‘பாவம் தம்பி 
பயந்திருக்கு. திட்டாதிங்க.ஒரு கண்டத்திலிருந்து 
இப்பதான் தப்பியிருக்கு.’ என்று அப்பாவிடம் 
சொன்னார்கள். 
அம்மா மட்டும் நான் பயந்திருப்பதாய் எண்ணி, 
கரண்டியை அடுப்பில் வைத்து சூடாக்கி அதில் மோரை 
விட்டு பின் அதை குடிக்க சொன்னார்கள். 
நான் பிழைத்தது புனர் ஜென்மம் தான் என்று 
பேசிக்கொண்டார்கள். 
இந்த நிகழ்வுக்கு பிறகு தண்ணீரை கண்டாலே 
எனக்கு பயம் தான்.
எனக்கு இரண்டாவது தடவையாக திரும்பவும் 
அதே போல் ஒரு நிகழ்வு ஏற்பட்டது. 
இது நானாக ஏற்படுத்திக்கொண்டது. 
1961 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் எனது புகுமுக 
வகுப்பு தேர்வுகளை திருச்சி புனித வளவனார் 
கல்லூரியில் (St.Joseph’s College) முடித்துவிட்டு 
ஊருக்கு வந்திருந்தேன். 
மாலையில் நானும் எனது பக்கத்து வீட்டு நண்பரும், 
ஆரம்பப்பள்ளி தோழருமான 
திரு இராதாகிருஷ்ணனுடனும், அவர் தம்பி 
திரு இராமலிங்கத்துடனும் எங்கள் ஊரில் ஓடும் 
வெள்ளாற்றுக்கு  சென்றோம். 
அப்போதெல்லாம் எங்களுக்கு மாலையில் 
பொழுதுபோக்கு ஆற்றுக்கு சென்று சிறிது நேரம் 
ஆற்று மணலில் உட்கார்ந்து இருந்து பேசிக்கொண்டு 
இருந்து விட்டு,பின் குளித்து இருட்டியபின் 
வீட்டுக்கு திரும்புவது தான். 
இந்த நேரத்தில் வெள்ளாற்றைப் பற்றி நான் 
சொல்லியாகவேண்டும்.
சேலம் மாவட்டத்தில் உள்ள சேர்வராயன் 
மலையில் தோன்றி சேலம், பெரம்பலூர் கடலூர் 
மாவட்டங்களில் ஓடி பின் பரங்கிப்பேட்டை அருகே 
வங்காள விரிகுடாவில் கலக்கும், இந்த ஆறு 
வருஷம் முழுதும் ஓடும் வற்றாத நதி அல்ல.
  
மழைக்காலங்களில் தான் வெள்ளம் ஆற்றில்  
கரைபுரண்டு ஓடும். மற்ற நாட்களில் ஆற்றின் 
ஒருபுறம் புடவையில் பார்டர் போல சிறிய 
அளவில் சலசலத்துக்கொண்டிருக்கும். 
மேலும் இந்த ஆறு ஒழுங்காக நேராக ஓடாது. 
வளைந்து வளைந்து பாம்பு நெளிந்து செல்வதுபோல் 
ஓடும். இதனாலேயே எங்கள் ஊரில் சரியான 
நேர்கோட்டில் எழுதாதவர்களைப் பார்த்து ‘என்ன 
வெள்ளாற்று ஒழுங்காய் எழுதுகிறாய்?’என்பார்கள்.
ஆற்றின் போக்கு ஒவ்வொரு வெள்ளத்தின் போதும் 
தண்ணீர் ஒட்டத்தின் படி மாறும். அதனால் எங்கள் 
ஊரிலிருந்து தொலைவில் இருந்த அது, இப்போது 
திசை மாறி ஊருக்கு அருகே வந்துள்ளது. 
நாங்கள் ஆற்றுக்கு சென்ற நேரம் கோடை காலம் 
என்பதால் ஆற்றில் தண்ணீர் முழங்கால் அளவுக்கும் 
கீழே தான் இருந்தது. அப்படி இருக்கும்போது நாங்கள் 
தண்ணீர் எங்கு ஆழமாக உள்ளது என்று பார்த்து ஒரு 
ஆள் படுத்து குளிக்கின்ற அளவுக்கு அங்கு கைகளால் 
மணலை எடுத்துவிட்டு அதில் படுத்து குளித்து 
வருவோம். 
அன்றும் அதுபோல் குளிக்கலாம் என்று நான் 
சொன்னபோது, நண்பர்கள் இருவரும் ‘இல்லை. 
இல்லை.மண்ணைத்தோண்டி நாம் கஷ்டப்படுவதைவிட 
இங்கு உள்ள ‘மடு’வில் குளிக்கலாம்’. என்றார்கள். 
மழைக்காலங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும்போது 
சில இடங்களில் தண்ணீரின் இழுப்பு (Current) சக்தி 
காரணமாக,மண் அரிக்கப்பட்டு,பெரிய பள்ளம் 
ஏற்படுவதை ‘மடு’ என்பார்கள்.அந்த இடங்களில் ஆழம் 
சில சமயம் ஒரு ஆள் அல்லது இரண்டு ஆள் 
மட்டத்துக்குக் கூட இருக்கும். 
மடு ஆழமாக இருக்கும் என்பதாலும், எனக்கு 
நீச்சல் தெரியாததாலும் நான் வேண்டாம் என 
மறுத்தேன்.
 
நீச்சல் தெரியாததன் காரணம், சின்ன வயதில் ஏரியில் 
ஏற்பட்ட அனுபவம் காரணமாக, எங்கள் அப்பா என்னை 
நீச்சல் பழக அனுமதிக்கவில்லை.ஆனால் எங்கள் ஊரில் 
உள்ள அனைவருக்கும் ஏரியில் குளித்து நீச்சல் 
பழகியிருந்தார்கள். 
ஆனால் அவர்கள் விடாப்பிடியாக ‘நீச்சல் ஒன்றும் 
அப்படி கஷ்டமானது அல்ல.இப்போது இல்லாவிட்டால் 
பின் எப்போதுதான் கற்றுக்கொள்ளப் போகிறாய்?
நாங்கள் இருக்கிறோம். உனக்கு கற்றுத்தருகிறோம். 
முதலில் நாங்கள் எப்படி நீச்சல் அடிக்கிறோம் 
என்று பார். பின் எங்களோடு நீயும் நீரில் 
குதித்து முயற்சி செய். நாங்கள் உடன் 
இருப்பதால் பயம் வேண்டாம். என 
தைரியம் சொன்னார்கள். 
நானும் அரை மனதோடு ‘சரி’ என சொல்லி 
அவர்களோடு சற்று  தள்ளி இருந்த அந்த 
மடுவுக்கு சென்றேன். 
அவர்கள் இருவரும்‘தொப்’ தொப்’என்று இரண்டு 
அல்லது மூன்று முறை மடுவில் குதித்து சுலபமாக 
நீந்தி கரை சேர்ந்ததைப் பார்த்ததும் நானும் குதிக்க 
முடிவு செய்து அவர்களோடு சேர்ந்து மடுவில் 
குதித்தேன். 
குதித்தவுடன் கைகள் இரண்டையும் தெரியாமல் 
மேலே தூக்கிவிட்டேன். அதனால் 
தண்ணீருக்குள்ள்ள்ள்ளே போய்க்கொண்டே  
இருந்தேன்.என்ன செய்வது, எப்படி வெளியே 
வருவது எனத்தெரியவில்லை.பயத்தில் தண்ணீர்  
குடிக்க ஆரம்பித்துவிட்டேன்.  
 
 
தொடரும் 
நல்ல பதிவு.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி
பதிலளிநீக்குதிரு இரத்தினவேல் அவர்களே!
தங்களின் இந்த அழகிய அனுபவ பகிர்விக்கிடையே, வெள்ளாற்றைப் பற்றி சில விசயங்களை இந்தப் பரங்கிப்பேட்டைக்காரனாகிய நான் தெரிந்துக் கொண்டேன். நன்றி! எம்.ஜீ.ஃபக்ருத்தீன், பரங்கிப்பேட்டை
பதிலளிநீக்குஆறு,குளம் போன்ற இடங்களுக்கே போகாதீர்கள்!
பதிலளிநீக்குஇப்படிக் கண்டங்களை கடந்து வந்த உங்களுக்கு நூறு வயது!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு எம்.ஜீ.ஃபக்ருத்தீன் அவர்களே! நாம் இருவரும் ஒரே ஆற்றின் கரையைச் சேர்ந்தவர்கள் என்பது அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி.
பதிலளிநீக்குவருகைக்கும் அறிவுரைக்கும நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!
பதிலளிநீக்கு