வியாழன், 19 டிசம்பர், 2013

மீண்டும் சந்தித்தோம்! 9



Lady’s Seat ்கு அருகில் இருந்த Gent’s Seat மற்றும் Children’s Seat பார்க்கலாம் 
என எண்ணியபோது அவையும் Lady’s Seat  போன்ற இடங்கள் தான் என்பதால் நேரமின்மை காரணத்தால் அவைகளைப் பார்ப்பதை தவிர்த்துவிட்டு அருகில் 
இருந்த அரசினர் ரோஜா தோட்டத்திற்கு சென்றோம்.



இந்த தோட்டம் அரசின் தோட்டக்கலைத் துறையின் கீழ் உள்ளது. நாங்கள் 
சென்ற சமயம் ரோஜாக்கள் இல்லாத ரோஜாச் செடிகளைத் தான் பார்த்தோம். 
இந்த தோட்டத்தில் உள்ள பச்சை வண்ண ரோஜாவைப் பார்க்கலாம் என்ற 
எண்ணமும் நிறைவேறவில்லை. பச்சை வண்ண  ரோஜாவின் படம் 
உங்களுக்காக கூகிளார் உதவியுடன் கீழே







அதனால் பார்ப்பதற்கு ஒன்றும் இல்லாததால் தோட்டத்தை ஒரு சுற்று 
சுற்றிவிட்டு வெளியே வந்தோம். அதற்குள் நண்பகல் ஆகிவிட்டபடியால் 
மதிய உணவை முடித்துவிட்டு மற்ற இடங்களை பார்க்கலாம் என நண்பர்கள் பழனியப்பனும் வெங்கடரமணனும் சொன்னதால் எங்கள் பேருந்து நின்றிருந்த இடத்திற்கு திரும்பினோம்.

எங்களது மதிய உணவு அங்கிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் 
உள்ள அறிஞர் அண்ணா பூங்கா மற்றும் ஏற்காடு ஏரிஅருகே இருந்த 
காபி போர்டின் (Coffee Board) செயல்முறை விளக்க பண்ணை 
(Demonstration Farm) யில் உள்ள முதுநிலை தொடர்பு அலுவலரின் 
(Senior Liaison Officer) அலுவலக கட்டிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக சொன்னார்கள்.

இந்த இடத்தில் நிச்சயம் எங்கள் வகுப்புத் தோழர் 
திரு R. பாலசுப்ரமணியத்திற்கு நன்றி சொல்லித்தான் ஆகவேண்டும். அவரது முயற்சியால் தான் எங்களுக்கு அந்த செயல் விளக்கப் பண்ணையில் 
மதிய உணவு அருந்தவும், இரவு வரை எங்களது கூட்டம் நடத்தவும் முடிந்தது.

காபி போர்டின் செயல்முறை விளக்க பண்ணையில் கூட்டம் நடத்தவும், 
மதிய மற்றும் இரவு உணவை அருந்தவும் தேவையான அனுமதியைப் பெற 
அவர் தஞ்சையிலிருந்து  சேலத்திற்கும் ஏற்காட்டிற்கும் பலமுறை வந்ததாக
நண்பர்கள்  பழனியப்பனும் வெங்கடரமணனும் சொன்னார்கள். அவரது 
பங்களிப்பு மட்டும் இல்லாதிருந்தால், அரங்கம் உள்ள ஏதேனும் ஒரு தங்கும் விடுதியில் தான் எங்களது கூட்டத்தை நடத்தியிருக்க கூடும்.

அரசினர் ரோஜா தோட்டத்திலிருந்து புறப்பட்ட நாங்கள் 15 மணித்துளிகள் 
பயணித்து மதியம் 1.30 மணிக்கு அறிஞர் அண்ணா பூங்கா அருகே மஞ்சகுட்டை சாலையில் உள்ள காபி போர்டின் பண்ணையை அடைந்தோம்.

பண்ணையின் வாயிலில் இருந்து நாங்கள் கூட்டம் நடத்த இருந்த அரங்கம் 
வரை இரு மருங்கிலும் இருந்த காஃபி செடிகளின் அழகை இரசித்துக்கொண்டே நடந்தோம். எனக்கு என்னவோ கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே 
இந்த மலைப் பயிர்களான காஃபி, தேயிலை போன்றவைகள் மேல் ஒரு ஈர்ப்பு.

படித்து முடித்ததும் ஏதேனும் ஒரு காஃபி அல்லது தேயிலை தோட்டத்தில் 
மேலாளராக சேரவேண்டும் என்ற ஆசை இருந்தது உண்மை. ஆனால் 
குளிருக்கு பயந்துகொண்டு நான் அதற்கு முயற்சிக்கவில்லை.

இருப்பினும் விட்ட குறை தோட்ட குறை என்பார்களே அது போல 
வங்கியில் சேர்ந்த பிறகு வங்கியில் கடன் பெற்ற அல்லது கடனுக்கு 
விண்ணப்பித்த மலைத்தோட்ட பண்ணைகளுக்கு பல முறை ஆய்வுக்கு சென்றிருக்கிறேன். தலைமை அலுவலகத்தில் இருந்தபோது காஃபி தோட்ட 
கடன்கள் வழங்கும் துறையிலும் பணியாற்றியிருக்கிறேன். எனவே இந்த மலைப்பயிர்கள் பற்றிய விரிவான பதிவை பின்னர் எழுதலாமேன
இருக்கிறேன்.

எங்களுக்கு இடம் கொடுத்து உதவிய காஃபி போர்டு பற்றி சொல்லிவிட்டு 
மேலே செல்லலாமென நினைக்கிறேன். 1942 ஆம் ஆண்டு இந்திய 
பாராளுமன்றத்தால் உருவாக்கப்பட்டு, இந்தியா அரசின் வணிகம் மற்றும் 
தொழில் துறையின் கீழ் ஒரு தன்னாட்சி பெற்ற நிறுவனமாக 
(Autonomous Body) இயங்கி வரும் காஃபி போர்டு, காஃபி பயிர்களை பற்றிய ஆராய்ச்சி,அவைகளின் தரத்தை மேம்படுத்துதல், காஃபியை உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் பிரபலப் படுத்தி சந்தை படுத்துதல் போன்றவைகளில் 
ஈடுபட்டு, காஃபி தொழிலுக்கு ஒரு நண்பனாய் வழிகாட்டியாய் இருந்து 
வருகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.


காஃபி போர்டினுடைய 50 க்கும் மேற்பட்ட விரிவாக்க செயல் விளக்க 
பண்ணைகளில் ஒன்று தான் ஏற்காட்டில் உள்ள பண்ணை. அந்த பண்ணையில் 
நான் எடுத்த சில புகைப் படங்கள் கீழே.







அங்குள்ள செடிகளில் கொத்துக்கொத்தாய் காய்த்திருந்த காஃபி காய்கள் 
எங்களைப் பறித்துக்கொள் என்று சொல்வது போல் இருந்ததை எனது 
காமிரா மூலம் நான்  பறித்துக்கொண்டவைகள்  கீழே





 



அங்குள்ள நெடிதுயர்ந்த மரமொன்றை பற்றிப்படர்ந்திருந்த மிளகுக் 
கொடியையும் எனது ஒளிப்படக்கருவி படம் பிடிக்க தவறவில்லை.








போகும் வழியில் Fabaceae தாவர குடும்பத்தைச்சேர்ந்த Calliandra 
haematocephala என்ற தாவரத்தையும் பார்த்தோம். இதனுடைய 
பூங்கொத்து (Inflorescence) நாம் முகத்திற்கு பவுடர் பூச உபயோகிக்கும் 
மிகச்‌ சிறிய மெத்தை போன்று இருப்பதால் இதை Powder Puff Plant என 
அழைப்பதுண்டு.

நான் எடுத்த அந்த பூவின் படத்தை  கீழே காணலாம்.





இந்த பூக்கள் வெள்ளை நிறத்தில் மட்டுமல்லாமல் சிவப்பு, இளஞ்சிவப்பு ஊதா வண்ணங்களிலும் இருக்கும்.

மற்ற வண்ண பூக்கள் கூகிளிலிருந்து கீழே















வழி நெடுக இயற்கை அழகை இரசித்துக்கொண்டே அங்கிருந்த அரங்கத்தை  அடைந்தோம்.அங்கே எங்களை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பதாகை இதோ.




அதுவரை கண்களுக்கு விருந்து படைத்து வந்த  நாங்கள், வயிற்றுக்கு 
விருந்து படைக்கவேண்டிய நேரம் வந்ததை அறிந்து உடனே சாப்பிடத் தொடங்கினோம்.


தொடரும்



13 கருத்துகள்:

  1. இந்த பதிவில் காபி போர்டைப் பற்றி, நன்கு சுவையாகவே சொன்னீர்கள். காபி நல்ல ஸ்ட்ராங்க்தான். நீங்கள் எடுத்த புகைப் படங்களும் நன்றாக உள்ளன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு தி,தமிழ் இளங்கோ அவர்களே!

      நீக்கு
  2. மனதை கொள்ளை கொள்ளும் படங்கள் ஐயா... மலைப்பயிர்கள் பற்றிய பகிர்வையும் விரைவில் எதிர்ப்பார்க்கிறேன்...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      நீக்கு
  3. நான் 1956 ல் அக்ரி பட்டப்படிப்பு முடித்தேன். நீங்கள் 1966 ல். சரியாக 10 வருட வித்தியாசம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே! நீங்கள் வேளாண் அறிவியல் பட்டப்படிப்பு முடித்தபோது, நான் ஏழாம் வகுப்பு (7th Form) முடித்திருந்தேன் ஐயா.

      நீக்கு
    2. மன்னிக்கவும். அப்போதைய ஏழாம் வகுப்பு II Form என அழைக்கப்பட்டது. தட்டச்சு செய்யும்போது தவறாக 7th Form என தட்டச்சு செய்துவிட்டேன்.

      நீக்கு
  4. அண்மையில் என் மகன் 25 ஆண்டுகளுக்குப் பின் அவனுடன் படித்த MBA பட்டதாரிகளுடன் TA PAI Management Instituteல் கூடி மகிழ்ந்ததைக் கூறியது அந்தப் பதாகை பார்த்தபோது நினைவுக்கு வந்தது. ஏற்காடில் மாண்ட்ஃபோர்ட் ப்ரதெர்ஸ் நடத்தும் பள்ளி பெயர் பெற்றது. தொடர்ந்து வருகிறேன். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு G.M. எம்.பாலசுப்ரமணியன் அவர்களே! மாண்ட்ஃபோர்ட் பள்ளிக்கு நாங்கள் செல்லாவிடினும் அதைப் பற்றி எழுத இருக்கிறேன்.

      நீக்கு
  5. //காபி போர்டின் செயல்முறை விளக்க பண்ணையில் கூட்டம் நடத்தவும்,
    மதிய மற்றும் இரவு உணவை அருந்தவும் தேவையான அனுமதியைப் பெற
    அவர் தஞ்சையிலிருந்து சேலத்திற்கும் ஏற்காட்டிற்கும் பலமுறை வந்ததாக
    நண்பர்கள் பழனியப்பனும் வெங்கடரமணனும் சொன்னார்கள்//


    தொலைபேசியில் மற்றும் இ-மெயிலில் தொடர்பு கொண்டு இந்த காரியங்களை முடித்திருக்க முடியாதா? தஞ்சைக்கும் ஏற்காட்டுக்கும் அலைவது என்பது சுலபமான காரியம் இல்லை. புகைப்படத்தில் பசுமையான காட்சிகளைப் பார்க்கும்பொழுது மனதுக்கு இதமாக உள்ளது. தொடர்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! நீங்கள் சொல்வதுபோல் மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டிருக்கலாம். ஆனால் காஃபி போர்டின் உயர் அலுவலர்களை என் நண்பருக்குதெரியாது. அவரது உறவினர் மூலம் தொடர்பு ஏற்பட்டதால் நேரில் சென்று பார்த்து அனுமதி கேட்பது மரியாதை என்ற காரணத்தால் அவர் தஞ்சையிலிருந்து வர நேரிட்டது. அவ்வளவே.

      எங்களது வேளாண்மை விரிவாக்க (Agricultural Extension) பாடத்தில் Seeing is Believing என்றொரு சொற்றொடர் வரும். அது உண்மை என்பதை ஏற்காட்டை நேரில் பார்க்கும்போது உணர்வீர்கள். அடுத்த தடவை இந்தியா வரும்போது ஏற்காடு பயணம் உங்களது சுற்றுப்பயணத் திட்டத்தில் இருக்கட்டும். குறைந்தது 2 அல்லது 3 நாட்கள் தங்கியிருந்து இயற்கை அழகை இரசிக்க வேண்டுகிறேன்.

      நீக்கு
  6. ஏற்காடு பற்றியும் Coffee Board பற்றியும் நல்ல விவரங்கள். இங்கே தில்லியில் கூட அவர்கள் நடத்தும் சில Coffee Shop-கள் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும், தகவலுக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!

      நீக்கு