புதன், 6 செப்டம்பர், 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 37

முத்துப்பேட்டை தர்காவிலிருந்து நேரே முத்துப்பேட்டை வடக்குக்காடு என்ற இடத்திலிருந்த சின்னப் பண்ணை திரு S.A.D.தட்சிணாமூர்த்தி அவர்களது வீட்டிற்கு சென்றோம். அவர் வேறு யாருமல்லர். நண்பர் நாகராஜனின் சம்பந்தி தான் அவர்.




திரு தட்சிணாமூர்த்தி அவர்கள் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் கீழத் தஞ்சை என அழைக்கப்பட்ட இந்த பகுதியில் பிரபலமான காங்கிரஸ்காரர். திரு ஜி.கே மூப்பனார் போன்ற காங்கிரஸ் தலைவர்களுடன் இணைந்து பணியாற்றியவர்.

அவருடைய சார்பாக, அன்று மாலை அவருடைய வீட்டில் சிற்றுண்டி மற்றும் காபி அருந்த எங்களை நண்பர் நாகராஜன் அழைத்திருந்தார். நாங்களும் மிகுந்த மகிழ்ச்சியோடு அந்த அழைப்பை ஏற்று அங்கு சென்றோம்.

நாங்கள் அங்கே சென்றபோது அவர் வாயில்யே நின்று இன்முகத்துடன் வரவேற்று அந்த பெரிய வீட்டின் விசாலமான வரவேற்பு ஆளோடியில் அமரச்செய்தார். எங்கள் அனைவருக்கும் இனிப்பு, பப்ஃப்ஸ்,வறுவல் மற்றும் காஃபி கொடுத்து உபசரித்தார். எங்கள் அனைவருக்கும் சிரமம் பாராது சிற்றுண்டி தந்து உபசரித்ததை எங்களால் மறக்க இயலாது. அவருக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

நான் முன்பே எழுதியிருந்தது போல இந்த சந்திப்பில் சிறப்பான அம்சமே வகுப்புத் தோழர்களின் சொந்தங்கள். இந்த சந்திப்பை தங்கள் வீட்டு விழா போல் எண்ணி எங்களை கவனித்துக்கொண்டதுதான். இதைப்போன்ற சொந்தங்களைப் பெற்ற எம் நண்பர்கள் கொடுத்து வைத்தவர்கள்தான். அவர்களை நண்பர்களாக பெற்ற நாங்களும் தான்.

அவருக்கு எங்களது நன்றியைத் தெரிவித்துக்கொண்டு, அங்கிருந்து மாலை 5 மணிக்கு தஞ்சையை நோக்கிப் புறப்பட்டோம். பேருந்துப் பயணத்தின் போது, பழைய திரைப்படப் பாடல்களைப் பாடி எங்களை களிப்பில் ஆழ்த்தினார் நண்பர் முருகையன்.

அப்போது சிலர் நண்பர் அய்யம்பெருமாளிடம் கனடாவில் மேல் படிப்பு படிப்பது பற்றியும் வேலை வாய்ப்பு பற்றியும் கேட்டறிந்துகொண்டு இருந்தனர்.

பட்டுக்கோட்டையை அடைந்தபோது நண்பர்கள் ஜெயராமன் மற்றும் திருநாவுக்கரசு ஆகியோர் தங்கள் குடும்பத்தோடு இறங்கிக்கொண்டார்கள். தஞ்சை வந்து சிதம்பரம் செல்வதை விட அங்கிருந்து கும்பகோணம் சென்று சிதம்பரம் சென்றால் தூரமும் நேரமும் குறையும் என்பதால் அங்கே இறங்கிக்கொண்டார்கள்.

மற்ற நண்பர்களோடு நாங்கள் தஞ்சையில் தங்கியிருந்த ஓட்டல் ABI’s INNஐ அடைந்தபோது இரவு மணி 7.30.

எல்லோருக்கும் இரவு உணவு முதல் நாள் காலையில் சிற்றுண்டி ஏற்பாடு செய்திருந்த அதே மூன்றாம் தளத்தில் ஏற்பாடு செய்திருப்பதாக நண்பர்கள் சொன்னார்கள். நான் சென்னை திரும்ப ‘மன்னை’ விரைவு இரயிலில் முன் பதிவு செய்திருந்தேன்.

அந்த இரயில் மன்னார்குடியிருந்து தஞ்சை வந்து இரவு 10.45 க்குத்தான் புறப்படும் என்பதால் அதற்கு முன் புறப்படும் இரயிலில் பயணம் செய்யும் நண்பர்கள் முதலில் உணவருந்தட்டும் என்று அவர்களிடம் விடை பெற்றுக்கொண்டு நண்பர் அய்யம்பெருமாள் தங்கியிருந்த அறைக்கு ஓய்வெடுக்க சென்றுவிட்டேன்.

இரவு 8.30 மணிக்கு மேல் நானும் என் துணைவியும் உணவருந்த சென்றபோது தஞ்சை நண்பர்களும் நண்பர் அய்யம்பெருமாள் அவரது துணைவியார். மற்றும் சில நண்பர்களும் இருந்தனர்.

அங்கே எடுத்தூண் (Buffet) முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரவு சிற்றுண்டியில், ஆடிக்கூழ் (இனிப்பு), பால் பணியாரம், இட்லி -சட்னி, இடியாப்பம் –கோஸ்மல்லி, மசாலா பணியாரம் –காரச் சட்னி, மசாலா தோசை, தயிர் சாதம், ஊறுகாய், மசாலா பால் , வாழைப்பழம் ஐஸ் கிரீம் (Straw Berry), பீடா (அசைவ உணவுப் பிரியர்களுக்கு, ஆட்டிறைச்சி மசாலா, கோழி குருமா என பலவகை உணவு வகைகளை வைத்து, வழக்கம்போல் எதைச்‌ சாப்பிட, எதை விட எனத் திண்டாட வைத்துவிட்டனர். தஞ்சை நண்பர்கள்.

மிதமாக சாப்பிட்டுவிட்டு, கீழே வந்து எங்களது உடைமைகளை எடுத்துக்கொண்டு நண்பர் அய்யம்பெருமாள் அறையிலிருந்து வெளியே வந்தபோது நண்பர் முத்துகிருஷ்ணன் அவரது துணைவியாருடனும் நண்பர் சேதுராமனும் இரயிலுக்கு புறப்படத் தயாராக வரவேற்பறையில் காத்திருந்தனர்.

விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த தஞ்சை நண்பர்களான முருகானந்தம்,.பாலு மற்றும் நாகராஜன் ஆகியோரிடம் எங்களது நன்றியைத் தெரிவித்துக்கொண்டு விடை பெற்றோம். மற்ற நண்பர்கள் அங்கு இல்லாததால் அவர்களிடம் சொல்லிக்கொண்டு புறப்பட இயலவில்லை.

நான் என் துணைவியார், நண்பர் முத்துகிருஷ்ணன் அவர் துணைவியார் நண்பர் சேதுராமன் ஆகியோர் இரயில் நிலையம் செல்ல தானியை (Auto) அமர்த்த எண்ணி வெளியே வந்தபோது, நண்பர் அய்யம்பெருமாள், மறுநாள் வெளியே செல்ல அவர் ஏற்பாடு செய்திருந்த மகிழுந்தைத் தந்து, நாங்கள் தஞ்சை சந்திப்புக்கு செல்ல உதவினார்.

அவருக்கு நன்றி சொல்லி தஞ்சை இரயில் சந்திப்பு நிலையத்தை அடைந்தோம். முதலில் திருநெல்வேலி செல்லும் இரயில் வந்ததும், நண்பர் முத்துகிருஷ்ணன் எங்களிடம் விடைபெற்று சென்றார்.

நான், என் துணைவியார் மற்றும் நண்பர் சேதுராமன் ஆகியோர் நடைமேடையில் காத்திருந்து. இரவு 10.35 மணிக்கு மன்னை விரைவு இரயில் வந்ததும்,அதில் ஏறினோம். 10-09-2016 அன்று சென்னையிலிருந்து பயணித்தபோது இதே மன்னை விரைவு இரயிலில் எந்த இருக்கை எண் எங்களுக்குத் தரப்பட்டிருந்ததோ, அதே எண் திரும்பவும் தரப்பட்டிருந்தது எதிர்பாராத ஒன்று.

இரவு 10.45 மணிக்கு இரயில் புறப்பட்டதும் உறங்கச் சென்றோம்


தொடரும்


22 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு அசோகன் குப்புசாமி அவர்களே!

      நீக்கு
  2. ஒவ்வொரு நிகழ்வையும் சுவை பட விளக்க மாகக் கூறி இருக்கிறீர்கள் ஒரு சந்திப்பை இவ்வளவு விஸ்தாரமாக எழுது முடியும் என்பதை உங்கள் பதிவுகள் காட்டுகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! இந்த சந்திப்பை பற்றி பின்னர் நினைத்துப் பார்த்து மகிழ்ச்சியடைய எனது பதிவு உதவ வேண்டும் என்பதற்காக நடந்த ஒவ்வொரு நிகழ்வையும் விட்டுவிடாமல் விரிவாக எழுதியுள்ளேன். தங்களின் பாராட்டுக்கு மீண்டும் நன்றி!

      நீக்கு
  3. திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் இந்த பதிவு பற்றிய மின்னஞ்சலில் அனுப்பியுள்ள கருத்து:


    முத்துப்பேட்டை தர்காவிலிருந்து கிளம்பிச்சென்ற இடங்கள், சந்தித்த மனிதர்கள், சாப்பிட்ட உணவுகள், பிரியாவிடை பெற்ற நண்பர்கள் என ஒவ்வொன்றாகச் சொல்லிக்கொண்டே வந்து இறுதியில் ஒருவழியாக சென்னை செல்லும் இரயிலில் ஏறிப் படுக்கச்சென்றது வரை அழகாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுகள்.

    அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!

      நீக்கு
    2. நிகழ்வுகளின் சிறு விடயங்களைக்கூட மறவாதிருப்பது எல்லோருக்கும் வராது.
      அருமையாக கொண்டு வந்து முடிக்கின்றீர்கள். தொடர்கிறேன்.

      நீக்கு

    3. வருகைக்கும், பாராட்டுக்கும், தொடர்வதற்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே!

      நீக்கு
    4. அந்தக் காலத்து "இங்கே போயிருக்கிறீர்களா", மற்றும் " இதயம் பேசுகிறது" ஆகியவற்றை நினைவு படுத்துகிறது. முடிந்து விட்டது என ஏக்கம் வருவது உண்மை.

      நீக்கு
    5. முதல் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு கணபதி விபு அவர்களே! எனது தொடரை எழுத்துலக ஜாம்பவான்களான எழுத்தாளர் சாவி மற்றும் எழுத்தாளர் மணியன் ஆகியோரது பயணக்கட்டுரைகளோடு ஒப்பிட்டிருக்கிறீர்கள். அதற்கு நான் தகுதியானவனா எனத் தெரியவில்லை.
      தொடரை தொடர்ந்து படித்து வந்தமைக்கு நன்றி! இன்னும் ஒரு பதிவோடு இந்த தொடர் முடிவடையும்.

      நீக்கு
  4. 37 பகுதிகள் வாசித்துப் போனதே தெரியவில்லை. நெடுநாட்களுக்குப் பின் நண்பர்கள் 'சந்தித்தோம்; பிரிந்தோம்' என்றில்லாமல் பயண இலக்கிய கட்டுரைகள் மாதிரி சுவைபட எழுதியிருக்கிறீர்கள்.

    சந்தேகமில்லாமல் 'பொன்விழா சந்திப்பு'க்கு இஃது ஓர் ஆவணமாகும். அதுவும் புகைப்படங்களுடன் கூடிய ஆவணம்.
    பிற்காலத்தில் உங்களின் நண்பர்கள் புரட்டிப் பார்த்தாலும் பழைய நினைவுகளைக் கிளர்த்தி மலர வைக்கிற நினைவுப் பரிசு.

    அதுவும் இணையத்திலேயே பதிவாக்கப்பட்ட நினைவுகள்.
    உங்கள் நண்பர்கள் அனைவரும் மறக்காமல் இந்தத் தொகுப்பை தங்கள் கணினியில் தரவிறக்கம் செய்து கொண்டால் காலத்தின் கல்வெட்டாய் என்றென்றும் அவர்களின் கணினி சேமிப்பில் பதிந்து விடும். வேண்டுகிற பொழுதெல்லாம் நினைவுகளை
    மீட்டெடுத்துப் பார்த்துக் கொள்ளலாம்.

    தொடர்ந்து வாசித்து வர ஆவல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே!

      'சந்தித்தோம்; பிரிந்தோம்' என்றில்லாமல் பயண இலக்கிய கட்டுரைகள் மாதிரி சுவைபட எழுதியிருக்கிறீர்கள்’ என குறிப்பிட்டிருக்கிறீர்கள்.
      உண்மைதான். இந்த சந்திப்பு பற்றி மட்டுமல்ல. இதற்கு முன் அண்ணாமலை நகர் மற்றும் சேலத்தில் நடந்த சந்திப்புக்கள் பற்றியும், பின்னர் படித்துப்பார்க்கும்போது சந்தித்த அந்த இனிமையான நாட்கள் நினைவுக்கு வரவேண்டும் என்பதற்காக விரிவாக எழுதியிருக்கிறேன். இந்த தொடர் சுவைபட உள்ளது என மனமார பாராட்டியதற்கு நன்றி!

      இந்த தொடரை படித்து வரும் தஞ்சை நண்பர்கள் பாலசுப்ரமணியம் மற்றும் நாகராஜன் ஆகியோர் இந்த தொடரையும் இதற்கு முன் நடந்த சந்திப்புகள் பற்றி நான் எழுதியுள்ள தொடர்களையும் நூல் வடிவில் அச்சிட்டு கோவையில் அடுத்த ஆண்டு சந்திக்கும்போது அனைவருக்கும் தரலாமென ஆலோசனை கூறியிருக்கிறார்கள். அனைத்து நண்பர்களின் விருப்பதை அறிந்து அவ்வாறு செய்ய இருக்கிறோம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

      தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி! அடுத்த பதிவோடு இந்த தொடர் நிறைவுபெறுகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

      நீக்கு
  5. பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திருமதி ராஜி அவர்களே!

      நீக்கு
  6. # எடுத்தூண் (Buffet) #
    உங்களின் தமிழாக்கம் அருமை அய்யா :)
    த ம +௧

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும், பாராட்டுக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு பகவான்ஜி அவர்களே! ‘எடுத்தூண்’ என்ற தமிழாக்கத்தை பாராட்டியுள்ளீர்கள். இந்த சொல்லை தமிழாக்கம் செய்தது நானல்லன். ஏற்கனவே உள்ளதை இங்கு பயன்படுத்தியிருக்கிறேன். அவ்வளவே.

      மேலும் இந்த சொல்லை இதற்கு முன் மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 6 இல் பயன்படுத்தி இருக்கிறேன்.

      நீக்கு
  7. இவ்வாறாக பயண அனுபவங்களை எழுதும்போது நம் நினைவாற்றல் பெருகும் என்பது நான் அனுபவத்தில் கண்ட உண்மை. தொடர்ந்து உங்களுடன் பயணிக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே! நீங்கள் கூறுவதுபோல் இந்த பயண நிகழ்வுகளை எழுதுவதால் நமது நினைவாற்றல் பெருகும் என்பது உண்மைதான். அதோடு பின்னாட்களில் படிக்கும்போது மகிழ்வோடு மனதில் அசைபோட இவைகள் உதவும் என்பதும் உண்மை.

      நீக்கு
  8. சந்திப்பினைப் பற்றி விரிவாக சொன்னதோடு, சென்ற இடங்கள் பற்றிய தகவல்களும் தருவது சிறப்பு. தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!

      நீக்கு
  9. விட்டுப் போன இந்த பதிவை இன்றுதான் படிக்க முடிந்தது. தொடர்ந்து வந்ததில் மிக்க மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பதிவைப் படித்து மகிழ்ந்தமைக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!

      நீக்கு