சனி, 29 பிப்ரவரி, 2020

தொடரும் சந்திப்பு 21

Great Mount ‘COCO LAGOON’  ஓய்வகத்தின் உரிமையாளர் திரு T.சேதுபதி  அவர்கள் சிறப்புரையாற்றிவிட்டு சென்ற பின், ஓய்வகத்தின் கலைப் பிரிவு ஊழியர்கள் நடன நிகழ்ச்சிகளை நடத்தி எங்களை உற்சாகப்படுத்தினார்கள்.



ஓய்வகத்தில் உள்ள  D Team என அழைக்கப்படும் கலைக் குழுவே இந்த நிகழ்ச்சியை நடத்தியது.  Dream, Desire, Delight என்ற விளம்பர சொற்கள் இவர்களது Tag Line ஆகும். அதை சுருக்கி D Team என்கிறார்கள். 


முதலில் அருமையான பரத நாட்டியம் ஒன்றை சுமார் அரை மணி நேரம் ஆடி ஒரு பெண் எங்களை மகிழ்வித்தார். அப்போது அனைவரும் அமைதியாய் இருந்து அந்த நாட்டியத்தை இரசித்தோம். 




பரத நாட்டிய நிகழ்ச்சியின் புகைப்படங்கள் மேலே 


பரத நாட்டியத்தோடு நிறுத்தாமல், எங்களோடு வந்திருந்த குடும்ப உறுப்பினர்களில் உள்ள இளைஞர்கள்  மற்றும் குழந்தைகளுக்காக ஒரு சிறப்பு நடனத்தை  ஐந்து பேர் கொண்ட குழுவினர், பின்னணியில் திரைப்படப் பாடல்களின் இசை ஒலிக்க அதற்கேற்றாற்போல் அரைமணி நேரத்திற்கு மேல் நடனமாடி அனைவரின் பாராட்டையும் பெற்றனர்.






அந்த குழுவினர் ஆடியபோது எடுத்த புகைப்படங்கள் மேலே. 



அந்த குழுவில் நடனமாடிய பெண்ணை,  நண்பர்களின் துணைவியர்கள் அழைத்து பாராட்டியபோது எடுத்த படம் மேலே 



D Team இன் நடனத்தால் ஈர்க்கப்பட்டு நண்பர்களின் பெயர்த்திகள் மேடையில் நடனமாடியபோது எடுத்த படம்.


இந்த சந்திப்பிலும் வழக்கம்போல் நண்பர்கள் மூவர் அனைவருக்கும் பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்கள். 


நண்பர் திரு சரவணன் (தேசிய பஞ்சாலைக் கழகத்தில் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக,(CMD)பதவி வகித்து ஒய்வு பெற்றவர்) அனைவருக்கும் தன் செலவில் நினைவுப் பரிசாக பூத்துவாலை (Turkish towel) ஒன்றை வழங்கினார்.


நண்பர் திரு முருகானந்தம்(அகில இந்திய வானொலியில் நிலைய இயக்குனராக இருந்தவர்) அனைவருக்கும் தன் செலவில் நினைவுப் பரிசாக கைவிளக்கு (Torch Light) ஒன்றை வழங்கினார்.


நண்பர் சுப்ரமணியன் ( தமிழக வேளாண்மைத் துறையில் இணை வேளாண்மை இயக்குனராக (Joint Director of Agriculture) பணியாற்றி ஒய்வு பெற்றவர்)  கேரளாவில் உள்ள அவரது ஏலக்காய் தோட்டத்திலிருந்து (Estate) ஏலக்காய் கொண்டு வந்து அனைவருக்கும் கொடுத்தார். 


மேடையில் திருமதி & திரு சரவணன், திருமதி & திரு முருகானந்தம் மற்றும் திருமதி & திரு சுப்ரமணியன் நின்றுகொண்டு பரிசுப் பொருட்களை வழங்கினார்கள். நண்பர் நாச்சியப்பன் நண்பர்கள் அனைவரையும் அகர வரிசையில் அழைக்க, மேடை அருகே சென்று பரிசுப் பொருட்களைப் பெற்று பரிசு தந்த நண்பர்களுக்கு நன்றி சொல்லித் திரும்பினோம். 


அப்போது எடுத்த புகைப்படங்கள்  அனைத்தையும் பதிவேற்ற ஆசை இருப்பினும், பதிவு நீண்டுவிடும் என்பதால் மூன்று புகைப்படங்களை மட்டும் இங்கே தந்திருக்கிறேன். 



நண்பர் நாச்சியப்பன் பெயர்களை வாசிக்க, நண்பர் கேசவன் நண்பர் சரவணனிடமிருந்து பூத்துவாலை பெற்றபோது எடுத்த புகைப்படம். அருகே திருமதி சரவணனிடமிருந்து திருமதி கேசவன் பரிசைப் பெற்றுக்கொண்டு இருக்கிறார். 



திருமதி முருகானந்தத்திடமிருந்து நான் கைவிளக்கு பெற்றபோது எடுத்த புகைப்படம்.



நண்பர் சுப்ரமணியத்தின் பெயர்த்தியிடமிருந்து நண்பர் முத்துகிருஷ்ணன் ஏலக்காய் பெற்றபோது எடுத்த புகைப்படம். அருகே திருமதி முத்துகிருஷ்ணன். 


செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்

என்ற வள்ளுவரின் வாக்குக்கிணங்க, செவிக்கும் கண்களுக்கும் விருந்து படைத்ததும், வயிற்றுக்கு விருந்து படைக்க தயாரானோம். 


தொடரும்


18 கருத்துகள்:

  1. இனிமையான நிகழ்வுகள்.

    இது போன்ற சந்திப்புகள் நம் மனதிற்கு மகிழ்ச்சி தருபவை.

    தொடரட்டும் சந்திப்புகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும்,தொடர்வதற்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!

      நீக்கு
  2. படங்களும் பதிவும் அருமை. இனிய நினைவலைகள். கைவிளக்கு பரிசு பெற்ற தங்களுக்கு என் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும்,பாராட்டுக்கும்,வாழ்த்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!

      நீக்கு
  3. நிகழ்வுகளை விவரித்த விதம் வழக்கம் போல அழகு தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி தேவக்கோட்டை திரு கில்லர்ஜி அவர்களே!

      நீக்கு
  4. மகிழ்ச்சியூட்டும் சந்திப்புகள்.   என் மாமா வேளாண் துறை துணைஇயக்குனராய் இருந்து  2008பிப்ரவரியில் ஓய்வு பெற்றார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு ஸ்ரீராம் அவர்களே! தங்களின் மாமாவும் ஒரு வேளாண் அறிவியல் பட்டதாரி என அறிந்து மகிழ்ச்சி!

      நீக்கு
    2. இல்லை ஸார்...   அவர் வேளாண் அறிவியல் பட்டதாரி இல்லை.  அந்தத் துறையில் அட்மினிஸ்டிரேட்டிவ் ஸைடில் இயக்குனராய் இருந்தவர்.

      'அவர்களே' எல்லாம் சொல்லாமல் ஸ்ரீராம் என்று விளித்தாலே போதுமே...

      நீக்கு
    3. மீள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ஸ்ரீராம்! தங்களின் மாமா வேளாண்மைத் துறையில் பணியாற்றியவர் என்பதால் அவரும் ஒரு வேளாண்மை பட்டதாரி என எண்ணிவிட்டேன். வழக்கமாக எழுதும்போது பெயருக்குப் பின் அவர்களே என எழுதுவது என் வழக்கம். இருப்பினும் தங்களை தங்கள் விருப்படியே விளிக்கிறேன்.

      நீக்கு
  5. தங்களின் கருத்துக் கோர்வை புகைப்படங்களுடன் அருமையாக விளக்கப்பட்டுள்ளது அருமை! படக்காட்சி பார்ப்பது போன்ற உணர்வு. வாழ்த்துக்கள்! அன்புடன் அக்ரி கி ஜனகன் சேலம் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும்,பாராட்டுக்கும் நன்றி திரு அக்ரி கி.ஜனகன் அவர்களே!

      நீக்கு
  6. இனிமையான நினைவுகள்... மறக்காமல் பதிவு செய்தது சிறப்பு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      நீக்கு
  7. கலை நிகழ்ச்சிகள் வேறையா?.. விருந்தோம்பல் வியக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும், நன்றி திரு ஜீவிஅவர்களே! ‘’ கலை நிகழ்ச்சிகள் வேறையா?..” என்று கேட்டிருக்கிறீர்கள். பருப்பில்லாமல் கல்யாணமா? திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்கள் சொல்லியிருப்பதுபோல் கலை நிகழ்ச்சி இல்லாத சந்திப்புகள் உண்டா என்ன?

      நீக்கு
  8. கலை நிகழ்ச்சிகள் இல்லாமல் பொது சந்திப்புகள் நிறை வேறாது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும், நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! நீங்கள் சொல்வது சரியே.

      நீக்கு