தலைப்பைப் பார்த்ததும்,'அன்புள்ள மான் விழியே,
ஆசையில் ஒரு கடிதம்!' என்றோ,'கண்மணி! அன்போடு காதலன் நான்
எழுதும் கடிதமே!' என்றோ
நான் எழுத இருப்பதாக எண்ணவேண்டாம்.
இது காதல் கடிதங்கள் பற்றிய பதிவு அல்ல என்பதை முதலிலேயே
சொல்லி விடுகிறேன். கடிதங்கள் எழுதுவது மெல்ல மெல்ல ம(கு)றைந்துவரும்
இந்நாளில் அலுவலக கடிதங்கள் எழுதுவதில் உள்ள தவறுகளை சொல்வது எவ்வளவு தூரம் உதவியாய்
இருக்கும் என எனக்குத்தெரியவில்லை. இருப்பினும் நான் தெரிந்துகொண்டதை எழுத நினைக்கிறேன்.
அரசு அலுவலகங்களில் பணிபுரிவோருக்குத் தெரியும் சாதாரணமாக
எழுதும்போது கடித தொடக்கத்தில் Sir, என்றே ஆரம்பித்து கடிதம் எழுதுவார்கள்.
ஆனால் ஒரு முக்கியமான விஷயம் பற்றியோ அல்லது அந்த விஷயம் பற்றி சம்பந்தப்பட்டவரின் கவனத்தை ஈர்க்க
விரும்பும்போது, வழக்கமாக விளிச்சொல்லான Sir,
என்பதை எழுதாமல் Dear Mr. X
என்று சம்பந்தப்பட்ட நபரின் பெயரில் அந்த கடிதத்தை அனுப்புவார்கள். அப்படி
எழுதும்போது Dear Mr. X என்ற சொல்லை கையொப்பமிடுபவரே
கையால் எழுதி கையொப்பமிட்டு அனுப்புவது உண்டு.
இதை D.O Letter (Demi Official) என்று சொல்வார்கள்.
அதன் நோக்கமே அந்த கடிதத்தில் எழுதப்பட்ட விஷயத்திற்கு அதை
பெறும் அலுவலர் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே
ஆகும்.
அந்த கடிதத்தில்
எழுப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு சரியான பதில் தராவிட்டாலோ அல்லது பதில் எழுதாமல்
விட்டாலோ அடுத்து ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரும் என்பதால் இம்மாதிரி
கடிதங்கள்,
மேல் அதிகாரியிடமிருந்து வந்ததும்,
அதைப் பெறும் நபர் படும் மன உளைச்சல் கொஞ்ச நஞ்சமல்ல.
இந்த மாதிரி அனுப்படும் D.O Letter களை, அரசு
அலுவலகங்களில் ‘செல்லமாக’ Love Letter என்றும் சொல்வதுண்டு. காரணம் Dear என்று
விளித்து எழுதியிருப்பதால்.
ஆனால் இந்த கடிதங்கள் எழுதுவது பற்றி எழுதப்படாத விதிகள்
உள்ளன. மேல் அதிகாரி தன் கீழ் பணிபுரியும்
அலுவலருக்கு
D.O Letter எழுதினால் அந்த அலுவலரின் பெயரை
எழுதி
(உ-ம் Dear Mr.X) கடிதத்தை ஆரம்பிக்கலாமாம்.
ஆனால் சம்பந்தப்பட்ட அலுவலர் திருப்பி பதிலளிக்கும்போது,
Dear Sir, என்றுதான் எழுதவேண்டுமாம். அவரது பெயரை
எழுதக்கூடாதாம். ஏன் அவ்வாறு எனத்தெரியவில்லை. அதுவே மேலதிகாரி பெண் ஆக இருந்தால் Dear Madam என்று
எழுதக்கூடாதாம். Madam என்றுதான் ஆரம்பிக்கவேண்டுமாம்!
நான் மாநில அரசு பணியில் இருந்தபோது இவ்வாறு கடிதங்கள்
வந்தபோது என்னோடு பணியாற்றிய மூத்த அலுவலர்களிடம்
இது பற்றி கேட்டபோது
அவர்களுக்கும் தெரியவில்லை.
கேட்டால் இதுதான் நடைமுறை என்றார்கள்.
அரசில் புதிதாய் பணியில் சேருவோர் அனைவரும் காரணம்
தெரியாமலேயே தமக்கு முன்னர் இருந்தவர்கள் செய்ததைப் பார்த்து தாங்களும் அதையே
கடைப்பிடிக்கிறார்கள்.
இதை எழுதும்போது நான் படித்த ஒன்று நினைவுக்கு வருகிறது.
அநேகம் பேருக்கு இது தெரிந்தும் இருக்கலாம்.
ஒரு அறையில்
எட்டு குரங்குகள் விடப்பட்டு, அந்த அறையின் நடுவில் மேலிருந்து ஒரு வாழைப்
பழக்குலை கட்டப்பட்டது. அந்த பழங்களுக்கு அருகே
இருக்கும்படி ஒரு ஏணியும் வைக்கப்பட்டது. ஏதாவது ஒரு குரங்கு அந்த பழங்களை
ருசிக்க ஏணியில் ஏறும்போது அங்கு உள்ள மற்ற குரங்களின் மேல் குளிர்ந்த நீரை (Ice Water) வீசப்பட்டது. அந்த குளிர்ச்சியான தண்ணீர் மேலே படும்போது அந்த குரங்குகள்
அதனுடைய குளிரின் தாக்கத்தை தாங்கமுடியாமல்
துடிக்கத்தொடங்கின.
இதுபோல்
ஒவ்வொரு குரங்கும் ஏணியில் ஏற
முயற்சிக்கும்போது
குளிர்
தண்ணீர் வீச ஆரம்பித்ததும், அந்த வலியைத்தாங்க முடியாத
மற்ற
குரங்குகள் ஏணியில் அந்த குரங்கு ஏறுவதால்தானே தங்கள்
மேல் குளிர்
நீரை வீசுகிறார்கள் என்பதால்,ஏணியில் ஏறும் குரங்கின்
மேல் பாய்ந்து அதை
அடிக்கத் தொடங்கிவிட்டன.
இதுபோல்
ஒவ்வொரு முறையும் வெவ்வேறு குரங்குகள் ஏணியில்
ஏற முயற்சித்தாலே
மற்றவை அதை ஏறவிடாமல் அடித்து நிறுத்திவிட்டன. இல்லாவிடில் அவைகள் அல்லவா அந்த
குளிர் நீரின் கொடுமையை அனுபவிக்க வேண்டியிருக்கும்.
எப்போது ஒரு
குரங்கு கூட ஏணியில் ஏறாமல் இருந்ததோ அப்போது
ஒரு குரங்கை வெளியேற்றிவிட்டு
ஒரு புதிய குரங்கு உள்ளே விடப்பட்டது.
அது உள்ளே
வந்ததும் மேலே தொங்கும் பழத்தைப் பார்த்ததும் ஏன்
மற்ற
குரங்குகள் சும்மா இருக்கின்றன என எண்ணி தானாவது சாப்பிடலாமே என்று ஏணியில் ஏறத்தொடங்கியது.அப்போது
மற்றவைகள்
அதன் மேல் பாய்ந்து அடிக்க ஆரம்பித்தன.ஏன் மற்ற குரங்குகள் தன்னை அடிக்கின்றன எனத் தெரியாததால் அது திரும்பவும் ஏற
முயற்சிக்கவில்லை.
பின்பு
இரண்டாவது குரங்கை வெளியேற்றிவிட்டு அதற்குப் பதில்
புதிய
குரங்கு ஒன்றை உள்ளே விட்டபோது அதுவும் ஏணியில் ஏற முயற்சித்தபோது, புதிதாய் வந்த
குரங்கும் ஏன் அடிக்கவேண்டும் எனத்தெரியாவிட்டாலும் மற்ற குரங்குகளோடு சேர்ந்து
கொண்டு
அதை
ஏறவிடாமல் தாக்கிற்று.
இவ்வாறு
ஒன்று பின் ஒன்றாக எல்லா பழைய குரங்குகளையும் மாற்றிவிட்டபோது, உள்ளே புதிய
எட்டு புதிய குரங்குகள் இருந்தாலும்
ஒன்று கூட
ஏணியில் ஏறி பழத்தைப் பறிக்க முயற்சிக்கவில்லை.
குளிர்ந்த நீர் வீசாவிட்டாலும் கூட
யாராவது ஏறினால் மற்றவை
அதன் மேல்
பாய்ந்து அதை அடிக்கத் தொடங்கிவிட்டன காரணம்
என்ன என்று தெரியாமலேயே!
அலுவலக கடிதம் எழுதுவதில் இருந்த எனது ஐயத்திற்கான விடை
1999 ல் ஒரு பயிற்சிக்கு ஹைதராபாத் சென்றபோதுதான்
கிடைத்தது.
தொடரும்