சனி, 29 மார்ச், 2014

நினைவோட்டம் 77



அடுத்து நான் மறக்க இயலா ஆசிரியர் தர்க்கவியல் (Logic) பாடம் நடத்தியவர்.
அவர் பெயரும் பெர்னாண்டஸ் தான். ஆனால்  திரு பெர்னாண்டஸ் தமிழ் நாட்டை சேர்ந்தவர்.


அவர்தான் எங்களுக்கு பாடம் நடத்தியவர்களில் இளையவர். அதனால் அவர் எங்களுக்கு ஆசிரியர் போல் தெரியவில்லை. ஏதோ Senior மாணவர் வந்து பாடம் நடத்தியது போல் இருந்ததால் அவரது வகுப்பில் நாங்கள் சௌகரியமாக இருப்பதைப் போல் உணர்ந்தோம். அவர் எப்போதும் சிரித்த முகத்தோடு தான்  பாடம் நடத்துவார்.   

இப்போது நினைத்துப் பார்க்கும்போது அவருக்கு இரண்டு விதமான பொறுப்புகள் அப்போது இருந்திருக்கும் என எண்ணுகிறேன். ஒன்று தர்க்கவியல் என்றால் என்னவென்று தெரியாத, அதுவரை அறிந்திராத எங்களுக்கு அதை சொல்லித் தரவேண்டும். இரண்டாவது அதை நாங்கள் புரிந்துகொள்ளும் அளவிற்கு அதை ஆங்கிலத்தில் சொல்லித்தரவேண்டும்!

இதை  ஏன் சொல்கிறேன் என்றால், மற்ற பாடங்களான இயற்பியல், வேதியல், தாவரவியல் விலங்கியல் போன்றவைகளை பள்ளியிலேயே படித்திருந்ததால் அவைகளை ஆங்கிலத்தில் நடத்தும்போது புரிய வாய்ப்புண்டு. அப்படி புரியாதபோது தாவரவியல் ஆசிரியர் சொன்னதுபோல் பாடத்தின் தலைப்பை சொன்னாலே புரிந்துகொண்டிருப்போம்.

காரண காரணங்களை தீவிரமாக ஆய்வதைத்தான் (Systematic study of the principles of good reasoning) Logic என்பார்கள். ஆனால் இந்த பாடமே எங்களுக்கு புதியது என்பதால் அவர் மிகுந்த சிரத்தையோடு சொல்லிக் கொடுத்ததால் ஓரிரு மாதங்களிலேயே படத்தைப் புரிந்து கொண்டுவிட்டோம்.

அவர் சொல்லிக் கொடுத்ததில் நான் இன்னும் மறக்காமல் இருப்பது தவறான வாதம் (Fallacy) பற்றி  சொன்ன எடுத்துக்காட்டு.

God is Love
Love is blind
So God is blind

அதுபோல இன்னொரு எடுத்துக்காட்டும் நினைவில் நிற்கிறது

Half door opened is equal to Half Door closed
So Full door opened is equal to Full Door closed


இந்த பாடத்தில் எனக்கு அதிக நாட்டம் ஏற்பட்டது இதுபோன்ற குதர்க்கமான வாதங்களாலா அல்லது சுவாரஸ்யமாக பாடம் நடத்திய ஆசிரியராலா எனத்  தெரியவில்லை. அதிக ஈர்ப்பு இருந்தததால் தான்  தர்க்கவியல் பாடத்தில் இறுதித்தேர்வில் என்னால் A Plus மதிப்பெண்கள் பெறமுடிந்தது என நினைக்கிறேன். (A Plus என்றால் 65 விழுக்காடு முதல் 74 விழுக்காடு வரை)
  
அப்போதெல்லாம் தேர்வு எழுதுவோருக்கு மதிப்பெண்கள் தருவதில்லை. அதற்கு பதில், பெற்ற மதிப்பெண்களை தர வரிசைப்படுத்தி (Grade) அதை A Plus இல் ஆரம்பித்து F வரை குறியீடாகத்தான் தருவார்கள் என்று நினைவோட்டம் 74 இல் எழுதியிருந்தேன்.அந்த வரிசைப்பற்றிய விவரத்தை பின்னர் எழுதுவேன் என சொல்லியிருந்தேன். அதன் விவரம் கீழே தந்துள்ளேன்.

A Plus என்றால் 65 விழுக்காடும் அதற்குமேலும் ஆனால் 75 விழுக்காடுக்கு கீழேயும்  
A என்றால் 60 விழுக்காடும் அதற்கு மேலும் ஆனால் 65 விழுக்காடுக்கு கீழேயும்
B Plus என்றால் 55 விழுக்காடும் அதற்கு மேலும் ஆனால் 60 விழுக்காடுக்கு கீழேயும்
B என்றால் 50 விழுக்காடும் அதற்கு மேலும் ஆனால் 55 விழுக்காடுக்கு கீழேயும்
C Plus என்றால் 45 விழுக்காடும் அதற்கு மேலும் ஆனால் 50 விழுக்காடுக்கு கீழேயும்
C என்றால் மொழிப்பாடங்களுக்கு 40 விழுக்காடும் அதற்கு மேலும் ஆனால் 45  விழுக்காடுக்கு கீழேயும் மற்ற பாடங்களுக்கு 35 விழுக்காடும் அதற்கு மேலும் ஆனால் 45  விழுக்காடுக்கு கீழேயும்
D Plus என்றால் (Special Distinction) 85 விழுக்காடும் அதற்கு மேலும் ஆனால் 100 விழுக்காடுக்கு கீழேயும்
D என்றால் (Distinction) 75 விழுக்காடும் அதற்கு மேலும் ஆனால் 85 விழுக்காடுக்கு கீழேயும் (தேர்வில் எல்லா பாடங்களிலும் ஒரே தடவையில் வெற்றிபெறும்போது)
D* என்றால் 75 விழுக்காடும் அதற்கு மேலும் ஆனால் 85 விழுக்காடுக்கு கீழேயும் (தேர்வை ஒரு தடவைக்குமேல் எழுதி வெற்றி பெற்றோருக்கு)
H என்றால் (Special Distinction) 100 விழுக்காடு மதிப்பெண்கள்
F என்றால் தோல்வி

அவரிடம் எந்த அளவுக்கு சுதந்திரமாக இருந்தோம் என்றால் ஒருநாள் அவர் பாடம் நடத்திவிட்டு சந்தேகம் ஏதேனும் உண்டா?’ எனக் கேட்டபோது ஒரு மாணவன் எழுந்து சார். பாடத்தில் சந்தேகம் இல்லை. வேறொரு சந்தேகம் உண்டு. கேட்கலாமா?; என்றபோது, அவர் பாடத்தில் சந்தேகம்  இல்லை என்பதைக் கேட்க மகிழ்ச்சியாய் இருக்கிறது. வேறென்ன சந்தேகம். கேள். என்றார்.

உடனே அவன் திமுகவிலிருந்து E.V.K சம்பத் ஏன் வெளியேறினார்?’ என்று கேட்டபோது வகுப்பில் ஒரே சிரிப்பு தான். அவர் அதற்கு சிரித்துக்கொண்டே அரசியல் பற்றி தெரிந்துகொள்ளலாம். ஆனால் அதில் ஈடுபடும் வயது உங்களுக்கு இதுவல்ல. எனக் கூறிவிட்டு பின் திரு சம்பத் வெளியேறியது பற்றி சொன்னார்.

மிகவும் கண்டிப்புக்குப் பெயர் போன எங்கள் கல்லூரியில் இதுபோன்று மாணவர்களோடு நெருங்கிப் பழகி, பேசி பாடம் நடத்தியவர்களும் உண்டு.



நினைவுகள் தொடரும்  

வே.நடனசபாபதி

16 கருத்துகள்:

  1. சொன்ன எடுத்துக்காட்டு... அட...!

    மாணவன் கேள்வியும் சுவாரஸ்யம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      நீக்கு
  2. எடுத்துகாட்டு சுவாரஸ்யம்.....

    சம்பத் ஏன் வெளியே போனார்.. நல்ல கேள்வி! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே! திரு சம்பத் அவர்கள் வெளியேறியதற்கு பல காரணங்கள் சொன்னாலும், அவர் தில்லிக்கு பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு சென்று வந்ததும் ‘திராவிட நாடு’ அடையவேண்டும் என்ற கொள்கையில் அவருக்கு ஏற்பட்ட மனமாற்றம் அண்ணாவுக்கும் அவருக்கும் இடைவெளியை உண்டாக்கிவிட்டது தான் முதல் காரணம். அதற்குப் பிறகு வேலூரில் நடந்த திமுக மாநாட்டில் அவருக்கு ஏற்பட்ட அவமானங்கள் போன்றவை மற்ற காரணங்கள்.

      நீக்கு
  3. பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி முனைவர் பழனி. கந்தசாமி அவர்களே!

      நீக்கு
  4. // ‘திமுகவிலிருந்து E.V.K சம்பத் ஏன் வெளியேறினார்?’ //

    அந்தக் காலகட்டத்தில் மாணவர்கள் தேர்தல்களிலும், அரசியல் கட்சிகள் ஊடுருவி இருந்தது என்று நினைக்கிறேன். கல்லூரிகளில் தேர்தல் நடக்கும்பொழுது அரசியல் கட்சிகள் சார்பாகவே நின்றதாக நினைவு. நாங்கள் படிக்கும் பொழுது அந்த நிலை கிடையாது. தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! இப்போது எப்படியோ தெரியவில்லை. அப்போது நான் உயர் நிலைப்பள்ளியில் படித்தபோதே (1954-60) மாணவர்கள் அரசியிலில் ஈடுபாடுகொண்டிருந்தார்கள். ஒரு தடவை நாவலர் நெடுஞ்செழியன் எங்கள் பள்ளிக்கு பேச வந்தபோது கருப்பு சிகப்பு வண்ணமுள்ள குரோட்டன்ஸ் இலைகளை அருகருகில் வைத்து தோரணம் கட்டி வரவேற்பளித்தனர். அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் விடுதில் நடக்கும் பொதுச்செயலாளர், நுண்கலைச்செயலாளர், போன்ற பதவிகளுக்கான தேர்தலில் பங்கு பெறும் மாணவர்கள் அரசியல் கட்சிகளை ஆதரிப்பவர்களாகவே இருப்பார்கள்.

      நீக்கு
  5. /அரசியல் பற்றி தெரிந்துகொள்ளலாம். ஆனால் அதில் ஈடுபடும் வயது உங்களுக்கு இதுவல்ல.’ எனக் கூறிவிட்டு பின் திரு சம்பத் வெளியேறியது பற்றி சொன்னார்./ ஒரு ஆசிரியரின் அறிவுரைக்குப்பின் விளக்கம் சொன்னது அவருக்கு நல்ல பெயர் கொடுத்திருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! நீங்கள் சொன்னது சரிதான்.

      நீக்கு
  6. வெகு சில ஆசிரியர்களே பாடத்திற்கு வெளியில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிப்பார்கள். அத்தகைய ஆசிரியருக்குத்தான் மாணவர்களிடத்தில் நல்ல மதிப்பும் இருக்கும். உங்களுடைய நடை எங்களையும் உங்களுடன் வகுப்புக்குள் அழைத்துச் சென்றது போல் இருந்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே! நான் ஏன் இன்னும் திரு பெர்னாண்டஸ் அவர்களை நினைவில் வைத்திருக்கிறேன் என்பதற்கான காரணத்தை நீங்கள் சொல்லிவிட்டீர்கள்.

      நீக்கு

  7. God is Love > Love is blind > So God is blind
    நல்ல சுவாரஸ்யமான தத்துவம்! நானும் இதனை எனது கல்லூரி நாட்களில் நண்பர்களிடையே கேள்விப்பட்டு இருக்கிறேன்! ஆனாலும் இவை போன்றவை தவறான வாதம் என்று விளக்கிய உங்கள் ஆசிரியர் பாராட்டுக்குரியவர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!

      நீக்கு
  8. fallacy பற்றி அழகாகச் சொன்னீர்கள்.நான் தர்க்கவியல் படிக்கவில்லை(adv tamil)ஆயினும் ஆர்வம் உண்டு.தொடருங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! Fallacy பற்றிய எடுத்துக்காட்டு எனது ஆசான் சொன்னது.எனவே அந்த பாராட்டுக்கு உரியவர் அவரே! நீங்கள் சிறப்புத் தமிழ் (Advanced Tamil) பாடம் எடுத்துப் படித்திருக்கிறீர்கள் என்பதை உங்களின் தமிழ் நடையே சொல்கிறதே!

      நீக்கு