திங்கள், 8 மே, 2017

‘தடம் படித்த சிற்றிதழ்கள்’ நூல் அறிமுகம்

கல்வியாளரும் எழுத்தாளருமான என் அண்ணன் சபாநாயகம் அவர்களுடைய ‘தடம் படித்த சிற்றிதழ்கள்’ என்ற நூலுக்கு தமிழக அரசு, அவரது மறைவுக்குப் பின் பரிசு அளித்திருப்பதாக ‘எழுத்தாளர் வே.சபாநாயகம் நினைவு சிறுகதைப் போட்டி’ என்ற தலைப்பில்
29-04-2017 அன்று வெளியிட்டிருந்த எனது பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.




அதைப்படித்துவிட்டு பதிவுலக நண்பர் திரு பகவான்ஜி அவர்கள் ‘தடம் பதித்த சிற்றிதழ்கள்’ நூலைப் பற்றி அறிமுகம் தரலாமே என்று பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார். அதற்கு நான் அவசியம் அந்த நூல் பற்றி எழுதுவதாக சொல்லியிருந்தேன்.

பதிவர் சகோதரி ஞா.கலையரசி அவர்களும், ’அந்த நூல் பற்றிய அறிமுகம் தாருங்கள் நானும் வாங்கிப்படிக்கிறேன் என்று பின்னூட்டத்தில் சொல்லியிருந்தார். நானும் அந்த நூல் பற்றிய அறிமுகத்தை விரைவில் தருவதாக பதில் தந்திருந்தேன்.


எனவே என் அண்ணனுடைய நூல் பற்றி ஒரு சிறிய அறிமுகத்தை இங்கு தரலாமென எண்ணுகிறேன்.


கணையாழி’ இதழில் ‘கணையாழி இதழின் பரிணாம வளர்ச்சி’ என்ற தலைப்பில் என் அண்ணன் எழுதியிருந்த தொடரைப் பாராட்டி எழுதிய நாகர்கோவில் எழுத்தாளர் அமரர் வனமாலி அவர்கள், தான் நடத்தி வந்த ‘சதங்கை’ இதழில் அதுபோல ஒரு தொடரை எழுதுமாறு கேட்டுக்கொண்டாராம்.

அவரின் வேண்டுகோளுக்கிணங்க, இலக்கிய உலகில் தடம் பதித்த இளைய தலைமுறையினருக்கு, அறிமுகமற்ற சிறந்த சிற்றிதழ்களை அறிமுகப்படுத்தும் நோக்கில், ‘சதங்கை’ இதழில், என் அண்ணனால் தொடராக எழுதப்பட்டவைகளின் தொகுப்பு தான் ‘தடம் படித்த சிற்றிதழ்கள்’ என்ற நூல்.

அந்த தொடரை குறிஞ்சிப்பாடி மணியம் பதிப்பகத்தார், 2014 ஆம் ஆண்டு என் அண்ணனின் எண்பதாண்டு நிறைவு விழாவின்போது வெளியிட்டார்கள்.

ஆண்டு தோறும் சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசை வழங்கும் தமிழ்நாடு அரசின், தமிழ் வளர்ச்சித் துறை, 2014 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இந்த நூலை அந்த ஆண்டின் சிறந்த நூலாக தேர்ந்தெடுத்து, இந்த ஆண்டு (2017) அறிவித்தது.

பரிசைப் பெற்றுள்ள படைப்பாளியான என் அண்ணனுக்கு ரூபாய்
30,000 க்கான காசோலையையும், சான்றிதழையும் மற்றும் இந்த நூலை வெளியிட்ட மணியம் பதிப்பகத்தாருக்கு ரூபாய் 10,000 க்கான காசோலையையும் 29-04-2017 அன்று சென்னையில் நடந்த விழாவில் தமிழ்நாடு அரசின், தமிழ் வளர்ச்சித் துறை வழங்கியது.

என் அண்ணனின் சார்பாக அந்த காசோலையையும், சான்றிதழையும் மணியன் பதிப்பகத்தின் உரிமையாளர் திரு S.சம்பந்தம் அவர்கள் பெற்று, பின்னர் விருத்தாசலத்திற்கு சென்று அவைகளை என் அண்ணன் மகன் அகிலநாயகத்திடம் சேர்ப்பித்துவிட்டார்.

இதைத்தான் எனது பதிவில் ‘இந்த பரிசை வாங்க அவர் இல்லையே என்ற வருத்தம் இருந்தாலும், அவரது படைப்பு அவரது காலத்திற்கு பின்னும் அவருக்கு பெருமை சேர்த்திருக்கிறது என்பதில் மகிழ்ச்சியே எனக் குறிப்பிட்டிருந்தேன்.

சிற்றிதழ் என்பது ஒரு குறிப்பிட்ட வாசகர்களைச் சென்றடையும் இதழ் என்பதும், அது கட்டுரை, கருத்துரை, திறனாய்வு, துறை ஆய்வு, விவாதம், நேர்காணல், கவிதை, உரைவீச்சு, சிறுகதை, தொடர்கதை, துணுக்குகள், நகைச்சுவை, சித்திரக்கதை எனப் பல்வேறுவகைப்பட்ட ஆக்கங்களை கொண்டிருக்கும் என்பதும், அதனுடைய முதன்மை நோக்கம் கருத்துப்பகிர்வே என்பதும் வியாபார நோக்கில் இலாபம் ஈட்டுவதை பொதுவாக முதன்மைக் குறிக்கோளாய் கொள்வதில்லை என்பதும் நாம் அறிந்ததே.

அப்படிப்பட்ட சிற்றிதழ்கள் பற்றி சொல்லும் இந்த ‘தடம் படித்த சிற்றிதழ்கள்’ நூலில், நடை, கசடதபற,அன்னம் விடுதூது, இலக்கிய வட்டம்,1/4, வானம்பாடி, பிரசினை-உதயம், அஃக், வண்ணங்கள்,சுட்டி, முனைவன், கவனம், மகாநதி, கறுப்பு மலர், களரி, ஞானரதம், மையம், புனர்,சுவடு, இன்று என மொத்தம் 20 சிற்றிதழ்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார் என் அண்ணன்.

‘மணிக்கொடி தொடங்கி சமீபத்தில் நின்றுபோன சுபமங்களா வரை. இலக்கிய ஆர்வமும், எழுச்சியும் மிக்கவர்களால் தொடங்கப்பட்டு, சில காலம் வந்து,பிறகு நின்று போன இலக்கியப் பத்திரிகைகள் ஏராளம். அவைகளில் இன்றும் நினைவில் நிற்பதாக இலக்கிய உலகில் தடம் பதித்து, இலக்கிய இரசிகர்களின் நெஞ்சில் வாழும் பத்திரிகைகள் சிலவற்றின் சாதனைகளையும், அவை நின்றுபோனதற்கான காரணங்களையும் இப்போது எண்ணிப்பார்ப்பது சுவாஸ்யமானதாக இருக்கும்’ என்று என் அண்ணன் ‘சதங்கை’ யில் முதல் தொடரில் எழுதியதையே இந்த நூல் பற்றிய அறிமுகமாக எடுத்துக்கொள்ளலாம்.

இந்த நூல் பற்றி நான் திறனாய்வு செய்வது பொருத்தமாக இருக்காது என்பதால், நான் அதைச் செய்யவில்லை. இலக்கிய உலகில் நுழையும் இளைய தலைமுறையினருக்கு சிற்றிதழ்கள் பற்றி அறிந்துக்கொள்ள இந்த நூல் துணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.


இந்த நூலை வெளியிட்டிருக்கும் குறிஞ்சிப்பாடி மணியம் பதிப்பகத்தாரின் முகவரி கீழே.

மணியம் பதிப்பகம்
14/39, இரத்தின முதலி தெரு,
குறிஞ்சிப்பாடி 607302
கடலூர் மாவட்டம்

பதிப்பக உரிமையாளர் திரு S.சம்பந்தம் அவர்கள்
கைப்பேசி எண் : 9443922276

24 கருத்துகள்:

  1. வணக்கம்.

    தங்களது அண்ணனின் நூலுள் குறிப்பிடப் பட்டுள்ள சிற்றிதழ்களுள் எனக்குத் தெரிந்தது நான்கு நூல்களின் பெயர்தான். தமிழிதழ் பெயர் குறித்த ஓரைம்பதாண்டு வரலாற்றினைக் கூட என் போன்று தமிழார்வலர்கள் என்று சொல்லித்திரிபவர்கள் அறிந்திருக்கவில்லை என்பதுதான் இன்றைய உண்மை நிலை. இச்சூழலில் இது போன்ற நூல்கள் வரவேண்டியதும் அதனை நாம் வரவேற்க வேண்டியதும் மிக அவசியம்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், நூலை பாராட்டியதற்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே! அனைவருக்கும் அனைத்து சிற்றிதழ்கள் பற்றியும் அறிய வாய்ப்பு இருப்பதில்லையே.

      நீக்கு
  2. தங்களது அண்ணனின் நூல்களைக் குறித்து விரிவாக விவரித்தமைக்கு நன்றி நண்பரே

    த.ம.2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டியதற்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே!

      நீக்கு
  3. தங்கள் அண்ணாருடைய ‘தடம் படித்த சிற்றிதழ்கள்’ என்ற நூல் அறிமுகத்தினை சுருக்கமாகவும் சுவையாகவும் தந்துள்ளீர்கள். மனம் நிறைந்த பாராட்டுகள்.

    அதில் குறிப்பிடப்பட்டுள்ள 20 நூல்களில் எதையுமே நான் அறிந்திருக்கவில்லை. நான் அறிந்துள்ள சில சிற்றிதழ்களே, பல்வேறு காரணங்களால் இப்போது தொடர்ந்து வெளியிடப்படாமல் உள்ளன. பொதுவாகவே சிற்றிதழினைத் தொடர்ந்து நடத்துவது என்பது மிகவும் சிரமமானதொரு காரியமாகும்.

    இவ்வாறாக பல காலங்களில் கொடிகட்டிப்பறந்துள்ள சிற்றிதழ்கள் பற்றிய சிறப்புக்களைச் சொல்லும் ஒரு நூல் அவசியமாகத் தேவைதான்.

    தமிழக அரசின் பரிசு பெற்றுள்ளது என்பதிலிருந்தே இந்த நூலின் தனிச்சிறப்பினை நம்மால் அறிய முடிகிறது.

    பயனுள்ள செய்தியினைத் தாங்கி வந்துள்ள இந்தப் பகிர்வுக்கு மிக்க நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டியதற்கும், நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! பெரும்பாலான இதழ்கள் விளம்பரத்தின் துணையோடுதான் வெளிவந்துகொண்டு இருக்கின்றன. இலக்கியப்பணி ஆற்ற நினைக்கும் சிற்றதழ்களுக்கு பெரும்பான்மையான வாசகர்களின் ஆதரவு கிட்டாததால் விளம்பரங்கள் கிடைப்பதில்லை. அதனால் அவைகள் தொடர்ந்து வெளிவராமல் நின்றுவிடுகின்றன.

      நீக்கு
  4. தமிழ் வளர்ச்சிக்குச் சிற்றிதழ்கள் பெரும் தொண்டு ஆற்றியுள்ளன. மூத்த எழுத்தாளர்களில் பலர், இச்சிற்றிதழ்களில் எழுதிப் புகழ்பெற்றவர் தாம். நீங்கள் குறிப்பிட்டுள்ள இதழ்களில் இரண்டு மட்டுமே நான் கேள்விப்பட்டவை. நிதிப்பற்றாக்குறை காரணமாக பெரும்பாலான இதழ்கள் இடையில் நிறுத்தப்பட்டாலும், அவை வெளிவந்த காலத்தில் இலக்கிய உலகில் தடம் பதித்தவை எவையென ஆவணப்படுத்துவது அவசியம். எனவே தான் இந்நூலைப் பரிசுக்குரியதாய்த் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். பதிப்பகத்தின் முகவரியைக் குறித்துக்கொண்டேன். இந்நூலைப் பற்றிய அறிமுகம் கொடுத்தமைக்கு மிகவும் நன்றி சார்! அவசியம் வாசித்துக் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வேன். நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டியதற்கும், நன்றி சகோதரி திருமதி ஞா கலையரசி அவர்களே! என் அண்ணன் குறிப்பிட்டுள்ளவை 20 சிற்றிதழ்கள் மட்டுமே. அவர் குறிப்பிடாதவைகள் இன்னும் உண்டு.

      பெரும்பாலான சிற்றதழ்கள் இடையிலே நின்றுபோனதற்கு காரணம் நிதி பற்றாக் குறைதான். அவைகளைப் பற்றி இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ளவேண்டும் என்ற நோக்கிலே தான் இந்த தொடர் எழுதப்பட்டது.

      இலக்கிய உலகில் தடம் பதித்த சிற்றிதழ்களை ஆவணப்படுத்திய நூல் என்பதால் தான் இந்த நூல் பரிசுக்கு உரியதாய் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது என்ற தங்களின் கருத்து சரியே.

      நான்தான், தங்களுக்கும் திரு பகவான்ஜி க்கும் நன்றி சொல்லவேண்டும். நீங்கள் இருவரும் கேட்டதால் தான் இந்த நூல் அறிமுகத்தை செய்திருக்கிறேன். நூலைப் படித்துவிட்டு தங்களின் மேலான கருத்துகளை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

      நீக்கு
  5. உங்கள் முகநூல் பதிவை படித்தேன்.தடம் படித்த சிற்றிதழ்கள். அதன் ஆசிரியர் உயர் திரு. சபாநாயகம் பற்றிய மலரும் நினைவுகள்.எனக்கும் விருத்தாசலம்தான். அங்குதான் படித்தேன். ஒன்பதாம் வகுப்பிலிருந்து பள்ளியிறுதிவரை அவர்தான் கணித ஆசிரியர், அவர்தான் வகுப்பு ஆசிரியர். அவர் மிகச் சிறந்த ஆசான், அன்பிற்க்கு உரிய நண்பன், நல்ல சகோதரன், நல்ல வழிகாட்டி இன்னமும் சொல்லிக் கொண்டே போகலாம். ஐம்பது வருடங்களுக்குப் பிறகு என் வகுப்புத்தோழியுடன் ஆன நட்பு மீண்டும் உயிர்பெற்று தொடர்கிறது. அவருடய எண்பதாவது பிறந்தநாள் விழாவிற்க்கு சென்றுவிட்டு வந்து என்னிடம் அவள் சொன்னபோது, ஆசிரியரின் தொலைபேசி எண்ணை பெற்று அவரிடம் பேசி ஆசி பெற்றேன், அது என் பாக்கியம். முதலில்(எவ்வளவு வருடங்கள் கழிந்து) அவருக்கு நினைவில் வரவில்லை. எந்த தெருவில் வசித்தேன், என் தந்தை பெயர் எல்லாம்கேட்டவுடன் நினைவில் வந்து என் பெயரை விஜயலட்சுமிதானே என்று சொல்லிவிட்டார். என் குடும்பத்தைப்பற்றி கேட்டுத் தெரிந்து கொண்டார். எனக்கு மிகவும் மகிழ்ச்சி. உங்களுடய பதிவை படித்தபிறகு மலரும் நினைவுகளாக மனதில் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவருடன் பேசும் பாக்கியத்தை எனக்கு ஏற்படித்துக் கொடுத்த என் தோழி சியாமளாவிற்க்கு என் நன்றி. உங்களுக்கும் என்பள்ளி நாட்களை நினைவு ஏற்படுத்தியதற்க்கு மிக,மிக நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், என் அண்ணனை (தங்களின் ஆசிரியரை) நினவுகூர்ந்தமைக்கு நன்றி திருமதி விஜயலட்சுமி அவர்களே!

      நானும் விருத்தாசலத்தில் படித்தவன்தான். திரு R.பார்த்தசாரதி(கல்பனாதாசன் ) அவர்கள் எனக்கு ஒரு ஆண்டு மூத்த மாணவர். Dr கிருஷ்ணன், கவிஞர் பழமலய் ஆகியோர் எனது வகுப்புத் தோழர்கள்.

      என் அண்ணன் எவ்வாறு எங்களுக்கு ஆசிரியராக இருந்தார் என்பதை விரிவாக நினைவோட்டம் என்ற தொடரில் எழுதியுள்ளேன். தங்களுக்கு நேரம் இருப்பின் நினைவோட்டம் 45 , 46 , 49 , 50 , 51 , 52 , 53 ஆகிய தொடர் பதிவுகளைப் படித்து பாருங்கள். உங்கள் பள்ளி நாட்களை அவை திரும்ப கொண்டுவரும்.

      ‘ஆசிரியர்கள் மாணவர்களை மறந்தாலும் மாணவர்கள் ஆசிரியர்களை மறக்கமாட்டார்கள்’ என்பதை தங்களது பின்னூட்டம் உறுதி செய்கிறது. மகிழ்ச்சி! நன்றி!



      நீக்கு
  6. வணக்கம்

    நூல்பற்றி சிறப்பாக சொல்லியுள்ளீர்கள்.படிக்க தூண்டுகிறது.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி கவிஞர் திரு ரூபன் அவர்களே!

      நீக்கு
  7. அருமையாக, அமைதியாக சிலர் இவ்வாறு எழுதிக்கொண்டிருக்கின்றார்கள் என்பதே உண்மை. வெளிக்கொணர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே!

      நீக்கு
  8. சகோதரி விஜயலட்சுமியின் பகிர்தல் மனதை நெகிழ வைத்தது. அதுவே தங்கள் தமையனார் பற்றி அறியோதோருக்கு அருமையான அறிமுகம்.

    சிற்றிதழ்கள் பற்றி நிறைய நினைவுகளும் தடம் பதிக்கின்றன.
    இங்கு குறிப்பிட்டிருக்கும் சிற்றிதழ்கள் வெளிவந்த காலத்தில் தமிழ் இலக்கிய உலகில் நல்ல ஆக்கபூர்வமான விவாதங்கள் நடைபெற்ற காலம். கலை வெறும் அழகியல் சார்ந்தவையா, இல்லை மக்களுக்கானவையா போன்ற விவாதங்கள் பட்டி தொட்டியெல்லாம் நடைபெற்ற காலம். சுருக்கமாகச் சொன்னால் தமிழ் இலக்கிய உலகின் பொற்காலம்.

    இடதுசாரி சிந்தனைகளுடன் வெகுதிரள் மக்களின் உரத்த குரலைப் பதிவு செய்த தடம் பதித்த சிற்றிதழ்களில் பல இந்தப் பட்டியலில் விடுபட்டுப் போயிருப்பதும் நினைக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே! எனது அண்ணனைப் பற்றிய அறிமுகத்தை எனது பதிவில் எழுதியிருந்ததை திருமதி விஜயலட்சுமி அவர்களின் பின்னூட்டத்திற்கு தந்த பதிலில் குறிப்பிட்டுள்ளேன். முடிந்தால் படித்துப் பாருங்கள்.

      சிற்றிதழ்களின் பொற்காலம் பற்றி உங்களைத்தவிர வேறு யாரால் சொல்லமுடியும். எனது அண்ணன் சில குறிப்பிட்ட சிற்றிதழ்களை மட்டும் குறிப்பிட்ட காரணம் அவைகள் ஆரம்பித்து வெகு குறுகிய காலத்திலேயே நின்றுபோனதால் தான் என நினைக்கிறேன். நீங்கள் குறிப்பிடும் இடதுசாரி சிந்தனைகளுடன் வந்த சிற்றிதழ்கள், என் அண்ணன் குறிப்பிட்ட இதழ்களைவிட நீண்ட காலம் வெளிவந்துள்ளன என நினைக்கிறேன். என் அண்ணன் நீங்கள் குறிப்பிடும் சிற்றிதழ்களை சந்தா கட்டி வாங்கிப்படித்ததை நான் அறிவேன்.

      தாங்கள் அந்த சிற்றிதழ்கள் பற்றி எழுதவேண்டுகிறேன்.

      நீக்கு
  9. என் வேண்டுகோளை ஏற்று அறிமுகம் செய்துள்ளமைக்கு நன்றி அய்யா !
    80களில் சுட்டி என்ற சிற்றிதழைப் படித்ததாக நினைவு ,சரிதானா என்று நீங்கள்தான் சொல்லவேண்டும் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி திரு பகவான்ஜி அவர்களே! இந்த நூலை அறிமுகம் செய்யும் வாய்ப்பைத் தந்தமைக்காக, சகோதரி திருமதி கலையரசிக்கும் தங்களுக்கும் நான் தான் நன்றி சொல்லவேண்டும்.

      1981 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் நாள் அன்று சுட்டி சென்னையிலிருந்து மாத இதழாக வெளியானதாக என் அண்ணன் குறிப்பிட்டுள்ளார். எனவே 81 ஆம் ஆண்டு நீங்கள் படித்ததை 80 ஆம் ஆண்டு எனக் குறிப்பிட்டு இருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.

      நீக்கு
  10. கசடதபற,ஞானரதம்,இவை நான் படித்திருக்கிறேன்.சிலவற்றின் பெயர் அறிந்திருக்கிறேன்.இத்தகைய சிற்றிதழ்கள் பற்றி எழுதி சிறந்த பணியாற்ரிய உங்கள் தமையனாரை எப்படிப் பாராட்டௌவது.அந்நூல் பற்றி அழகாக அறிமுகம் செய்திருக்கும் உங்களுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டியதற்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! சிற்றிதழ்கள் பற்றி அறிந்த தாங்கள் எப்படி என் அண்ணனைப் பாராட்டுவது என்று சொன்னதே பாராட்டுதான். நன்றி!

      நீக்கு
  11. 'தடம் பதித்த' என்ற வார்த்தைகள் சிற்றிதழ்களின் நோக்கத்தை எடுத்துச் சொல்லிவிடுகின்றன. அவை மறைந்தாலும் அவற்றின் தடம் மறையாது நிற்கும். எனவே அவை பற்றிய அறிமுகம் மிக முக்கியம். (1) பொருளாதார பலம் இல்லாதவர்களாலேயே சிற்றிதழ்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்பது வரலாறு. குறைந்தது ஆயிரம் சந்தாதாரர்கள் இருந்தால் நிச்சயமாக ஒரு 32 பக்கமுள்ள மாத இதழை நடத்த முடியும் என்று இலக்கிய நண்பர் ஒருவர சொன்னார். ஆறுகோடி மக்கள் பேசும் மொழியில் அம்மாதிரி ஆயிரம் பேரைக் காண முடிவதில்லை என்பது வேதனையான விஷயமே. (2) என்றாலும், இன்னும் சிற்றிதழ்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. வாழ்த்தவேண்டும். (3) சென்னை வந்ததும் வாங்கிப் படிக்க விருப்பம். பரிசைப் பெற, ஆசிரியர் இல்லையே என்று நினைத்தால் வருத்தமாக இருக்கிறது.

    -இராய செல்லப்பா நியூஜெர்சி (விரைவில் சென்னை)

    பதிலளிநீக்கு
  12. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு இராய செல்லப்பா அவர்களே! தாங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரியே. பொருளாதார பலம் இல்லாதவர்களுக்கு வாசகர்கள் தான் பலம். வாசகர்கள் இருந்தால் தான் விளம்பரம் கிடைக்கும். வாசகர்களின் சந்தாவும் விளம்பரமும் இருந்தால் இதழை தொடர்ந்து நடத்த இயலும்.
    ஆனால் விளம்பரம் இல்லாமலும் நடத்தலாம் அபரிதமான வாசகர்கள் ஆதரவு இருப்பின். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஆறு கோடி தமிழர்களிடையே ஒரு சிற்றிதழை தொய்வில்லாமல் நடத்த ஆயிரம் வாசகர்கள் கூட இல்லை என்பது வருத்தம் தரக்கூடிய தகவலே.

    சென்னை வந்ததும் இந்த நூலை வாங்கிப் படிக்க இருப்பதாக சொன்னதற்கு நன்றி! சென்னையில் சந்திப்போம்.

    பதிலளிநீக்கு
  13. நல்ல தகவல். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  14. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!

    பதிலளிநீக்கு