வெள்ளி, 12 ஏப்ரல், 2019

மொழிபெயர்ப்புக் க(கொ)லை! 2


முந்தைய பதிவில், தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருந்த பொருளாதார பாடத்தில், குறிப்பிட்டிருந்த விலைவாசியைக் குறைக்க அரசிடம் விளயாட ஒரு பெரிய உருளை உள்ளது!’ என்ற சொற்றொடரை தந்திருந்தேன்.



அதனுடைய  ஆங்கில மூலம் என்னவாக இருக்கும் என்று  யூகிக்கமுடிந்தவர்கள், அதை பின்னூட்டத்தில் வெளியிடலாம் என்றும், அது என்பதை  அடுத்த பதிவில் சொல்வதாகவும் சொல்லியிருந்தேன்.


நண்பர்கள் நான்கு பேர் முயற்சித்து விடை தந்திருந்தாலும், கனடாவில் வசிக்கும் திரு ராஜ் சந்திரசேகரன் அவர்களும்,  திரு வெங்கடாசலம் அவர்களும்  சரியான பதிலை தந்திருந்தார்கள்.ஆனால் இருவரில் திரு ராஜ் சந்திரசேகரன் அவர்களே துல்லியமான விடையைத் தந்திருந்தார். இருவருக்கும் வாழ்த்துகள்!

‘விலைவாசியைக் குறைக்க அரசிடம் விளயாட ஒரு பெரிய உருளை உள்ளது!’ என்ற சொற்றொடரின் ஆங்கில மூலம் இதுதான். The government has a "big role to play" in reducing the prices.

நான் முன்பே சொல்லியிருந்தபடி பாட நூல்களை மொழிபெயர்ப்போர் அவசியம் அந்த பாடம் பற்றி அறிந்தவராக இருக்கவேண்டும். மேலும் தாங்கள் மொழிபெயர்க்கும் மொழியையும், தங்களது மொழியையும் நன்றாக அறிந்தவராக இருக்கவேண்டும்.

மேலே குறிப்பிட்டுள்ளதை மொழிபெயர்த்தவர் துரதிர்ஷ்டவசமாக பொருளாதார பாடம் அறிந்தவராக தெரியவில்லை. மேலும் ஆங்கில மொழியையும் நன்றாக கற்றுத் தேர்ந்தவராகவும் தெரியவில்லை. அதனால்தான்  Role மற்றும் Roll என்ற ஆங்கில சொற்களுக்கிடையே உள்ள வேறுபாடு தெரியாமல் Role என்பதை உருளை என்று மொழிபெயர்த்திருக்கிறார்.

Friendship என்பதை நண்பன் கப்பல் என அபத்தமாக மொழிபெயர்ப்பதுபோல், பொருளாதார பாடத்தை மொழிபெயர்த்தவர் வரிக்கு வரி நேரடியான பொருளை தந்து படிப்பவர்களையும், பாடம் நடத்துபவர்களையும் குழப்பியிருக்கிறார். இன்னும் இதுபோல் எத்தனை நகைப்புக்குரிய மொழிபெயர்ப்புகள் அந்த பாட நூலில் இருந்தது எனத் தெரியவில்லை.

முன்பெல்லாம் பள்ளியிறுதி ஆண்டு வகுப்பு  (S.S.L.C) மற்றும் புகுமுக வகுப்புகளில் தமிழ் பாடத்துடன் மொழிபெயர்ப்பு பாடமும் உண்டு. அதற்காக தனியாக தேர்வும் உண்டு. தேர்வில் ஆங்கில மூலத்தில் ஒரு பத்தி (Paragraph) யை கொடுத்து அதை தமிழிலும், தமிழில் ஒரு பத்தியைக் கொடுத்து அதை ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்க சொல்வார்கள். இப்போது அதுபோல் உள்ளதா எனத் தெரியவில்லை. 

மொழிபெயர்ப்புக்கு பயிற்சி மட்டும் போதாது. மூல மொழி, பெயர்ப்பு மொழி ஆகிய இரண்டிலும் ஆழ்ந்த அறிவோடு அதில்  ஈடுபாடும் இருக்கவேண்டும்.

கலை இலக்கிய நூல்களை மொழிபெயர்ப்பதற்கும் அறிவியல் நூல்களை மொழிபெயர்ப்பதற்கு வேறுபாடு உண்டு. முன்னதில் மொழிபெயர்க்கும் மொழியில் உள்ள சொற்களுக்கு மாற்றாக மொழிபெயர்க்கப்படும் மொழியில் இணையான சொற்களை தந்தால் மட்டும் போதாது. மூலத்தில் உள்ள கருத்தை  உள்வாங்கி, மொழிபெயர்க்கும் மொழியில் வாசகர்களுக்கு புரியும் வகையிலும் சுவாரஸ்யமாகவும் தரவேண்டும். அதனால் மொழிபெயர்ப்பை மொழியாக்கம் என்று சொல்வதுண்டு.

அந்தவகையில் தமிழில் வேற்றுமொழி கதைகளை இலக்கியங்களை சிறப்பாக மொழிபெயர்த்து மூல நூலை படிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியவர்கள் பலர் உண்டு. இன்னும் சொல்லப்போனால் மொழிபெயர்த்தவர் பெயரைவிட, மூல ஆசிரியரின் பெயரே தமிழ் வாசகர்களுக்கு நெருக்கமாக இருந்தது உண்மை.  

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற மராத்திய எழுத்தாளரும் ஞானபீட விருததை பெற்ற முதல் மராட்டிய எழுத்தாளருமான  திரு வி. எஸ். காண்டேகரின் (Vishnu Sakharam Khandekar) நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் நாவல்களை தமிழில் மொழிபெயர்த்தார்  திரு. காஞ்சீபுரம் ஸ்ரீரங்காச்சாரியார் ஸ்ரீநிவாச்சாரியார்  என்கிற கா.ஸ்ரீ.ஸ்ரீ.

திரு கா.ஸ்ரீ.ஸ்ரீ யால் மொழிபெயர்க்கப்பட்ட காண்டேகரின் படைப்புகள் காண்டேகரே தமிழில் எழுதியது போல் இருந்ததால், திரு கா.ஸ்ரீ.ஸ்ரீ தமிழ் காண்டேகர் என அழைக்கப்பட்டார்.

திரு காண்டேகரின் கிரௌஞ்ச வதம் நாவல் தொடராக கலைமகள் இதழில் வந்தபோது வாசகர்கள் அனைவரும் ஒவ்வொரு மாதமும் அதைப் படிக்க ஆவலுடன் காத்திருந்ததே அந்த நாவலின் தரமான மொழிபெயர்ப்புக்கு கிடைத்த வெற்றி.

தொடரும் 




18 கருத்துகள்:

  1. பயனுள்ள அரிய விடயங்களை தொகுத்து தருகின்றீர்கள் மிக்க நன்றி.

    தொடர்ந்து வருகிறேன் நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும், தொடர்வதற்கும் நன்றி தேவக்கோட்டை திரு கில்லர்ஜி அவர்களே!

      நீக்கு
  2. //மொழிபெயர்ப்புக்கு பயிற்சி மட்டும் போதாது. மூல மொழி, பெயர்ப்பு மொழி ஆகிய இரண்டிலும் ஆழ்ந்த அறிவோடு அதில் ஈடுபாடும் இருக்கவேண்டும்.//

    மிகச் சரியாகச் சொல்லியுள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!

      நீக்கு
  3. // மூல மொழி, பெயர்ப்பு மொழி ஆகிய இரண்டிலும் ஆழ்ந்த அறிவோடு அதில் ஈடுபாடும் இருக்கவேண்டும்... //

    100% உண்மை ஐயா... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்தை ஆமோதித்ததற்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      நீக்கு
  4. //முன்பெல்லாம் பள்ளியிறுதி ஆண்டு வகுப்பு (S.S.L.C) மற்றும் புகுமுக வகுப்புகளில் தமிழ் பாடத்துடன் மொழிபெயர்ப்பு பாடமும் உண்டு. அதற்காக தனியாக தேர்வும் உண்டு. தேர்வில் ஆங்கில மூலத்தில் ஒரு பத்தி (Paragraph) யை கொடுத்து அதை தமிழிலும், தமிழில் ஒரு பத்தியைக் கொடுத்து அதை ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்க சொல்வார்கள்.//

    ஆம். நான் படித்தபோது IX X XI (SSLC) ஆகிய மூன்று ஆண்டுகளும் (1963-64, 1964-65 & 1965-66) இந்த தமிழ்>>ஆங்கிலம் & ஆங்கிலம்>>தமிழ் மொழிபெயர்ப்பு, ஆங்கில இரண்டாம் தாளில் இடம் பெற்றிருந்தன.

    இதில் எனக்கு ஏற்பட்டதோர் மிகக் கசப்பான அனுபவம் + புத்திக் கொள்முதலைப்பற்றிகூட என் பதிவு ஒன்றில் வெளியிட்டுள்ளேன்.

    http://gopu1949.blogspot.com/2012/03/5.html

    பதிலளிநீக்கு
  5. வருகைக்கு நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! தங்களின் கசப்பான அனுபவத்தையும் படித்தேன். ‘பழி ஓரிடம் பாவம் ஓரிடம்’ என்பது போல் யாரோ செய்த தவறுக்கு தங்களை தண்டிக்க எண்ணியுள்ளனர். ஆனாலும்தாங்கள் தவறு ஏதும் செய்யாதபடியால் ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் கிருபையால் எல்லாம் நல்லபடியாக நடந்தேறியுள்ளது.

    பதிலளிநீக்கு
  6. பதில்கள்
    1. வருகைக்கும்,தொடர்வதற்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!

      நீக்கு
  7. "//தமிழ் பாடத்துடன் மொழிபெயர்ப்பு பாடமும் உண்டு.//" -
    இங்கு பன்னிரெண்டாம் வகுப்பில் தமிழை இரண்டு பாடங்களாக எடுத்து எழுத முடியும். பன்னிரெண்டாம் வகுப்பு வினாத்தாள்களில், தமிழில் இருந்து ஆங்கிலமும், ஆங்கிலத்தில் இருந்து தமிழிலும் மொழிப்பெயர்ப்பதற்கான கேள்விகள் இருக்கும். இங்குள்ள தமிழ் பாடத்திட்டங்கள் அதற்கேற்ற மாதிரி தான் வடிவமைக்கப்பெற்றிருக்கும் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சொக்கன் சுப்ரமணியன் அவர்களே! அங்குள்ள பாடத்திட்டத்தில் தமிழ் -ஆங்கில மொழிபெயர்ப்பு இருப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி.

      நீக்கு
  8. மொழிபெயர்ப்பின் சிரமத்தை நான் உணர்கிறேன். தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் மொழிபெயர்த்து அவ்வப்போது கட்டுரைகளை எழுதிவருகிறேன். உங்களின் இப்பதிவு என்னைப்போன்ற மொழிபெயர்ப்பாளர்களுக்கு சில நல்ல உத்திகளைத் தருகிறது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி முனைவர் B ஜம்புலிங்கம் அவர்களே! நான் ஏதும் புதிதாக சொல்லிவிடவில்லை என நினைக்கிறேன். இருப்பினும் எனது பதிவு பயனுள்ளதாக இருப்பின் மகிழ்ச்சியே.

      நீக்கு
  9. என் பதிவு ஒன்றில் திரு டி பி கைலாசம் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதீருந்த DRONA என்னும் கவிதையை தமிழில் ஆக்கினேன் அது சரியோ என்று அறிய வலைப்பதிவர்களிடமும் மொழியாக்கம்செய்ய வேண்டி இருந்தேன் unfotunatelyயாரும் முன் வரவில்லை இன்னும் அப்படியே இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்பிரமணியம் அவர்களே! மொழியாக்கத்தை எல்லோராலும் செய்ய இயலாது. அப்படி இருக்கும்போது சக பதிவர்கள் தங்களின் மொழியாக்கம் சரியா என கணிக்க தயங்கி இருக்கலாம்.

      நீக்கு
  10. தாமத வருகைக்கு வருந்துகிறேன்.

    மொழியாக்கச் சிறப்பின் இதய பாகத்தைத் தொட்டுச் சென்றிருக்கிறீர்கள். அத்தனையும் உண்மை.

    மேட்டுப் பாளையத்திலிருந்து ஊட்டி போகும் மலைப்பாதை நெடுக
    நீங்கள் இப்படியான பலகைகளைப் பார்க்கலாம்.

    குருட்டு வளைவு --- BLIND CURVE என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழ் மொழியாக்கமாம் இது!

    வார்த்தைக்கு வார்த்தை ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மொழிபெயர்ப்புக்கான சரியான உதாரணம் இது.. இந்தப் பதிவில் நேரடி மொழிபெயர்ப்பு பற்றி படித்ததும் இது தான் என் நினைவுக்கு வந்தது.

    அமரர் கா.ஸ்ரீ.ஸ்ரீ. பற்றி பொருத்தமான இடத்தில் அருமையாக நினைவு கொண்டுள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  11. வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே! மொழிபெயர்ப்பு என்பதை சொல்லை மொழிபெயர்ப்பது என சிலர் தவராக் எண்ணுவதால் இவாறு நடக்கிறது என நினைக்கிறேன். ஏற்காட்டில் கூட Killiyur Falls எனபதை கிள்ளியூர் அருவி என சொல்லாமல் கிள்ளியூர் நீர்வீழ்ச்சி என்றே சொல்கிறார்கள். இத பற்றி நான் மீண்டும் சந்திப்போம் என்ற தொடரில் குறிப்பிட்டிருந்தேன்.
    நல்லவேளை குற்றாலத்தில் உள்ள தேனருவி, ஐந்தருவி போன்றவைகளை தேன் நீர்வீழ்ச்சி ஐந்து நீர்வீழ்ச்சி என சொல்லாமல் இருக்கிறார்களே என மகிழ்ச்சியுற வேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு