சனி, 5 நவம்பர், 2011

நினைவோட்டம் 56

மாணவர் மன்றம் நடத்திய தேர்வு போன்று,
பாளையம்கோட்டையில் உள்ள St.Xavier,
St.John பள்ளிகளின் ஆசிரியர்கள் ஆங்கில
பாடத்திற்கான தேர்வை நடத்தினார்கள்.

இந்த தேர்வை எழுதுவது கட்டாயம் இல்லை
என்றாலும்,இதையும் நாங்கள் எழுதி எங்களை
பள்ளி இறுதித்தேர்வுக்கு தயார் செய்து
கொண்டோம். ஆனால் இதில் வெற்றி
பெறுவோருக்கு சான்றிதழ் ஏதும்
தரமாட்டார்கள்.

நாங்கள் படித்தபோது S.S.L.C இறுதி தேர்வுக்கு
முன்பு டிசம்பர் மாதத்தில் நடக்கும் அரை ஆண்டுத்
தேர்வை Selection தேர்வு என்பார்கள்.இந்த
தேர்வில் வெற்றி பெற்றால்தான் S.S.L.C தேர்வை
எழுத அனுமதிப்பார்கள்.

என்னுடைய வகுப்பில் என்னுடன் படித்த எனது
நெருங்கிய நண்பர்(பெயர் சொல்லவேண்டாம்
என நினைக்கிறேன்)ஒருவர் தேர்வில் தோல்வி
அடைந்ததால், எங்களுடன் இறுதித்தேர்வை
அவர் எழுத இயலவில்லை.அது எனக்கெல்லாம்
வருத்தமே.

அப்போதெல்லாம் பள்ளி இறுதித்தேர்வை
பிப்ரவரியிலேயே தேர்வை முடித்துவிடுவார்கள்.
அதனால்தான் நான் முன்பே எழுதி இருந்தபடி,
S.S.L.C படிக்கும் மாணவர்கள் ஏப்ரல் மாதம் வரை
இருக்க மாட்டார்கள் என்பதால்,பத்தாம் வகுப்பு
படிக்கும் மாணவர்களில் ஒருவரைத்தான்
மாணவர் தலைவனாக தேர்ந்தெடுப்பார்கள்.

ஜனவரி மாதத்திற்குள்ளேயே பாடங்களை
முடித்துவிட்டு பிப்ரவரி இரண்டாம் வாரம் முதல்
தேர்வுக்கு படிக்க விடுப்பு(Study Holidays)தருவார்கள்.

அந்த ஆண்டு(1960) எங்களது தேர்வுக்கு முந்தைய
விடுமுறை நாள் ஒன்றில் எங்களது பிரிவு உபசார
விழாவை வைத்திருந்தோம்.

விருத்தாசலத்தில் புகைப்படம் எடுக்கும் நிலையம்
இருந்தும், சிதம்பரத்தில் இருந்த R.T.Velu Bros
Studio விலிருந்து ஒருவர் வந்து புகைப்படம் எடுக்க
நண்பர் கிருஷ்ணன் ஏற்பாடு செய்து இருந்தார்.
(காரணம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின்
ஆஸ்தான புகைப்படக்காரர்களான R.T.Velu Bros
நன்றாக படம் எடுப்பார்கள் என்பதால்தான்)

குறிப்பிட்ட நாளில் மாலை சுமார் 4 மணிக்கு
நாங்கள் கூடி,எங்களது தலைமை ஆசிரியர்
மற்றும் மற்றும் எங்களுக்கு பாடம் நடத்திய
ஆசிரியர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.

எனது வகுப்பு நண்பர்களில் சிலர் (நண்பர்
கிருஷ்ணனையும் சேர்த்து) எங்களுக்கு பாடம்
நடத்திய ஆசிரியர்களுக்கு நன்றியைத் தெரிவித்து
பேசினார்கள்.அப்போது ஏனோ நான் பேசவில்லை.

எங்கள் ஆசிரியர்கள் அனைவரும் வாழ்த்தி
பேசியபின் நண்பர் துரைராஜ்(கரிகாலன்)அவர்களை
நன்றியுரையாற்ற பணித்திருந்தோம்.

அவர் எல்லோருக்கும் நன்றி சொல்லி வரும்போது
புகைப்படம் எடுக்க ஏற்பாடு செய்த நண்பர்
கிருஷ்ணனுக்கு நன்றி சொல்லும்போது,‘சிதம்பரம்
சென்று புகைப்பிடிப்பாளரை அழைத்துவந்த
கிருஷ்ணனுக்கு நன்றி’ என்றபோது தலைமை
ஆசிரியர் உட்பட எல்லோரும் விழுந்து விழுந்து
சிரித்தோம்,நாங்கள் சிரித்த காரணம் தெரியாமல்
நண்பர் துரைராஜ் விழித்தது இன்னும் என்
நினைவில் நிற்கிறது.


நினைவுகள் தொடரும்


வே.நடனசபாபதி

4 கருத்துகள்:

  1. துரைராஜை நிச்சயமாக மறக்க முடியாதுதான்!

    பதிலளிநீக்கு
  2. உண்மைதான் திரு சென்னை பித்தன் அவர்களே!.கருத்துக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  3. துரைராஜ் மட்டுமா ...எங்களுக்கும் புரியவில்லை ! வாசுதேவன்

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கு நன்றி திரு வாசு அவர்களே! பதிவை திரும்பவும் படியுங்கள்.புரியும்.

    பதிலளிநீக்கு