திங்கள், 9 ஏப்ரல், 2012

Boss கள் பல விதம்! 4


உத்திரவு இல்லாமல் உள்ளே வந்து ஏன் உட்கார்ந்தாய்?’ என
மாவட்ட வேளாண் அலுவலர் கேட்டவுடன். என்னுள் இருந்த
உற்சாகமும் மகிழ்ச்சியும் காணாமல் போய்விட்டன.

தலைஞாயிறிலிருந்து மன்னார்குடிக்கு கிளம்பும்போது, மாவட்ட
வேளாண் அலுவலர் என்னை அன்புடன் வரவேற்று புதிய
பணியிடத்தில் நான் நல்ல முறையில் பணியாற்ற வாழ்த்தி,
அறிவுரை கூறுவார் என நினைத்து இருந்தேன்.

ஆனால் அவருடைய அதிகாரத் தோரணையைப் பார்த்தவுடன்
மிரண்டு போய் எழுந்து நின்றேன். கல்லூரியிலிருந்து நேரே
பணிக்கு சேர்ந்ததால் எனக்கு அலுவலக நடைமுறை
தெரியவில்லை. அதனால் இந்த மாதிரியெல்லாம் வரவேற்பு
இருக்கும் என எதிர்பார்க்கவில்லை.

எழுந்து நின்று, சாரி.சார் எனது பெயர் நடனசபாபதி, புதிதாக
தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நீர்முளையில்
வேளாண் விரிவாக்க அலுவலராக சேர்ந்திருக்கிறேன்.
வெளியே உள்ள, அலுவலக மேற்பார்வையாளர் உள்ளே சென்று
தங்களைப் பார்க்கலாம் என சொன்னதால் தான், உள்ளே
வந்தேன். என தயக்கத்தொடு சொன்னேன்.

அவர் என்னை ஏற இறங்கப் பார்த்து அப்படியா. புது A.E.O
(Agricultural Extension Officer)வா? என்ன, டெர்ரிகாட், டெரிலீன்
எல்லாம் போட்டுக்கிட்டு வந்திருக்கீங்க? இப்படி டிரஸ்
போட்டுகிட்டு எப்படி வயல் வெளிக்கெல்லாம் போய் ஆய்வு
செய்து விவசாயிகளுக்கு ஆலோசனை சொல்லுவீங்க?‘என்றார்.

(அப்போது (1966 ல்)கோலோச்சிக்கொண்டு இருந்த டெர்ரிகாட்
பேன்ட் களும் டெரிலீன் சட்டைகளும் தான்,ஆண்களின்
நாகரீக உடைகள். கல்லூரியில் அவைகளைப் போட்டுக்கொண்டு
நாங்கள் வகுப்பு சென்றாலும், வயல்வெளி செய்முறை பயிற்சிக்கு
செல்லும்போது காக்கி நிற அரைக்கால் சட்டையுடன் தான்
செல்வோம்)

கல்லூரியில் படிக்கும்போது தைத்த நல்ல சட்டையையும்,
பேண்டையும் அலுவலக கூட்டத்திற்கு போட்டுக்கொண்டு
செல்வது தவறு என நினைக்காததால் அவைகளைப்
போட்டுக்கொண்டு சென்றிருந்தேன்.

அவர் அப்படி சொன்னது எனக்குள் கோபத்தை உண்டாக்கினாலும்
(இள இரத்தம் அல்லவா?) பணிவோடு இல்லை.சார். டெர்ரிகாட்
பேன்ட்டும் டெரிலீன் சட்டையும், கிராமங்களில் பணி செய்ய
எனக்கு தடையாக  இருக்காது என நினைக்கிறேன்.என்றேன்.

அந்த பதிலை அவர் விரும்பவில்லை என்பது அவர் முகத்திலிருந்து தெரிந்துகொண்டேன்.அவர் எனது உடையைப்பற்றி கூறியதால்தான்
நான் அந்த பதிலை சொல்லும்படி ஆயிற்று.

(இந்த இடத்தில் இன்னொன்றையும் பதிவு செய்ய விரும்புகிறேன்.
அப்போது தமிழ் நாட்டில் காங்கிரஸ் ஆட்சி செய்து கொண்டு
இருந்தது.பதவியில் இருந்தவர்கள்,ஆட்சியாளர்களை திருப்திப்படுத்த
கதர் சட்டை அணிந்த காலம் அது. அவரும் கதர் சட்டை
அணிந்திருந்தார். அதனால்தான் நான் அணிந்திருந்த உடை
அவரது கண்ணை உறுத்தியது போலும். )

அடுத்து அவர், எந்த காலேஜ்? என்று கேட்டார்.அதற்கு நான்,
அண்ணாமலை என்றதும் அண்ணாமலையா?’ என கிண்டலாகக்
கேட்டார்.

(அப்போது கோவை வேளாண் கல்லூரி, மதுரை வேளாண் கல்லூரி
மற்றும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் வேளாண் அறிவியல்
பட்டப் படிப்புகள் இருந்தன.)

என்ன காரணமோ தெரியவில்லை கோவையில் படித்தவர்கள்
அப்போது அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் படித்தவர்களை விரும்பவில்லை.இப்போது எப்படி எனத் தெரியவில்லை.

நானும் அழுத்தமாக, ஆமாம். சார். அண்ணாமலைதான்,’ என்றேன்.
அவர் மேற்கொண்டு எதுவும் சொல்லாமல் சரி.சரி நீங்கள் போகலாம்.
என்றார். ஆளை விட்டால் போதும் என்று உடனே வெளியே
வந்துவிட்டேன்.

வெளியே வந்ததும் நண்பர்  திரு வீரசாமி என்னை மற்ற A.E.O களுக்கு அறிமுகப்படுத்தினார். அவர்கள் என்னிடம் D.A.O (District Agricultural Officer)
வை பார்த்துவிட்டீர்களா?’ என்றபோது  அவர்களிடம் எனக்கு ஏற்பட்ட
புதிய அனுபவம் பற்றி சொன்னபோது, அவர்கள் இவர் இப்படித்தான்.
போகப்போக எல்லாம் சரியாகிவிடும். எதற்கும் நீங்கள்
ஜாக்கிரதையாய் இருங்கள்.என்று சொன்னார்கள்.

முதல் சந்திப்பே கசப்பான அனுபவமாக இருந்ததால், எப்படி இந்த சூழ்நிலையில் பணியாற்றுவது என்று நினைத்துக்கொண்டே கூட்ட அரங்கினுள் நண்பருடன் நுழைந்தேன்.

தொடரும்

14 கருத்துகள்:

  1. அவர் அப்படி சொன்னது எனக்குள் கோபத்தை உண்டாக்கினாலும்
    (இள இரத்தம் அல்லவா?) பணிவோடு ’இல்லை.சார். டெர்ரிகாட்
    ‘பேன்ட்’டும் டெரிலீன் சட்டையும், கிராமங்களில் பணி செய்ய
    எனக்கு தடையாக இருக்காது என நினைக்கிறேன்.’என்றேன். // தங்களின் கோப வார்த்தைகள் கண் முன் தெரிகின்றன . என்ன செய்வது தங்கள் அனுபவங்கள் எங்களுக்கு பாடங்கள் .

    பதிலளிநீக்கு
  2. அந்தக் காலத்தில் ஆபீசர் என்றால் தலையில் கொம்பு முளைத்துவிட்டது என்று நினைத்துக்கொள்வார்கள்.

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திருமதி சசிகலா அவர்களே

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கு நன்றி திரு பழனி கந்தசாமி அவர்களே. நீங்கள் கூறுவது உண்மை. அதுவும் அடிக்கடி தாங்கள் Gazetted Officers என்று கூறி தங்களுக்கு கீழே உள்ளவர்களை மட்டம் தட்டிய காலம் அது

    பதிலளிநீக்கு
  5. அந்தப் பக்கம் கிருஷ்ணர் மாடு மேய்ச்சா இந்தப் பக்கம் ஏசு ஆடு மேய்க்கறார் என்று ஒரு படத்தில் வசனம் வரும். ஒரே படிப்பைப் படித்தவர்கள் இன்னொரு யுனிவர்சிடியில் படித்தால் மதிக்க மாட்டார்களா..? கொடுமையால்ல இருக்கு? அந்த பாஸின் கேரக்டரை நினைத்தால் சிரிக்கத் தோன்றுகிறது, சில நேரங்களில் சில மனிதர்கள்! காத்திருக்கிறேன் அடுத்த பகுதிக்கு...

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கு நன்றி திரு கணேஷ் அவர்களே! சரியாய் சொன்னீர்கள். சில நேரங்களில் சில மனிதர்கள் என்று! ஆனால் பல நேரங்களில் இப்படிப்பட்ட மனிதர்களுடன் பழக/பணிபுரிய வேண்டியுள்ளது. கருத்துக்கும், காத்திருப்புக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  7. அரசு அதிகாரியின் கெத்து!இப்போதும் அப்படித்தான் இருக்கிறார்களா? தெரியவில்லையே!

    பதிலளிநீக்கு
  8. சூடான அனுபவம் தான்.....பார்ப்போம் மேலே எப்படி போகுமென்று..பாராட்டுகள்..
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  9. வருகைக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! இப்போது அதிகாரிகள் எப்படி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் எல்லா துறைகளிலும் அப்போது அதிகார 'போதை'யில் இருந்தனர் என்பது உண்மை.

    பதிலளிநீக்கு
  10. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!

    பதிலளிநீக்கு
  11. உத்திரவு இல்லாமல் உள்ளே வந்து ஏன் உட்கார்ந்தாய்?’ என
    மாவட்ட வேளாண் அலுவலர் கேட்டவுடன். என்னுள் இருந்த
    உற்சாகமும் மகிழ்ச்சியும் காணாமல் போய்விட்டன.

    முதல் அனுபவமே கசப்பா !

    பதிலளிநீக்கு
  12. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!

    பதிலளிநீக்கு
  13. //கல்லூரியிலிருந்து நேரே பணிக்கு சேர்ந்ததால் எனக்கு அலுவலக நடைமுறை தெரியவில்லை.//

    அன்று நம்மில் பலருக்கும் இப்படி நடைமுறைகள் தெரியாமல்தான் இருந்திருக்கும்.

    //அப்போது (1966 ல்)கோலோச்சிக்கொண்டு இருந்த டெர்ரிகாட்
    ‘பேன்ட்’ களும் டெரிலீன் சட்டைகளும் தான்,ஆண்களின்
    நாகரீக உடைகள்.//

    அதன்பின்பும் 1970-1980 வரை இதே டெரிகாட்டன் + டெர்லின் ஆகிய இவைகள் தான் கோலோச்சிக்கொண்டு இருந்தன.

    1972-இல் என் 22-ஆவது வயதில் எனக்குத் திருமணம் ஆனது. மிகவும் ஒஸத்தியான டெரிகாட்டன் + டெர்லின் துணிகளை எந்தெந்தக்கடைகளில், என் அலுவலக நண்பர்களுடன் போய் நான் எடுத்தேன், அவற்றை எந்த மிகப்பெரிய பிரபல டெய்லரிடம் போய் நான் தைக்கக்கொடுத்தேன் என்பதெல்லாம் இன்னும் பசுமையாக நினைவினில் உள்ளன.

    //முதல் சந்திப்பே கசப்பான அனுபவமாக இருந்ததால், எப்படி இந்த சூழ்நிலையில் பணியாற்றுவது என்று நினைத்துக்கொண்டே.....//

    வாஸ்தவம்தான். அந்த முதல் வடு என்றும் மறையவே மறையாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வை,கோபாலகிருஷ்ணன் அவர்களே! அப்போதெல்லாம் பணியில் இருக்கும் மூத்தஅலுவலர்கள் பணிக்கு புதிதாய் சேருபவர்களை சரியாக நடத்தியதில்லை/வழிகாட்டியதில்லை என்பது எனது கருத்து. இன்றைய நிலை தெரியவில்லை.

      நீக்கு