புதன், 6 பிப்ரவரி, 2013

வாடிக்கையாளர்களும் நானும் 29



அந்த ஊரில் உள்ள அந்த இரண்டு பேர் யாரெனக் 
கேட்டதற்கு சார்.உங்களைப்போல் குடிக்காத மற்ற 
இருவர், இந்த ஊரில் உள்ள மகாத்மா காந்தி சிலையும், 
கேரள காங்கிரஸின் தலைவர்களில் ஒருவரான 
 P.C.சாக்கோ வின் சிலையும்தான்.என்று அவர் 
சொன்னபோது அந்த பதில் மூலம் அங்குள்ள 
அனைவரும் குடிப்பவர்களே எனபதை அவர் 
நையாண்டியாக சொன்னதை கேட்டு 
இரசித்து சிரித்தேன்.

(திரு P.C.சாக்கோ வின் சிலையை திறந்து 
வைத்தது திரு எம்.ஜி‌.ஆர். அவர்கள் தான் என 
பின்னர் அறிந்துகொண்டேன்)

நான் மாமிச உணவையும் சாப்பிட மாட்டேன் 
என்று தெரிந்ததும் அப்ப சார். பச்சகறி போல 
என்றார். நாம் இங்கு மறைந்த புகழ் பெற்ற நடிகர் 
ஒருவரை சாம்பார் என பட்டப்பெயர் வைத்து 
அன்புடன் கூப்பிட்டதைப்போல அங்கு Vegetarian 
உணவு சாப்பிடுவோர் பச்சகறி என்றே 
அழைக்கிறார்கள்.

அந்த வாடிக்கையாளர் அதற்குப் பிறகு பலமுறை 
என்னைப் பார்க்க வந்திருக்கிறார். ஒவ்வொரு 
தடவையும் சொல்வார்.சார். “ரோமில் இருப்பவர்கள் 
ரோமானியர் போல் இருக்கவேண்டும்” என்பார்கள். 
அதுபோல் இங்கு வந்துள்ள நீங்களும் 
எங்களைப்போல் இருக்கலாமே. என்பார். அதற்கு 
நான் ஒரு விருந்தாளி போலத்தானே வந்திருக்கிறேன். 
நிரந்தரமாகத் தங்க அல்லவே.எனவே நான் 
நானாகவே இருந்துவிட்டு போகிறேனே. என்று 
சொன்னதுண்டு.

அவர் என்னிடம் வந்து சிரித்து பேசிக்கொண்டு 
இருந்தாலும்,எனக்குள் ஏதோ ஒன்று சொல்லியது. 
இவர் நம்மை சிக்கலில் மாட்டவைத்தாலும் 
வைத்துவிடுவார். இவரிடம்  நாம் கவனமாக 
இருக்கவேண்டுமென்று. நான் நினைத்தது போலவே 
அந்த சிக்கல் ஒரு நாள் வந்தது.

அந்த சிக்கலைப்பற்றி சொல்லுமுன்,ஏற்றுமதியாளர்கள் 
பெறுகின்ற கடன் வசதிகள் மற்றும் வங்கிகள் 
கடைபிடிக்கும் நடைமுறை பற்றி ஒரு சிறிய 
அறிமுகம் தந்தால் தான்,அந்த நிகழ்வின் 
கடுமையைப்பற்றி அறிந்துகொள்ளமுடியும் 
என்பதால் அதை தரலாமென எண்ணுகிறேன்.

ஏற்றுமதி செய்வோர் வெளிநாட்டிலிருந்து 
ஆர்டர்  கிடைத்ததும் மூலப்பொருட்களை வாங்கி 
வெளி நாட்டு வாடிக்கையாளர்கள் விரும்பிய வண்ணம் 
உற்பத்தி செய்து அனுப்பினால், அவர்கள் அனுப்பும் 
தயாரிப்புகள் வாடிக்கையாளர்களுக்கு கிடைத்து 
அவர்கள் பணம் அனுப்ப நாட்கள் பல ஆகலாம். 
மேலும் சிலர் பணம் தராமலும் போகலாம்.

அதைத் தவிர்க்க வங்கிகளில் ஏற்றுமதி 
செய்ததற்கான ஆவணங்களை தந்து உடனே பணம் 
பெற்றுக்கொள்ளுவர். ஏற்றுமதியாளரின் வங்கியும் 
வெளி நாட்டு வாடிக்கையாளரின் வங்கியும் இந்த 
பணிகள் சுமுகமாக நடக்க இங்குதான் உதவுகின்றன.

வெளிநாட்டு வாடிக்கையாளர்களின் நிதி நிலை 
பற்றியும், அவர்களது நாணயம் மற்றும் நடவடிக்கைப்
பற்றியும், அவர்கள் பெற்றுக்கொண்ட பொருட்களுக்கு 
பணம் ஒழுங்காக தருவார்களா என்பது பற்றியும் 
தெரியாதபோது, அந்த வெளி நாட்டு 
வாடிக்கையாளர்களுக்காக அந்த நாட்டில் உள்ள 
அவர்களது வங்கிகள் பொறுப்புறுதி (Guarantee) 
கொடுத்தால் மட்டுமே ஏற்றுமதியாளர்கள் அவர்களுக்கு 
ஏற்றுமதி செய்வார்கள்.

அப்படி பொறுப்புறுதி தரும் அயல் நாட்டு வங்கிகள், 
அவர்களது வாடிக்கையாளர்களுக்காக, ஏற்றுமதி 
செய்வோருக்கு Letter of Credit எனப்படும் 
கடன் சான்று தரும்.

அதில் குறிப்பிட்டுள்ளபடி பொருட்களை தயார் 
செய்து கப்பலில் ஏற்றிவிட்டு, அந்த கப்பல் நிறுவனம் 
தரும் Bill of lading எனப்படும் சரக்கேற்றுமுறியையும் 
(இது நாம் சரக்குந்து மூலமோ அல்லது சரக்கு 
இரயில் மூலமோ பொருட்களை  அனுப்பும்போது 
தருகின்ற Way Bill போன்றது.) சுங்கம் (Custom) தரும் 
GR Form எனப்படும் Exchange Control Declaration Form ஐயும் 
மற்ற ஆவணங்களையும், ஏற்றுமதியாளர்கள் தங்கள் 
வங்கியில் கொடுப்பார்கள்.

அந்த வெளிநாட்டு வங்கி தந்துள்ள கடன் சான்றில் 
உள்ள நிபந்தனைகளை ஏற்றுமதியாளர்கள்  நிறைவேற்றியிருந்தால்,அவர்களின் வங்கிகள் 
பணத்தைக் கொடுத்துவிட்டு, அந்த பணத்தை 
கடன் சான்று தந்த அயல் நாட்டு வங்கிகளிடமிருந்து 
பெற்றுக்கொள்வது நடைமுறை.

இதில் GR Form எனப்படும் மிக முக்கியமான ஒன்று. 
இது ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் விலை 
மதிப்பையும், ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களையும் 
ஆய்வு செய்து சுங்கத்துறையால் கொடுக்கப்படுவது.

இந்த ஆவணத்தின் முதல் படிவை ரிசர்வ் வங்கிக்கு 
அனுப்பிவிடுவார்கள். படிவத்தின் நகலை 
ஏற்றுமதியாளரிடம் தருவார்கள். அதை அவர் மற்ற 
ஆவணங்களோடு வங்கிக்கு தரவேண்டும்.

GR Form இல்லாமல் வங்கிகள் மற்ற ஆவணங்களைப் 
பெற்று பணம் தரக்கூடாது. காரணம் ஏற்றுமதிப் 
பொருள்களின் விலையைக் குறைத்து விலைப்பட்டியல் 
தயாரித்து இருந்தால் வங்கி மூலம் நாட்டிற்கு 
வரவேண்டிய அந்நிய செலாவணி மாற்று வழியில் 
வர வாய்ப்புண்டு. 

எனவே விலைப்பட்டியலில் குறிப்பிட்டுள்ள மதிப்பு 
சரியானதா என சுங்கத்துறையினர் ஆய்வு செய்வார்கள். 
மற்றும் அனுமதிக்க பொருட்கள் மட்டும் ஏற்றுமதி 
செய்யப்படுகிறதா அல்லது தடை செய்யப்பட்டவை 
வேறு பெயரில் அனுப்பப்படுகிறதா என்பதை, 
பொருள் தணிக்கை (Physical verification) மூலம் 
உறுதிப்படுத்திக்கொண்டு GR Form தருவார்கள். 

இந்த படிவத்தை வங்கிகள் வெளிநாட்டிலிருந்து 
பணம் கிடைத்ததும் பின்பு ரிசர்வ் வங்கிக்கு 
அனுப்பவேண்டும். எனவே இது இல்லாமல் 
வங்கிகள் ஏற்றுமதியாளர்களின் ஆவணங்களை 
ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

(இது பற்றி அதிகம் சொல்லி சலிப்பை உண்டாக்க
 வேண்டாம் என நினைக்கிறேன்.)

இனி நடந்ததை சொல்கிறேன்....

தொடரும்

18 கருத்துகள்:



  1. வங்கிப் பணியில் இவ்வளவு நடைமுறைகளா...! நல்ல விளக்கம்!

    பதிலளிநீக்கு
  2. மிக அருமையாக அயல் நாட்டு வர்த்தக நடைமுறைகளை விளக்கியுள்ளீர்கள். மிக எளிய நடையில் உரைத்துள்ளது அனைவருக்கும் பயனளிக்கும். மேலும் மது அருந்தாத இரண்டு சிலைகள் பற்றி சொன்னது சிரிப்பை வரவளைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு பொன்ராஜ் குமார் அவர்களே!

      நீக்கு
  3. அனைவருக்கும் புரியும்படி எளிமையாக விளக்கியுள்ளீர்கள்!எப்படிச் சிக்கல் ஏற்படுத்தினார் என்பதை அறியக் காத்திருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு குட்டன் அவர்களே! எனக்கு ஏற்பட்ட சிக்கல் அறிய தயை செய்து காத்திருங்கள்!

      நீக்கு
  4. GR Form பற்றி இன்னும் முக்கியமானது இருந்தால் சொல்லுங்கள்... தெரிந்து கொள்கிறோம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! நீங்கள் கேட்டது பற்றி நிச்சயம் எழுதுவேன்.

      நீக்கு
  5. பொருள் தணிக்கை (Physical verification) நல்ல தமிழ் ஆக்கத்துடன் விளக்குவது சிறப்பு நன்றிங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி திருமதி சசிகலா அவர்களே!

      நீக்கு
  6. That only statues don't drink was really amusing ...
    Like a thriller this episode has managed to ignite interest ..
    An experienced Banker sometimes has to rely on instinct ...A cautious banker would be ever alert and avoid traps that would cause agony in the long run. As a fellow banker I am curious to know about the events that might have caused embarrassment .Vasudevan

    பதிலளிநீக்கு
  7. வருகைக்கும், பதிவை இரசித்து படித்தமைக்கும் நன்றி திரு வாசு அவர்களே! நடந்ததை அறிய காத்திருப்பதற்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  8. //அங்குள்ள
    அனைவரும் குடிப்பவர்களே//

    Unfortunately, this culture is spreading in our state too.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! நீங்கள் சொல்வது உண்மைதான்.வருத்தப்படவேண்டியதும் கூட!

      நீக்கு
  9. நான் ஒரு விருந்தாளி போலத்தானே வந்திருக்கிறேன்.
    நிரந்தரமாகத் தங்க அல்லவே..

    இந்த உலகத்திற்கும் விருந்தாளியாகத்தானே வந்துள்ளோம் ..!

    நிரந்தரமாக தங்கி துன்பப்பட அல்லவே ..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், உங்களது மேலான கருத்துக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!

      நீக்கு
  10. அவர் என்னிடம் வந்து சிரித்து பேசிக்கொண்டு
    இருந்தாலும்,எனக்குள் ஏதோ ஒன்று சொல்லியது.
    இவர் நம்மை சிக்கலில் மாட்டவைத்தாலும்
    வைத்துவிடுவார். இவரிடம் நாம் கவனமாக
    இருக்கவேண்டுமென்று. ..//

    உள்ளுணர்வு எச்சரிக்கையானது ..!

    அதனை அருமையாக உணர்ந்த தங்களுக்கு பாராட்டுக்கள் ..வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டுக்கு நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!

      நீக்கு