புதன், 9 செப்டம்பர், 2015

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.5


ஆங்கிலத்தை இந்தியுடன் அலுவலக மொழியாக தேர்ந்தெடுத்தை இந்தி ஆதரவாளர்கள் விரும்பாததால் அந்த முடிவுக்கு பலத்த எதிர்ப்பு இருந்தது. குறிப்பாக ஜனசங்க கட்சியின் நிறுவனரான திரு ஷியாம் பிரசாத் முகர்ஜி இந்தியை தேசிய மொழியாக அறிவிக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தார். இருப்பினும் அது ஏற்கப்படவில்லை.



அரசியல் அமைப்பு (Constitution) அமலுக்கு வந்த பிறகு (1950 ஆண்டு சனவரி திங்கள் 26 ஆம் நாள்) அரசின் அலுவலக மொழியாக இந்தியை ஆக்கும் முயற்சிகளை தொடங்கிவிட்டது மய்ய அரசு. முதல் கட்டமாக 1952 ஆம் ஆண்டு மய்ய அரசின் கல்வித்துறை முதலில் இந்தி கற்பிக்கும் திட்டம் (Voluntary Hindi teaching scheme) ஒன்றை துவக்கியது.

அதே ஆண்டு (1952) மே 2 ஆம் நாள் நமது மாநிலத்தில் (அப்போது சென்னை இராஜதானி) இருந்த அரசு நடு நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் (ஆறாம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு (S.S.L.C) வரை  இந்தியை திரும்பவும் கட்டாய பாடமாக்கியதும், திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்ற கழகமும் அதை தீவிரமாக எதிர்த்து ஆர்ப்பாட்டங்களை நடத்தின.

மக்களின் தீவிர எதிர்ப்பின் காரணமாக ஜூலை திங்கள் 18 ஆம் நாள் மாநில அரசு இந்தி கட்டாய பாடம் என்பதை திரும்பவும் அகற்றி விருப்ப பாடமாக மாற்றியது. அதன் விளைவாக கல்வியாண்டு 1950-51 முதல் இந்தியை இந்தி படிக்க விரும்பாத மாணவர்கள் பள்ளி சார்ந்த வேறு செயல்களில் ஈடுபட அனுமதிக்கப்பட்டார்கள்.

அதே ஆண்டு மே திங்கள் 27 ஆம் நாள் மய்ய அரசின் நீதித்துறை நியமன ஆணைகளில் (Warrants for judicial appointments) இந்தியை அறிமுகப்படுத்தியது. பின்னர் 1955 ஆம் ஆண்டில் அனைத்து அமைச்சக மற்றும் அரசுத்துறைகளிலும் உள்ளோருக்கு இந்தியில் பயிற்சி தரப்பட்டது. அதே ஆண்டு டிசம்பர் 3 ஆம் நாள் அரசு ஆங்கிலத்தோடு இந்தியையும் சில குறிப்பிட்ட நடவடிக்கைகளுக்கு உபயோகப்படுத்தத் தொடங்கியது.

இந்திய அரசு அந்த ஆண்டில்தான் அப்போதைய சென்னை இராஜதானியில் உள்ள அரசு அலுவலகங்களில் இந்தியில் அறிவிக்கை பலகைகளை வைத்தது. அதை எதிர்த்து தந்தை பெரியார் தலைமையில் திராவிடர் கழகமும் அறிஞர் அண்ணா தலைமையில் திராவிட முன்னேற்ற கழகமும் இந்தி திணிப்பு போராட்டத்தை தொடங்கினார்கள்.

அப்போதுதான் திருச்சியில் தந்தை பெரியார் அவர்கள் இந்தி பெயர் பலகைகளுக்கு தார் பூசி அழித்ததும், அறிஞர் அண்ணா அவர்கள் கோவையில் தார் பூசி அழித்ததும் நடந்தன.தமிழகத்தின் பிற பகுதியிலும் இதுபோன்ற தார்பூசி அழிக்கும் போராட்டமும் நடந்தேறின.

அரசியல் அமைப்பின் (Constitution) கூறு (Article) எண் 343 இன் படி,1955 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 7 ஆம் நாள் திரு B.G.Kher அவர்களை தலைவராகக் கொண்ட இந்தியாவின் முதல் அலுவலக மொழி ஆணையத்தை (Official Language Commission) பிரதமர் நேரு அவர்கள் நியமித்தார்.அந்த ஆணையம் ஜூலை 31 ஆம் நாள் தந்த அறிக்கையில் ஆங்கிலத்தை இறுதியாக மாற்றிவிட்டு அதற்கு மாற்றாக இந்தியை கொணர பல நடவடிக்கைகளை பரிந்துரை செய்திருந்தது.

ஆனாலும் அந்த ஆணையத்தில் உறுப்பினர்களாக இருந்த தமிழகத்தை Dr.P.சுப்பராயன் அவர்களும் மேற்கு வங்கத்தை சேர்ந்த திரு சுனில் குமார் சட்டர்ஜி அவர்களும் மாறுபட்ட கருத்துக்களை (Dissenting note) கொடுத்திருந்தார்கள்.

ஆங்கிலத்திலிருந்து இந்திக்கு மாறுவதை The Academy of Telugu, 1956 ஆம் ஆண்டு நடத்திய தனது மாநாட்டில் எதிர்ப்பைத் தெரிவித்தது.

பின்னர் 1957 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்களில் Kher ஆணையத்தின் அறிக்கையை சீராய்வு (Review) செய்ய திரு கோவிந்த வல்லப பந்த் தலைமையில் அலுவலக மொழிக்கான பாராளுமன்ற குழு அமைக்கப்பட்டது.

இதற்கிடையே இந்தியை முழுமூச்சாக ஆதரித்த மூதறிஞர் இராஜாஜி அவர்கள் 1958 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 8 ஆம் நாள் ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியை கொணர்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்க அகில இந்திய மொழி மாநாடு ஒன்றை கூட்டினார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, ஒரியா, வங்காளம் மற்றும் அசாமி மொழி பேசும் பிரநிதிகள் கலந்துகொண்ட அந்த மாநாட்டில் ‘இந்தி ஆதரவாளர்களுக்கு ஆங்கிலம் எவ்வாறு அந்நிய மொழியோ, அதுபோல இந்தி பேசாதவர்களுக்கு இந்தியும் அந்நிய மொழி தான்’ என்று முழங்கினார்.

திரு கோவிந்த வல்லப பந்த் தலைமையில் அமைந்த அலுவலக மொழிக்கான அந்த பாராளுமன்ற குழு இரண்டு ஆண்டுகள் நடத்திய ஆழ்ந்த ஆராய்வுக்கு (Deliberation) பின் 1959 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 8 ஆம் நாள் குடியரசுத் தலைவருக்கு சமர்ப்பித்த அறிக்கையில் இந்தி முதல் நிலை மொழியாகவும் ஆங்கிலத்தை துணை நிலை மொழியாகவும் பரிந்துரை செய்தது.

Kher ஆணையம் மற்றும் வல்லப பந்த் குழுவின் பரிந்துரைகளை இந்தி பேசா மாநிலங்களை சேர்ந்த அரசியல் தலைவர்களான திரு Frank Antony மற்றும் Dr.P.சுப்பராயன் ஆகியோர் தீவிரமாக எதிர்த்து தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர்.

இந்தி மொழியை திணிப்பதற்கு பெருகி வரும் எதிர்ப்பை கண்ட பிரதமர் திரு ஜவஹர்லால் நேரு அவர்கள் இந்தி மொழி பேசாதவர்களின் கவலையை போக்க உறுதிமொழி ஒன்றை கொடுத்தார்.

அது என்ன?


(பின் குறிப்பு: இந்த பதிவில் தந்துள்ள புள்ளி விவரங்கள் சிலருக்கு அலுப்பாகத் தோன்றலாம். ஆனாலும் அவைகளைத் தந்தால் தான், 1965 ஆம் ஆண்டில் நடந்த இந்தி திணிப்பு போராட்டத்தின் மூல காரணம் இன்றைய இளைஞர்களுக்கு புரியும் என்பதால் தந்திருக்கிறேன். எனவே பொறுத்தருள்க.)


தொடரும்





38 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!

      நீக்கு
  2. இதுபோன்ற கட்டுரைகளுக்கு சிலசமயம் புள்ளி விவரங்கள் தேவைதான் அய்யா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!

      நீக்கு
  3. பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டிற்கும், கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே!

      நீக்கு
  4. நிறைய தகவல்களை அறிந்து கொள்ள முடிகின்றது! தொடர்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ‘தளிர்’சுரேஷ் அவர்களே!

      நீக்கு
  5. கால வரிசைப்படி நிகழ்வுகளை அழகாகத் தொகுத்து அனைவருக்கும் புரியும்படி தந்திருக்கிறீர்கள்.காத்திருக்கிறேன் தொடர்ச்சிக்காக

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

      நீக்கு
  6. இந்தி எதிர்ப் போராட்டம் பற்றி மிக அருமையாக விளக்கமாக தந்ததற்கு மிக்க நன்றி அய்யா!
    த ம 3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி திரு S.P.செந்தில்குமார் அவர்களே!

      நீக்கு
  7. தகவல் நன்று தொடர்கிறேன் நண்பரே
    தமிழ் மணம் 5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே!

      நீக்கு
  8. புள்ளி விவரத்துடன் புது பொலிவுமிக்க வரலாற்று செய்திகள்!
    வரவேற்று மகிழ்கிறோம். அறியாத விடயங்கள் அறியப் பெற்றோம்!
    நன்றி அய்யா!
    த ம +
    அட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டிற்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு புதுவை வேலு அவர்களே!

      நீக்கு
  9. ஒரு பதிவிற்கு, குறிப்பாக இது போன்ற பதிவுக்கு, புள்ளி விவரங்கள் முக்கியமே. தொடர்ந்து படித்து வருகிறோம். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே!

      நீக்கு
  10. மிகவும் முக்கியமான தொடர். தமிழ் விக்கிபீடியாவில் தொகுத்தால் இந்தி எதிர்ப்பு குறித்து தமிழர்கள் அனைவரும் அறிந்துகொள்ள முடியும். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், ஆலோசனைக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே!

      நீக்கு
  11. இந்தி எதிர்ப்பு வரலாற்றினை அனைவருக்கும் உணர்த்தும் உங்களது பதிவிற்கு மிக்க நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி திரு சதுக்க பூதம் அவர்களே!

      நீக்கு
  12. இந்தி எதிர்ப்பு வரலாறு பற்றி ஒரு சில சிறு பதிவு இட்டிருந்தேன்

    இந்தி திணிப்பு - வந்த கார்டூனும் வந்திருக்க வேண்டிய கார்டூனும்!
    http://tamilfuser.blogspot.com/2012/06/blog-post_25.html

    இந்தி திணிப்பு எதிர்ப்பு - காங்கிரசார் பங்கு
    http://tamilfuser.blogspot.com/2012/07/blog-post.html

    இந்தி திணிப்பு எதிர்ப்பு - வரலாறு முக்கியம் -உக்ரேனிய பிரச்சனையும் இந்தி எதிர்ப்பு போராட்டமும்
    http://tamilfuser.blogspot.com/2014/08/blog-post.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது மூன்று பதிவுகளையுமே படித்தேன் திரு சதுக்கபூதம் அவர்களே! மிக அருமையாக பதிவிட்டிருக்கிறீர்கள். ஏனோ தெரியவில்லை தங்களது பதிவுகளை இதற்கு முன் படிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டேன்.

      நீக்கு
  13. ஐயா

    நான் 1965இல் P.U.C எங்கள் ஊரில் (கடலூர்) புதிதாகத் தொடங்கப்பட்ட அரசு கலைக் கல்லூரியில் படித்துக் கொண்டு இருக்கும்போது இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட நினைவுகள் மலர்ந்தன. போலீஸ் பிடித்துக் கொண்டு போன சக நண்பர்கள் நினைவில் வந்தனர்.

    முதல் தலைமுறையாய் கல்லூரியில் சேர்ந்த நான், படிப்பு என்ன ஆகுமோ என்று பயந்ததும் உண்டு.

    முதலில் போராட்டம் அரசியல் கலப்பில்லாமல் மாணவர் போராட்டமாகத் தான் இருந்தது. பின்னரே அரசியல் கலப்பு வந்தது.

    தமிழகத்தில் காங்கிரெஸ் அழிய முக்கிய காரணமாய் அமைந்தது.

    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ஜெயக்குமார் அவர்களே! தாங்கள் கடலூரில் புகுமுக வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மூன்றாம் ஆண்டு வேளாண் அறிவியல் பட்டப் படிப்பு படித்துக்கொண்டிருந்தேன். அப்போது நடந்த நிகழ்வுகளை இந்த தொடரில் எழுத இருக்கிறேன். நீங்கள் சொல்லும் கருத்தில் எனக்கு உடன்பாடே. அது குறித்தும் எழுதுவேன்.

      நீக்கு
  14. அருமையாகக் கோர்த்துச் செல்கிறீர்கள் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் ,பாராட்டிற்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே!

      நீக்கு
  15. இன்று என் வலைப்பூவில்”என்னங்க!புதுக்கோட்டைக்குப் போறீங்களா”.பாருங்கள் http://kuttikkunjan.blogspot.com/2015/09/blog-post.html

    பதிலளிநீக்கு

  16. வருகைக்கும், தகவலுக்கும் நன்றி திரு குட்டன் அவர்களே! தங்களது வலைப்பூவிற்கு சென்று பதிவை சுவைத்து, பதில் தந்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  17. நுணுக்கமான செய்திகள் , கைதேர்ந்த சிற்பியின் கைவேலையாய் மிளிர்கின்றன .

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே! நடைபெற்ற நிகழ்வுகளை மறந்தவர்களுக்கு நினைவூட்டவும். தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்தவும் எழுதுகிறேன் அவ்வளவே!

      நீக்கு
  18. கொஞ்சம் கால தாமதமாக இப்போது தான் அந்த பதிவுகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.


    //..இந்தியை முழுமூச்சாக ஆதரித்த மூதறிஞர் இராஜாஜி அவர்கள் 1958 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 8 ஆம் நாள் ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியை கொணர்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்க அகில இந்திய மொழி மாநாடு ஒன்றை கூட்டினார்.//
    இந்தியை முழு மூச்சாக "ஆதரித்த " ராஜாஜி என்பது சரியா?

    இரண்டு காரணங்கள்: (1) அப்படி அவர் எண்ண ஓட்டம் இருந்தால் இவ்வளவு இந்தி மொழி பேசாத மாநிலங்களைக் கூட்டி மாநாடு நடத்துவாரா? (2) முன்பு ஒருமுறை 1936 - 1940 : காந்தி இந்தியில் எழுதிய கடிதத்திற்கு தமிழில் ராஜாஜி பதில் எழுதியதாகவும் அதுவே காந்தி ராஜாஜிக்கு எழுதிய முதல் மற்று கடைசி இந்தி மடல் என்று படித்து இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  19. வருகைக்கு நன்றி திரு நெற்குப்பை தும்பி அவர்களே! இந்தியை முழு மூச்சாக ஆதரித்த ராஜாஜி அவர்கள் என சொல்லியிருப்பது சரியா எனக் கேட்டிருக்கிறீர்கள்.

    “சென்னை ராஜதானியில் 1937 இல் நடந்த தேர்தலுக்கு பிறகு மூதறிஞர் இராஜாஜி அவர்கள் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தபோது திரு ராஜாஜி அவர்கள தான் முதன் முதல் இந்தியை பள்ளிகளில் கட்டாய பாடமாக்கினார். அப்போதுதான் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் தொடங்கியது.” என்று பதிவின் ஆரம்பத்தில் சொல்லியிருந்தேன். அதனால் தான் முழு மூச்சாக ஆதரித்தார் என குறிப்பிட்டிருந்தேன்.

    பிற்பாடு அவர் இந்தியை எதிர்த்தது காங்கிரசுக்கு எதிராக மாறியதால்தான். முதன் முதலில் இந்தியை தமிழ் நாட்டு பள்ளிகளில் கட்டாய பாடமாக்கியது அவர் தான் என்று சொல்கிறது வரலாறு. அதையே என் பாணியில் சொன்னேன் அவ்வளவே.

    பதிலளிநீக்கு
  20. பலதகவல்கள் எனக்கு புதிது .. நன்றி

    பதிலளிநீக்கு