வியாழன், 25 ஜூலை, 2013

எனது முதல் கணினி அனுபவம் – தொடர் பதிவு



2011 ஆம் ஆண்டில் தொடர்பதிவிட்டுக்கொண்டிருந்த வலையுலக நண்பர்கள், சமீபகாலமாக எந்த தலைப்பிலும் தொடர் பதிவு எழுதாமல் இருந்தபோது, அதை ஒரேயடியாக மறந்து விட்டார்கள் என நினைத்திருந்தேன். ஆனால் அந்த அலை ஓயவில்லை. என்பதை நண்பர் திரு குட்டனின் அழைப்பு உறுதி செய்திருக்கிறது. 

நண்பர் திரு குட்டன் அவர்கள் என்னையும் எனது முதல் கணினி அனுபவம் பற்றி தொடர் பதிவிட அழைத்துள்ளார். அவருக்கு எனது நன்றி.

நான் முதன் முதல் தொடர்பதிவிட்டது திரு சென்னை பித்தன் அவர்கள் அழைப்பிற்கிணங்கி நண்பேண்டா என்ற தொடர் பதிவுதான். பின் அவரது அழைப்பை ஏற்று முத்தான மூன்று மற்றும் மழலை உலகம் மகத்தானது  என்ற தொடர்பதிவுகளையும் மின்னல்வரிகள் திரு பால கணேஷ் அவர்கள் அழைப்பை ஏற்று மீண்டும் பள்ளிக்குப் போகலாம் என்ற தொடர் பதிவையும் எழுதியுள்ளேன். திரும்பவும் தொடர் பதிவிட வாய்ப்பை ஆரம்பித்து வைத்த நண்பர்களுக்கு நன்றி.

முதன் முதலில் நான் கணினி பற்றி கேள்விப்பட்டது 1973 இல் புது தில்லியில் இருக்கும்போது தான். எனது நண்பர் ஒருவர் மைய அரசில் பணிபுரிந்துகொண்டு இருந்தவர், தான் வேலை பார்க்கும் அலுவலகத்தில் உள்ள கணினி பற்றி சொல்லும்போது, அது ஒரு பெரிய அறையையே அடைத்துக்கொண்டு இருக்கும் இயந்திரம் என்றும் அதில் புள்ளி விவரங்களை சேகரித்து வைக்கலாம் என்றும் தேவைப்படும்போது அந்த விவரங்களை எடுத்துக்கொள்ளமுடியும் என்று சொன்னபோது வாயை பிளந்து கேட்டுக்கொண்டிருந்தது உண்மை.  

பொறியாளர்கள் மட்டுமே கணிணியைக் கையாளமுடியும்,என நினைத்ததால் மேற்கொண்டு அதில் நாட்டம் செலுத்தவில்லை.பின்பு சிண்டிகேட் வங்கியில் சேர்ந்த முதல் நாள், வங்கியின் தலைமை அலுவலகத்தில் இருந்த தகவல் தொகுப்புத் துறை (Data Processing Department) க்கு அழைத்து சென்றார்கள். அங்குள்ள கணினி இயந்திரங்களைக் காட்டி இங்குதான் ஊழியர்களின் மாத சம்பள பட்டியல் (Pay Roll) தயாரிக்கப் படுகின்றன என்றபோது அவைகளை வெறும் அச்சிடும் இயந்திரம்போலத்தான் எனக்குத் தோன்றின.

பின்னர் வங்கியில் ஒரு மாவட்ட கிளையில் முதுநிலை மேலாளராக பணியாற்றியபோது, ஒருநாள் என்னைப் பார்க்க ஒருவர் வந்தார். 
தான் IBM இல் வேலை பார்த்து வந்ததாகவும், பிறகு பணியை விட்டு வந்து அந்த ஊரில் கணினியில் பயிற்சி தருவதாகவும் சொன்னார். மேலும் அரசு அப்போது நடத்தும் ஒரு தேர்வுக்கு தயார்செய்து சான்றிதழ் பெற உதவுவதாகவும் சொன்னார்.

வங்கிகள் கணினிமயமாக்கப்பட இருப்பதால், வங்கி ஊழியர்களுக்கு கணினி பற்றிய அறிவு அவசியம் இருக்கவேண்டும் என்றும், நாங்கள் ஒரு குழுவாக அவரது பயிற்சியில் சேர்ந்தால் கட்டணத்தில் சலுகை தருவதாகவும், தினம் மாலையில் பயிற்சிக்கு வந்தால் மூன்றே மாதங்களில் எங்களுக்கு கணினியைக் கையாளும் கலையைக் கற்றுத் தருவதாகவும் சொன்னார்.

உடனே கணினி வல்லுனராகப் போவதாக கற்பனையில் மிதந்தபடி, நான் எனது கட்டணத்தை தந்தேன். என்னைப்பார்த்து என்னோடு பணிபுரிந்த நண்பர்களும் பணத்தைக் கட்டினார்கள்.

ஒரு சுபயோக சுபதினத்தில் எங்களது பயிற்சி தொடங்கியது.முதல் நாளே எங்களை கணினி முன் உட்கார வைத்து கார் ஓட்டக் கற்றுக்கொடுப்பதுபோல் சொல்லித்தருவார் என நினைத்துக்கொண்டு சென்றபோது ஏமாற்றமே மிஞ்சியது அவரது பயிற்சிக்கூடத்தில் இருந்ததென்னவோ ஒரே ஒரு மேசைக் கணினிதான்.அதுவும் ஒரு நெகிழி(Plastic) உறையால்  மூடப்பட்டு இருந்தது.  

அவர் உங்களுக்கு முதலில் Programme எழுத சொல்லித்தருகிறேன் என்று ஆரம்பித்தபோது நான்  கேட்ட கேள்வி, “எப்போது எங்களை கணினிமுன் உட்கார வைப்பீர்கள்?’ என்பதுதான். அதற்கு அவர் முதலில் இதைக் கற்றுக்கொள்ளுங்கள். பின்பு உட்காரலாம். என்றார்.

ஒருவாரம் ஆயிற்று, இரண்டு வாரம் ஆயிற்று. அவர் பாடம் நடத்திக்கொண்டு இருந்தாரே தவிர கணினியை கண்ணில் காட்டவில்லை. சரி இவர் தெருவில் வித்தைகாட்டும் பாம்பாட்டி கீரிப்பிள்ளை பாம்பு சண்டையைக் காண்பிக்கிறேன் பேர்வழி என்று சொல்லிவிட்டு காண்பிக்காமல் இருப்பதுபோல், இவரும் நம்மை கணினி அருகே அண்டவிட மாட்டார் போலிருக்கிறதே என நினைத்துக்கொண்டு அந்த பயிற்சிக்குப் போவதையே நிறுத்திவிட்டேன்.

இருந்தாலும் கணினியில் எப்படியாவது பயிற்சிபெற வேண்டும் என்ற ஆசை மட்டும் இருந்துகொண்டே இருந்தது. கடைசியில் அந்த ஆசை நிறைவேறியது பத்து ஆண்டுகளுக்குப் பின்தான். வங்கியின் பணிகளை அப்போது முழுமையாக கணினிமயமாக்க எண்ணியபோது நான் வட்டார மேலாளராக பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கும் ஒரு மேசைக் கணினி தந்தார்கள். ஆனால் அதை எப்படி இயக்குவது எனத் தெரியாததால் அதை அப்படியே மேசையின் ஓரத்தில் வைத்திருந்தேன்,

காரணம் அந்த வயதில் எப்டி இயக்குவது என மற்றவர்களிடம் கேட்க தயக்கம் இருந்ததால்.ஆனால் தினம் காலையில் வந்து நாற்காலியில் அமர்ந்ததும் அந்த கணினி என்னைக் கவனி. சொல்வதுபோல் இருக்கும். ஒரு நாள் தயக்கத்தை மூட்டை கட்டிவைத்துவிட்டு எனது அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த அலுவலரைக் கூப்பிட்டு எப்படி இதை இயக்குவது என சொல்லிக்கொடுங்கள் என்றேன்.

அவர் சொல்லிக் கொடுத்தபின் நான் முதலில் செய்து பார்த்தது Desktop இல் படத்தை மாற்றியதுதான்! பின்பு செய்தது மின்னஞ்சலுக்காக கணக்கு தொடங்கியதுதான். அப்போது கூட Login Id க்கு எனது முழுப்பெயரையும் அதாவது V.Nadanasabapathy என்று கொடுத்தபோது எனக்கு உதவிய நண்பர் சொன்னார். சார்.இப்படி நீளமாக Login Id இருந்தால் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்ப மற்றவர்கள் சிரமப்படுவார்கள். எனவே சுருக்கமாகத் தாருங்கள். என்றார்.

அப்படி தத்துபித்தென்று கற்றுக்கொள்ள ஆரம்பித்த நான், ஓர் ஆண்டுக்குள் கற்றுக் கொள்ளவேண்டியதைக் கற்றுக்கொண்டு, எங்களது வங்கியின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் திரு K.V.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் முன்னால் Power Point Presentation தரும் அளவிற்கு முன்னேறினேன் என்பதில் எனக்கு பெருமையே. 

இது தொடர் பதிவென்றாலும் முடிவு ஒன்று என்று இருக்குமல்லவா? அதனால் யாரையும் தொடர் பதிவிட அழைக்காமல்,நான் கணினி பயிற்சி பெற சென்றபோது கேட்ட நகைச்சுவையைச் சொல்லி பதிவை முடிக்கலாமென  எண்ணுகிறேன். கணினிப் பொறியாளர்கள் மன்னிப்பார்களாக!

Question: What is the similarity between Computer Engineers and Beggars?

Answer:  Both are working on Platform.


 





32 கருத்துகள்:

  1. தேவையானதை முதலில் கற்றுக் கொள்ள வேண்டியது முக்கியம் என்பதை சொல்லி விட்டீர்கள்... அனுபவம் + நகைச்சுவை அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      நீக்கு
  2. சுவாரஸ்யமான அநுபவத்துக்கு முத்தாய்ப்பாக சூப்பர் ஜோக்!
    அழைப்பை எற்றமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு குட்டன் அவர்களே! தாங்கள் அழைத்தபின் மறுக்கமுடியுமா?

      நீக்கு
  3. // அவர் சொல்லிக் கொடுத்தபின் நான் முதலில் செய்து பார்த்தது Desktop இல் படத்தை மாற்றியதுதான்! பின்பு செய்தது மின்னஞ்சலுக்காக கணக்கு தொடங்கியதுதான். அப்போது கூட Login Id க்கு எனது முழுப்பெயரையும் அதாவது V.Nadanasabapathy என்று கொடுத்தபோது எனக்கு உதவிய நண்பர் சொன்னார். ’சார்.இப்படி நீளமாக Login Id இருந்தால் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்ப மற்றவர்கள் சிரமப்படுவார்கள். எனவே சுருக்கமாகத் தாருங்கள்.’ என்றார். //

    உங்கள் நண்பர் நடைமுறைச் சிக்கலை சரியாகச் சொல்லி இருக்கிறார். நானும் எனது வலைப்பதில் பெயர் மற்றும் மின்னஞசல் ஆகியவற்றை நீளமாக வைத்துக் கொண்டு சிரமப்படுகிறேன். சிலசமயம் எனக்கு மின்னஞ்சல்கள் வருவது நின்றுவிடுகின்றன.

    உங்கள் நினவலைகளைச் சுவைபடவே சொன்னீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!

      நீக்கு
  4. ஐயா......
    உங்கள் தொடர்
    நன்றாக இருக்கு....
    நானும் விரைவில் இது போன்ற என் அனுபவத்தை எழுதப்போகிறேன்
    உங்கள் பதிவு எனக்கு உந்துசக்தி....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு பரிதி முத்தரசன் அவர்களே!

      நீக்கு
  5. அந்த தயக்கத்தைத் துாக்கி எறிந்ததால்தான் கணிணியை கற்க முடிந்தது.அதுதான் சரி.வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் திரு கொச்சின் தேவதாஸ் அவர்களே! தயக்கத்தைத் தூக்கி எறிந்ததால்தான் என்னால் கணிணியை கற்க முடிந்தது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      நீக்கு
  6. கணிணி அனுபவங்களை சுவாரஸ்யமாகப் பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!

      நீக்கு
  7. நான் கம்ப்யூட்டர் இயக்க கற்றுக்கொண்டது என்னுடைய பெண் கம்ப்யூட்டர் இல் வெகு வேகமாக வேலை செய்வதை பார்த்து வியந்து நாம் பெற்ற பெண்ணை விட நாம் இந்த கணினியில் வேலை செய்ய வேண்டும் என்ற முடிவுடன் பழகி விட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு இராஜ் இராஜமாணிக்கம் அவர்களே! சிவபெருமானே முருகனிடம் பாடம் கேட்டபோது நாம் நம் பிள்ளைகளைப் பார்த்து பாடம் படிக்கக்கூடாதா என்ன?

      நீக்கு
  8. வங்கியில் இப்போதும் பல உயர் அதிகாரிகளுக்கு கணினியை பயன்படுத்த தெரியவில்லை என்பது உண்மை. என்னுடைய வங்கியில் கணினியை முதன்முதலாக அறிமுகப்படுத்தியபோது நான் ஒரு கிளை மேலாளராக இருந்ததால் எனக்கு கீழ் பணியாற்றியவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள முடிந்தது. அதுவே நிர்வாக அலுவலகம் என்றால் நிறைய ஊழியர்கள் இருந்திருப்பார்கள். அவர்களிடம் எப்படி கேட்பது என்ற கூச்சம் இருந்திருக்கும். நான் வட்டார அலுவலகத்திற்கு வருவதற்கு முன்பே கணினியை பயன்படுத்துவது பற்றி நன்கு தெரிந்துக்கொண்டுவிட்டேன். வட்டார மேலாளராக வந்த பின்னும் கணினியை ஒரு காட்சி பொருளாக வைத்திருந்த பலரை நானும் சந்த்த்திருக்கிறேன். நம்முடன் ஒப்பிடும்போது இன்றைய தலைமுறை கொடுத்து வைத்தது என்பதில் சந்தேகமேயில்லை. என்னுடைய ஆறு வயது பேத்தி ஐபேடை இயக்கி விளையாடுவதை பார்க்கும்போது இப்போதும் வியப்பாகத்தான் இருக்கிறது. உங்களுடைய அனுபவத்தை பகிர்ந்துக்கொண்ட விதம் நன்றாக இருந்தது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க நினைத்ததிலும் தவறில்லை... எதற்கும் ஒரு முடிவு வேணுமே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் மேலான கருத்துக்கும் நன்றி திரு டிபி.ஆர்.ஜோசப் அவர்களே! நீங்கள் சொல்வதுபோல் வங்கியில் மேலதிகாரிகள் பலர் மேசைக் கணினியை காட்கிப்பொருளாகவே வைத்திருப்பதை நானும் கண்டதுண்டு. தயக்கத்தை விட்டால்தான் எதையும் கற்றுக்கொள்ளமுடியும் என்பது அனுபவரீதியான உண்மை. பாராட்டுக்கு நன்றி!

      நீக்கு
  9. அப்புறம் இன்னொரு விஷயம் சார். வங்கிகள் அன்றும் இன்றும் என்ற ஒரு தொடர் பதிவு எழுதலாம்னு எண்ணம். உங்கள மாதிரி வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் விரும்பினால் செய்யலாம்.... என் http://tbrbank.blogspot.com/" வங்கியுலகம் என்ற வலைப்பூவையும் படித்து பார்க்க அழைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆலோசனைக்கு நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே! நானும் எழுத முயற்சிக்கிறேன்.தற்போது ‘வாடிக்கையாளர்களும் நானும்’ என்ற தலைப்பில் தொடர் ஒன்றை எழுதிக்கொண்டு இருக்கிறேன். தங்களது 'வங்கியுலகம்' வலைப்பதிவையும் படிக்கிறேன்.

      நீக்கு
  10. //இருந்தாலும் கணினியில் எப்படியாவது பயிற்சிபெற வேண்டும் என்ற ஆசை மட்டும் இருந்துகொண்டே இருந்தது. கடைசியில் அந்த ஆசை நிறைவேறியது பத்து ஆண்டுகளுக்குப் பின்தான். //

    If you think you can, you can. If you think you can’t, you can’t. Either ways you are correct. Finally you have achieved, what you wanted to achieve. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே!

      நீக்கு
  11. When computers were installed in executive's cabin, initially it was having only photographic value. As rightly poiinted out, a few like Sri.VNS picked up and upgraded their skills. The joke is excellent. Regards. Govindarajan.L.N.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும்,நகைச்சுவையை இரசித்தற்கும் நன்றி திரு L.N.கோவிந்தராஜன் அவர்களே!

      நீக்கு
  12. தங்கள் அனுபவத்தை சுவைபடவும் நேர்த்தியாகவும் எழுதி ஒரு கணினி நகைச்சுவையுடன் முடித்து அசத்திவிட்டீர்கள். பாராட்டுகள் ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நகைச்சுவையை இரசித்ததற்கும் நன்றி திருமதி கவிதாயினி கீதா மதிவாணன் அவர்களே!

      நீக்கு
  13. http://tthamizhelango.blogspot.com/2013/07/blog-post_9497.html - தளத்தில் இட்ட கருத்துரை :

    http://ponmalars.blogspot.com/2012/03/stop-blogger-redirecting-country-wise.html

    மேற்கூறிய சகோதரி பொன்மலர் தளத்தில் போல் செய்தால் எவ்வித பிரச்சனையும் இருக்காது...

    அந்தப் பகிர்வில் உள்ள முக்கியமான வரிகள் கீழே :

    // வந்தே மாதரம் தளத்தில் இதற்கான நிரல்வரிகளை நண்பர் குறிப்பிட்டிருந்தார். இதில் நான் ஒன்றைக் கவனித்தேன். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளின் முகவரிக்கு Redirect ஆகும் போது மட்டுமே .com க்கு மறுபடியும் மாற்றும் படி அந்த நிரல் இருக்கிறது. கூகிள் இந்த முறையை மேலும் சில நாடுகளுக்கு அப்டேட் செய்யும் போது, அதாவது .uk, .us போன்ற மற்ற நாடுகளிலும் இந்த முறையைக் கொண்டு வரும் போது அந்த நிரல் வேலை செய்யாது. //

    இதைப்பற்றி விரைவில் ஒரு பதிவு வே.வி. தொடரில் வரும்... முதலில் "கணினி முதல் அனுபவத்தை" முடித்து விட்டு பகிர வேண்டும்...

    மேலும் பல தளங்கள் (.in என்று முடியும் தளங்கள்) தமிழ்மணம் இணைக்காமல் உள்ளன... பல நண்பர்களுக்கு என்னால் முடிந்த சிறு உதவியை செய்து வருகிறேன்... இணைக்க முடியாதவர்கள் தொடர்பு கொள்ளலாம்...

    dindiguldhanabalan@yahoo.com

    நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவலுக்கு நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      நீக்கு
  14. இயல்பான சுவாரஸ்யமான அனுபவம் கடைசி ஜோக் ஆஹா :0 என் மகளீடம் சொன்னேன் விழுந்து விழுந்து சிரிக்கிறாள் இன்னமும்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும், நகைச்சுவையை நீங்களும் உங்கள் மகளுக்கும் இரசித்தமைக்கும் நன்றி திருமதி ஷைலஜா அவர்களே!

      நீக்கு
  15. சுவாரஸ்யமாக தந்துள்ளீர்கள். நகைசுவை அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திருமதி மாதேவி அவர்களே!

      நீக்கு
  16. கணனி அனுபவம் மிகச் சுவை.
    மிக நன்று. ரசித்தேன்.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பதிவை இரசித்ததற்கும் நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!

      நீக்கு