புதன், 25 ஜூன், 2014

என்னைக் கேட்டால்?


இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன? தொடர் பதிவு 


2011 ஆம் ஆண்டில் தொடர் பதிவு என்ற சங்கிலித் தொடர் பதிவுலகில் ஆரம்பமாகியபோது, அதை பதிவுலக வாசகன் என்ற முறையில் படித்து 
இரசித்தவன் நான். நம்மை யாரும் இந்த தொடர் பதிவு எழுதும் சிக்கலில் மாட்டிவிடமாட்டார்கள் என நினைத்திருந்தபோது எனது எண்ணத்தை 
பொய்யாக்கி என்னை முதன் முதல் தொடர் பதிவிட அழைத்தவர் 
திரு சென்னை பித்தன் அவர்கள். அவரது அழைப்பிற்கிணங்கி  
நண்பேண்டா என்ற தொடர் பதிவு தான் நான் எழுதிய முதல் 
தொடர் பதிவு.



பின் அவரது அழைப்பை ஏற்று முத்தானமூன்று மற்றும்  மழலை 
உலகம் மகத்தானது  என்ற தொடர் பதிவுகளையும்,  மின்னல்வரிகள்  
திரு பால கணேஷ் அவர்கள் அழைப்பை ஏற்று மீண்டும் 
பள்ளிக்குப் போகலாம்  என்ற தொடர் பதிவையும் எழுதியுள்ளேன்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர் திரு குட்டன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க எனதுமுதல் கணினி அனுபவம் பற்றி 
தொடர் பதிவையும், நண்பர் திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களின் 
அன்புக்கட்டளையை ஏற்று முதல் பதிவின் சந்தோசம் என்ற தொடர் 
பதிவையும் எழுதினேன்.

பிறகு யாரும் தொடர் பதிவிட அழைக்காததால் ஒரேயடியாக  
வலைப்பதிவு நண்பர்கள் அந்த பழக்கத்தை மறந்து விட்டார்கள் போல  
என நினைத்திருந்தபோது Old Habit dies hard என்பது சரிதான் என்பதை 
நிரூபிக்க திரு மதுரைத்தமிழன்அவர்கள் அந்த பழக்கத்தை திரும்பவும் 
ஆரம்பித்து புண்ணியம் தேடிக்கொண்டார். திரு சென்னை பித்தன் கூட 
அவர் எழுதிய தொடர் பதிவில் யாரையுமே அழைக்கப்போவதில்லை 
என எழுதியபோது அதற்காக நன்றி தெரிவித்து அவரது பதிவில் 
பின்னூட்டமிட்டேன்.
 

ஆனால் அபுதாபியில் இருக்கும் நண்பர் தேவக்கோட்டை திரு KILLERGEE   
அவர்கள் என்னையும் இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன?.’ 
என்ற தலைப்பில் தொடர் பதிவிட அழைத்து என்னை இந்த வம்பில் மாட்டிவிட்டுவிட்டார்.

 

கேள்விகள் கேட்டுப் பதில் பெறுமளவிற்கு நான் தகுதியானவனா எனத் தெரியவில்லை. அதனால் இந்த நேரத்தில் VOLTAIRE சொன்ன  "Judge a man by his questions rather than his answers." என்பதை நினைவு படுத்திவிட்டு,  
திரு KILLERGEE அவர்களின் வேண்டுகோளை ஏற்று எனது பதில்களை 
கீழே தந்துள்ளேன்.
 

1. உங்களுடைய 100 வது பிறந்த நாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்?

நான் எப்போதுமே எனது பிறந்த நாளை கொண்டாடுவதில்லை. ஆனால் 
நூறாவது பிறந்த நாள் என்பதால் ஆதரவற்ற குழந்தைகளுக்காக நடத்தும் 
இல்லத்திற்கு நன்கோடை கொடுத்து கொண்டாடுவேன்.
  
 2. என்ன கற்றுக் கொள்ள விரும்புகிறீர்கள் ?
எனக்கு கன்னடம் மற்றும் மலையாள மொழிகள் தெரியுமாதலால்,தெலுங்கு 
மற்றும் துளு மொழிகளைக் கற்றுக்கொள்ள ஆசை.

3. கடைசியாக  நீங்கள்  சிரித்தது எப்போது, எதற்காக ?


சிரிக்கும் பழக்கத்தை  இன்னும் நிறுத்தாததால் இந்த கேள்விக்கே இடமில்லை!



4. 24 மணி நேரம் பவர் கட்டானால் நீங்கள் செய்வது என்ன?



புத்தகம் படிப்பதுதான்.

5. உங்கள் குழந்தைகளின் திருமண நாள் அன்று அவர்களிடம் நீங்கள் சொல்ல விரும்புவது என்ன ?.

ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழுங்கள். என்பதுதான்.

 6. உலகத்தில் நடக்கும் பிரச்சனைகளை உங்களால் தீர்க்க முடியும் என்றால் 
எந்தப் பிரச்னையை நீங்கள் தீர்க்க விரும்புவீர்கள் ?

மூன்றாவது உலக மகா யுத்தம் வந்தால் அது தண்ணீருக்காகத்தான் 
இருக்கும் என்கிறார்கள். உலகத்தை  விட்டுவிடுங்கள். நம் இந்தியாவிலே, 
அதுவும் தென்னகத்திலே தற்போதைய நிலை நீடித்தால் அது எதிர்காலத்தில்
உள்நாட்டுப் போராக மாற வழியிருப்பதால் அந்த பிரச்சினையை 
தீர்க்க விரும்புவேன்.

7. உங்களுக்கு ஒரு பிரச்சனை அதைத் தீர்க்க யாரிடம் அட்வைஸ் கேட்க விரும்புவீர்கள் ?

பிரச்சினையைப் பொறுத்து, மனைவி, அண்ணன்கள் மற்றும் நெருங்கிய 
நண்பர்களிடம் யோசனை கேட்பேன்  

 8. உங்களைப்பற்றி ஒருவர் தவறான செய்தியைப் பரப்புகிறார். 
அதைக்கண்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்?...

.அவரையும் அந்த செய்தியையும்  புறக்கணிப்பேன்.
  
9. உங்கள் நண்பரின் மனைவி இறந்து விட்டால் அவரிடம் என்ன 
சொல்வீர்கள் ?

சேர்ந்து வாழும் அனைவருமே சேர்ந்துபோவதில்லை. எனவே சோர்ந்து 
போகாதீர்கள்.இருக்கின்ற நாட்கள் வரை பழைய நல்ல நிகழ்வுகளை 
நினைத்து மகிழ்ச்சியாக இருங்கள். கூடியவரை உங்களால் முடியும் வரை 
உங்கள் வேலைகளை நீங்களே செய்யுங்கள். யாருடைய உதவியையும் 
நாடாதீர்கள். என்பேன்.  

10. உங்கள் வீட்டில் நீங்கள் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள் ?..

இணையத்தில் உலா வருவேன். புத்தகம் படிப்பேன். 
 

திரு சென்னை பித்தனைப் போல் யாரையும் தொடரை தொடர அழைக்கப் போவதில்லை.திரும்பவும் தொடர் பதிவிட அழைத்த
திரு KILLERGEE அவர்களுக்கும் தொடர் பதிவை ஆரம்பித்து வைக்க 
மூல காரணமான திரு மதுரைத்தமிழன் அவர்களுக்கும் நன்றி!







 

 


  

20 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி திருமதி ராஜி அவர்களே!

      நீக்கு
  2. மிக அழகான ஆழமான வரிகள் படித்து ரசித்தேன் உங்கள் பதில்களை.....பாராட்டுக்கள்...வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,பதிவை இரசித்தமைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு மதுரைத் தமிழன் அவர்களே! ஒருவகையில் இந்த பாராட்டு உங்களுக்கே உரியது.

      நீக்கு
  3. வணக்கம்
    ஐயா
    கேள்விக்கான பதிலை மிக நேர்த்தியாக பகிர்ந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திரு ரூபன் அவர்களே! வருகைக்கும், பாராட்டி‌யதற்கும் நன்றி!

      நீக்கு
  4. #நான் எப்போதுமே எனது பிறந்த நாளை கொண்டாடுவதில்லை.#
    நமக்குள் உள்ள ஒற்றுமை ,இதைப் போன்றே என் பதிலும் சார் !
    த ம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும், பாராட்டி‌யதற்கும் நன்றி திரு பகவான்ஜி அவர்களே! நம் இருவருக்கும் ஓரே எண்ண அலை இருப்பது அறிந்து மகிழ்ச்சி.

      நீக்கு
  5. எனக்கும் ஒரு அழைப்பு இருக்கிறது. அதனால் அதற்கு மதிப்பு கொடுத்து என் பதில்களை எழுதுவேன். ஆனால் இந்த ஜுரம் கொஞ்சம் த்ணிந்த பிறகு எழுதலாம் என்றிருக்கிறேன்பதில்கள் ரசனையாகவும் ஆத்மார்த்தமாவும் எழுதி உள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும், பாராட்டி‌யதற்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம்அவர்களே! தங்கள் பதில்களை எதிர் நோக்கி காத்திருக்கிறேன்.

      நீக்கு
  6. ஐயா தங்களின் பதில்களில் 1 வது சிறப்பு, 3 வது சிரிப்பு, 6 வது பொருப்பு, 9 வது ஈர்ப்பு, அருமையானவை
    ஐயா எனது வேண்டுகோளுக்கிணங்க என்னையும் மதித்து என்னை பதிவில் அறிமுகப்படுத்தியதற்க்கு நன்றி... நன்றி.
    எனது ''வீட்டில் வளர்த்த விட்டில் பூச்சிகள்'' படிக்கவும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் என்னை பதில் சொல்லத்தூண்டிய உங்களுக்கும் நன்றி திரு தேவக்கோட்டை KILLERGEE அவர்களே!

      நீக்கு
  7. ஒவ்வொரு பதிலும் பொறுப்பானவை... சிறப்பானவை...

    பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      நீக்கு
  8. இந்தப் பதிலைத் தவிர அனைத்து பதில்களும் என்னைபொறுத்தவரை ஒத்துக்கொள்ளக் கூடியவைதான். அடுத்தவருக்கு விட்டுக்கொடுக்கிறோம் என்ற எண்ணமே எனக்கு சரியாகப் படவில்லை. அந்த எண்ணமிருந்தால் எதிர்பார்ப்பும் இருக்க வாய்ப்புகள் உள்ளது. பதிலில் என்னுடைய புரிதலும் தவறாக இருக்கலாம். இந்திய பண்பாட்டில் நன்றி, உதவி, விட்டுக்கொடுத்தல் போன்ற பண்புகள் inherent ஆகவே இருந்த காலம் மாறிவிட்டது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! விட்டுக் கொடுத்தல் என்பது இந்திய வாழ்க்கை முறைக்கு அவசியம் தேவை என்பது என் கருத்து. ஏனெனில் இங்கு என்னதான் பெண்கள் படித்து வேலை பார்த்தாலும் ஆணின் ஆதிக்கத்தின் கீழ் தான் வாழ வேண்டியுள்ளது. சமீபகாலமாக இதை ஏற்றுக்கொள்ளாத குடும்பங்களில் மன வருத்தமும் நிரந்தர பிரிவும் ஏற்படுகின்றன என்று புள்ளி விவரங்கள் சொல்கின்றன.அதனால் ஒருவருக்கொருவர் தங்களது தன்முனைப்பை (Ego) விட்டு வாழவேண்டும் என்பதற்காகத்தான் அவ்வாறு எழுதினேன்

      நீக்கு
  9. அனைத்து பதில்களிலும் உங்களுடைய தன்னடக்கம் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  10. .வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே!

    பதிலளிநீக்கு
  11. பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!

      நீக்கு