புதன், 15 ஆகஸ்ட், 2012

Boss கள் பலவிதம்! 40

வங்கிகளில் ஊழியர்களுக்கும் அலுவலர்களுக்கும் என்று தனித்தனி சங்கங்கள் உண்டு. அதிலும் ஒன்றுக்கு மேற்பட்ட சங்கங்களும் உண்டு. ஆனால் அவைகளில் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்கள் உள்ள அலுவலர்/ஊழியர் சங்கங்களே  வங்கிகளால் அங்கீகரிக்கப்படும். 
 
அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களுக்கு வங்கி தரும் சலுகைகள் இருந்த காரணத்தால், மற்ற சங்கங்களை சேர்ந்தவர்களிடம் அவர்கள் அங்கீகரிக்கப்படாத சங்கத்தின் உறுப்பினர்கள் என்பதற்காக நான் ஒருதலைப்பட்சமாக நடந்ததில்லை. 

எல்லோரும் வங்கி ஊழியர்கள் என்பதால் அனைவருக்கும் 
பொதுவாகவும் நடுநிலையாகவும்  நடந்துகொண்டேன். அதனாலேயே 
நான் மேலாளராகவும், முதன்மை மேலாளராகவும் பணியாற்றிய கிளைகளில் வங்கி-ஊழியர் உறவுகளில் (Industrial Relations) எந்த வித சிக்கலும் ஏற்படவில்லை. உறவு சுமுகமாகவே இருந்தது என்பதை மகிழ்ச்சியுடன் நினைவுகூர்கிறேன்.

என்னிடம் இன்னொரு பழக்கம் இருந்தது. என்னோடு
பணியாற்றுபவர்கள் எல்லோரிடமும் மரியாதையோடுதான்
பேசுவேன். யாரையும் ஒருமையில் அழைத்ததும் இல்லை
யாரிடமும் ஒருமையில் பேசியதும் இல்லை.

எனது வயதில் பாதி வயது உள்ள எனது கார் ஓட்டுனர்களைக் கூட, 
நீ, வா, போ என்று சொன்னதில்லை. அவர்களை மரியாதையோடுதான் விளிப்பேன்.

எனக்கு இந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழிகள் 
தெரியுமாதலால் அந்தந்த மொழியில் பேசும்போது அவர்களிடம்  மரியாதை தரும் சொற்களைத்தான் உபயோகப்படுத்துவேன்.
எல்லோரிடமும் சகஜமாக பழகியதன் அருமை சென்ற ஆண்டு (2011) சனவரியில் தலைமை அலுவலகம் சென்றபோது தெரிந்தது. 
கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலுக்கு போய்விட்டு திரும்பும்போது மணிப்பாலில் (தலைமை அலுவலகம் உள்ள இடம்) 
உள்ள பழைய நண்பர்களை பார்க்கச் சென்றேன்.

அலுவலகத்தின் நுழை வாயிலை அடைந்தபோது, அங்கிருந்த 
கார்களின் அருகே நின்றுகொண்டிருந்த ஓட்டுனர்கள் முக மலர்ச்சியுடன் அருகே வந்து கன்னடத்தில் சார்.வாங்க.வாங்க. நலமுடன் இருக்கிறீர்களா? எப்போது வந்தீர்கள்?’ என அன்புடன் விசாரித்தனர். இத்தனைக்கும் அவர்கள் எனக்குத் தரப்பட்டிருந்த வாகனங்கத்திற்கான  ஓட்டுனர்கள் அல்ல.அப்போது எனக்கு ஓட்டுனராக இருந்தவரும் வந்து அவர்களுடன் சேர்ந்துகொண்டார். 

நான் அவர்களுக்கு பதில் சொல்லிவிட்டு, ‘பரவாயில்லையே. 7 வருடங்கள் ஆனாலும் மறக்காமல் இருக்கிறேர்களே?’ என்றதும், 
அவர்கள் எல்லோரும் ஒருமித்த குரலில் ,’சார். எங்களை 
நன் முறையில் நடத்திய உங்களை எப்படி மறக்க முடியும்.?’ என்று பதிலளித்தபோது, எனக்கு கண்ணில் நீர் திரண்டது உண்மை.  

 ‘’We should not Demand Respect, but Command Respect.’’ என்று எனது நண்பர் ஒருவர் சொன்னது அப்போது நினைவுக்கு வந்தது.

நான் எவ்வாறு Boss ஆக பணியாற்றினேன் என்பதைப் பற்றி இன்னும் எழுதினால் பதிவு நீண்டுகொண்டே இருக்கும் என்பதால் இத்தோடு முடித்துக்கொள்ளலாம் என நினைக்கிறேன். இருந்தாலும் விட்டுப்போனவைகளில் சிலவற்றை நினைவோட்டம் தொடரில் 
நிச்சயம் எழுதுவேன்.

ஆனால் எனது அனுபவத்திலிருந்து ஒன்று மட்டும் சொல்லுவேன். மேலாளர்களுக்கு ஊழியர்கள்தான் இருப்பார்கள். ஆனால் தலைவர்களுக்கோ தொண்டர்கள் இருப்பார்கள்.  
(Mangers have subordinates but Leaders have followers) என்பது நூற்றுக்கு நூறு சரியே!

இறுதியாக முடிக்குமுன் Boss கள் பற்றிய நான் படித்த ஒரு 
அதிர்ச்சியான தகவலை உங்களிடம் பகிர்ந்துகொள்ளலாம் என எண்ணுகிறேன்.

‘’முன் மாதிரியாக இருக்கத் தகுந்தவர்கள் என அறியப்படுகின்ற வெற்றிகண்ட மனிதர்களே நிறுவனங்களில் உயர் பொறுப்பு வகிக்க தகுதியானவர்கள் என்று நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம்.

ஆனால் நிறுவனத்தின் சில தலைவர்கள் சாதாரண நபர்களை விட 
நான்கு மடங்கு மன நிலை திரிந்தவர் (Psychopath) அதாவது 
உள நோயாளியாக இருக்க வாய்ப்பு உண்டாம்!

நிறுவனங்களில் உயர் பொறுப்பில் இருக்கும் 25 பேரில் ஒருவர்  
மன நோய் உள்ளவராக நம்பப்படுகிறதாம். ஆனால் அவர்கள் அதை தங்களது சமூக அந்தஸ்தாலும், வசீகரத்தாலும், நிலமையை 
திறமையாகக் கையாளுதல்மூலமும், மறைத்துவிடுகிறார்களாம்.

நாம் நினைப்பதுபோல் அவர்கள் மன நிலை திரிந்தவர்கள் என்பது வெளியே தெரியாதாம். நமக்குத் தெரியாமலேயே நாம் பல வருடங்கள் அவர்களோடு பழகிக்கொண்டிருக்க வாய்ப்பு உண்டாம். 

உண்மையான சிக்கல் என்னவென்றால் நிறுவனத்தின் தலைவர்களிடம் நாம் என்ன எதிர்பார்க்கிறோமே,அதை அந்த மன நிலை திரிந்தவர்கள் சுபாவத்திலே வசீகரம் உடையவர்களாக இருப்பதால், தங்களிடம் அவைகள் இருப்பதுபோல் காட்டக்கூடிய திறமை வாய்ந்தவர்களாக இருப்பார்களாம்.’’

மேலே குறிப்பிட்டவை,  நியூயார்க்கை சேர்ந்த உளவியல் நிபுணர் (Psychologist) திரு பால் பாபியாக் (Paul Babiak) அவர்கள் தலைமையேற்று, கனடா நாட்டின் University of British Columbia வின் உலக பிரசித்தி பெற்ற உளப்பிணி (Psycopathy) நிபுணரான திரு பாப் ஹேர் (Bob Hare) அவர்களுடன் சேர்ந்து நடத்திய ஆய்வில் கண்டறிந்த ஆராய்வுகள் (Observation) ஆகும்.

அதிர்ச்சியான உண்மை என்னவென்றால், இந்த மாதிரி மனநிலை திரிந்தவர்கள்தான் நிறுவனங்களில் துணைதலைவர்களாகவும், 
(Vice Presidents) இயக்குனார்களாகவும், (Directors) தலைமை செயல் அலுவலர்களாகவும்,(Chief Executive Officers) இருக்கிறார்கள் என அந்த ஆய்வு கூறுகிறது. 
(நன்றி: The Hindu Business Line க்கு)

மேற்குறிப்பிட்ட ஆய்வுகள் அமெரிக்காவில் நடத்தப்பட்டாலும், இந்த ஆய்வின் முடிவுகள் நம் நாட்டுக்கும் பொருந்த வாய்ப்புண்டு என நினைக்கிறேன்.  எந்த புற்றில் எந்த பாம்பு இருக்கிறது என்று யாருக்குத்தெரியும்? எனவே நாம் தான் கவனமாக இருக்கவேண்டும்.

ஆடை வாய்ப்பதும், ஆம்படையான் வாய்ப்பதும் அதிர்ஷ்டக்காரிக்கு,
மனைவி வாய்ப்பதும், மக்கள் வாய்ப்பதும் மகராசனுக்கு என்று கிராமங்களில் சொல்வதுண்டு. இவைகளோடு Boss கள் வாய்ப்பதையும் சேர்த்துக் கொள்ளவேண்டும் போல!


அனைவருக்கும் எனது விடுதலை தின வாழ்த்துக்கள்!

29 கருத்துகள்:

  1. Valuable lessons for aspiring leaders/bosses. Should be considered as mini Bible for bosses as contents of your blog 38-40 eloquently elaborates the good qualities of a boss and how he/she as a boss should conduct himself/herself to earn the unalloyed adulation/respect from the subordinates.It is clear that as a leader you could win the respect/admiration of the subordinates by your impartial conduct characterized by flexibility and firmness.
    That you organized meetings on Saturdays for the good of the staff which benefited them in the long run is worthy of emulation. The way staff was made to read aloud circulars for the good of all ensured the participation of all who understood the efficacy of the method.
    That boss should be ever ready to support the staff and not pounce on them when mistakes are committed unintentionally is clear by the episode of the staff who cleared for payment of two instruments of similar amounts.
    One should be strict with recalcitrant subordinates is also brought out well in your blog . i am referring to the lady staff who was a late comer often and who was marked absent. The quote of Mahakavi Bharathiar in this regard was apt and humorous and exposes the tendencies of staff who have mastered the art of manufacturing excuses.
    The reference to bosses with psychopathic tendencies was informative.

    A boss should practice what he preaches . Well said.
    I wish to recall an episode of Mahatma in this regard. Once a mother took her child to the mahatma with a request that he advise the child to restrict the use of sugar. The child was very fond of sweets. The mahatma asked the lady to come again after a week or so. Puzzled the lady did as advised. Thereupon the Mahatma advised the child to consume less of sugar or to totally give up the habit.To the disciples who looked askance the Great Mahatma explained that he had to give up his desire for things sweet before venturing a child to do so and he needed this much time to give up the habit .
    IN SHORT VERY EDUCATIVE BLOG.

    vASUDEVAN

    பதிலளிநீக்கு
  2. 40 இடுகைகள்!மிகவும் சுவாரஸ்யமான அனுபவங்கள்.தொடரை நிறுத்தினாலும் அவ்வப்போது நினைவோட்டத்தில் தொடர்வதாகச் சொன்னது ஆறுதல்.உங்கள் அனுபவங் களிலிருந்து கற்றுக் கொள்ள ஏராளமான செய்திகள் உள்ளன.சிறப்பாக முடித்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  3. Nice Post i learned lot of things from u r Boss Kal Palvetham, iam reading from the fist part good and nice.

    Thanks

    பதிலளிநீக்கு
  4. நன்றாக முடித்துள்ளீர்கள் ஐயா... நன்றி...

    ஏன்...? என்னும் கேள்வி, முதலில் நம் மனதிலும், பிறகு வெளியிலும் தட்டிக் கேட்கும் மனப்பான்மை வளர, இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்... ஜெய் ஹிந்த் !!!

    பதிலளிநீக்கு
  5. வருகைக்கும் விரிவான கருத்துகளுக்கும் நன்றி திரு வாசு அவர்களே! நான் ஒன்றும் புதிதாக சொல்லிவிடவில்லை. எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்துகொண்டு இருக்கிறேன். அவ்வளவுதான்.

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! நிச்சயம் இங்கு எழுதாமல் விட்டதை பின்னர் எழுதுவேன்.

    பதிலளிநீக்கு
  7. வருகைக்கும் முதன்முதல் கருத்திடுவதற்கும் நன்றி திரு அருண் குமார் அவர்களே! தொடர்ந்து பதிவை படித்ததற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  8. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  9. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் பல நிறுவனங்களில் தலைவர்களாக இருக்கிறார்கள் என்ற தகவலைப் பார்த்தேன்.

    மனிதர்கள் அனைவருமே ஏதோ ஒரு வகையில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாகவே இருப்பார்கள். 15 அல்லது 20 சதம் வரை (சுமாராக) சமூகம் அவர்களை சாதாரணமானவர்களாகவே ஒப்புக்கொள்கிறது. அதற்கு மேல் மனநிலை பிறழ்ந்தவர்களைத்தான் "மென்டல்" என்று குறிப்பிட்டு வைத்தியத்திற்கு அனுப்புகிறது.

    மனநிலை பிறழ்ந்தவர் என்பது ஒரு relative term என்று நான் கருதுகிறேன்.

    பதிலளிநீக்கு
  10. பல பொஸ்களிற்கு இது உதவக் கூடும். அனுபவங்கள் எப்போதும் பாடங்கள் தானே. பாராட்டுகள் பதிவிற்கு.
    வேதா. இலங்காதிலகம்

    பதிலளிநீக்கு
  11. வருகைக்கு நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே! நீங்கள் சொல்வது சரியாகவேப் படுகிறது. கருத்துக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  12. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!

    பதிலளிநீக்கு
  13. மேலாளர்களுக்கு ஊழியர்கள்தான் இருப்பார்கள். ஆனால் தலைவர்களுக்கோ தொண்டர்கள் இருப்பார்கள். (Mangers have subordinates
    but Leaders have followers) என்பது நூற்றுக்கு நூறு சரியே!

    வசீகரமான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  14. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!

    பதிலளிநீக்கு
  15. வணக்கம்! உங்கள் பதிவுகளை தமிழ் மணத்தில் அங்கொன்றும், இங்கொன்றுமாக படித்து இருக்கிறேன். இப்போதுதான் நேற்றும், இன்றும் உங்கள் அனைத்து பதிவுகளையும் படித்தேன். நிறைய அனுபவங்கள், செய்திகள். ” Boss கள் பலவிதம் “ கட்டுரைகள் நான் இருந்த வங்கிப் பணி சார்ந்தவை (நான் உங்களைப் போல மேலாளர் இல்லை. Special Asst ஆக இருந்தவன்) என்பதால் எனக்கும் பழைய நினைவுகளை நினைவு படுத்திவிட்டன.

    // ‘என்ன காரணம் தினம் நேரம் கழித்தே வருக்கிறீகள்?’ எனக் கேட்டதற்கு ‘ நான் யார் என்று தெரிந்தும் என்னை கேட்கிறீர்களா?’ என்றார்.// (38)

    இந்த மாதிரி கேள்வியை வேறு யார் கேட்கப் போகிறார்கள்? எல்லா வங்கி ஊழியர்களும் அறிந்ததுதான்.


    // ஒவ்வொரு சனிக்கிழமையும் மதியம் 3 மணிக்கு சுற்றறிக்கை வாசித்தல் கூட்டம் (Circular Reading Meeting) என்ற திட்டத்தைக் கொண்டு வந்தேன் // (39)

    ஒரு நல்ல நடைமுறையை செயல்படுத்தி இருக்கீறீர்கள்.

    // அதிர்ச்சியான உண்மை என்னவென்றால், இந்த மாதிரி மனநிலை திரிந்தவர்கள்தான் நிறுவனங்களில் துணைதலைவர்களாகவும், (Vice Presidents) இயக்குனார்களாகவும், (Directors) தலைமை செயல் அலுவலர்களாகவும்,(Chief Executive Officers) இருக்கிறார்கள் என அந்த ஆய்வு கூறுகிறது. // (40)

    மேலிடத்தில் இருந்து வரும் சுற்றறிக்கைகள் சிலசமயம் சுற்றலாக இருக்கும். அதன் காரணம் இப்போதுதான் புரிகிறது.

    நன்றி!

    பதிலளிநீக்கு
  16. முதல் வருகைக்கு வணக்கம் திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!
    Boss கள் பலவிதம் என்ற தலைப்பில் நான் எழுதியிருந்த அனைத்து பதிவுகளையும் படித்து கருத்திட்டமைக்கு நன்றி! நீங்களும் வங்கியில் பணி புரிந்திருப்பதால் எனது நிலைமையை சரியாகவே புரிந்துகொண்டிருக்கிறீர்கள். பதிவைத் தொடர்வதற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  17. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திருமதி கீதா லட்சுமி அவர்களே!

    பதிலளிநீக்கு
  18. தங்களது இந்த blog ஐ இன்று தான் கண்டு பிடித்தேன். முதல் பக்கத்தில் இருந்த பதிவை படித்து விட்டு- ஒரு சில பழைய பதிவுகளையும் படித்துப் பார்க்கலாம் என தேடிப்பார்த்துக் கொண்டிருந்தேன். தங்களது blog ஐ விவரிக்கச் சொன்னால்- "well-organised" என்ற வார்த்தை மனதில்தோன்றுகிறது.
    இதுவரை நீங்கள் எழுதியிருக்கும் series களில்- ஒவ்வொன்றிலும் sample ஆக ஒரு பதிவை படித்துப் பார்த்தேன். அருமை. Our generation should strive to gain from the experiences of your generation. இதற்க்கு வசதியாக தங்களது அனுபவங்களை மிக அழகாகவும், எளிமையாகவும் பதிவிட்டிருக்கிறீர்கள்! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி திருமதி மாதங்கி அவர்களே! எனது பழைய பதிவுகளையும் படித்து இரசித்தமைக்கு நன்றி! தங்களது மனந்திறந்த பாராட்டுக்கும் நன்றி!

      நீக்கு
  19. எந்தப் பதவியில் நாம் இருந்தாலும், நம் பதவி காலத்தில், ஒருவருக்கொருவர் மரியாதையுடனும், மனிதாபிமானத்துடனும் நடந்துகொள்வதே மிகவும் நல்லது. அதுதான் நம் பணி ஓய்வுக்குப் பின்னும் நம்மை பிறரிடம் நன்றியுடன் நல்லவராக அடையாளம் காட்டிடும்.

    நானும் தங்களைப்போலவே என்னிடம் ப்யூன் வேலை பார்த்தவர்கள், என்னிடம் உதவியாளராக இருந்தவர்கள், கடைசி சில ஆண்டுகள் எனக்கு ஜீப் ஓட்டியவர்கள், எனக்குப் பாதுகாவலுக்காக என்னுடன் வந்துள்ள STATE GOVT. ARMED POLICE GUARDS, அவ்வளவு ஏன் .... என் அலுவலகத் தரைப்பகுதிகளை தினமும் காலையில் சுத்தம் செய்யவரும் ஸ்வீப்பர்கள் முதற்கொண்டு அனைவரையும், வயதில் சிறியவராகவே இருப்பினும் நீ .... போ.... வா என்றெல்லாம் சொல்லாமல், மிகவும் மரியாதை கொடுத்தே பேசி வந்தவன் மட்டுமே.

    >>>>>

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! ‘மரியாதை கொடுத்தல் மரியாதை தானே வரும்’ என்பது அனுபவபூர்வமான சொல்லாடல்.

      நீக்கு
  20. சுமார் 15000 தொழிலாளிகளுக்கு மேல் வேலை பார்த்து வந்த மிகப்பெரிய தொழிற்சாலையில், பணப்பட்டுவாடாக்கள் செய்யும் இடத்தில் நான் ஓர் முக்கியமான பொறுப்பு அதிகாரியாக இருந்ததால், அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு என்னை நன்கு தெரியும்.

    என்னை அணுகிடும் எல்லோருக்கும் நான் என்னால் முடிந்த எவ்வளவோ உதவிகள் செய்துள்ளேன்.

    ஒரு சில சூழ்நிலைகளால், ஆபீஸ் நேரம் முடிந்து, தாமதமாக வந்து அவசரப் பயணத்திற்காக, அவசரத் தேவைகளுக்காக (TRAVELLING ALLOWANCE ON MEDICAL GROUNDS, MEDICAL ADVANCE etc., etc.,) பணம் கேட்டவர்களுக்கும், என்னால் முடிந்தவரை மறுக்காமல் மனிதாபிமானத்துடன் உதவிகள் செய்துள்ளேன்.

    சம்பள நாட்களில் எங்கள் மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ள ஊழியர்கள் பலருக்கும், அங்குள்ள நர்ஸ்கள் மூலம் அவர்களின் பெயர், ஊழியர் எண், அவர்கள் வேலை பார்க்கும் துறை + வேலை பார்க்கும் பகுதி, ஹாஸ்பிடல் வார்டு பெயர் + பெட் நம்பர் ஆகியவைகளை நான் சேகரித்துக்கொண்டு, ஜீப்பில் ஏறி அங்கேயே சென்று, அவர்களின் சம்பளத்தைப் பட்டுவாடா செய்து, அங்குள்ள ஸ்டாப் நர்ஸ் களிடம் சாட்சிக்கையெழுத்தும் வாங்கிக்கொண்டு வருவதும் உண்டு.

    அப்போதெல்லாம், இப்போதுபோல பேங்க் வழியாகத் தான் சம்பளம் வாங்க வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லை. ரொக்கமாக எங்கள் அலுவலகம் மூலம் சம்பளம் பெற்றுக்கொண்டிருந்தவர்கள் மிக மிக அதிகம். அதையே செண்டிமெண்ட் ஆக பலரும் விரும்பி நினைத்து மகிழ்ந்த காலம் அது.

    சுமார் 50 VOLUNTEERS மூலம், சம்பள தினத்தன்று அவரவர்கள் பணிபுரியும் இடத்திற்கே சென்று, PAY PACKETS மூலம் பட்டுவாடா செய்வது எங்கள் வழக்கம்.

    மாதத்தில் 2-3 நாட்கள் மாப்பிளை அழைப்பு, கல்யாணம், கட்டிசாதக்கூடை போல ஒரே அமர்க்களமாக இருக்கும்.

    >>>>>

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! பணியின் போது தாங்கள் ஆற்றிய சேவை பற்றி அறியும்போது எனக்கு ‘காலத்தினால் செய்த நன்றி சிறிது எனினும்
      ஞாலத்தின் மாணப் பெரிது’ என்ற வள்ளுவரின் குறள் நினைவுக்கு வருகிறது

      நீக்கு
  21. அன்று எங்கள் தொழிற்சாலையின் வெவ்வேறு பகுதிகளில், வெவ்வேறு பதவிகளில், பணியாற்றிய 15000 பேர்களில் சுமார் 10000 பேர்களுக்கு என்னையும், என்னுடைய நல்ல குணங்களையும், அர்ப்பணிப்புடன் கூடிய சேவைகளையும் நன்கு தெரியும்.

    எனக்கு அவர்களில் சுமார் 500 பேர்களின் பெயர்கள் மட்டுமே இன்றைக்கும் நன்கு நினைவில் உள்ளது.

    பணி ஓய்வுக்குப்பின்னும், இப்போது, அவ்வப்போது நான் என் மனைவியுடன், BHEL மருத்துவ மனைக்கு சிகிச்சைபெறச் செல்லும் போது, பழைய ஊழியர்கள் பலரையும் நான் அங்கு சந்திக்க நேர்வது உண்டு. அவர்களில் சிலரை எனக்குத் தெரியாமல் இருப்பினும், அவர்களை நான் சுத்தமாக மறந்துபோய் இருப்பினும், அவர்களாகவே என் அருகில் வந்து வணக்கம் கூறி, தன்னைப் பற்றி அறிமுகம் செய்துகொண்டு, நான் என்றைக்கோ அவர்களுக்குச் செய்துள்ள ஏதோவொரு TIMELY HELP பற்றியும் ஞாபகமாகச் சொல்லி, என்னை என் மனைவியின் முன்னிலையில் பாராட்டி மகிழ்வதுண்டு.

    நாம் நம் பணிக்காலத்தில் ஈவு இரக்கம் இன்றி, கடுமையாக நடந்து கொண்டிருப்போமேயானால், இன்று நம்மை இதுபோல பிற பொது இடங்களில் சந்திக்கும் அவர்கள் (நம்மால் அன்று ஏதேனும் ஒரு முறையில் பாதிக்கப்பட்டு, மனக்காயம் அடைந்த அவர்கள்) ‘இவன் இன்னும் சாகவில்லையா’ என மட்டுமே மனதுக்குள் நினைக்கக்கூடும்.

    >>>>>

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! Garbage in, Garbage out என்று கணினித் துறையில் சொல்வார்கள். அதுபோல் நாம் என்ன செய்கிறோமோ அதுதான் நமக்கு திரும்பி வரும். நீங்கள் நல்லது செய்ததால் தான் உங்களைப் பார்த்து தங்களோடு பணியாற்றியவர்கள் நலம் விசாரிக்கிறார்கள் என அறிந்து மிக்க மகிழ்ச்சி. .

      நீக்கு
  22. தங்களின் இந்தத் தொடரை மிக அழகாகவும், விரிவாகவும் அதே சமயம் ரத்ன சுருக்கமாகவும், சுவையாகவும் எழுதி நிறைவு செய்துள்ளீர்கள்.

    முழுவதும் படித்து மகிழ்ந்தேன். மனம் நிறைந்த பாராட்டுகள் + நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    -oOo-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், தொடரை முழுதும் படித்து கருத்திட்டமைக்கும், வாழ்த்தியமைக்கும், பாராட்டியதற்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!

      நீக்கு