ஞாயிறு, 1 பிப்ரவரி, 2009

நினைவோட்டம் 1

ஜூலை 31,2004 என்னால் மறக்க இயலாத நாள்!

ஏனெனில் அன்றுதான் எனது பணி மூப்பு அடைந்து ஒய்வு பெறும் நாள்.
35 ஆண்டுகள் பணி செய்த வங்கியிலிருந்து விடை பெறும் நாள். அனேகமாக எல்லோருக்கும் மகிழ்ச்சி தராத நாளாக இருக்கும் என்பார்கள்.

ஆனால்என்னைப்பொறுத்தவரையில் அந்த நாளை நான் மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்திருந்தேன். ஏனெனில் எட்டு ஆண்டு காலம் குடும்பத்தை சென்னையில் விட்டுவிட்டு ஊர் ஊராக பணி நிமித்தம் சுற்றியதால் எப்போது வீடு திரும்புவோம் என காத்திருந்த காலம் அது.

தலைமை அலுவலகம் சென்று அனைவரிடமும் விடை பெறும்போது துக்கம் தொண்டையை அடைத்ததென்னவோ உண்மை. ஆனாலும் பணி மூப்பு என்பது அனைவருக்கும் வரும் என்று தெரிந்திருக்கும்போது அதைப்பற்றி கவலைப்படுவது சரியல்ல என்பது எனது எண்ணமாக இருந்ததால் அந்த நாளை நான் வழக்கமான நாள் போலவே எடுத்துக்கொண்டேன்.

ஒய்வு பெரும் நாள் வருமுன்பே எனது உடைமைகளை சென்னைக்கு அனுப்பிவிட்டதால் ஒரே பெட்டியுடன் (38 ஆண்டுகளுக்கு முன் வேலைக்கு சேரும்போது சென்றதுபோல்) மறுநாள் சென்னை திரும்பினேன்.

என்னை சந்தித்த நண்பர்கள் என்னை எனது அனுபவங்களை ஏன் புத்தகமாக எழுதக்கூடாது எனக்கேட்டபோது நான் எழுதினால் யார் வெளியிடுவார்கள் என எண்ணி அந்த கருத்தை செயலாக்க விரும்பவில்லை. பின்பு வீட்டில் கணினி வாங்கி இணையத்தொடர்பு பெற்றதும் வலைப்பதிவுகளை படிக்கத்தொடங்கியதும் நாமும் வலைப்பதிவில் எழுதலாமே என நினைத்தபோது எப்படி தொடங்குவது எனத்தெரியாததால் எனது நண்பர் ஒருவரிடம் உதவி செய்யுமாறு கேட்டேன். அவரும் உதவுவதாக கூறினாலும் அவரது பணி சுமைக்காரணமாக அவரால் உதவ முடியவில்லை.

தற்செயலாக தமிழ் மணத்தில் நண்பர் திரு மஸ்தூக்கா அவர்களின் 'சொந்தமாக வலைப்பதிவு தொடங்குவது எப்படி' என்ற எளிய எல்லோருக்கும் புரியும்படி எழுதப்பட்ட தொடர் கட்டுரையைப்படித்தவுடன் நானும் வலைப்பதிவை தொடங்கிவிட்டேன்.

இந்த தொடரில் எனது பள்ளிப்பருவம் முதல் பணி மூப்பு வரை நான் அனுபவித்த வேதனைகள், சந்தித்த சோதனைகள் மற்றும் சாதித்த சாதனைகளை எழுத இருக்கிறேன்.

சிலருக்கு இது சுயபுராணம் போல் தோன்றினால் என்னை மன்னிக்க. இடையிடையே எனக்குப்பிடித்த கவிதைகள் மற்றும் செய்திகளை வேறு தலைப்பில் வெளியிட இருக்கிறேன்.

நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி

2 கருத்துகள்:

  1. வணக்கம்.

    இன்னும் இருபது வருடங்கள் இருக்கின்றன என் பணிநிறைவிற்கு.

    எப்படிக் கழிக்ககப் போகிறோம் என்ற அச்சம் இப்போதே இருக்கிறது.

    விரைவில் விருப்ப ஓய்வு கூட கொடுக்கலாம்.

    தேர்ந்த எழுத்தில் வெளியிடப்படும் சுயபுராணங்கள் எப்போதும் ரசனைக்குகந்தவை.

    தொடர்கிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே! பணியில் இருங்கள் அப்போதுதான் புதுப்புது அனுபவங்கள் கிட்டும். அதை பின்னர் மற்றோரிடமும் பகிர்ந்துகொள்ளலாம். எனது பதிவுகளை ஆரம்பத்திலிருந்து படித்து கருத்து இடுவதற்கு நன்றி!

      நீக்கு