செவ்வாய், 10 ஜூலை, 2012

Boss கள் பலவிதம்! 29


என் இடத்திற்கு வந்த மேலாளர் எல்லோர் முன்னிலையிலும்  
அலுவலக நேரத்தில் என்ன படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்? 
ஆனந்த விகடனா அல்லது குமுதமா?’ என்று வேகமாக கேட்டார்.

நான் உடனே எழுந்து நின்று, ‘இல்லை சார்.Technical Journal 
படித்துக்கொண்டு இருக்கிறேன்.என்றேன்.

அலுவலக நேரத்தில் புத்தகம் படிக்கக்கூடாது எனத் தெரியுமல்லவா?’ 
என அவர் கேட்டவுடன்,நான் அழுத்தம் திருத்தமாக சார். நான் கதைப்புத்தகம் படிக்கவில்லை. தலைமை அலுவலகம் என்னைப்
போன்ற களப் பணியாளர்கள் புதிய தொழில் நுட்பத்தை அறிந்து கொள்ளவேண்டுமென்று இது போன்ற ஆய்விதழ்களுக்கு அவர்களே 
சந்தா கட்டியிருக்கிறார்கள்.

தலைமை அலுவலக சுற்றறிக்கையே இந்த ஆய்விதழ்களை நாங்கள் நன்றாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றுதான் கூறுகிறது.
மேலும் எந்த விவசாய வாடிக்கையாளரும் என் முன் இல்லாததால் இதைப் படித்து குறிப்பு எடுத்துக்கொண்டு இருக்கிறேன்.என்றேன்.

இந்த உடனடி பதிலை நான் எல்லோர் முன்பும் தைரியமாக 
சொல்வேன் அவர் எதிர்பார்க்கவில்லை.தனது கோபத்தை 
அப்போதைக்கு அடக்கிக்கொண்டு உடனே எனக்கு நீங்கள் 
இப்போது என்ன செய்துகொண்டு இருந்தீர்கள் என்பதை எழுத்து 
மூலம் கொடுங்கள். தலைமை அலுவலகத்திற்கு அதை நான்   
அனுப்பப் போகிறேன்.என்று சொல்லிவிட்டு அவரது அறைக்கு சென்றுவிட்டார்.

நானும் சரிஎன சொல்லிவிட்டு ஒரு தாளில் மேலாளருக்கு 
கடிதம்போல் எழுதினேன். அதில் அவர் என்னிடம் நான் என்ன 
செய்து கொண்டு இருக்கிறேன் என்று கேட்ட தேதியில், தலைமை அலுவலக வேளாண் நிதித் துறையால் சந்தா கட்டப்பட்டு எனக்கு 
வந்த ‘The Madras Agricultural Journal’ ல் வெளியாகி இருந்த புது இரக 
மல்லிகை சாகுபடி பற்றி படித்துக்கொண்டு இருந்ததாக எழுதிவிட்டு
இதை நீங்கள் கேட்டதால் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன் என முடித்தேன்.

மறக்காமல் கடிதத் தலைப்பில்.பார்வை(Reference) என எழுதி அதில் தலைமை அலுவகத்தின் சுற்றறிக்கை எண்ணைக் குறிப்பிட்டு 
இருந்தேன்.

பிறகு அவரது அறைக்கு சென்று அந்த கடிதத்தைக் கொடுத்துவிட்டு 
என் இருப்பிடத்துக்கு வந்தேன்.நான் வந்த பிறகு அவர் அதைப் படித்துவிட்டு தலைமை அலுவலக சுற்றறிக்கைகளை எடுத்து புரட்டிக்கொண்டு இருப்பதைப் பார்த்தேன்.

இந்த இடத்தில் நான் ஒன்றை சொல்லியாக வேண்டும்.அப்போது 
எங்கள் வங்கியில் சுற்றறிக்கை அனுப்பும்போது, ஒவ்வொரு 
துறைக்கும் என ஒரு வண்ணம் ஒதுக்கி அந்த வண்ணம் உள்ள 
பட்டை (Band) தலைப்பில் வருமாறு  சுற்றைக்கையை அச்சடித்து அனுப்புவார்கள். 

உதாரணத்திற்கு ஊழியர் துறை சார்ந்த சுற்றறிக்கைகள் நீல வண்ணத்திலும் வேளாண் நிதித்துறை சுற்றறிக்கைகள் பச்சை வண்ணத்திலும் இருக்கும். எல்லோரும் எல்லா சுற்றறிக்கைகளையும் படிக்கவேண்டும் என எண்ணி அவைகள் வெளியிடப் பட்டாலும் எல்லோரும் தவறாமல் படிப்பது நீல வண்ண பட்டை கொண்ட 
ஊழியர் துறை சார்ந்த சுற்றறிக்கைகள் தான் என வேடிக்கையாக 
நாங்கள் சொல்வதுண்டு. மற்றபடி அவரவர்கள் தங்கள் துறை சார்ந்த அறிக்கைகளை படிப்பதுண்டு.மேலாளர்கள் பணிச் சுமை காரணமாக எல்லாவற்றையும் படிக்க மாட்டார்கள்.

எனவே எங்கள் துறை அனுப்பிய அந்த ஆய்விதழ்கள் பற்றிய சுற்றறிக்கையை மேலாளர் படித்திருக்க வாய்ப்பு இல்லை.எனது 
கடிதத்தில் நான் கொடுத்திருந்த சுற்றறிக்கை எண் சரிதானா என்றும் 
அந்த சுற்றறிக்கை என்ன சொல்கிறது என்பதையும் அவர் பார்த்துக்கொண்டு இருந்தார் போலும்.

அதற்குப் பிறகு அவர் என்னை உள்ளே கூப்பிடவில்லை. மாலையில் 
நான் கொடுத்த கடிதத்தை தலைமை அலுவகத்திற்கு அனுப்பாமல்,  
அதில் File என எழுதி கையொப்பமிட்டு, அதை கிளையில் உள்ள 
கோப்பில் வைக்கும்படி  ஊழியரிடம் கொடுத்துவிட்டார். எனக்குத் 
தெரியும் அவர் அதை தலைமை அலுவலகத்திற்கு அனுப்ப 
மாட்டாரென்று!

வழக்கம்போல் எனது அறைக்கு, வங்கிப்பணி முடிந்ததும் வந்து 
என்னோடு பேசிக்கொண்டு இருந்துவிட்டு செல்லும் சக ஊழியர்கள் சபாபதி. நீங்கள் ஒருவர்தான் தைரியமாக இவரிடம் பேசியிருக்கிறீர்கள்.என பாராட்டினார்கள்.அதற்கு நான், ‘நம் மீது குற்றம் இல்லாதவரை 
நாம் ஏன் பயப்படவேண்டும்? நான் செய்தது சரி என்பதால்தான் 
அவரிடம் அவ்வாறு சொன்னேன்.என்றேன்.
  
மறுநாள் என்னை மேலாளர்  கூப்பிட்டு, ‘நீங்கள் நான் சொல்லும் 
வரை வெளியே ஆய்வுக்கு செல்லவேண்டாம்.என சொல்லிவிட்டார்.
அதை நான் எதிர்பார்த்ததால் நானும் சரிஎன சொல்லிவிட்டேன். 

இது நடந்து இரண்டு நாட்களில் மேலாளர் தலைமை அலுவகத்திற்கு 
ஒரு பணி நிமித்தம் சென்றார். நான் பணி செய்த கிளை இருந்த 
ஊருக்கு அருகில் இருந்த ஒரு பெரிய ஊருக்கு சென்றுதான் தலைமை அலுவலகம் இருந்த மணிப்பால் செல்ல இரயில் ஏற வேண்டும் 
இரயில் பயணம் ஓர் இரவுதான் என்பதால் முதல் நாள் இரவு கிளம்பி போய்விட்டு மறுநாள் பணியை முடித்துவிட்டு  அன்று இரவே 
அங்கிருந்து கிளம்பி காலையில் வந்து விடலாம்.

தலைமை அலுவலகம் சென்று மேலாளர் திரும்பி வரும் நாள் 
காலை 9 மணிக்கு, நான் தங்கியிருந்த விடுதியிலிருந்து வங்கிக்கு 
செல்ல கிளம்பியபோது, அஞ்சல் ஊழியர் ஒருவர் எனக்கு ஒரு 
அஞ்சல் வந்திருப்பதாக கூறி ஒரு அஞ்சல் அட்டையைக் கொடுத்தார்.

எனக்கு யார் அதுவும் விடுதி முகவரிக்கு. அஞ்சல் அட்டையில் எழுதியிருக்கிறார்கள் என நினைத்து, அதை வாங்கி அதில் 
எழுதியிருந்ததை  படித்தவுடன் என்ன செய்வதேன்றே 
ஒரு நிமிடம் புரியவில்லை.

தொடரும்

20 கருத்துகள்:

  1. தன் பக்கம் நியாயம் இல்லாததால் அந்த அதிகாரியால் எதுவும் செய்ய இயலவில்லை என்பது வெள்ளிடை மலை. அந்தக் கடிதம் என்ன சொல்லியதென்று அறியும் ஆவலைத் தூண்டிவிட்டு தொடரும் போட்டு விட்டீர்களே... தொடரும் வரை காத்திருக்கிறேன். (வேறு வழி?)

    பதிலளிநீக்கு
  2. உங்கள் துணிச்சல் பாராட்டுக்குரியது அனைவரும் தெரிந்த கொள்ளவேண்டியதும் கூட நம் மீது தவறில்லை எனும் போது அதிகாரி எனும் சொல்லுக்கு மட்டும் நாம் ஏன் பயப்பட வேண்டும். அது என்ன செய்தி என அறியும் ஆவலில் இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. நம் மீது குற்றம் இல்லாதவரை
    நாம் ஏன் பயப்படவேண்டும்? சரிதான் ஐயா..அதுவே நமக்கு சில சமயங்களில் இன்னும் பிரச்சனையைத் தந்துவிடுகிறது என்கிறபோது,யோசிக்க வேண்டியுள்ளது..
    அந்த கடித செய்தியை அறிந்து கொள்ள ஆர்வம்..

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கு நன்றி திரு பால கணேஷ் அவர்களே! ஆவலோடு காத்திருப்பதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திருமதி சசிகலா அவர்களே! அந்தக் கடித செய்தி விவரம் அடுத்த பதிவில்.

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கவிஞர் மதுமதி அவர்களே! நீங்கள் சொல்வது சரிதான். செய்தியை அறிய பொறுத்திருங்கள்.

    பதிலளிநீக்கு
  7. என்ன சார்.ஒரு பயங்கர சஸ்பென்ஸ்ல விட்டு விட்டீர்கள்.....சீக்கிரம்...!

    பதிலளிநீக்கு
  8. உண்மை நிகழ்ச்சிகள் கற்பனையைவிட சுவாரசியமாக இருக்கும் என்பதை மெய்ப்பிக்கிறது தங்கள் பதிவு.

    பதிலளிநீக்கு
  9. வருகைக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!. பொறுத்திருங்கள் அடுத்த பதிவு வரை.

    பதிலளிநீக்கு
  10. வருகைக்கு நன்றி திரு T.N.முரளிதரன் அவர்களே! நீங்கள் சொல்வது சரிதான். உண்மைதான். சிலசமயம் உண்மைகள்,கற்பனையைவிட சுவாரஸ்யமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  11. Swami Vivekananda said “Give me 100 youths, I will change the world.” Some time when I think about my past, I wonder “did I do that?” . When we were young, we seldom utilise our potential. I am happy to see that you have tried your best.

    பதிலளிநீக்கு
  12. வருகைக்கும், சுவாமி விவேகானந்தா அவர்களின் கருத்தை எடுத்துக் காட்டியமைக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! பாராட்டுக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  13. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! தொடர்வதற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  14. நிச்சயமாக அது பதவி உயர்வு அல்லது மாற்றல் உத்தரவு. எதுவாக இருக்கும்? மிக மிக ஆவல். நானும் இப்படித்தான் சரியான பாதையில் போவேன் நீதி, நேர்மை நியாயம் தான். அப்போது யாருக்கும் பயப்படாமல் என் கருத்தைக் கூறுவேன். நல்வாழ்த்து. ஐயா.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  15. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்கா திலகம் அவர்களே! அஞ்சல் அட்டையில் செய்தி என்பதால் நான் பணி புரிந்த வங்கியிலிருந்து அது வரவில்லை என்பது புரியும்.எனவே நீங்கள் நினைத்தது நடக்க வாய்ப்பு இல்லை.பொறுத்திருங்கள் உண்மை தெரியும்.

    பதிலளிநீக்கு
  16. Interesting episodes ; exemplary courage displayed ; Whistle blower in the making !

    vasudevan

    பதிலளிநீக்கு
  17. வருகைக்கும்,கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு வாசு அவர்களே!

    பதிலளிநீக்கு
  18. //மறுநாள் என்னை மேலாளர் கூப்பிட்டு, ‘நீங்கள் நான் சொல்லும்
    வரை வெளியே ஆய்வுக்கு செல்லவேண்டாம்’ எனச் சொல்லிவிட்டார். அதை நான் எதிர்பார்த்ததால் நானும் ‘சரி’ என சொல்லிவிட்டேன்.//

    ஆஹா, இதன் பின்னணியில் ஏதோ நிகழ்ந்துள்ளது என நினைக்கிறேன்.

    //‘நம் மீது குற்றம் இல்லாதவரை நாம் ஏன் பயப்படவேண்டும்? நான் செய்தது சரி என்பதால்தான் அவரிடம் அவ்வாறு சொன்னேன்.’//

    இதுபோன்ற துணிச்சல் ஏனோ எல்லோருக்கும் வருவது இல்லை. உங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! எனது அஞ்சல் மூலம் நான் அந்த மேலாலாரின் கோபத்திற்கு ஆளானேன் என்பதை தவிர வேறொன்றும் எனக்கு ஆகிவிடவில்லை.

      நீக்கு