செவ்வாய், 24 ஜூலை, 2012

Boss கள் பலவிதம்! 34


தலைமை அலுவலகத்தில் எனது துறையான வேளாண் நிதித் 
துறைக்கு சென்று எனது பணியேற்பு அறிக்கை (Joining Report) யை 
எழுதிக் கொண்டு போய் துறைத் தலைவரிடம் கொடுத்தேன்.

அதை வாங்கிக்கொண்டு, ‘,வந்துவிட்டீர்களா?’ என்று கேட்டாரே 
தவிர,நான் எழுதிய கடிதம் பற்றி எதுவும் கேட்கவில்லை.அவர்
கேட்கமாட்டாரென தெரியும் ஆதலால், நானாக  எதுவும் 
சொல்லவில்லை. ஆனால் அவர் எதுவும் கேட்கவில்லையே 
என்ற வருத்தம் மனதில் இருந்தது உண்மை.

தலைமை அலுவலகத்தில். கிளைகள் அனுப்பும் கடன் 
விண்ணப்பங்களும் அவர்களது பரிந்துரைகளும் எவ்வாறு பரிசீலித்து அலுவலக குறிப்புகள் (Office Notes) எழுதப்படுகின்ற என்றும் அவைகள்  எவ்வாறு கடன் அனுமதி தரும் அலுவலர் (Loan Sanctioning Authority) பார்வைக்கு வைத்து அனுமதிகள் பெறப்படுகின்ற என்பதையும் 
கற்றுக் கொள்ளவேண்டும் என்பதற்காக, எங்கள் வங்கியில் புதிதாய்
சேரும் கள அலுவலர்களை சில மாதங்கள் ஒரு மூத்த அலுவலரின் 
கீழ் பயிற்சி பெற அனுமதிப்பார்கள்.

அந்த பயிற்சி பெற என்னை, தமிழக கிளைகளிலிருந்து வரும் 
கடன் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் திரு சுந்தர் ஷெட்டி என்ற 
ஒரு அலுவலரின் கீழ் பணி செய்ய துறைத்தலைவர் பணித்தார். 
அவரின் கீழ் அந்த பயிற்சியை எடுத்துக்கொண்டு இருக்கும்போது தற்செயலாக, நான் பணி புரிந்த மாவட்டத்திற்கான கோப்பில், துறைத்தலைவருக்கு நான் பம்ப் செட் கடன்கள் பற்றி எழுதியிருந்த கடிதம் ‘File' என்ற குறிப்போடு வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தேன்.

முன்பே இதைப்பற்றி அறிந்திருந்ததால் இதைப்பற்றி பேசவேண்டாம்.
வந்த வேலையை பார்ப்போம் என்று எண்ணி எனக்கு கொடுக்கப்பட்ட தலைமை அலுவலக வேலையைக் கற்றுக்கொண்டேன். 
(இது பற்றி பின் விவரமாக எழுதுவேன்.)

மூன்று மாதங்கள் கழிந்ததும், நான் நன்றாக பயிற்சி பெற்றுவிட்டேன்
என துறைத்தலைவருக்கு மனநிறைவு ஏற்பட்டதும்,என்னை வங்கிக்
கிளையில் தனியாக வேளாண்மைக் கடன்களை பார்த்துக்கொள்ள அனுமதிக்கலாம் என ஊழியர் துறைக்கு பரிந்துரைத்தார்.

அவரது பரிந்துரையின் படி ஒரு நாள் என்னை சென்னை அருகே 
இருந்த திருவள்ளூர் கிளைக்கு மாற்றி ஆணை வந்தது.

மாற்றல் வந்த அந்த வாரம் சனிக்கிழமை அன்றே தலைமை அலுவலகத்திலிருந்து  விடுவிக்கப்பட்டேன். அங்கிருந்து 
மகிழ்ச்சியோடு கிளம்பி  திருவள்ளூர் சென்று பெட்டி படுக்கைகளை அய்யப்பா லாட்ஜ்’ என்ற ஒரு விடுதியில் வைத்துவிட்டு, அங்குள்ள கிளைக்கு சென்றேன்.

பணியேற்பு இடைக்காலத்தில் (Joining Time) ஊருக்கு சென்று வருவதைப்
பற்றி அந்த கிளை மேலாளரிடம் சொல்லி வரலாமே என்று கிளைக்கு சென்றேன். அவர்  அப்போது அங்கு இல்லாததால் உதவி மேலாளரிடம் சொல்லிவிட்டு சென்னை வந்து எனது ஊரான தெற்கு வடக்குப்
புத்தூருக்கு சென்றேன்.

ஊரை அடைந்த மறுநாளுக்கும் மறுநாள்  தலைமை
லுவலகத்திலிருந்து ஒரு விரைவுத் தந்தி எனது பெயருக்கு வந்தது. எங்கள் ஊரில்  தந்தி அலுவலகம் இல்லாததால் அது அருகில் இருந்த விருத்தாசலத்துக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து  மெதுவாக சாதாரண அஞ்சலாக எனக்கு வந்தது.

என்ன இப்போது தானே தலைமை அலுவலகத்திலிருந்து வந்தோம்.
அதற்குள் தந்தி அனுப்பவேண்டிய அவசியமென்ன என யோசித்து பிரித்தபோது, அதில் எனது முந்தைய திருவள்ளூருக்கான மாற்றல்
உத்திரவு இரத்து செய்யப்படுவதாகவும், நான் திரும்பவும் எந்த ஊரில்
பயிற்சி பெற்றேனோ அங்கே சென்று உடனே பணியில் சேரவேண்டும்
எனக் குறிப்பிட்டு இருந்தது.

திரும்பவும் அந்த மேலாளரிடம் சென்று வேலை பார்க்கவேண்டுமா?'
என தயக்கம் இருந்தாலும், அது தலைமை அலுவலக ஆணை என்பதால் உடனே கிளம்பிவிட்டேன்.

எனது உடைகள் எல்லாம் திருவள்ளூரில் அந்த விடுதியில் இருக்க,.
கையில் இருந்த மாற்று உடையோடு, கஷ்டப்பட்டு பேருந்து பிடித்து
அந்த ஊருக்கு செல்லும்போது இரவு ஆகிவிட்டது.

மறு நாள் காலை கிளைக்கு சென்றபோது எனக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது.

தொடரும்

16 கருத்துகள்:

  1. மறுபடியும் அந்த மேலாளரிடம் மாட்டிக் கொண்டீர்களா... இல்லையா....?

    நீங்கள் தான் அடுத்த மேலாளாரா என்று அறிய ஆவல்...

    என் தளத்தில் : மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ?

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கு நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! நீங்கள் நினைத்ததுபோல் நடக்கவில்லை. ஏனெனில் சேர்ந்து ஒரு வருடத்திற்குள் யாரையும் பெரிய கிளையின் மேலாளராக ஆக்கமாட்டார்கள்.என்ன ஆயிற்று என்பதை அறிய தயை செய்து பொறுத்திருக்கவும்.

    பதிலளிநீக்கு
  3. மீண்டும் அதே கிளையிலா?ஏன் அப்படிச் செய்தார்கள்?ஒரு திரில்லர் போலத் திருப்பங்கள்!தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! மறுபடியும் ஏன் அந்த கிளைக்கு மாற்றினார்கள் என்பதுதான் சுவாரஸ்யமானது. அதுபற்றி அடுத்த பதிவில்!

    பதிலளிநீக்கு
  5. சென்னைக்கு அருகில் திருவள்ளூருக்கு வந்து விட்டீர்கள் என்பது மகிழ்வான விஷயம் என்று நினைத்தேன். உடனே மீண்டும் அதே கிளைக்கு வரச் சொல்லி உத்தரவிட்ட அந்த சுவாரஸ்யமான காரணம் யாதாயிருக்கும என்பதை யோசித்தவாறே... மீ வெயிட்டிங்!

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு பால கணேஷ் அவர்களே!

    பதிலளிநீக்கு
  7. சுவாரஸ்யம் கூடுது.. அடுத்த பாகத்திற்கு வைய்ட்டிங்

    பதிலளிநீக்கு
  8. வருகைக்கும், காத்திருப்பதற்கும் நன்றி வரலாற்று சுவடுகள் நண்பரே!

    பதிலளிநீக்கு
  9. ''..எனக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. ...''
    என்னவாக இருக்கும் ஆவல்....
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  10. I never had a chance to work in the Government. Without discussing with you, do they just like that change their decision. What about the expenses and inconvenience you go through in the process? - Like housing advance, travel bookings, family arrangements etc. Is it so difficult for the authorities to plan ahead?

    பதிலளிநீக்கு
  11. வருகைக்கு நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்கா திலகம் அவர்களே! அடுத்த பதிவில் அந்த ஆச்சரியம் என்ன என்பது தெரிந்துவிடும்.
    தொடர்வதற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  12. வருகைக்கு நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! வங்கிகளில்அப்போதெல்லாம் மாற்றல் ஆணைகள்
    அலுவலர்களைக் கேட்காமலேயே தரப்பட்டன.இப்போது பரவாயில்லை.
    வட நாட்டில் பணிபுரிவோர் மூன்று வருடம் கழிந்த பிறகு எங்கு மாற்றல் வேண்டும் என
    குறிப்பிடலாம்.ஆனால் மூன்று இடங்களைத்தான் தரமுடியும். அங்கு பணியிடம் காலியாக இருப்பின் அவர்கள் கேட்ட இடம்
    கிடைக்கலாம். செலவைப்பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.
    பொதுமக்கள் பணம்தானே! நீங்கள் சொல்வதுபோல் ஒரு மாற்றல் என்றால் எத்தனை அசௌகரியங்கள் என்பது அதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். நான் 34 வருடங்களில் 16 முறை மாற்றப்பட்டிருக்கிறேன். டில்லியில் துணைப்
    பொதுமேலாளராக இருந்தபோது வங்கித் தலைமையில் மாற்றம் இருந்ததால்,45 நாட்களிலேயே எனக்கும் வேறு இடத்திற்கு மாற்றல் வந்தது. அதுபற்றி பின் எழுதுவேன். கருத்துக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  13. வருகைக்கு நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!

    பதிலளிநீக்கு
  14. துக்ளக் போல .... ஒரு டிரான்ஸ்ஃபர் ஆர்டர் .... போய்ச் சேர்வதற்குள் அதை ரத்து செய்து ஒரு தந்தி .... இதெல்லாம் என்ன விளையாட்டு .... இதனால் எவ்வளவு மன உளைச்சல் + சிரமங்கள். ஒரு வேளை இதுவும் பழி வாங்கும் நடவடிக்கைகளாக இருக்குமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! உண்மையில் அந்த மாறுதல் விவரம் அறிந்தபின் மகிழ்ச்சியையே கொடுத்தது.

      நீக்கு