செவ்வாய், 8 அக்டோபர், 2013

நினைவோட்டம் 72


திருச்சி புனித வளவனார் கல்லூரியில் சேர்ந்தபோது முதலில் நகரப் 
பேருந்தில்தான் கல்லூரி சென்று வந்தேன். கல்லூரிக்கு சென்று விட்டு 
நேரே வீடு திரும்பியதால் பேருந்தில் செல்வது ஒன்றும் கடினமாகத்
தெரியவில்லை.

அப்போது தேசிய மாணவர் படையில் NCC (Rifles) என்ற புதிய பிரிவை தொடங்கியிருந்தார்கள். பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தோர்  NCC யில் சேர்ந்திருந்ததால், புகுமுக வகுப்பு (Pre University Course) மாணவர்கள் 
அனைவரும் அந்த புதிய பிரிவில் கட்டாயம் சேரவேண்டும் என்றார்கள். 
அதில் சேர்ந்து சான்றிதழ் பெற்றால் மருத்துவக் கல்லூரியில் சேரும்போது 
அதிக மதிப்பெண்கள் பெற உதவியாக இருக்கும் என்று சொன்னதால் 
ஜூலை மாதம் அதில் சேர்ந்தேன்.

NCC(R)NCC யிலிருந்து மாறுபடுத்திக் காட்டுவதற்காக, மேல் சட்டையை 
மட்டும் சாம்பல் வண்ணத்தில் வடிவமைத்திருந்தார்கள். அதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் நாங்கள் அந்த ஒரு ஆண்டு பயிற்சி முடித்து கல்லூரியை 
விட்டு வெளியே வரும் வரை எங்களுக்கு சீருடை (Uniform) 
வழங்கப்படவில்லை.

அதனால் எங்களையே காக்கி வண்ணத்தில் காற்சட்டை (Pant) யும் காலுக்கு 
Bata நிறுவனத்தின் Canvas காலணியும் வாங்கி அணிந்து வர சொன்னார்கள். .

No.4. Madras Group N.C.C.R என்ற எங்களது பிரிவுக்கு Commanding Officer  
ஆக இருந்தவர் எங்கள் கல்லூரியில் உடற்கல்வி ஆசிரியராக இருந்த 
கேரளாவை சேர்ந்த திரு ஜோசப் அவர்கள் தான். மிகவும் கண்டிப்பானவர்.

காலையில் 6.00 மணிக்கு விளையாட்டு மைதானத்தில் பயிற்சிக்கு அனைவரும் வந்துவிடவேண்டும் என்பதில் மிகவும் கண்டிப்பாக இருப்பார். 
காலை 6.00 மணிக்கு ஆரம்பிக்கும் பயிற்சி 8.00 மணிக்குத்தான் முடியும். 
சில சமயம் பயிற்சி முடிய 8.30 மணி கூட ஆகிவிடும்.  

காலை 6.00 மணிக்கு கல்லூரியில் இருக்கவேண்டுமென்றால் வீட்டைவிட்டு 
5.30 மணிக்காவது கிளம்பவேண்டும். அந்த நேரத்தில் வீட்டருக்கே எந்த நகரப் பேருந்தும் வராது என்பதால் வீட்டிலிருந்து, சிறிது நடந்து வந்து புதுக்கோட்டை 
மன்னர் பங்களா அருகே இருந்த பேருந்து நிறுத்தத்தில், திருச்சி இரயில் சந்திப்பிலிருந்து வரும் பேருந்தில் ஏறி கல்லூரிக்கு செல்லவேண்டும். 
சிறிது தூரம் நடக்கவேண்டும் என்பதால் வீட்டை விட்டு காலை 5 மணிக்கே கிளம்பிவிடுவேன். 

அது கூட பரவாயில்லை. பயிற்சி முடிந்து திரும்ப பேருந்து பிடித்து வீட்டுக்கு 
வந்து குளித்துவிட்டு .அவசர அவசரமாக சிற்றுண்டி அருந்தி, திரும்பவும் 
கல்லூரிக்கு 10 மணிக்குள் செல்வது என்பது மிகவும் கடினமாக இருந்தது. 
அதுவும் காலையில் பேருந்தில் அலுவலகம் மற்றும் பள்ளி கல்லூரி செல்வோர் கூட்டம் அதிகமாக இருக்குமாதலால் பயிற்சி முடிந்து வந்து நேரத்திற்குள் 
திரும்புவது பெரும்பாடாக இருந்தது.

ஒரு சைக்கிள் இருந்தால் நேரத்திற்கு போய் வரலாமே என எண்ணி 
அப்பாவிற்கு ஒரு கடிதம் எழுதினேன். அந்த கடிதத்தில் பேருந்தில் சென்று 
பயிற்சி முடித்து வந்து திரும்பவும் உடனே கல்லூரி செல்வது கடினமாக இருப்பதையும், சைக்கிளில் சென்றால் சௌகரியமாக இருக்கும் என்றும் மேலும் பேருந்துக்கு ஒரு வருடம் தரும் பணம் தருவதைவிட அந்த பணத்தில் சைக்கிள் வாங்கினால் வருடம் முடிந்ததும் சைக்கிள் நம்முடையதாகிவிடும் என்றும் எழுதிவிட்டு கடைசியில் ஒரு சைக்கிள் வாங்கித்தருமாறு கேட்டிருந்தேன்.

ஆனால் அப்பாவுக்கு  நான் கல்லூரிக்கு சைக்கிளில் போய் வருவதை விரும்பவில்லை.காரணம் S.S.L.C முடிக்கும் வரை எனக்கு சைக்கிள் ஒட்டவே தெரியாது. நான் கல்லூரியில் சேருவதற்கு முன்புதான் சைக்கிள் ஓட்டவே கற்றுக்கொண்டேன்.  

S.S.L.C தேர்வு முடித்து கல்லூரிகளுக்கு விண்ணப்பங்கள் அனுப்பிவிட்டு காத்திருந்தபோது, சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்ளவேண்டும் என்று 
சொன்னபோது, அப்பா தயங்கினாலும் அம்மா சிபாரிசு செய்ததால் 
சம்மதித்தார்கள்.

எங்கள் ஊரிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த 
கருவேப்பிலங்குறிச்சி என்ற ஊரில் திரு சீத்தாராமன் என்பவர், இளங்கோ 
மிதிவண்டி நிலையம் என்ற பெயரில் சைக்கிள்களை வாடகைக்கு தருவார். 
அப்போது ஒரு நாள் வாடகை ஒரு ரூபாய் தான்.  எனது பள்ளி நண்பர் 
சுந்தரேசனுடன் அங்கு போய் சைக்கிளை அரை நாள் வாடகைக்கு 
எடுத்து வந்தேன்.

வழக்கமாக எல்லோரும் ஒட்டிப் பழகும் இடமான எங்களூர் மாரியம்மன் 
கோவிலருகே  இரண்டு மணி நேரம் நண்பர் சுந்தரேசன் பின்னால் 
சைக்கிளைப் பிடித்துக்கொண்டு  வர, எல்லோரும் செய்யும் சேஷ்டைகளை 
செய்து முதுகை வளைத்து, நிமிர்த்தி, கீழே விழுந்து ஒருவழியாக ஓட்டக் கற்றுக்கொண்டேன்.

நான் கற்றுக்கொண்டதை அம்மாவிடம் காட்டவேண்டும் என்று எங்கள் 
தெருவில் ஒட்டிக்கொண்டு சென்று அம்மாவைக் கூப்பிட்டு பெருமையாய் காண்பித்துவிட்டு, திரும்ப நண்பர் சுந்தரேசனோடு போய் சைக்கிளை 
விட்டுவிட்டு அரை நாள் வாடகையான எட்டணாவை (50 பைசாக்கள்) 
கொடுத்து வந்தேன். உண்மையில் நான் அன்று சைக்கிள் ஓட்டியது(!) 
மூன்று மணி நேரம் தான்.  

நான் சைக்கிள் ஒட்டியதோ சன நடமாட்டம் இல்லாத கிராமத்தில். 
அதுவும் மூன்று மணி நேரம்தான்.திருச்சி போன்ற  பெரிய நகரத்தில், 
நான் இருந்த மின் வாரிய குடியிருப்பிலிருந்து தினம் போக்குவரத்து 
அதிகமாக உள்ள மெயின் கார்ட் கேட் (Main Guard Gate) வரை அதிக 
பயிற்சி இல்லாத என்னால் தினம் சைக்கிளில் போய் வர முடியுமா 
என்பதால் தான் அப்பா தயங்கி இருக்கிறார்கள்.
 
அம்மாவும், என் அண்ணன் திருவே சபாநாயகம் அவர்களும் அப்பாவிடம் 
எடுத்து சொன்னதும் கடைசியில் சைக்கிள் வாங்கித்தர சம்மதித்தார்கள். 
அப்பா சரி என்றதும் என் அண்ணனும் ஒரு Second hand சைக்கிளை வாங்கி  
TVS Lorry Service மூலம் அனுப்பினார்.

ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாயிருந்ததால், போக்குவரத்து அதிகம் இல்லாத 
இடமாக பார்த்து நான் சைக்கிளில் சென்று வந்தேன். நான் சென்ற பாதை 53 ஆண்டுகள் ஆகியும் எனக்கு இன்னும் நினைவில் உள்ளது.

மின் வாரிய குடியிருப்பு இருந்த மேட்டுப் பகுதியிலிருந்து கீழே இறங்கி, 
புதுக்கோட்டை மன்னர் பங்களா, இப்போது உள்ள அய்யப்பன் கோவில்
(அப்போது அது இல்லை) வரை நேராக சென்று, உய்யக்கொண்டான் கால்வாய் பாலத்தைக் கடந்து பாரதிதாசன் சாலையில் நுழைவேன். பின்னர் அந்த 
சாலையில் உள்ள  Guru Medical Hall க்கு முன்பே வலதுபுறம் திரும்பி, 
பட்டாபிராமன் சாலை வழியே போய், தென்னூர் பிஷப் சாலையில் நுழைந்து, வலப்புறம் திரும்பினால் தில்லைநகர் வளைவு வரும். அங்கே தில்லை 
நகருக்குள் நுழைந்து அதனுடைய பிரதான சாலை மூலமாக சாலை ரோடு 
சென்று, திருச்சி கோட்டை இரயில் நிலையம் அருகே உள்ள மேம்பாலம் ஏறி  
இறங்கி இடப்புறம் திரும்பி எங்களது கல்லூரிக்குள் நுழைவேன்.

அப்போதெல்லாம் பட்டாபி ராமன் சாலை மற்றும் தில்லைநகரில் 
போக்குவரத்து அதிகம் இருக்காது. எனவே என்னால் ஆரம்பத்தில் 
பயமில்லாமல் சைக்கிளில் பயணிக்க முடிந்தது.

அப்படி  சைக்கிளில் போய் வந்துகொண்டிருந்தபோது ஒரு நாள்   
NCC (Rifles) பயிற்சி முடிய  நேரம் ஆகிவிட்டது, வீட்டிற்கு வந்து குளித்து 
கல்லூரிக்கு திரும்பியது மணி 10 அடிக்க ஒரு மணித்துளி தான் இருந்தது. 
நேரத்தில் இருக்கையில் இல்லாவிட்டால் முதல்வரைப் பார்க்கவேண்டுமே 
என்ற அவசரத்தில் சைக்கிளை வகுப்பறை இருந்த கட்டிடம் அருகே 
நிறுத்திப் பூட்டிவிட்டு வேகமாக படியேறி வகுப்பில் அமர்ந்தேன்.

உணவு இடைவேளையின்போது சைக்கிளை எடுத்துக்கொண்டு போய் 
சைக்கிள் நிறுத்தும் இடத்தில் வைக்கலாம் என கீழே வந்தால் அங்கே 
எனது சைக்கிளைக் காணவில்லை! 


திங்கள், 30 செப்டம்பர், 2013

எனது ஓவியங்கள் 14


நான் பொழுதுபோக்கிற்காக வரைந்த ஓவியங்களை, அக்டோபர் 2010 இல் எனது ஓவியங்கள் என்ற தலைப்பில் 13 பதிவுகளாக வெளியிட்டிருந்தேன்.


அந்த ஓவியங்களைப் பார்க்காதவர்கள், கீழே தந்துள்ள இணைப்புகளை சொடுக்கிப் பார்க்கலாம்.

எனது ஓவியங்கள்  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13


நான் வரைந்த படங்கள் அநேகம் இருந்தாலும், அவைகள் அனைத்தையும்  
பதிவேற்றிஎனது வலைப்பக்கத்திற்கு வருபவர்களை 'துன்புறுத்த'  
விரும்பாததால் ஓரிரு பதிவுகளோடு தற்காலிகமாக நிறுத்திவிட்டு மீண்டும் 'நினைவோட்ட'த்தை தொடர எண்ணியுள்ளதாக அப்போது குறிப்பிட்டிருந்தேன்.

அதற்கு திரு சென்னை பித்தன் அவர்கள், நான் வரைந்த படங்களில் எனக்குப் 
பிடித்த படங்களைத் தொடர்ந்து வெளியிடலாமே? என்று கருத்து தெரிவித்திருந்தார். அதனால் எனக்குப் பிடித்த ஒரு படத்தை இங்கே வெளியிடுகின்றேன். 

இந்த படம் மாயா சித்ராலயாவில் நான் அஞ்சல் வழியில் ஓவியத்தை  
முறைப்படி வரைய கற்றபோது, அவர்கள் கொடுத்த ஒரு மாதிரி படத்தைப் 
பார்த்து பென்சிலால் வரைந்தேன். இந்த படம் வரையப்பட்ட தாள்  A 4 
அளவைப்போல் நான்கு மடங்காக அதாவது A 3 அளவில் இருந்ததால், 
என்னால் வீட்டில் உள்ள அலகிடல் கருவியில் (Scanner) அலகிட 
முடியாததால் Friends Xerox நிறுவனத்திற்கு எடுத்து சென்று படத்தின் 
அளவை சுருக்கி எடுத்து வந்து இங்கே வெளியிட்டிருக்கிறேன். 







எனக்கு மிகவும் பிடித்த இந்த படத்திற்கு மிக நன்று எனக் குறிப்பிட்டு படத்தை Indian Ink இல் வரையச் சொல்லியிருந்தார்கள். ஆனால் இன்னும் அதை செய்யவில்லை.

வேறு சில  படங்கள் பின்னர் பதிவுகளில் வெளியிடுவேன்.